Saturday 18 August 2018

NESAMULLA VAANSUDARE - 12

“அதெல்லாம் நீட்டாகத் தான் இருக்கு, நீ பேசு சகி” என்றான்.
“நான் யோசிச்சுப் பார்த்தேன்”
“என்னத்த  யோசிச்சே?” என்றான் குறும்பாக. அவனை முறைத்தாள்.
“சரி சரி சொல்லு” என்றான்.
“உங்கள எனக்கு பிடிச்சிருக்கு, நானும் உங்கள நேசிக்கிறேன் னு புரிஞ்சுது” என்றாள் குரலே வெளிவராமல். அதைக்கேட்ட மாத்திரத்தில் அவன் வண்டியை நிறுத்தியே விட்டான். திரும்பி அவள் பக்கம் அமர்ந்து, ஆழ்ந்து அமைதியாக அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.... பின் மெல்ல ஒருமுறை அழுந்த கண் மூடித் திறந்தான்... அதில் பிரகாசம்.... மெல்ல அவள் கைகளை எடுத்து தன் முகத்தோடு வைத்துக்கொண்டான். மெல்ல இதழிடம் கொண்டு வந்து உள்ளங்கைகளில் முத்தமிட்டான். அவளுக்கு சிலிர்த்தது. கைகளை உருவ முயன்றாள். ஆனால் அவன் இன்னமும் இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக்கொண்டான்.

“தேங்க்ஸ் ஹனி” என்றான். அவள் அந்த மொழி கேட்டு சிவந்து போனாள். “என்னை பூரணமா மன்னிச்சு முழு மனசோட தானே இதை சொன்னே சகி?” என்றான்.
“ஆம்” என்று தலை அசைத்தாள்.
“அப்போ மேற்கொண்டு பெரியவங்க கிட்ட பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்தானே?” என்றான்.
“இப்போவேயா?” என்றாள் கண் உயர்த்தி.
“ஆமா, பின்ன, இதுவே ரொம்ப லேட்.... இனி தாங்காது..... கண்டவன் வந்து அப்ளிகேஷன் போடவா.... அதை நான் பார்த்துகிட்டு கோவப்படவா, என்னால ஆகாது” என்றான். சிரித்தாள்.

“சிரிக்கிறியா, இரு உன்ன” என்று அவள் முகம் நோக்கி குனிந்தான். அவனை தள்ளிவிட்டாள். ஜன்னல் ஓரம் ஒதுங்கி வெளியே பார்த்தபடி மேலும் சிவந்து போனாள். அவளது கன்னச் சிவப்பை கண்டபடி அவனும் புன்னகைத்தான். விசில் அடித்தான். அவள் சிரித்துக்கொண்டாள்.

“சரி நான் எங்கம்மாப்பாகிட்ட பேசறேன்.... எங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்றான். “உங்கப்பாம்மா தான் என்ன சொல்வாங்களோ என்னை மன்னிச்சாங்களோ இல்லையோன்னு கவலையா இருக்கு” என்று ஆர்வமாக பேசிக்கொண்டிருந்தான்.

“அதெல்லாம் மன்னிச்சுட்டாங்க, ஒண்ணும் சொல்ல மாட்டாங்க” என்றாள் மெதுவாக. “போலாமா?” என்றாள். சரி என்று அவள் வீட்டின் தெருவில் நுழைந்தான்.
“ஆமா, அன்னிக்கி நீ பர்சனல் மேனேஜரா ஆர்டர் வந்த உடனேயே எனக்கு ட்ரீட் தரேன்னு சொன்னியே, இன்னும் ஒண்ணுமே தரலியே, இப்போவானும்...?” என்று கண் சிமிட்டினான்.
அவள் நாணியபடி, “என்ன ட்ரீட்?” என்றாள். அவன் அவள் பக்கம் குனிய அவளுக்கு அவன் வேண்டுவது விளங்கியது. முகம் மேலும் செவ்வானமானது.
“சி போ” என்று அவனை விலக்கி தன் முகத்தை தன் கைகளில் மறைத்துக்கொண்டாள். அவள் வீடு வந்துவிட ‘ஹ்ம்ம்’ என்று அவன் பெருமூச்சு விட்டான். தன் ஒற்றை விரலை உதட்டில் வைத்து முத்தமிட்டு எடுத்து அவன் உதட்டில் ஒற்றிவிட்டு சிரித்தபடி இறங்கினாள்.

