Wednesday 27 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 10 - FINAL

“சரி வா, இந்த ஸ்ட்ரெயினே உனக்கு இப்போதைக்கு போதும், கொஞ்சமா ஏதானும் சாப்டுட்டு படுத்துக்கோ குட்டிமா” என்று அழைத்துச் சென்றான். பொம்மை போல அவனுடம் நடந்து சென்றாள்.
என்ன என்று கேட்க வாயை திறந்த அன்னையை கண்ணால் அடக்கினான். கொஞ்சமாக சாப்பிட்டாள். அவளது மாத்திரைகளை குடுத்து மீண்டும் கூட்டிச் சென்று படுக்க வைத்தான். சில நொடிகளில் உறங்கி போனாள். அவள் ஆழ்ந்து உறங்குவதை கண்டு அவன் வெளியே வந்தான்.

“எல்லா உண்மையையும் ஒரே நாளில் தெரிஞ்சுகிட்டு அதிர்ச்சியாகி இருக்கா மா..... கொஞ்சம் பொறுமையா பார்த்து தான் நடந்துக்கணும் அவகிட்ட” என்றான்.
“ஆமாம் பா..... நீ ஆபிசுக்கு நாலு நாள் லீவு போட்டுட்டு அவ கூடவே இரு, அவ முகமே இன்னும் தெளியல” என்றார் சிவகாமி.
“சரி மா” என்றான்.

அடுத்து வந்த சில நாளில் அப்படியே அவளுடன் நேரம் செலவழித்தான். மெல்ல மெல்ல சித்ராங்கி சகஜ நிலைக்கு மாறினாள்.... உடலும் தேறியது..... எப்போதும் போன்ற கலகலப்பு உடனே வரவில்லை வராது கூட, அதுவும் அவன் அறிந்ததே..... ஆனாலும் கண்ணாடியின் முன் சென்று நின்று தன் முகத்தையே பார்த்தபடி நிற்கும் வேளைகள் தவிர மற்ற நேரங்களில் நார்மலாகவே சகஜமாகவே இருந்தாள்..... நடமாடினாள் பேசி சிரித்து பழகினாள்..... கலாவை மடியிலேயே வைத்து சீராட்டினாள்.

டாக்டர் கோபினாத்திடம் அனைத்தையும் எடுத்து கூறி தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் இருவரும் தெரிவித்துக்கொண்டனர். அவன் கூறியதன் பேரில், மாயா போலவே ‘டாக்டர்பா’ என்று அழைத்து பேசினாள் சித்து. கோபிநாத்திற்கு கண் கலங்கி போனது.
“:ஒரு முறை வந்துட்டு போங்க சித்ரஞ்சன்” என வேண்டிக்கொண்டார்.
“கண்டிப்பா வரோம் டாக்டர், உங்கள எங்களால எப்படி மறக்க முடியும்.... எங்கள் குல தெய்வம் நீங்க” என்றான் உணர்ச்சிபூர்வமாக.

அந்த வியாழன் அன்று மாலை ஐந்து மணி வாக்கில் வாயிலில் யாரோ நிழலாட, “யாரது?” என்று சென்று கேட்டாள். அவன் அவளையே பார்த்த வண்ணம் பேசாமல் நின்றிருந்தான்.
“நீங்க யாரு, எனக்கு தெரியலையே?” என்றாள் மீண்டும் மரியாதையாக ஏனென்றால் அவனை கண்டால் படித்த பண்புள்ள மனிதன் போலத்தான் தெரிந்தான்.
“மாயா” என்றான் அவன் மெல்ல.
“மாயாவா, அப்படி யாரும் இங்கில்லையே” என்றாள்.
“நீங்க மாயா” என்றான் மறுபடி.
“இல்லை, உங்களுக்கு ஏதோ கன்ப்யுஷன் போல, நீங்க யாரை பார்க்கணும்?” என்றாள் தன்மையாக.
வந்தது வெங்கட், மாயா அவனை அடையாளம் கூட கண்டுகொள்ளவில்லை என அறிந்து அவனுக்கு விசனமானது. ‘ஆறு மாதங்கள் தினமும் கண்டு பழகியவனை அப்படியா மறந்து போகும்.... நான் என்ன அவ்வளவு மோசமானவனா, அவளை காப்பாற்றியவன் என்ற நன்றி வேண்டாம், யார் என்றே தெரியாது என்கிறாளே...’ என்று குழம்பி தவித்தான்.
“மிஸ்டர் ரஞ்சன் இல்லையா?” என்றான்.
“இப்போ வர்ற நேரம்தான், உங்களுக்கு அவர தெரியுமா?” என்றாள்.
“தெரியும்” என்றான்.
“அப்போ உட்காருங்க. அவர் இப்போ வந்துடுவார்.. பார்த்துட்டு போகலாம்” என்று சோபாவை கை காட்டினாள்.

காபி கொண்டு வந்து கொடுத்தாள்.... பின்னோடு ரஞ்சன் வந்தான்.... வெங்கட்டை கண்டு ஒரு கணம் மலைத்து
“ஹே வெங்கட், நீங்க இங்க..... என்ன ஒரே ஆச்சர்யமா இருக்கு” என்று கை கொடுத்தான்.
“சித்து, வந்துடீங்களா, இவர் யாரோ தெரியல, யாரோ மாயானு கேக்குறாரு... இங்க அப்படி யாரும் இல்லைனேன், பின்னால உங்கள கேட்டாரு.... அதான் உட்கார வெச்சேன்” என்றபடி கலாவுடன் வந்தாள் சித்ராங்கி. அவனுக்கும் காபி எடுத்து வந்தபடி.
“நீயும் இங்க உட்காரு சித்து” என்றான் ரஞ்சன்.

“இவர் பேரு வெங்கட், நமக்கு ரொம்ப வேண்டியவர்.... நம்ம குல தெய்வமா பூஜிக்க வேண்டியவர்” என்றான்.
“என்ன சொல்றீங்க?” என்றாள் பிரமித்து புரியாமல்.
“நீ அப்போ ரயில் விபத்தில மாட்டிகிட்ட போது இவர்தான் உன்னை காப்பாற்றினார் சித்து” என்றான்.
“என்னது இவரா அவர்.... கடவுளே, சாரி மிஸ்டர் வெங்கட்.... நான் உங்களை தெரிஞ்சுக்கலை, என்னை மன்னிச்சுடுங்க, என் உயிரையே காப்பாத்தி இருக்கீங்க..... ரொம்ப நன்றி” என்றாள் கண்ணீருடன்.

“ஐயோ ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம்” என்றான்.
பின் யோசனையுடன் அவன் ரஞ்சனை பார்க்க அவன் பார்வையில் ஆயிரம் கேள்விகளை கண்டான் ரஞ்சன்.

“நீங்க நினைக்கறது ரொம்ப சரி வெங்கட், சித்ராங்கிக்கு பழைய நினைவுகள் வந்துடுச்சு... ஆனா மத்தியில இருந்த காலங்கள் மறந்துடுச்சு..... டாக்டர் கோபிநாத், இந்திரா, நீங்க, உங்க யாரையுமே அவளுக்கு இப்போ அடையாளம் தெரியாது..... ஆனா அதை அப்படியே விட முடியாது, அவ இன்னிக்கி உயிரோட இருக்கறதுக்கு காரணம் நீங்க எல்லாம்தான்.... அதான் அவளுக்கு இப்போ சொல்லி புரியவெச்சு அறிமுகம் செய்தேன்” என்றான் ரஞ்சன்.
“ஒ ஞாபகம் வந்துடுச்சா, தட்ஸ் கிரேட்” என்றான் சந்தோஷமாக.... ஆனால் தன்னை கவனம் இல்லையே என்ற வேதனை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது....

இத்தனை நாளாகியும் அவனால் அவளை மறக்க முடியவில்லை என்பதுதான் உண்மை..... காதல் சொல்லி திளைக்கவில்லை எனினும், அண்ணன் தங்கை உறவும் இல்லை, நட்பின் எல்லையை கடக்கவும் முடியாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல் அவளை தினமும் கண்டு செல்வதே மகிழ்ச்சி என்று தான் எண்ணி இருந்தான் வெங்கட். அவளுக்கு பழைய நினைவுகள் இல்லை, அதனால்  அவள் யாரென தெரியாத நிலையில் எப்படியாகவும் பழைய உறவுகள் அவளை வந்தடைய முடியாது. அப்படி ஆகுமேயானால் சில மாதங்கள் பொறுத் டாக்டரிடமே கூறி அவளை மணக்க முடிந்தால்.... என்ற ஒரு சின்ன ஆசை, ஆவல் முளை விட்டிருந்தது எனலாம்.