“பை குட் நைட் அண்ட் தாங்க்ஸ்” என்றாள்.
“இனி நமக்குள்ள, தாங்க்ஸ் சாரி எல்லாம் சொன்னேனா என்கிட்டே ஒதபடுவே ஹனி” என்றான் அவன் உல்லாசமாக.
“ஓகே” என்றாள். அவளை இறக்கிவிட்டுவிட்டு விசில் அடித்தபடி உற்சாகமாக வண்டி ஒட்டியபடி வீடு வந்து சேர்ந்தான். அங்கே தன் அன்னையைக் கண்டான்.
“அம்மா எப்படி இருக்கே?” என்று அருகமர்ந்தான்.
“என்ன, அய்யாபிள்ள இன்னிக்கி ஒரே சந்தோஷமா இருக்காபோல இருக்கே?” என்றார் மரகதம்.
“ஆமா மா சகிகிட்ட பேசிட்டேன்... அவளும் என்னை ஏத்துகிட்டா மா” என்றான் சிரிப்பாக.
“அப்படியா, ரொம்ப சந்தோஷம் ராஜா.... சீக்கிரமே நல்லது நடக்கட்டும்” என்று வாழ்த்தினார்.
“என்ன பசிக்கவே பசிக்காதே, வயிறு நிறைஞ்சு போயிடுச்சா?” என்று வாரினார்.
“அம்மா..” என்று கொஞ்சினான்.
“போ போய் முகம் கழுவி சாப்பிடு” என்று அனுப்பினார்.
“அம்மா தாயே காப்பாத்தினே, இம்முறையானும் அந்தப் பொண்ணு கூட சேர்ந்து எம் பிள்ள வாழ்க்கை செழிக்கணும், என்று வேண்டினாள்.

அதை அடுத்து ஒரு வாரகாலமும் அவளை அவனே வீட்டில் கொண்டு இறக்கி விட்டான். அப்போது அவர்களுக்கு பேச நிறைய சந்தர்ப்பம் கிட்டியது. ஆவலாக ஆசையாக காபி ஷாப் பார்க் பீச் என்று அவளுடன் சுற்றினான். அவளுக்கும் அவனின் அருகாமை பிடித்தது, அவன் செய்யும் செல்ல சீண்டல்கள் அவளை நாண வைத்தாலும் அவனின் பேச்சும் சிரிப்பும் அவளை கொள்ளை கொண்டன. மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் இன்னமும் ஆழமாக அறிந்து உணர்ந்து புரிந்து தங்கள் மண வாழ்க்கையைப் பற்றிய இன்பக் கனவுகள் கண்டபடி இருந்தனர்.
அவன் தன் அன்னையிடம் பேசி சீக்கிரத்திலேயே அவள் பெற்றோரை சந்தித்து திருமணம் பற்றி பேசச் சொன்னான். அவரும் அப்படியே செய்ய நல்ல நாள் பார்த்தார்.

அடுத்த ஞாயிறு அவர் போன் செய்துவிட்டு கணவருடன் சங்கீதாவின் வீட்டிற்கே வந்தனர். கணேசன் சந்தோஷித்தார். மகளுக்கு எந்த வித அவமானமும் ஏற்படாமல் நிச்சயித்தவனுக்கே அவள் மனைவியானால் அதுவே பெரிய யோகம் தான் என்று அவர் எண்ணிக்கொண்டார். அவன் மனம் திருந்தியதும் அவரிடம் மறுபடி மன்னிப்பு கேட்டதும், அந்தப் பெண்ணை கட்டோடு மறந்திருப்பதும் நல்லவனாக மாறி இருப்பதும் கூட அவர் மனதுக்கு சந்தோஷத்தையே குடுத்தது.

“ரொம்ப நல்லது சம்பந்தியம்மா, என்னிக்கோ நடக்க வேண்டியது, நடுவில என்னென்னமோ நடந்து போச்சு. இப்போவானும் காலம் தாழ்த்தாம நல்லதே நடக்கட்டும்” என்றார் மகிழ்ச்சியாக. உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருந்த சங்கீதாவிற்கு பூரித்தது.
“சங்கீதா, வாம்மா, வந்து பெரியவங்கள வணங்கிக்க” என்று அழைத்தார். மிதமான அலங்காரத்தில் இருந்தாள்.
“சீக்கிரமே நம்ம வீட்டுக்கு மருமகளா வந்துடுமா” என்று ஆசிகள் கூறினர். எல்லோர் மனமும் நிறைந்தது. அவன் வரவில்லையா என்று ஒரு முறை ஓரக்கண்ணால் தேடினாள்.