அது, சித்ரஞ்சன் வந்து ஒரே நொடியில் வடிந்து போனது. ஆனாலும் மாயா என்ற மாயை அவனை விட்டு விலக்க அவனால் இன்னமும் முடியவில்லை. ஒரே ஒரு முறை அவள் நல்லபடி வாழ்கிறாள் சந்தோஷமாக இருக்கிறாள் ஆரோக்யமாக இருக்கிறாள்.... என்று நேரில் கண்டு வந்தால் தேவலாம் போல இருக்க, கிளம்பி வந்திருந்தான்.... வந்த இடத்தில அவளால் அவனையே தெரிந்துகொள்ள முடியாத நிலை.

இதுதான் விதி என்று தன்னையே தேற்றிக்கொண்டான்.
“நான் கிளம்பறேன் மிஸ்டர் ரஞ்சன்” என்று எழுந்தான்.
“இருங்க சாப்டுட்டு போகலாம் நொடியில சமைச்சுடுவேன்” என்று எழுந்தாள் சித்ராங்கி.
“இல்லை வேண்டாம்” என்று எழுந்தான்.
“வெங்கட், அவளுக்கு உங்களை ஞாபகம் இல்லாதது விதி, போனாபோகுது.... ஆனா நீங்க எங்க வீடு தேடி வந்திருக்கீங்க... ஒரு வேளையானும் இங்கே எங்களோட சாப்பிடனும்னு நானும் கேட்டுக்கறேன்..... ப்ளீஸ் மறுக்காதீங்க” என்றான் ரஞ்சன். அவன் மீண்டும் வற்புறுத்த சரி என்றான்.
சித்ராங்கி உள்ளே சென்று சமையலை மளமள வென முடித்து இலை போட்டாள்.... ரசித்து உண்டான்.... மனமார பாராட்டினான்.... தன் கணவன் தன் குழந்தை, தாய், அத்தை என தன் நிலையும் உணர்ந்து சந்தோஷமாக வாழும் அவளை கண்டு மனம் நிறைந்தது வெங்கட்டிற்கு..... அந்த நிறைந்த மனதுடனேயே அவளை வாழ்த்திவிட்டு விடை பெற்றான்.

இப்போது முழுமையாக  பழைய சித்ராங்கியாக அவள் மாறி இருந்தாள். சித்துவிடம் கூட பழைய சீண்டலும் கேலியும் அன்புமாக காதலுடன் நடக்க துவங்கினாள். அவனும் குட்டிமா என்று காதலுடன் அவளையே சுற்றி வந்து அவளை கவனித்துக்கொள்ள அவளுக்கு தனக்குள் இருந்த பழைய நினைவுகள் கிளர்ந்து மேலெழுந்தன.

“சித்து” என்றாள் அன்று இரவு அவனிடம்.
“என்ன குட்டிமா?” என்றான் ஏதோ புக் படித்தபடி.
“அதை கீழ வையுங்க, நான் முக்கியமா பேசணும்” என்றாள்.
“என்ன சொல்லு குட்டிமா” என்றான் அதை மூடிவிட்டு.
“வந்து சித்து, நீங்க... வந்து.... என்னை கண்டுபிடித்து கூட்டி வந்த பிறகு என்னிடம் எப்படி நடந்துகிட்டீங்க.... நான் உங்களை கலாவை எல்லாம் நல்லா கவனிச்சுகிட்டேனா, நான் உங்களை அடையாளமே தெரிஞ்சுக்கலையே, பாவம் நீங்க எல்லாரும் எவ்வளோ வருத்த பட்டிருப்பீங்க இல்லையா சித்து” என்று கேட்டாள்.

“ஆமாண்டா, கொஞ்சம் வருத்தமாத்தான் இருந்தது..... ஆனாலும் நீ முழுசா கிடைத்ததே போதும்னு மெல்ல உன்னை நாங்க நார்மலாக்க முயன்றுகிட்டு இருந்தோம்..... நீ கலாவை உடனே தாயா புரிஞ்சு ஏத்துகிட்டே.... அவளுக்கு எல்லாம் செய்து குடுத்து எப்போதும் போல அன்பா  பார்த்துகிட்டே... அம்மாவை தெரியலைனாலும் அம்மான்னு கூப்பிட்டு சகஜமா மரியாதையா பேசி பழகினே, ஆனா...” என்று ‘சொல்லவா வேண்டாமா, அவள் வருத்தப் படுவாளோ’ என்று நிறுத்தினான்.

“என்ன சித்து, ஏன் நிறுத்திட்டீங்க.... சொல்லுங்களேன், ஆனா என்ன?” என்று உந்தினாள்.
“இல்ல என்னிடம் மட்டும்தான் ஒதுக்கமா இருந்தே, என் கிட்டேயே வரலை, என் முகம் பார்த்து பேசலை..... எனக்கு வேண்டிய பணிவிடை எல்லாம் பார்த்து செய்தே, எனக்காக சமைச்சே பரிமாறினே.... ஆனா, அருகில் வரலை” என்றான்.

“ஒ அப்போ நான் உங்களை கவனிச்சுக்கவே இல்லையா, உங்ககிட்ட என் அன்பை காமிக்கவே இல்லையா சித்து?” என்று கேட்டாள். ஆம் என்பது போல கண்ணில் ஒரு வலியுடன் தலை அசைத்தான்.
‘ஒ’ என்று கவலையானாள்.
“போறது டா, அதைப் பத்தி இப்போ என்னத்துக்கு நீ யோசனை பண்ணிக்கிட்டு...” என்று தள்ளிட எண்ணினான்.
“இல்லை பேசணும், சொல்லுங்க... அப்போ அப்படீனா நமக்குள்ள ஒண்ணுமே நடக்கலையா சித்து?” என்றாள் லேசான முகச் சிவப்புடன்.
“இல்லைடா, டாக்டரும் பார்த்து கேட்டு நடந்துகுங்கனு சொன்னாரு, நீ உன் நிலையே உணராம என்னையும் தெரியாம இருக்கும் அந்த நேரத்தில நானும் உன்னிடம் எந்த உரிமையும் எடுத்துக்க விரும்பலை.....  தள்ளிதான் இருந்தேன், ஆனாலும் உன்னை எதிர்ல வெச்சுகிட்டு உன்னை தொடாம இருக்கறது இருக்கே, கொடுமை...” என்று சிரித்தான். அவளும் வெட்கத்துடன் சிரித்தாள்.

“ஆனாலும் அதிலும் கூட ஒரு சொகம் இருந்தது.... விடுடா” என்றான்
“அப்பறம் என்னாச்சு, சொல்லி முடீங்க” என்றாள்.
“அப்போதான் உன் பர்த்டே வந்தது, அன்னிக்கி நான் உனக்கு புடவை ரோஜா பூக்கள் எல்லாம் வாங்கி வந்தேன், அந்தப் புடவையில் நீ சொக்க வைப்பது போல இருந்தியா..... அன்னிக்கி மட்டும் என்னால என்னையே கட்டுபடுத்திக்க முடியலை..... உன்னிடம் பர்மிஷன் கேட்டுகிட்டு வந்து உனக்கு முத்தம் குடுத்தேன்” என்றான் லேசாக சிவந்து கூச்சத்துடன்.
ஒ என்று கண்களை அகல விரித்தாள்.
“அன்னிக்கிதான் நீயும் என்கிட்டே சகஜமா பேசினே, ‘சிக்கிரம் வாங்க கோவிலுக்கு போகலாம்.... பிறகு வெளியே சாப்டுட்டு வரலாம்னு’ சொன்னே. ‘அப்பறம்னு சொன்னே,’ ‘அப்பறம் என்னானு’ நான் கேட்டேன்... ‘அதை அப்போ சொல்றேன் னு வெட்கபட்டுகிட்டு உள்ளே ஓடிட்டே” என்றான் சிரிப்புடன் கண்களில் அந்த நாளின் நினைப்பில் ஒரு உல்லாசத்துடன்.
இதை கேட்டு சித்ராங்கி நாணினாள். அவளுக்கு அந்த வார்த்தைகள் எதை குறித்தவை என புரியாமலில்லை.

ஆனால் இப்போது சித்து இருக்கும் குழப்பமான மன நிலையில் அவளிடத்தில் எதையும் அவன் எதிர்பார்க்க கூட விரும்பவில்லை.... அது சரியாகுமா, அவள் இப்போது இவற்றையெல்லாம் ஏன் கேட்கிறாள், அவள் மனதின் உடலின் நிலை எப்படி உள்ளதோ என்று உள்ளூர யோசனை ஓடியது.
“அன்னிக்கிதான் சாயங்காலம் கலாவை லாரிலேர்ந்து காப்பாற்ற போய் நீ விழுந்து அடிபட்டுகிட்டு உன்னை மருத்துவமனையில சேர்த்தோம்..... உனக்கு பழைய நினைவுகள் வந்தது..... அதுக்கு பிறகு என்ன நடந்துதுன்னு தான் உனக்கே தெரியுமே டா குட்டிமா” என்றான்.

“ம்ம்ம்” என்றாள் தலை கவிழ்ந்து.... அவனுடன் ஒட்டி அமர்ந்தாள்..... அவன் மார்பில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள்.... முகம் நிமிர்த்தி அவன் முகம் கண்டாள்.
“என்னடா?” என்றான்.
“உங்கள போன்ற ஒரு உத்தமர் எனக்கு கணவனா கிடைக்க நான் எத்தனை எத்தனை புண்ணியம் பண்ணி இருக்கணும்... நீங்க பாவம் இல்லையா சித்து?” என்றாள் கண்ணில் நீருடன்.
“இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை சித்து, எனக்கு நீ கிடைச்சே அதுவும் இப்போ என் பழைய குட்டிமாவா கிடைச்சுட்டே... எனக்கு அதுவே போதும்டா” என்றான் அவளை இறுக்க அணைத்தபடி.

“போதுமா, அப்போ சரி” என்று விலகினாள், அவளை விடாமல் இறுக்கிக்கொண்டான்.
“ஹே வாலு” என்றான்.
“என்னவாம், அதான் வேறே ஒண்ணும் வேணாம்னு சொன்னீங்களே சித்து” என்றாள் கண்ணில் ஒருவித உல்லாசத்துடன்.
“அது அப்போ, வந்து.....” என்று உளறி கொட்டி கிளறி மூடினான். அவன் கண்களின் தாபத்தை கண்டு “ஆனா இப்போ?” என்றாள் சித்ராங்கி.

“இப்போ இந்த நேரத்தில மனசும் உடம்பும் ஏதேதோ கேட்குதுதான்” என்றான் அவள் கண்களில் உல்லாசம் கண்ட தைரியத்தில்.
“ம்ம்ம், அப்படியா.... என்ன கேட்குது நாலு உதையா, ரெண்டு அடியா?” என்றாள் குறும்புடன்.
“நீ ஆசையா எது குடுத்தாலும் என்ன குடுத்தாலும் எனக்கு ஒகே தான் குட்டிமா” என்று அவள் தலையோடு தலை முட்டினான். அவள் எழும்பி அவன் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தாள். அது தந்த தைர்ய்த்தில் அவனும் அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்.

மோகித்து தாகித்து இருந்த இரு அன்பு இதயங்கள் வாடி கிடந்த பயிருக்கு நீர் வார்த்தது போல சிலிர்த்துக் கொண்டன.... ஒரு முத்தம் பல முத்தமாக மாறியது.... அவள் கிறங்கி அவன் மார்பில் ஒன்றினாள்..... அவன் கண்ணால் வினவ, அவனுக்கு விடை கிடைத்த கணத்தில் அவன் மறந்து போயிருந்த காதல் பாடங்களை நடத்த முற்பட்டான்.... லேசான வெட்கமும் நாணமும் போட்டிபோட சிலிர்த்து துவண்டாள் சித்ராங்கி....

அடுத்து வந்த காலங்களில் அன்பும் நேசமுமாக எப்போதும் போல தன் வீட்டையும் தனது குடும்பத்தையும் அன்புற நடத்தி வந்தாள் சித்ராங்கி... பழைய கால புகைப்படங்கள், பார்க்கும்போது நெஞ்சில் சில சலனங்கள் வந்து மறைந்தன..... அதை பொக்கிஷமாக பொதிந்து வைத்து விட்டு வாழ்க்கையை அனுபவிக்க ரஞ்சன் அவளுக்கு கற்று குடுத்தான்.... அதே போல இன்னமும் கூட கண்ணாடியில் தன் முகம் பார்க்கும்போது, தினமும் ஒரு கணம் மனம் திடுக்கிடத்தான் செய்கிறது, அது இயற்கை, அதனால் அதை எதுவும் மாற்ற முடியாமல் அத்துடன் வாழ பழகி வருகிறாள் சித்ராங்கி.

நிறைந்தது


























Tuesday 26 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 9

அவன் தாய்தான் அழைத்திருந்தாள்.
“அப்பா கண்ணா உடனே கிளம்பி வா, நம்ம மலர் ஹாஸ்பிடலுக்கு வா” என்று பதறியபடி கூற கேட்டு,
“யாருக்கு என்னம்மா, சித்துவுக்கா மா, என்னாச்சுமா?” என்றான் அவனும் பதறி வாய் தந்தி அடிக்க.
“நீ வா பா சொல்றேன்... இப்போ பேச நேரமில்லை” என்று வைத்துவிட்டார்.

‘கடவுளே என் சித்துவுக்கு ஒன்றும் ஆகி இருக்கக் கூடாது.... ஐயோ இன்று அவள் பிறந்த நாள் ஆயிற்றே, இன்றா இப்படி..... என்ன நடந்திருக்கும்... விபத்தா, இல்லை அவளது மன நிலையில் ஏதேனும் மாற்றமா, பழையது ஞாபகம் வந்து குழம்பினாளா, இல்லை ஒரு வேளை கலாவுக்கா?’ என்று குழம்பி பீதியில் வண்டி ஓட்டி மலர் ஹாஸ்பிடலை சென்றடைந்தான்.

அங்கே சென்று தன் அன்னையைக் கண்டு “என்னம்மா என்னாச்சுமா யாருக்கு?” என்றான் மூச்சுவாங்கியபடி.
“நீ கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கோ கண்ணா, சித்ராக்குதான்... நான் சொல்றேன்.... பொறுமையா இரு.... இன்னிக்கி மத்தியானம் நம்ம கலா வாசப்பக்கம் விளையாடிகிட்டு இருந்தா.... கூட நம்ம சித்ராவும் தான் அவ மேல ஒரு பார்வையை வெச்சபடி உட்கார்ந்திருந்தா..... நாந்தான் சித்ராவை ஒரு நிமிஷம் வந்துட்டு போ னு கூப்பிட்டேன்.... என்கிட்டே அவ வந்த அதே நேரம், நம்ம கலா வாசல்ல விளையாடிகிட்டு இருந்தவோ, பந்து ஓடி போச்சுன்னு அது பின்னாடியே நடு ரோடுக்கு ஓடிட்டா.... அதை குனிஞ்சு எடுக்க போனவோ எதிரே வந்த லாரிய பார்க்கலை..... அவனும் ப்ரேக் கூட பிடிக்க முடியாம தடதடன்னு வந்துட்டான்....

“என்னமோ சத்தம் கேக்குதேன்னு பாதி வழியிலேயே திரும்பி பார்த்த சித்ரா கலா வாச ரோடில ஓடறத பார்த்து “ஐயோ கலா, ஓடு நகந்துக்கோ, நான் தோ வந்துட்டேன்னு...” கத்திகிட்டே ஓடினா.
க்ஷண நேரத்தில என்னென்னமோ நடந்துபோச்சு ரஞ்சன்.... கலவை இடிக்க வந்த லாரிய பார்த்து சித்ரா கலாவ ஒரு கையால பிடிச்சு ஒரே தள்ளா ரோடுக்கு இந்த பக்கம் தள்ளீட்டா, ஆனா அதே நேரத்தில அவளுக்கு அந்த வேகத்தில பாலன்ஸ் போயிடுச்சு... லாரிக்கு முன்னாடி போய் விழுந்துட்டா....