“யாரைத் தேடுறே, அவன் வரலை மா” என்று சிரித்தார் மரகதம். “இல்ல” என்று அவள் நாணினாள்
“அதான் தினமும் ஆபிஸ்ல பாத்துக்கறீங்களே அப்பறம் என்ன” என்று வாரினார் ராமலிங்கம். அவள் வெட்கத்துடன் உள்ளே எழுந்து ஓடிவிட்டாள்.

முகூர்த்தம் குறித்துக்கொண்டு கூப்பிடுகிறோம் என்று கூறி அவர்கள் சென்றனர். வாங்கிய முகூர்த்த பட்டு நகைகள் அப்படியே இருக்க அனைத்தையும் எடுத்து பாலிஷ் இட்டு புதுசாக செய்தார் சரோஜா. மண்டபம் பார்த்து புக் செய்தார் கணேசன். திருமண வேலைகள் சிறப்பாக நடக்கத் துவங்கின. மிகவும் நெருங்கியவரை மட்டுமே இம்முறை அழைப்பது என்று இரு குடும்பமும் முடிவு செய்தனர்.

அங்கே தினமும் ஆபிசில் எப்படியேனும் அவளிடம் ஒரு முறையேனும் தனிமையில் பார்த்து பேசிக்கொண்டான் சித்து. இரவில் மொபைலில் இஷ்டம்போல கொஞ்சிக்கொண்டான். அவளும் சிவந்தபடி அவனின் சீண்டல்களுக்கு இடம் கொடுத்தாள்.

“அது எப்பிடிடி, நேர்ல என்னைத் தள்ளி விடறே, போன் ல ஒண்ணும் செய்ய முடியாதுன்னுதானே எல்லாத்துக்கும் இடம் குடுக்கறே, கையில கிடைச்ச அன்னிக்கி இருக்கு உனக்கு” என்று சிரித்தான்.
“போதுமே” என்றாள்.
“போதாதேடீ, ஏங்கறேனே ரொம்பவே” என்றான் பெருமூச்சுடன்.
“நீங்க ஆபிஸ் முதலாளி, அங்கே என்ன சரசம், யாரானும் பார்த்தா?” என்றாள். தவித்தபடி.
“பார்க்கட்டுமே, பேசட்டுமே, அடுத்த மாசம் நம்ம திருமண பத்திரிக்கையப் பார்த்த பிறகு பேசின அதே வாய் கப்புன்னு மூடிகும்டீ என் செல்லமே” என்று கொஞ்சிக்கொண்டன்.

“ஆனாலும் ஆளு நீங்க ரொம்ப மோசம்” என்றாள்.

ஒரு மாலை அவளை அடம் பிடித்து காரில் ஏற்றி, காபி ஷாப்பில் அமர்ந்து காபியுடன் அரட்டை அடைத்தபின் அவளிடம் கொஞ்சி வம்பு பேசியபடி காரை நகர்த்தபோக, அப்போது அவன் மொபைல் அழைத்தது.
“ச்சே இதுவேற” என்று சலித்தபடி ஆன் செய்தான். புதிய நம்பர்... காரில் தனது மொபைலை சிங்க் செய்திருந்ததால் காரின் ஸ்பீக்கரிலேயே போன் கேட்க முடிந்தது. இவன் ஹலோ என்றதும் “ஹலோ சித்து, நான் ஷாலு” என்றது குரல். சங்கீதாவின் முகம் இருண்டு போனது. அவனும் அதை கண்ணுற்றவன் திடுக்கிட்டான். “இவ எதுக்கு கூப்பிடுகிறா?’ என்று முனகியபடி ஆப் செய்தான்.

“சாரி சகி, அவ ஏன் என்னை கூப்பிடுகிறான்னு எனக்கு சத்தியமா தெரியாதுடா” என்றான். அவனை ஏறிட்டு நேராகக் கண்டாள். அதில் குற்றச்சாட்டு இருந்தது. கால் வந்தது.