நல்லவேளை லாரிகாரன் எப்படி கஷ்டப்பட்டு ப்ரேக் போட்டானோ அவ உயிர் தப்பிச்சுது.... ஆனா தலையில கையில எல்லாம் நல்ல அடி....
கலா வேற ரொம்ப பயந்து போய்டா, கீழே விழுந்ததுல அவளுக்கு கொஞ்சம் சிராய்ப்பு மட்டும்தான்.... ஆனா சித்ரா விழுந்தத அடிபட்டத பார்த்தவ ரொம்பவே பயந்து போயிருக்கா, அம்மா அம்மான்னு ஒரே அழுகை.... அவள அங்கே அண்ணியோட வீட்டுல பார்த்துக்க சொல்லி விட்டு, பக்கத்து வீட்டுக்காரங்க உதவியோட ஒரு டாக்சி பிடிச்சு சித்ராவோட இங்கே வந்தேன் நானு” என்றார் அழுகையினூடே.

சித்ராவுக்கு தலையில அடிபட்டிருக்கேன்னு ஸ்கான் எல்லாம் பண்ணி இருக்காங்க.... உள்ளே பார்த்துகிட்டு இருக்காங்கப்பா..... இன்னும் அவ நிலையை பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க, எனக்கு பயமா இருக்கு.....” என்று கலங்கினார்  
இதை எல்லாம் கேட்டு உடலும் உள்ளமும் பதற அதை வெளிக்காமிக்காது அன்னையை தேற்றினான்.
“சரி மா, நீ கவலைப்படாம உக்காரு... நான் டாக்டர பார்த்து பேசீட்டு வரேன்” என்று ஓடினான். முக்கிய டாக்டர் யாரென்று விசாரித்து அவரிடம் போய் டாக்டர் என்று பரிதவித்து நின்றான்.
“எஸ்” என்றார்.
“நான் உங்களிடம் முக்கியமா அவசரமா பேசணும், சில விஷயங்கள் உங்களுக்கு தெரியபடுத்தணும்..... சித்ராங்கிங்கற பேஷன்ட் என் மனைவி, அவளுக்கு சில மாதங்கள் முன் ஒரு விபத்து ஏற்பட்டது...” என்று துடங்கி அவள் அதன்பின் அடைந்த நிலை, அவளது சிகிச்சை... இப்போதைய அவள் அம்நீஷ்யா நிலை... என்று எல்லாமும் விவரமாக எடுத்து கூறினான்.
“ஒ மை காட், இவ்வளோ நடந்திருக்கா, ஓகே நீங்க எனக்கு தெரியப்படுத்தினது நல்லதா போச்சு.... இவங்க நிலை அறிஞ்சு நாங்க இனி ட்ரீட் பண்ண முடியும்.... இன்னும் அவங்க கண் விழிக்கலை..... தலையில காயம் பெரிசில்லை.... ஸ்கான் நார்மலா  இருக்கு.... ஆனாலும் வேறே சர்ஜரி நடந்திருக்கேன்னு கொஞ்சம் சந்தேகம் இருந்தது, இப்போ நீங்க சொன்னதும் எங்களுக்கு புரிஞ்சுபோச்சு.... காத்திருங்க பார்க்கலாம்” என்றார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் சித்ராங்கி கண் திறந்தாள்.
“நான் எங்கிருக்கேன், ஒ ட்ரெயின் ஆக்சிடென்ட் ஆகி போச்சு” என்று மண்டையை பிடித்துக்கொண்டாள்.
“எனக்கு பலமா அடிபட்டுதே...” என்று எழ முயன்றாள்.
“அம்மா அப்படியே இருங்க, எழுந்துக்க வேண்டாம்” என்று படுக்க வைத்தாள் நர்ஸ்.
“ஐயோ, அவருக்கு தகவல் போச்சோ என்னமோ... எப்படி தவிக்கிறாரோ...” என்று பயந்தபடி அரற்றினாள்.
“ஓகே நினைவு திரும்ப வந்துடுச்சுன்னு தோணுது.... கொஞ்ச நேரத்தில நமக்கு தெளிவாகிடும், அவங்க கணவர வரச் சொல்லுங்க நர்ஸ்” என்றார் டாக்டர்.
ரஞ்சன் பதறியபடி உள்ளே ஓடி வர, “சித்து” என்று இரு கை நீட்டி அவனிடம் சேர துடித்தாள் சித்ராங்கி.
“சித்து” என்று அவனும் ஓடி வந்தான் அவள் அவனை சித்துவென அழைத்ததை எண்ணி மகிழ்ந்து என்னென்னமோ எண்ணங்களுடன் அவளை அணைத்துக்கொண்டான்.
“நான் ரொம்ப பயந்துட்டேன் சித்து, நீங்களும் விஷயம் கேள்விப்பட்டு பயந்துதான் போயிருப்பீங்க இல்லையா சித்து?” என்றாள்.
‘இவள் எந்த விபத்தை குறிப்பிடுகிறாள்?’ என்று ஒரு கணம் நிதானித்தான். டாக்டரை பார்த்தான். ‘பேச்சு குடுங்க’ என்று சைகை செய்தார்.

“உனக்கு ஒண்ணும் ஆகலியே குட்டிமா?” என்றான் அவளை அணைப்பிலேயே வைத்தபடி.
“இல்லை, தலையில கொஞ்சம் வலிக்குது.... இங்கே கையில கொஞ்சம் அடி.... நல்லகாலம்..... நல்லா தூங்கிகிட்டு இருந்தேன்...  அப்போ பெரிய சத்தம் கேட்டு தூக்கிவாரி போட்டு எழுந்தேன், பாம்ப் வெடிச்சு ஒரே களேபரமா ஆகி போச்சு..... பின் ஒரே க்ஷணத்தில மேலே பர்திலேர்ந்து தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்துட்டேன் சித்து..... என் மேலேயே மேல் என்னென்னமோ நெருப்பு கங்கு மாதிரி விழுந்துது..... நான் கீழ விழுந்த பிறகு என்னாச்சுனு எனக்கு தெரியல சித்து” என்றாள் அவனிடம் ஒன்றியபடி.
நடுவால நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை என புரிந்தது. இதன் இடையில் இந்த டாக்டர் கோபிநாத்தின் நம்பர் வாங்கி இவளின் உடல் நிலை இப்போதைய நிலை குறித்து அவரிடம் பேசினார். விவரங்கள் திரட்டிக்கொண்டார்.

“ஓகே பேசாம படுத்துக்கோங்க மா, இனி பயமில்லை” என்று அவளை படுக்க வைத்துவிட்டு அவனை தோளோடு அழைத்து வெளியே கூட்டி வந்தார். “அவங்களுக்கு  நடுவால நடந்தது எதுவுமே நினைவில் இல்லை.... அது அப்படியே இருக்கட்டும்.... மெல்ல மெல்லமா வீட்டிற்கு போன பிறகு ஒரு கதை மாதிரி எல்லாம் சொல்லீடுங்க போதும்..... தானே கொஞ்சம் குழம்பி தானே தெளிஞ்சுடுவாங்க.... கொஞ்சம் அடிகள் பட்டிருக்கு, அதற்கு பிளாஸ்டர் போட்டிருக்கோம்..... சீக்கிரமே குணமாகீடும், அதைப் பற்றி பயப்பட தேவை இல்லை..... இனி நத்திங் டு வர்றி, ஆனா அதே சமயம் நீங்க ஒரு விதத்தில ஜாக்ரதையா இருக்கணும்.... அவங்க முகம் மாறி இருக்கு, அதை சடனா கண்டு அவங்க அதிர்ச்சி ஆகிடாம நீங்க பார்த்துக்கணும்... மெல்ல மெல்லமா உண்மைய சொல்லி புரிய வெச்சு அவங்கள மனதளவில தயார் பண்ணீட்டு தான் அவங்க முகத்தை அவங்க பார்க்கணும்... டேக் கேர் ” என்றார்.