“எடுங்க” என்றாள் கண்டிப்பாக. எடுத்தான். “ஹலோ” என்றான்.
“நான் உங்கள சந்திக்கணும், ரொம்ப அவசரம்..... நான் ரொம்ப இக்கட்டுல மாட்டிகிட்டு இருக்கேன்.... அன்னிக்கி நான் பேசினத மனசுல வெச்சுக்காம ப்ளீஸ் என்னை வந்து காப்பாத்துங்க” என்றாள் ஷாலு அந்தப்பக்கம். அவன் ஸ்பீக்கரிலேயே விட்டான், வேண்டும் என்றே, அவளுடன் தனக்கு இனி, சங்கீதாவுக்கு தெரியாத ரகசியங்கள் இல்லை என்று காண்பிக்கவே அப்படி செய்தான். “முடியாது” என்று ஆப் செய்தான்.

மீண்டும் அழைப்பு வர, “என்னை இனி தொந்தரவு செய்யாதே” என்று ஆப் செய்தான். மீண்டும் அழைப்பு வந்தது,

“பேசுங்க” என்று ஜாடை செய்தாள் சங்கீதா. “என்னதான் வேணும் உனக்கு?” என்றான் எரிச்சலாக.
“நான் பெரும் சங்கடத்தில் இருக்கேன் சித்து ப்ளீஸ்” என்றாள் அழுகையுடன். அவன் போன் இன் வாயை அவளே பொத்தி, “போய் ஒரே ஒரு முறை பார்த்து முடிஞ்சா உதவி செஞ்சுட்டு வாங்க” என்றாள்.
“உனக்கென்ன பைத்தியமா, அவளுக்கா, நான் உதவி செய்வதா... நெவர்..... அவளை என்னால மன்னிக்க முடியாது” என்றான் மெல்லிய குரலில் பல்லை கடித்தபடி.

“தெரியும், மன்னிக்க சொல்லலை, உதவிதான் செய்யச் சொல்றேன்” என்றாள் அழுத்தமாக.
மனமில்லாமல் “எங்க வரணும்?” என்றான். சொன்னாள் “சரி வரேன்” என்று வைத்துவிட்டான்.
“இது இப்போ அவசியமா சகி?” என்றான்.
“மே பி, அங்க போய் பார்த்தாதானே தெரியும்.... போயிட்டு வாங்க” என்றாள் முகம் கடினமாகவே இருந்தது. அவளை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு காரை ஷாலு கூறின இடத்தை நோக்கி ஓட்டினான்.

சித்துவின் கார் அந்த ஹோட்டலின் வாயிலை அடைந்து வாலேயில் கொடுத்துவிட்டு அவள் சொன்ன ரூம் நம்பரைத் தேடிச் சென்றான். கதவை தட்டியதும் ‘கம் இன்’ என்று குரல் கேட்டது. உள்ளே தயக்கமாகவே சென்றான்.
“ஹை சித்து” என்று முன்பு போல ஓடி வந்து அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள். அவன் தன் கையை உதறிக்கொண்டான்.
“என்ன எதுக்கு கூப்பிட்டே, சீக்கிரம் சொல்லு நான் போகணும், எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றான் கடினமான முகத்துடன் எரிச்சலாக. “போலாம், இருங்க சித்து, முதல்ல உக்காருங்க” என்று ஜூஸ் எடுத்து கொடுத்தாள். அதை கையாலும் தொடவில்லை அவன்.
அவன் பொறுமை இன்றி அமர்ந்திருப்பதைக் கண்டு அவளுக்கு கோவம் மூண்டது.
“என்ன பொறுமையில்லாம இருக்கீங்க..... முன்னெல்லாம் என்னோட எத்தனை நேரம் இருந்தாலும் போதாதுன்னு கொஞ்சுவீங்களே?” என்று கொஞ்சினாள். எரிச்சல் அதிகமாகியது சித்துவிற்கு.
“விஷயத்த சொல்லு” என்று கர்ஜித்தான்.