“ஹப்பா” என்று பொத்தென அன்னையின் அருகே வந்து அமர்ந்தான். “என்னடா ஆச்சு, என்ன சொல்றாரு டாக்டர்?” என்றார் சிவகாமி கவலையுடன். “நல்லா இருக்கா மா, கொஞ்சம் அடிபட்டிருக்கு குணமாகீடும்.... இதுல கெட்டதில ஒரு நல்லது, அவளுக்கு நினவு திரும்பீடுச்சுமா.... இப்போ பழைய விபத்து நடந்து தான் முழிச்சிருக்கோம்னு நினைப்பில இருக்கா, இப்போதைக்கு அப்படியே இருக்கட்டும்னு சொல்லி இருக்காரு டாக்டர்.... வீட்டில போய் மெள்ளமா சொல்லிக்கலாம்னு சொல்றார்” என்றான்.

“கடவுள்தான் காப்பாற்றினார் நல்ல காலம்” என்றார்.
மீண்டும் அவன் சித்ராங்கியிடம் செல்ல “சித்து, கலா எப்படி இருக்கா, அம்மா எங்கம்மா எல்லாம் எப்படி இருக்காங்க..... முக்கியமா உங்களை பற்றி சொல்லுங்க, ரொம்ப பயன்துட்டீங்களா, பாவம் இல்ல நீங்க” என்றாள் அவன் கையை நீட்டி பிடித்துக்கொண்டு.

“ம்ம்ம் ஆமா குட்டிமா, ரொம்ப பயந்துட்டேன், கலங்கிபோயிட்டேன், பைத்தியம் மாதிரி ஆலஞ்சு திரிஞ்சு உன்னை தேடினேன்... எங்கேயுமே கிடைக்காம துவண்டு போய்ட்டேன்... ஐயோ அத போல நிலை யாருக்குமே வரக் கூடாது குட்டிமா” என்றான் அந்நாளின் நினைவில். அவன் கையை பிடித்து தடவி கொடுத்தாள்.
“இப்போதான் எல்லாம் சரியா போச்சே, கவலைபடாதீங்க சித்து” என்றாள் அன்புடன்.

அடுத்த நான்கு நாட்கள் அவளை அங்கேயே அப்சர்வேஷனுக்காக வைத்திருந்தனர்.... பெரிதாக எந்த மாற்றமும் இல்லை, அடிகள் குணமாகி வந்தன என்பதால் கட்டு மாற்றி அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்தவரை அவள் தன் முகம் காணாமல் காப்பாற்றி ஆயிற்று இனி எப்படி என்று கலக்கத்துடனேயே சித்ராங்கியை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
வந்தவள் உடனேயே “கலா குட்டி” என்று ஓடி போய் மகளை கையில் ஏந்திக்கொண்டு. முத்த மழை பொழிந்தாள். உடனே துணுக்குற்றாள்,
”என்ன இது குழந்தை இப்படி வளர்ந்திருக்காளே... சித்து, நான் எத்தன நாளா ஹாஸ்பிடல்ல இருந்தேன்...?” என வினவினாள். அவள் முகம் குழப்பத்தில் சுணங்கியது.. புலி வந்தேவிட்டது என உஷாரானான் சித்து
“அம்மா... அம்மா, நீ.... வண்டி இடிச்சுது” என்று திணறினாள் குழந்தை.
“ஆமா டா கண்ணு, ஆனா பாரு அம்மாக்கு ஒண்ணும் ஆகலையே, நான் நல்லாத்தானே இருக்கேன்.... இனி நீ எதுக்கும் பயப்படக் கூடாது, சரியா” என்று முகத்தோடு கொஞ்சிக்கொண்டாள். ‘இவ்வளவு பேசறா குழந்தை...’ என உச்சி முகர்ந்தாலும், இது எப்படி என மண்டைக்குள் வந்து குடைந்தது.

“சித்து இங்க வா” என்று தங்கள் அறைக்கு அழைத்து போய் கட்டிலில் அமர்த்தினான்.... அருகே அமர்ந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.... அவள் தோள் மீது ஆதரவாக ஒரு கையை போட்டு அணைத்துக்கொண்டான்... “என்னவாம், வீட்டுக்குள்ள வந்தவுடனே என் சித்து கண்ணாவுக்கு ஆசை பொங்கிடுச்சு?” என்று சீண்டினாள். அவள் முகம் லேசாக சிவந்தது. இன்னமும் முழுமையாக தனது கிலியிலிருந்து மீளாத குழப்பமும் முகத்தில் இருந்தது.

“நான் உன்கிட்ட முக்கியமா சிலது பேசணும்.... புரிய வைக்கணும் டா குட்டிமா” என்றான். அவன் முகத்தின் தீவிரம் கண்டு அவளும் அவனை கவனித்து கேட்கலானாள்.
“என்ன சித்து?” என்றாள்.
“உனக்கு ரயில் விபத்து நடந்து இப்போ கிட்டத்தட்ட பத்து மாசங்கள் ஆகுது குட்டிமா” என்றான்.
“என்ன, என்ன சொல்றீங்க சித்து.... அப்போ நான் எங்கே இருந்தேன் இவளோ நாளா?” என்று அதிர்ந்தாள். அவள் உடம்பு நடுங்குவதை கண்டு மேலும் இறுக்க அணைத்துக்கொண்டான்.
“எல்லாம் சொல்றேன், மனதை திடமா வெச்சுகிட்டு பயப்படாம கேட்கணும் குட்டிமா” என்று அவளை தேற்றி, அவளது ரயில் விபத்து, விஜயவாடாவில் இருந்தது, அவளது சிகிச்சை, அவள் முக மாற்றம், அவன் அவளை கண்டு தேடி அலைந்து ஓய்ந்தது, அங்கே சென்று அவளை எதேர்ச்சையாக கண்டு பிடித்தது, கோபிநாத்திடம் பேசி அவளை இங்கே அழைத்து வந்தது இப்போது இந்த விபத்து என்று விவரமாக சொல்ல சொல்ல அவளுக்கு மயக்கமே வந்தது.

“நிஜமா நிஜமா சித்து?” என்று உளறினாள் குழம்பினாள்.
“அப்போ என் முகம்... என் முகம் பழையது போல இல்லையா, விகாரமா இருக்கா சித்து... ஐயோ” என்று பதறினாள்.
“ச்சே ச்சே டாக்டர்களின் சிறந்த சிகிச்சையினால முன்னைவிட அழகா இருக்கே குட்டிமா.... ஆனா வேறே மாதிரி ஜாடை வந்திருக்கு, அவ்ளோதான்..... பயப்படக் கூடாது, கவலையோ பதட்டமோ கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார் டா செல்லம்” என்று தேற்றினான்.

“நான் பார்க்கணும்” என்றாள்.
“சரி வா” என்று கூடவே எழுந்து அப்படியே அணைத்த வாக்கில் தங்கள் அறையிலேயே இருந்த முழு நீள கண்ணாடியின் முன் அவளை கொண்டு நிறுத்தினான். தன்னை அதில் கண்டு அதிசயித்தாள், அதிர்ச்சியுற்றாள். முகத்தை தடவி தடவி தொட்டு பார்த்துக்கொண்டாள். தடவினாள், அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டாள். அதே கண்கள் அதே காது, ஆனால் மோவாயின் வடிவம், புருவம், மூக்கு கன்னங்கள் என மாறி இருந்தன. மிக லேசாக தைய்யல் தழும்புகள் இன்னமும் தென்பட்டன... சித்ராங்கியின் ஜாடையில் வேறொரு பெண் என்பது போல, தான் இருப்பதை கண்டாள். தன்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது. அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே வந்து கட்டிலில் அமர்ந்தாள்.

“அழக்கூடாது குட்டிமா” என்று அவள் கண்ணீர் துடித்தான்.
“நீ எனக்கு முழுசா கிடைத்தாயே அதுவே பெரிசு, நான் தவிச்ச தவிப்பு.... ஐயோ என் பரம விரோதிக்கும் அந்த நிலை ஏற்படக் கூடாது..... நீ எப்படி இருந்திருந்தாலும் என்ன நிலையில இருந்திருந்தாலும், அழகே இல்லாம மாறி இருந்தாலும் எனக்கு நீதான் வாழ்க்கை குட்டிமா, அத பார்க்க, நீ இப்போ அழகா தான் இருக்கே.... இந்த முகத்தின் தையல் வடுக்கள் இன்னமும் கொஞ்ச காலத்துல மாறீடும்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்கடா செல்லம்..... ஸோ நீ கவலைப்படவே கூடாது” என்று அவளை பேசி பேசி தேற்றினான.