“நான் உங்க கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது சித்து கண்ணா, என் தவற புரிஞ்சுகிட்டேன்.... வினோத நம்பி நான் கல்யாணமும் பண்ணி இருக்கக் கூடாது, அமெரிக்காவுக்கும் போயிருக்கக் கூடாது..... அங்க ஒரே போர், அங்க போகாதே இங்க போகாதே, தனியா ஊர் சுத்தாதே னு ஆயிரம் ரூல் போடறாரு.... போதாததற்கு அவரின் நண்பர்கள் புடை சூழ ஓயாமா பார்ட்டி... தண்ணி அடிக்கறது, அவரவர் பெண்டாட்டிகளை மாற்றிக்கொண்டு டான்ஸ் ஆடுவதுனு அக்கிரமம் பண்றாரு சித்து” என்றாள் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு. அவள் வேஷம் போடுகிறாள் என்று சித்துவுக்கு புரியாமல் இல்லை. சரி எவ்வளவு தூரம் போகிறாள் பார்க்கலாம் என்று பொறுத்திருந்தான்.

“என் பேர்ல சொத்து வாங்கறேன் பணம் போடறேன்னு சொல்லி பல இடங்கள்ள என்கிட்டே கை எழுத்து வாங்கிக்கிட்டாரு..... அதெல்லாம் என்ன எதுக்குன்னு கூட தெரியல.... ஆனா என்கிட்டே செலவுக்கு கூட தாராளமா பணம் குடுக்க மாட்டேங்கறாரு..... வெறுத்து போச்சு..... வீட்டுக்குள்ள வெச்சு பூட்டாத குறைதான்..... என்னை காப்பாத்துங்க சித்து...... நான் என் தவறை உணர்ந்துட்டேன், என்னை நீங்களே கல்யாணம் பண்ணிக்குங்க..... நான் வினோதை டைவர்ஸ் பண்ணீடறேன்” என்றபடி அவன் கையைப் பிடிக்க வந்தாள். நெருங்கி அவன் சோபாவில் அமர முயன்றாள். அவன் சட்டென்று விலகி எழுந்தான்.

கேலியாக அவளை பார்த்து, “ம்ம் அப்பறம், இன்னும் என்னென்னா டிராமா பண்ணப் போறே, மொத்தமா முடி... நான் கிளம்பறேன்” என்று வாயிலை நோக்கி நடந்தான்.
“ஐயோ டிராமாவா, என் அழுகையும் சங்கடமும் உங்களுக்கு டிராமா மாதிரியா தெரியுது சித்து கண்ணா..... இல்லை நிஜம்மா சொல்றேன், என்னை அவன் அடிமை மாதிரி நடத்தறான், கொத்தடிமையாத்தான் வெச்சிருக்கான்..... அவனோட நண்பனுக்கு கூட்டி குடுக்க பார்த்தான்” என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

“ஷாட் அப்” என்று கத்தினான். “அது உன்னோட சொந்த வாழ்க்கை, சொந்தப் பிரச்சினை.... உனக்கும் எனக்கும் எந்த சொந்த பந்தமும் தொடர்பும் இல்லை.... இதை எல்லாம் என்கிட்டே சொல்லி எந்தப் பயனும் இல்லை.... நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, இனி நீ என் வாழ்க்கையில வரவே முடியாது..... நான் அதை அனுமதிக்கவும் மாட்டேன்.... நீ எக்கேடும் கேட்டுபோனு தான் விட்டிருப்பேன், ஆனா நீ கூப்பிடும்போது என் வுட் பி என்கூட இருந்தா..... எனக்கு கல்யாணம் ஆகப் போகுது..... அவ என்னை உன்னை ஒரு முறை சந்தித்து உதவ சொன்னதால தட்ட முடியாம வந்தேன்.... உன் நாடகம் நல்லா புரிஞ்சுபோச்சு... குட் பை..... இனி என்னை தொந்தரவு செய்ய முயன்றா நான் பொல்லாதவனா இருப்பேன் சொல்லீட்டேன்.... மைன்ட் இட்” என்று திட்டிவிட்டு வெளியேறி விட்டான்.

ஷாலுவிற்கு ஆத்திரம் ஏறியது, இவனையானும் அடையலாம் சொகுசா வாழலாம்னு நினச்சா இவன் தேறிட்டானே, என் நடிப்ப கண்டு பிடிக்கற அளவுக்கு இவன் எப்போ புத்திசாலியானான்..... அவ யாரவ இவனை இப்படி மயக்கி கைக்குள்ள போட்டு வெச்சிருக்காளே, அவள் சொன்னதால என்னை பார்க்க வந்தானாமே, கண்டு பிடிக்கறேன்.... என்னை ஒதுக்கி இவன் எப்படி வேறு ஒருத்திய கட்டறான்னு நானும் பார்க்கறேன்” என்று சூளுரைத்துக்கொண்டாள்.