கொஞ்சம் தெளிந்தாள்..... அவன் தோளிலேயே தலை சாய்த்துக்கொண்டு எதுவும் பேசாமல் அவன் சொன்ன, கடந்து போனவற்றை அசை போட்டாள்.... இன்னமும் அவை எதுவும் அவள் மனதில் ஆழ பதியவில்லை.... ஒரே பிரமிப்பாக குழப்பமாக இருந்தது.... தலை வலிப்பது போல இருந்தது.... ஒரே நாளில் எவ்வளவு அதிர்ச்சி இது என்று குடைந்தது....
“சித்து, தலைய என்னமோ போல இருக்கு” என்றாள் சோர்வுடன்.
தொடரும்


Monday 25 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 8

ஒவ்வொரு நாளும் சித்ராவின் நலனை கருதியே ஒவ்வொன்றும் ரஞ்சன் செய்து வந்ததை கண்டு சித்ராங்கியின் மனம் அவன்பால் கொண்ட அன்பு மேலும் பெருகி இப்போது காதலாக கனிந்திருந்தது.... அவனை நேருக்கு நேர் காணும்போதெல்லாம் மனதில் ஒரு இன்ப படபடப்பு.... அவன் ஏதேனும் கேட்க அருகில் வந்தால் எதையோ எண்ணி மனம் ஏங்கியது எதிர் பார்த்தது..... அவன் குளித்து வந்ததும் ஈர தலைமுடியை தன் கையால் துடைத்து விட மனம் ஏங்கியது.... அவன் சட்டை அணியும்போது அதன் பித்தான்களை தான் இருந்து போட ஆசை வந்தது..... அவனுக்காக பார்த்து பார்த்து கேட்டு தெரிந்து சமைத்தாள்.... அருகே நின்று பரிமாறினாள்.... அவளின் அந்த சில செய்கைகளினால் ரஞ்சனின் மனம் குளிர்ந்தது.... அவளிடம் ஓரளவு நல்ல மாற்றங்கள் வந்துள்ளன...  மெல்ல மொத்தமாகவே உணர்ந்து விடுவாள் என்று அவனும் காத்திருந்தான்.

அப்போது ஒரு நாள் அவனின் மாமா ஊரிலிருந்து வர வீட்டினர் கலவரமாயினர். சித்ராங்கியின் நிலை யாருக்கும் தெரியாத இந்த நேரத்தில் அவருக்கு என்ன வென கூறி புரிய வைப்பது என்று குழம்பினர்.

“வாங்க மாமா” என்றான்.
“வா அண்ணா” என்று சிவகாமி முன்னே வந்து பேச்சு குடுத்தார், அவனுக்கு கண் ஜாடை செய்ய அவன் உள்ளே சென்று,
“சித்து, ஊர்லேர்ந்து எங்க மாமா வந்திருக்காரு.... நீயும் அவர மாமான்னு தான் கூப்பிடுவே, கல்யாணத்திற்கு பிறகு ரெண்டு மூணு வாட்டித்தான் அவர் வந்திருக்காரு இங்க..... ரொம்ப பரிச்சயம் இல்லை..... வந்து வணக்கம் வாங்கன்னு சொல்லீட்டு உள்ளே வந்துடு டா, நான் மிச்சத்த பார்த்துக்கறேன்” என்றான்.
சரி என்று அவனுடன் வெளியே வந்தாள்.
“வணக்கம், வாங்க மாமா நல்லா இருக்கீங்களா?” என்றாள். அவள் குரலை அடையாளம் தெரிந்தாலும் “இது யாரு?” என்றார் அவர் திகைத்து.
“என் மனைவி சித்ராங்கிதான் மாமா” என்றான்.
“என்னடா உளர்றே, இது சித்ராங்கியா, அவ கொஞ்சம் வேற ஜாடையா இல்ல இருப்போ?” என்றார் சந்தேகமாக.
“ஆமா மாமா அவ முகமும் மனமும் கொஞ்சம் மாறி இருக்கு, அது ஒரு பெரிய கதை” என்று சுருக்கமாக கூறினான்.
“இதென்னடா கூத்து..... எவனானும் டாக்டர் ஏதானும் கதை சொன்னா அதை நம்பி யாரோ முன் பின் முகம் தெரியாத பெண்ணை உன் மனைவிதான்னு நம்பி வீட்டுக்கு கூட்டி வந்து குடித்தனம் பண்ணீடுவியா..... நாலும் விசாரிக்க வேண்டாமா, உன் புத்தி ஏண்டா இப்படி போகுது” என்று திட்டி தீர்த்தார்.

“என்ன மாமா பேசறீங்க, நீங்கதான் தப்பு தப்பா பேசறீங்க.... அவ என் மனைவின்னு யாரோ சொல்லி எனக்கு புரிய வேண்டிய நிலையில நான் இல்லை மாமா..... அவ என் சித்துன்னு என் மனசுக்கே நல்லா தெரிஞ்சதாலதான் அழைத்து வந்தேன்.... அதை நீங்க நம்பணும்னோ ஒத்துக்கணும்னோ நான் எதிர் பார்க்கலை மாமா” என்றான் அவனும் ஆத்திரத்தை அடக்கி ஆண்டு.
“என்னவோ செய், பெரியவங்க பேச்சை யார் கேட்கிறா, அனுபவித்தா தெரியும்... அப்போ வருவீங்க ஐய்யா அப்பா காப்பாத்துன்னு” என்றார்.
“நிச்சயமா உங்க கிட்ட அப்படி ஒரு நிலையில வந்து நிக்க மாட்டேன் மாமா, நம்பலாம்” என்றான் கடுமையாக.

“என்ன சிவகாமி இது?” என்றார்.
“அவன் சொல்றதும் சரிதானே அண்ணா, சித்ராவை முகம் மாறினா மட்டும் மனுஷி அடையாளம் தெரியாம போயிடுமா....  அவ மன நிலை பாதிக்க பட்டு இருந்தா நம்ம வீட்டு மருமக இல்லைன்னு ஆயிடுமா” என்றார் அவரும்.
“என்னமோ போங்க” என்று அவர் கிளம்பினார்.

உள்ளே சென்ற சித்ராங்கி உடைந்து அழுதாள். அவளை தேற்றும் வகை அறியாமல் அவன் குழம்பினான்.
“ஏண்டா குட்டிமா நீ அழுகுறே, நாலு பேர் பேசினா பேசட்டுமே டா... அழாதே டா” என்றான் ஆதுரமாக அவள் தலை கோதி.
“இல்லை, எனக்கு ஒண்ணுமே தெரியல.... எல்லாம் மறந்து போச்சு.... எல்லாம் குழம்பி நிக்கறேன், என்னால உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை, இப்போ உங்க சொந்தங்கள் நடுவே உங்களுக்கு என்னால அவமானம்..... பேச்சு கேட்க வேண்டிய அவசியம், எல்லாம் என்னாலே....” என்று மேலும் அழுதாள்.

“எதுவுமே உன்னால இல்லை... நீ உன்னையே பழி சொல்லிக்காதே டா” என்றான்.
“இல்லை, நாந்தான் கேட்கறேன், அதான் எனக்கு உங்களையே தெரியலை, என் முகம் மனசு எல்லாம் மாறி இருக்கே.... என்னை ஏன் அழைத்து வந்தீங்க.... அங்கேயே விட்டுட்டு நீங்க வேற யாரானும் நல்லவளா பார்த்து அழகா கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ்ந்திருக்கலாம் இல்ல...?” என்றாள் சிறு குழந்தை போல அழுகையினூடே.
அவனுக்கு வந்த கோபத்தில் பளிச்சென்று ஒரு அரை வைத்துவிட்டான். அவள் அதிர்ந்து கன்னத்தை பிடித்த வண்ணம் திக்பிரமை பிடித்து அமர்ந்துவிட்டாள். “என்ன பேசறே, உன்னை காணாம நான் தவிச்ச தவிப்புக்கு கடவுள் மனம் வைத்து உன்னை மறுபடி என் கண்ணில காட்டினார்னு நான் நித்தமும் அவருக்கு நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்... உனக்கு கிண்டலா இருக்கா?”

“இந்த ஜென்மத்தில நீதான் நீ மட்டும்தான் என் மனைவி குட்டிமா... அதை நல்லா புரிஞ்சுக்கோ, இந்த மாதிரி எதையானும் உளறாதே.... நான் உன் மேல வெச்சிருக்கற அன்பை குறைவா எடை போடாதே சித்துமா.....” என்றான் ஆற்றாமையுடன். அவனின் அந்த அன்பின் அளவில் திக்குமுக்காடி போனாள் சித்ராங்கி.
“சாரி” என்றாள் மெல்ல.
“இட்ஸ் ஒகே, இன்னொரு முறை இப்படி பேசாதே, எனக்கு இங்க வலிக்குது” என்று தன் இதயத்தை தொட்டு காட்டினான்.
“அவசரத்தில கோபமா அடிச்சுட்டேன், என்னை மன்னிச்சுக்க குட்டிமா” என்று அவள் கன்னத்தை தடவி கொடுத்தான், அதில் சிலிர்த்து நகர்ந்து “பரவாயில்லை,. நானும் அப்படி பேசி இருக்கக் கூடாது.... சாரி” என்றாள்.

அந்த நேரத்தில் அவளின் பிறந்த நாள் வந்தது. அவளுக்காக என அழகிய ஒரு புடவையும் ரோஜா பூக்களும் ஒரு கேக்கும் வாங்கி வந்தான்.
முந்தைய இரவு அவன் அருகே ஒதுங்கி படுத்து உறங்கும் அவளை சிறு குழந்தையாக அள்ளி கைகளில் ஏந்த மனம் துடித்தது....
நள்ளிரவில் மெல்ல அவளை தொட்டு எழுப்பினான்.... அவள் முகத்தின் அருகே குனிந்தான்.... அவள் அவன் தொடுகையில் கண் விழித்தவள் அவனை தன் முகத்தின் அருகே அவ்வளவு கிட்டத்தில் பார்த்து அதிர்ந்தாள்.... அவளது அதிர்வு கண்டு அவன் மனம் ஒரு நிமிடம் சுணங்கியது... போனா போகுது என்று தேற்றிக்கொண்டான்..

“ஹாப்பி பர்த்டே குட்டிமா” என்றான் அவள் காதோரம். அன்று அவளுக்கு பிறந்த நாள் என்று கூட அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் சட்டென்று கண் அகல முழித்து எழுந்தாள்.
“தாங்க்ஸ்” என்றாள் மெல்ல. ரோஜா பொக்கேவை அவள் கையில் திணித்தான்.... அதை ஆவலுடன் வாங்கிக்கொண்டாள்.... நெஞ்சோடு அணைத்து பூக்களுக்கு முத்தமிட்டாள்.
‘ஹ்ம்ம் நான் வாங்கின பூவுக்கு முத்தம் கிடைக்குது, அதை வாங்கின எனக்கு......’ என்று மனம் ஏங்கி தவித்தது.
“ரொம்ப அழகா இருக்கு தாங்க்ஸ்” என்றாள் மீண்டும் அவனிடம்.

“உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்குதான் தெரியுமே குட்டிமா” என்றான் தாபத்துடன். அவன் கண்களை கண்டவள் அதிலிருந்த ஏக்கத்தை கண்டாள். அது அவளை என்னவோ செய்தது. கண்களை தாழ்த்திக்கொண்டாள். பிறந்த நாள் என்று அவன் தன்னிடம் ஏதேனும் எதிர் பார்ப்பானோ என்று அவள் பதைத்தாள். அவளது உடலும் மனமும் கூட அதை எதிர் பார்த்ததோ என்று கூட ஒரு கணம் எண்ணி வெட்கினாள்.

“சரி படுத்துக்கோ தூங்கு” என்றபடி அவனும் மிக சிரம பட்டு தன் மனதையும் உடலையும் அடக்கி அந்தப்பக்கம் திரும்பி படுத்தான்.... மனம் தத்தளித்தது.... தூக்கம் பிடிக்கவில்லை.... அவளும் படுத்தாள். ரோஜாக்களை வருடிய வண்ணம் படுத்திருந்தாள். அதன் சில்லென்ற மெத்தென ஸ்பரிசம் அவள் மனதை கொள்ளைகொண்டது. பாவம் அவன் என்று தோன்றியது.

‘ரோஜாக்களுக்கு இவ்வளவு முத்தம் குடுத்தேனே, எனக்காக என் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் கொண்டு பரிதவிக்கும் அவனுக்கு ஒரு முத்தமேனும் நான் தந்திருக்க வேண்டுமோ’ என்று குற்ற உணர்வு தோன்றியது. உடனே வெட்கம் வந்து சூழ்ந்து கொண்டது. ‘நாளைக்கு தருவேன்’ என்று மனதினுள் எண்ணிக்கொண்டு உறங்கிபோனாள்.

அதே நேரம் ரஞ்சனும் தூக்கம் இன்றி புரண்டபடி இருந்தான்.... சித்ராங்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள் என கண்டு அவள் கால் மாட்டில் வந்து தலை வைத்து படுத்தான்..... மெல்ல அவள் தூக்கத்தை கலைக்காமல் அவளது அந்த பாதத்தின் மச்சத்தை கண்ணால் ரசித்த வண்ணம் இருந்தான்.... மனதின் தாபங்களை அடக்கமாட்டாமல் தவித்தான், மெல்ல அந்த மச்சத்தை வருடினான்.... அந்த ஸ்பரிசத்தில் சித்ராங்கி கண் விழித்தாலும் என்ன நடக்கிறது என்று உடனே க்ராகித்தாள்.... அசையாமல் படுத்திருந்தாள்.... மெல்ல பூ போல அவன் விரல்கள் அவள் பாதங்களை வருடிய வண்ணம் இருந்தன..... அந்த சுகத்தையானும் அவன் அனுபவிக்கட்டும் என அசையாமல் கிடந்தாள். குறுகுறுவென்றது, முகம் சிவந்து போனது.

அதிகாலை விழிப்பு வந்தது. ஆழ்ந்த தூக்கத்தின் மிகுதியில் அவள் அவனருகே புரண்டு அவன் நெஞ்சில் தலை சாய்த்து உறங்குவதை உணர்ந்து வெட்கி எழுந்தாள்.
‘நான் அவனை மிகவும் இம்சை படுத்துகிறேனோ..... அவனே எனக்காக என்னை நெருங்காமல் தன்னை காக்கும் நேரத்தில், நான் என்னையும் அவனுக்கு தராமல் இப்படி நெருங்கி படுத்து அவனை ரொம்பவே படுத்துகிறேன்..... எதிரில் இருந்தும் தொட முடியாமல் தவித்திருக்க அவன் என்ன ஞானியா என்ன....’ என்று அவனுக்காக யோசித்தபடி எழுந்தாள்.
அந்நேரம் வரை அவள் அப்படி படுத்திருக்க அதுவே போதுமென்றுதான் அவனும் அதை ரசித்தபடி உறங்கிக்கொண்டு இருந்தான். அவள் மெல்ல விலகி வெட்கத்துடன் அவனை பார்த்தபடி எழுந்ததை கண்டு அப்போதே முழித்த அவனும் கூட உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். அவனும் கூடவே எழுந்தான்.
“ஹாப்பி பர்த்டே மை டியர் குட்டிமா” என்றான்.
“தாங்க்ஸ்” என்றாள்.

குளித்து முடித்து வெளியே வந்து உடை உடுத்த முயல, அங்கே அவள் கட்டிலின் மீது அந்த அழகிய மயில் கழுத்து நிற மெல்லிய சரிகை இட்ட பட்டுப்புடவை இருந்தது கண்டாள், மாட்சிங்காக பிளவுசுடன். அதன் அழகு அவளை கட்டிப்போட்டது. எடுத்து அழகாக நீவி உடுத்திக்கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள். அவளையே அவளுக்கே மிகவும் பிடித்திருந்தது.... அவளின் அழகு கூடி அவளின் கண்ணுக்கே ரம்மியமாக தெரிந்தாள்....
‘இப்போது என்னை அவன் பார்த்தால், எப்படி தன்னையே கட்டி ஆளுவான்?’ என்று எண்ணி சிலிர்த்தாள். அதன் முடிவில் அவனின் அன்புக்கு முன் தான் தூசி பெற மாட்டோம், இனியும் அவனை தவிக்க விடக் கூடாது.... இன்று என் பிறந்த நாளை ஒட்டி என்னையே அவனுக்கு பரிசாக தர வேண்டும்.... அவனிடம் சகஜமாக பேச வேண்டும்....’ என சில முடிவுகள் எடுத்தபடி சிவந்த முகத்துடன் பிரத்யேகமாக அலங்கரித்துக்கொண்டாள்.

அறையை விட்டு அவள் வெளியே வரவும் அவன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. அவளை கண்டு பிரமித்து நின்றான். அவளின் அழகு அவனை கட்டிபோட்டது. அப்படியே தூக்கி தட்டாமாலை சுற்றி ஆழ்ந்த முத்தம் குடுத்து இறுக்கிக்கொள்ள மனம் பரபரத்தது.
“வாவ்” என்று மாத்திரம் கூறினான். கண்கள் அவளைவிட்டு அகலவில்லை. அவளோ அவனின் அந்த தாப பார்வையை கண்டு மேலும் சிவந்தாள். தலை குனிந்து நாணத்தை மறைத்தாள்.

“ரொம்ப தாங்க்ஸ், அருமையான செலெக்ஷன்” என்றாள்.
மெல்ல குனிந்து அவன் கால் பணிந்தாள்.
அவன் ஆவசரமாக குனிந்து அவளை தூக்கி நிறுத்தினான்.
“நீ என்னென்னிக்கும் நல்லா இருக்கணும் குட்டிமா.... நீ எனக்கு கிடைச்சதே போதும், அந்த கடவுளுக்கு நன்றி” என்றான் ஆத்மார்த்தமாக.
“குட்டிமா...” என்றான் தாபத்துடன்.
“ம்ம்ம்” என்றாள்.
“நான் இன்னொரு பரிசு குடுக்க ஆசைப்படறேன்” என்றன் மெல்ல தயங்கியபடி.
‘என்ன’ என்பது போல அவனை ஏறெடுத்து பார்த்தாள்.
“குடுக்கலாமா, நீ கோபிக்க மாட்டியே?” என்றான்
அவள் அவனை ‘எதற்கு நான் கோபப் படனும்’ என்று பார்க்க மெல்ல அவளருகே வந்து அவள் இடையில் கை வைத்து தன்னருகே இழுத்தான்.... அவள் பரவசம் ஆனாள்.... அவன் இன்ன பரிசு தர ஆசைப்படுகிறான் என்று புரிந்தது.... மௌனமாகவே அவனுடன் ஒன்றி நின்றாள்.... அவள் எதிர்ப்பு காட்டாது நிற்பதை கண்டு அவனுக்கு கொஞ்சம் தைர்யம் வந்தது.... மெல்ல அவள் பட்டு கன்னத்தில் இதழ் பதித்தான்.... அவள் கண் மூடி கிரங்கினாள்.... மூடிய கண்களின் மேல் இதழ் பதித்தான்....

அதற்குமேல் அவனால் அவனை அடக்கிக்கொள்ள முடியாமல் தாமாகவே அவன் இதழ்கள் அவளுடைய இதழை தேடிச் சென்று ஆக்கிரமித்தன.... பல நூறாண்டுகள் தாகத்துடன் இருப்பவன் போல ஆவலுடன் தாகம் தீர்த்தான்... அவளுக்கோ எங்கோ சொர்க்கத்தில் மிதப்பது போலத் தோன்றியது.... கிறங்கி குழைந்து அவன் கைகளில் உருகி ஒன்றி அவனுடன் இழைந்தபடி மெய் மறந்து நின்றிருந்தாள்.

ஆசை தீர முத்தமிட்டவன் அவள் கழுத்தின் வளைவில் முகம் புதைந்தான். அவளால் தாள முடியாமல் இன்பத்தில் கால்கள் குழைந்து தடுமாற அவன் மார்போடு ஒன்றி சரிய துவங்கினாள். அவள் சரியாமல் அவள் இடையை கெட்டியாக பிடித்தவன் அவளோடு கட்டிலில் சாய்ந்தான்... விட்டதை தொடர்ந்தவன் போல இன்னமும் ஆழ்ந்த முத்தங்களை பரிமாறினான்.

மகிழ்ச்சி சிலிர்ப்பு நாணம் காதல் என்று பல உணர்சிகளின் வேகத்தில் அவள் கண்ணில் இருந்து இன்ப நீரின் கசிவு. அந்த நேரத்தில் அவளின் இன்ப முனகலின் சத்தத்தில் தன்னை மீட்டுக்கொண்டான்....
‘ச்சே நான் என்ன வேலை செய்ய இருந்தேன்.... அவள் இன்னமும் தன்னை அறியாமல் இருக்கும்போது இது தவறு’ என்று மீட்டுக்கொண்டான். தன்னை சமனபடுத்திக்கொண்டான்.... அவன் மீண்டதும் அவள் என்னவாயிற்று என்று மெல்ல கண் திறந்து அவனை கண்டாள்.
“தாங்க்யு சித்து” என்றான் அவளிடம். அவள் மீண்டும் நாணி அவன் மார்பில் முகம் புதைத்தாள். அவளின் நெற்றியில் ஒரு முறை இதழ் பதித்துவிட்டு மெல்ல எழுந்துகொண்டான்.

அவளும் அவனின் விலகலை உணர்ந்து அப்போதும் தனக்காகத்தான் யோசித்திருக்கிறான் என்று உணர்ந்து ஒரு வித தவிப்புடனும் ஏமாற்றத்துடனும் தன்னை மீட்டுக்கொண்டு எழுந்து அமர்ந்தாள்.... புதிய புடவையை நீவி சரி செய்துகொண்டாள்.

அத்யாயம் 5

“நான் போய் டிபன் எடுத்து வைக்கறேன் குளிச்சுட்டு வாங்க” என்றாள் அவனிடம். முதன் முதலாக அவனிடம் அவ்வளவு பேசினாள் என்பதை உணர்ந்து அவன் அசந்து போனான்.
“சரி குட்டிமா” என்றான் மகிழ்ச்சியுடன்.
அவனும் குளித்து வர அவனுடன் சேர்ந்து இரு அன்னையரையும் விழுந்து வணங்கி ஆசி பெற்றாள்.

அவன் கிளம்பி ஆபிஸ் செல்ல, “சாயங்காலம் சீக்கிரமா வந்துடுங்க” என்றாள் மயக்கும் பார்வையுடன்.
“ஏன் என்ன விசேஷம்?” என்றான் அருகே வந்து முகத்தின் அருகே உரசினார்போல.
“இல்ல... கோவிலுக்கு போகலாம்னு.....” என்றாள்.
“ஒ அதுக்கா” என்றான் கொஞ்சம் ஏமாற்றத்துடன்.
“ஆமா, கோவிலுக்கு போயிட்டு வெளியே சாப்பிட்டு வரலாம்... அப்பறம்...” என்று சிவந்த முகத்துடன் வேறே பார்த்தாள். அவனை தவிர்த்தபடி. “அப்பறம்...?” என்றான் அவன் தாபத்துடன்.
“அதை அப்போ சொல்றேன், நீங்க சீக்கிரம் கிளம்புங்க” என்று உள்ளே ஓடிவிட்டாள். அவன் நெஞ்சமெல்லாம் நிறைந்தது. நடையில் ஒரு துள்ளலுடன் எதையோ எதிர்பார்த்த மகிழ்ச்சி பரபரப்புடன் ஆபிஸ் சென்றான். அடுத்து நடக்கப் போவதை அறியாமல்.

அன்று மாலை மிகுந்த உற்சாகத்துடன் ஆபிஸ் வேலைகளை விரைந்து முடித்துக்கொண்டு இருந்தான் ரஞ்சன். அந்த நேரத்தில் வந்த போன் அவனை புரட்டிபோட்டது.... அசந்து திகிலடைந்து அப்படியே அமர்ந்துவிட்டான்.... அடுத்து என்ன என்று யோசிக்கவும் மூளை வேலை செய்யாமல் ஸ்ட்ரைக் செய்ய, தன்னையே உந்திக்கொண்டு எழுந்து வெளியே ஓடிவந்து காரை எடுத்தான். சீறி பாயும் வேகத்துடன் ஒட்டிச் சென்றான்.