அதன்படி அவனைப் பற்றி மேலும் விசாரித்ததில். சங்கீதாவை மணக்க வந்து நிறுத்தியதும், இப்போது அவள் அவனிடமே வேலை செய்வதும் இருவரும் விரும்பி மணக்கப் போவதும் அனைத்தும் தெரிய வந்தது. ஓஹோ அப்படியா விஷயம், இருக்கட்டும் என்று பொருமிக்கொண்டாள்.

அங்கே தன் வீட்டில் சங்கீதா மனம் பாரமாகி தன் கட்டிலில் கவுந்தடித்து படுத்து கிடந்தாள்.
‘அங்கே சென்றிருப்பானா, என்னவாக இருக்கும், நான் அவனை போக சொல்லி இருக்கக் கூடாதோ... அவனுக்கும் கூட இஷ்டமே இல்லையே, என் தலையில் நானே மண்ணை போட்டுக்கொண்டேனா, கடவுளே, கலக்கமா இருக்கே.... என் சித்துவை காப்பாத்து’ என்று வேண்டிக்கொண்டாள்.
‘நாந்தான் போகச் சொன்னேன்னா அவனுக்கு எங்க போச்சு புத்தி, நான் போக முடியாது அவ சங்காத்தமே எனக்கு வேண்டாம்னு இல்ல அவன் சொல்லி இருக்கணும்’ என்று கோவமும் இயலாமையும் அவன் மீது திரும்பியது.
மணி பத்து என்றது. அவன் மொபைலுக்கு அழைத்தாள். அவன் எடுத்தான். “ஹலோ சித்து” என்றாள் மெல்ல. “ம்ம் என்னா?” என்றான் கடினமாக.
“என் மேல கோபமா, அவகிட்ட போக சொன்னேனே அதுக்கா, சாரிபா. போனீங்களா, என்னாச்சு பா?” என்றாள் தயக்கத்துடன்.
“ஆமா நீ போன்னா போகணும் வான்ன வரணும்..... ஆமா போய் தொலைஞ்சேன்..... அந்த நாடகக்காரி விஷமக்காரியப் பார்த்தேன்..... அவ அடங்கவே இல்லை, அடங்கவும் மாட்டா..... நான் சொன்னபோது நீ நம்பலையே, அவ புருஷன் அவள கொடுமை படுத்தறானாம், கொத்தடிமை மாதிரி நடத்தறானாம்.... அதனால அவனோட வாழப் பிடிக்கலையாம், அவனை டைவர்ஸ் செய்துட்டு என்கிட்டே வராளாம்..... நான் அவளை மணக்க வேண்டுமாம், எப்படி இருக்கு..... எல்லாம் வேஷம்....” என்று
பொருமினான். 

“என்ன போகட்டுமா, அவளையே பண்ணிக்கட்டுமா?” என்றான் கிண்டலாக. “சித்து...” என்று அழுதாள் சங்கீதா. திக்கென்றது. ‘ஐயோ இவனை திரும்ப மணமுடிக்கும் எண்ணம் அவளுக்கு வந்துவிட்டதே, என்னை நிம்மதியாக வாழ விடுவாளா என்று நெஞ்சம் கலங்கியது.
 “என்ன அதிர்ச்சியா இருக்காக்கும், என்னை பலவந்தமா போகச் சொன்னபோது இதை எதிர்பார்க்கலை அப்படிதானே?” என்றான் எகத்தாளமாக. அவள் என்ன சொல்லுவாள். அவளின் மௌனம் அவனை என்னமோ செய்தது.

“சரி சரி விடுடா செல்லம், அவ சொல்லீட்டா போச்சா, எனக்குன்னு புத்தி இல்லையா என்ன.... நீ கவலைப்படாதே, “உனக்கும் எனக்கும் ஒரு உறவும் இல்லை நீ உன் வழிய பாத்துக்கன்னு” அடிச்சு சொல்லீட்டு வந்துட்டேன். டோன்ட் வர்றி ஹனி” என்றான் குழைவாக.


1 comment: