Thursday 4 October 2018

Ozhukkam enum nagai anindhu...



வணக்கம்,
நம் அனைவரின் வாழ்விலும் நம் முன்னோர்கள் கற்றுதந்ததோ, நாம் பார்த்து வளர்த்துகொண்டதோ, பல குணநலன்கள் இருப்பதுண்டு.

என் வாழ்விலும் உண்டு. அது என் தந்தை வழி தாத்தாவிட
மிருந்து நான் கற்றுக்கொண்ட ஒழுக்கம். 

ஒழுக்கம் எனும் ஒரு குணம் மட்டுமா என்றால் அல்ல... அவரின் வாழ்க்கையே அனைவரும் பின்பற்றுபடி வாழ்ந்து காட்டி சென்றவர்.

அது, ஒழுக்கமாக வாழ்வதைப் பற்றியது மட்டுமல்ல ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் செயலிலும் அது பிரதிபலிக்கப்பட்ட வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள்.

அவரின் ஒழுக்கத்தின் சான்றுகள் சில பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

89 வயது வரை அதிகாலை நன்கு மணிக்கு எழுந்து குளித்து தானே தன் உடையை துவைத்து காயவைத்தவர். 5 முதல் 8 மணிவரை தியானம் பாராயணம் என கழித்தவர். அதன் பின்னரே காபியோ சிற்றுண்டியோ.

அந்நியன் வந்து ஆட்சி செய்த காலத்தில் தாசில்தாராக பணி புரிந்தபோது நம் மக்களுக்கு எதிராக ஒரு மசோதாவை அமல் படுத்த கோரி ஆணை வந்தது. 
மறுத்தார். விரோதம் மூண்டது. தன் மக்களின் நல்வாழ்வு, கூடவே, தன் ஒழுக்கத்தை விட்டு நீதிக்கு புறம்பாக எதையுமே செய்ய முடியாது எனும் கொள்கை, இன்னமும் ஐந்து வருட சர்வீஸ் இருந்தும் வலுவில் ஒய்வுபெற்று வெளியே வந்தவர்.

வாழ்வின் சிறு சிறு ஒழுங்கீனங்கள் அவரை எரிச்சல் படுத்தும்.

“எந்த பொருள எந்த எடத்தில வைக்கிறோமோ அது அங்கதான் இருக்கணம் கண்ண மூடிண்டு போய் தொட்டாலும் அந்த பொருள் கையில் அகப்படணம்”... இது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பத்திரிகை புத்தகங்கள் வாசித்த பின் அது சரியாக மடிக்கப்பட்டு அதற்குண்டான இடத்தில இருக்கும், ஒரு மூலை கூட கசங்கியோ மடிந்தோ காணப்படாது.

உடுத்திய துணி பெட்டியிட்டது இல்லாவிடினும் கூட ஒரு துளி சுருக்கமோ கசங்கலோ இல்லாமல் நீவி விட்டபடி நிற்கும்.

நான்கு மணிக்கு மேல் உறங்கியதும் இல்லை, ஒன்பது மணிக்கு மேல் முழித்திருந்ததும் இல்லை. கதர் மட்டுமே அணிந்தார்
நேரம் தவறாமல் துயில்வதோ எழுவதோ, படிப்பதோ வேலையை பார்ப்பதோ, உண்பதோ அனைத்தும் இருக்க வேண்டும்.

Hindu பேப்பர் தலைப்பிலிருந்து “ப்ரின்டட் பை கஸ்துரி&சன்ஸ் வரை படித்து முடிக்கும் ஒரே ஒருவர் என் தாத்தாவகத்தான் இருப்பார் என எண்ணுகிறேன்.

சமைத்த பண்டம் அரியதாக எத்தனை ருசி மிகுந்ததாக இருப்பினும், அவரின் அளவு அந்த 2 மட்டுமே. பசிக்கு அருந்தியவர். ருசிக்கு அடிமையாகவில்லை.

மாலை நன்கு மணி என்றால் தோட்டத்தில் இருப்பார் என கொள்ளலாம். இருந்த ௨௦ தென்னை மா மரங்களுக்கும் தண்ணீர் ட்யூப் கூட உபயோகிக்காமல் இரண்டு கைகளில் இரண்டு வாளியில் நீர் சுமந்து வார்த்தவர். அவருக்கு உதவ என ட்யூப் வாங்கிவந்து என் தந்தை அவரிடம் வாங்கிகட்டிக்கொண்டது வேறே கதை.

இரவு உணவிற்குப்பின் நீண்டு அகன்றிருந்த வீட்டின் குறுக்கும் நெடுக்குமாக 100 முறை நடந்தபின் தான் உறங்க செல்வார்.

காதும் கண்ணும் புத்தியும் எப்போதும் திறந்திருக்க வேண்டும், சுற்றிலும் நடப்பதை அறிந்திருக்க வேண்டும், புரிந்து நடக்க வேண்டும்.

அவர் காலமாகி இத்தனை ஆண்டுகள் ஆனபின்பும் என்னால் முடிந்தவரை அதேபோன்ற ஒரு ஒழுக்கத்துடன் என் வாழ்க்கையை அமைத்து நடத்திக்கொண்டு வர முயர்ச்சி செய்கிறேன். 

நேரம் தவறாமல் அனைத்து செயல்களையும் கையாள்கிறேன். இன்னமும் துணிமணிகளும் பத்திரிக்கைகளும் மற்ற சாமான்களும் அந்தந்த இடத்தில இருக்கின்றன. ஆனாலும் அவரை போல சாத்தியப்படுமா என்றால் அது ஐயப்பாடுதான்.


En Paatti - En Guru


நம் வாழ்வில் பல சமயங்களில் பலரும் நமக்கு குருவாக விளங்கி பலவற்றையும் நமக்கு கத்துக்கொடுப்பதுண்டு. யாரென்றே அறியாத சிலரிடமிருந்தும் நாம் சிலவற்றை கற்றுக்கொண்டது பின்பற்றியது என உண்டு. தாய் தந்தை மற்றும் நம் ஆசிரியர்கள் நமக்கு என்றுமே முதன்மையான குருவாக விளங்கியவர்.

அதை மீறி, அழிக்க முடியாத, நம் வாழ்வில் முத்திரை பதித்த சிலர் இருப்பார்கள்... அவ்வழியில், என் வாழ்வில், நான் என் குருவாக எண்ணுவது என் தாய்வழி பாட்டி அவர்களைத்தான்.

ஒரே வார்த்தையில் குறிப்பிட வேண்டுமென்றால் “கலையரசி எனலாம்.

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பார்கள். அதில் ஐம்பதையும் தேர்ந்தவரோ என எண்ணி வியந்திருக்கிறேன்.

சிறு வயது முதலே, படைக்கும் உணவோ, தலைமுடி பின்னும் அழகோ, கையில் மருதாணி இடும் அற்புதமோ, நெளி நெளியாக பரவசமூட்டும் கோலமோ ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன்.

அவருக்கு பத்து விரல்களும் பத்தாயிரம் காரியம் எனலாம். அவருக்கு தெரியாத கைவினையே இல்லை. மணிகள் கொண்டு செய்யும் பை, பர்ஸ், மெல்லிய அகல வயர் கொண்டு பின்னப்பட்ட கூடைகள், பைகள், பலவிதமான கைவினை பொருட்கள், crochet, தையல் வகைகள், சின்ன சின்ன துணி துண்டுகளை கோர்த்து மிதியடி என கூறிக்கொண்டே போகலாம். அவர் தொடாத கலை நடனம் மட்டுமே. 

காகிகத்தில், பிட் துணிகளில் பூக்கள் செய்தார், பூஜாடிகளுக்கு மணியால் உரையிட்டார், படங்கள் பல வரைந்தார். அவர் வரைந்தால் சிட்டுகுருவி கூவிற்று, மயில்கள் நடனமாடின. குழந்தை சிரித்தது, பூக்கள் தலை அசைத்தன.

அவரிடம் ஆவலாக 6 வயதில் கோலம் பழகினேன். மருதாணி பக்குவமாக இட கற்றுக்கொண்டேன்.

அப்போது தொற்றியதுதான் என் கலையார்வம். அதன் பலனாக என்னுடைய இளங்கலை படிப்பில் பைன் ஆர்ட்ஸ் எனப்படும் நுண்கலை பாடமாக எடுத்து பட்டம் பெற்றேன். அந்த அளவிற்கு அவர் என்னை ஊக்குவித்துளார்.

என் பிள்ளை பருவத்தில் நான் கண்டு வியந்தவைகள்:
எங்கள் குடும்பத்தில் எந்த திருமண விழாவாகினும், சீர் முறுக்கு சுற்றுவது என் பாட்டியாகத்தான் இருக்கும். அரும்பருமாக அவர் சுற்றும் அழகே தனி. நாவில் கரையும் ருசி அபாரம், அது வேறு விஷயம். 

மணமகளுக்கு மருதாணி இடுவதிலிருந்து மடிசாரு எனப்படும் பிராமண புடவை கட்டல் மற்றும் தலையில் பூஜடை அலங்காரம், என் பாட்டி கையால்தான் நடந்தது.

மணமேடை கோலங்களில் அவர் பிரசித்தம். பாம்பு போல நெளிந்து வெள்ளை மாக்கோலமும் செம்மண்ணும் மிளிரும். அதன் மீது கால் வைத்து நடக்கவோ அமரவோ கூட மனம் வராது.

எந்த கலையாகினும் கண் பார்த்ததை கை செய்யும் பக்குவம் உடையவர்.

சமைப்பது, பூ தொடுப்பது போன்ற தினசரி விஷயங்கள் எல்லாவற்றிலுமே கூட ஒரு நளினம், நுணுக்கம், நேர்த்தி இருக்கும்.. பார்த்து பார்த்து வியந்து ‘நானும் பாட்டி’ என கூட கூட அமர்ந்து நச்சரித்து கற்றுக்கொண்டதன் பலனோ... என்னையும் கலையார்வம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்நாள் வரையிலும் அதைவிட்டு விடுபடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

கை பிடித்து கோலம் பழக்கினார், சொல் பற்றி பாட வைத்தார் ஸ்லோகங்கள் பல சொல்லி கொடுத்தார்.

மடி அமர்த்தி பின்னலிட்டார். கூடி அமர்ந்து மணியும் வயருமாக பின்னி பிணைத்தோம். சிரித்து அளவளாவினோம். கை மணக்க அப்போதே சமைத்ததோ, பழைய சோற்றுடன் மாவடுவோ, மருதாணி கையில் மணக்க, உண்ட அந்த சோறு நெஞ்சில் மணத்தது.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, பத்து பைசாவிற்கு கடலை வாங்கிக்கொண்டு நடந்தே பக்கத்து கொட்டகையில் நானும் அவருமாக மதிய காட்சி பார்த்த படங்கள் பலவும் உண்டு.

ஒன்பது பிள்ளைகளின் தாய்... 12 பேரப்பிள்ளைகளின் பாட்டி. குடும்பத்தலைவி, தாத்தாவின் கைபிடித்த காதல் மனையாள். குடும்ப பாரம் அத்தனையையும் மீறி எப்போதுமே முகத்தில் மிளிரும் குழந்தை போன்ற சிரிப்பு, பால் போன்ற மனசு. வெளேரென்ற நிறம், பட்டு போன்ற சருமம், நீண்ட தலைமுடி. என்றென்றும் என் நெஞ்சில் குடிகொண்டிருக்கிறார். வழி நடத்துகிறார்.

தள்ளாத வயதிலும் எல்லா மூட்டுகளும் வலியில் துவண்டபோதும் பேரப்பிள்ளைகளுக்கு மணியில் காயின் பர்ஸ் செய்து பரிசளித்தார். இன்றும் என் மிகப்பெரிய பொக்கிஷமாக பாதுகாக்கிறேன்.

வளர்ந்து வந்த அந்த பருவ வயதில், என்ன எப்படி எதை செய்யலாம் எதை செய்யலாகாது என எனக்கு மென்மையாக அன்பாக உரைத்தவர். அதிர்ந்து பேசி கேட்டதில்லை. யாரையும் திட்டி அவச்சொல் சொல்லி காதில் விழுந்ததில்லை. அவரின் ஆற்றல்கள் கலை போக்கிஷங்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டியவை. வாழ்ந்து காட்டிய வாழ்க்கையோ ஒரு வரலாறு.

அவர் கற்று தந்த பலதும் என்னையும் மற்ற குடும்பத்தினரையும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.



ENGIRUNDHO VANDHAAN - 14 - FINAL EPISODE


அனிதா மணப்பெண் அலங்காரத்தில் அழகுச் சிலையாக நடந்து வந்தாள். அவளையே வைத்த விழி மாறாமAல்  பார்த்திருந்தான் கிருஷ். அவனை ஓரக்கண்ணால் அவளும் கண்டாள். அவன் பார்வை கண்டு சிவந்தாள்.
“ஹேய் ஹனி”  என்றான் அருகே அமர்ந்தவளைக் கண்டு. “யு லுக் ஆசம் அனி” என்றான் குழைந்தபடி.
“யு லுக் ஹேண்ட்சம் டூ” என்றாள், மேலும் சிவந்து.

மாலை வரவேற்பு தடபுடல் பட்டது. நகரத்தின் பெரும் புள்ளிகள் அனைவரும் அங்கே இருந்தனர். அவர்களின் குடும்ப நிலை நிஜத்தில் அப்போதே அறிந்து திணறிப் போனார் சுப்பிரமணியம்.
அழகு மயிலாக அன்ன நடையில் ஒயிலாக வந்தாள் அனிதா. க்ருஷின் சூட்டிற்கு மாட்சாக புடவை நார்த் இந்தியா ஸ்டைலில் அணிந்து அவனருகே வந்து நின்றாள்.

வரவேற்பு மும்மரமாக நடந்துகொண்டிருக்க இரு கண்கள் மட்டும் அனிதாவை அன்றி வேறே ஒரு அழகிய பொன் மயிலைக் கண்டு பார்வையால் தொடர்ந்தது சொக்கிப்போனது. அதுதான் சுந்தரின் கண்கள். அவனை அவன் மனதை கொள்ளைகொண்ட தேவதை வேறு யாருமல்ல சுதாதான். அவனின் பார்வையை அறிந்தாள் தான்.
‘என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறானே?’ என்று கூச்சம் ஏற்பட்டது. அண்ணனின் மைத்துனன் என்று பேசாமலிருந்தாள். மாலை வரவேற்பிலும் அவன் பார்வை அவளைத் தொடர அவளுக்கு கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் அச்சம் கொஞ்சம் வியப்பு எனத் தோன்றியது.

சரியான நேரம் பார்திருந்தவன் அவள் ஒரு வேலையாக மணப்பெண் அறைக்கு சென்று வெளியே வர, அவளை நிறுத்தினான்.
“ஹை சுதா” என்றான்.
“ஹை” என்றாள் சுதா படபடப்பாக இருந்தது அவளுக்கு.
“நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றாள் துணிவுடன்
உடனே மகிழ்ந்து “ஷ்யூர்” என்றான் சுந்தர்.
“ஏன் காலையிலையும் இப்போதும் கூட என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க..... எனக்கு என்னமோ மாதிரி இருக்கு சங்கடமா” என்றாள் அவனை காணாது.
“ஒ, ஐ ஆம் சாரி.... உன் அழகு என்னை சொக்க வெச்சுது..... உன்னையே பார்த்திருக்க என் மனம் ஆசை கொண்டது..... என் மனசு என் சொல்பேச்சு கேட்க மாட்டேங்குது..... அது உன்னை துன்பப் படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்.... இனி அப்படி நடக்காது” என்று சென்றுவிட்டான்.

சுதாவிற்கோ மனம் துவண்டது ‘என்ன இவன் இப்படி சொல்லிவிட்டு உடனே சென்றுவிட்டானே..... என்னதான் நடக்கிறது... உண்மையில் அவன் என்ன பேச வந்தான்’ என்று இப்போது அவள் உள்ளம் பரபரத்தது. அவன் அப்படி சட்டென்று கண்ணியமாக மன்னிப்புடன் விலகியது அவள் மனதில் அவனைப் பற்றிய நல்லதொரு எண்ணத்தை வளர்த்திருந்தது. மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு மீண்டும் சென்றவள் அவனை கண்டு நின்றாள். அவன் அவளை காணவில்லை இப்போது.

“ப்ளிஸ் கொஞ்சம் உதவறீங்களா?” என்று இவளே சென்று கேட்டாள்.
“ஷ்யூர்” என்று அவள் முகம் காணாமல் அவளிடம் இருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு கூடவே நடந்தான்.
“ஐ ஆம் சாரி, உங்களை புண்படுத்த நினைத்து நான் அப்படிப் பேசலை.... நீங்க என்னவோ சொல்ல வந்தீங்களே... என்னதது?” என்று கேட்டாள் துணிச்சலுடன்.
“அது எதுக்கு இப்போ” என்றான் துவண்ட குரலில்.
“இல்லை சொல்லுங்களேன் ப்ளிஸ்” என்றாள்.
“அது ஒண்ணுமில்லை” என்றான். பின் கொஞ்சம் துணிவுடன் அவள் மலர் முகம் கண்டு
“சுதா.... நீ.. உன்னை... உங்களை...” என்று தடுமாறினான்.
“சொல்லுங்க” என்று ஊக்கினாள்.
“இல்லை நீங்க எப்படி எடுத்துப்பீங்களோன்னு...” என்று தயங்கினான். “உங்களை எனக்கு ரொம்பவே பிடிச்சுபோச்சு..... அனிதா உங்களைப் பற்றி நிறைய சொன்னாள்.... அப்போதே உங்களை சந்திக்க ஆவல் இருந்தது..... இந்த சில நாட்களில் நாம நிறைய பார்த்துகிட்டோம்..... உங்க நடை உடை பாவனை பண்பு அன்பு நற்குணம் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்திடுச்சு.... அது இப்போது காதலா மாறிடுச்சு” என்று நிறுத்தினான்.

“அதற்குமேல் கேட்க முடியாமல் வெட்கம் சூழ சிவந்து தலை குனிந்து மெல்ல நடக்கத் துவங்கினாள் சுதா.
“என்ன சுதா நான் ஏதானும் தவறா..?” என்று இழுத்தான்.
‘இல்லை’ என்று மட்டும் தலை அசைத்தாள்.

“அப்போ உனக்கும்..?” என்று கேட்டு நிறுத்தினான்.
“சுந்தர்..  காதல்னு நான் பொய் சொல்ல மாட்டேன்...ஆனா நான் கண்டவரை அண்ணா மூலமா கேள்விப்பட்டவரை நீங்களும் நல்லவர் தான் பண்பானவர்..... என்னிடம் மன்னிப்பு கேட்டு உடனே கண்ணியமாக விலகினீர்கள்..... இவை எல்லாம் உங்களிடம் எனக்கும் பிடித்துதான் உள்ளது.... காதலா என்றால் அதற்கு இன்னமும் எனக்கு விடை சொல்லத் தெரியலை.... ஆனா பிடிச்சிருக்கு” என்றுவிட்டு ஒரே ஓட்டமாய் உள்ளே ஓடிவிட்டாள்.

ஆச்சர்யத்துடன் மகிழ்ச்சியுடனும் பிரமித்து நின்றான் சுந்தர். மனம் உல்லாசமாக விசில் அடித்தது.
“என்னா மாம்ஸ் ஒரே சந்தோசம்?” என்றபடி வந்தான் தினா.
“அது ஒண்ணுமில்லையே” என்று சமாளித்தான் சுந்தர்.
“என்ன இந்த கல்யாணத்துல உங்களுக்கு எதாச்சும் மாட்டிகிச்சா?” என்றான் கண் அடித்து.
“ஐயோ தினா, சும்மா இருங்க மச்சான்” என்றான்
“மச்சானா அப்போ....” என்றான்.
“ஐயோ நான் ஒரு பேச்சுக்கு தான்..” என்று சமாளித்தான் சுந்தர்.
“சரி சரி” என்று ஒரு மார்கமாக சிரித்தபடி சென்றுவிட்டான் தினா.
‘அடக்கடவுளே, இவனிடம் இப்படி மாட்டிக்கொண்டேனே’ என்று பயந்தான் சுந்தர்.

“அண்ணி எனக்குதான் கொடுப்பினை இல்லை.... உங்களுக்கு தங்கை இல்லாம போச்சு ஆனா உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்காரே...” என்று இழுத்தான் தினா.
“ஆமா அதுக்கு...?” என்றாள் இன்னமும் புது மணப்பெண்ணின் வெட்கத்துடன் தலை குனிந்தபடியே.
“இல்ல சும்மாதான்.... சுந்தர் அங்க.... இங்கேயும்.....” என்றுவிட்டு நடந்துவிட்டான். அனிதா ஒன்றும் புரியாமல் கிருஷ்ணனைப் பார்த்தாள். அவனும் சிந்தனையில் இருந்தான்.

அத்யாயம் இருபத்தி இரண்டு

வரவேற்பு முடிந்து அடுத்த நாள் மறுவீடு சென்றனர். அவள் வீட்டிற்குச் செல்லும்போது சுதாவையும் கூட அனுப்பி வைத்தனர் பழக்கம் போல. அங்கே சுந்தருக்கு ஒரே உல்லாசம் உற்சாகம். கண்ணால் பேசிக்கொண்டே தங்கள் காதலை வளர்த்தனர் அந்த இளம் ஜோடிகள். சில நேரம் அது அனிதா கிருஷ் கண்ணிலும் மாட்டியது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்று  எண்ணிக்கொண்டனர். 
க்ருக்ஷிற்கு அனிதாவிடம் கொஞ்சவே நேரம் போதவில்லை.... ஆயினும் தங்கை உடன் இருக்கிறாள் என்று அவன் அடக்கி வாசித்தான். தனிமையில் சந்திக்கும் நேரங்களில் அவனின் சீண்டல்களும் சில்மிஷங்களும் அவளை சிவக்க வைத்தன.
“ஆனாலும் மோசம்” என்று சிணுங்கினாள் அனிதா.
“என்னவாம், என்னமோ இந்நிக்கிதான் முதன் முதலா பார்க்கிரா மாதிரி வெக்கம்” என்று கண் சிமிட்டினான்.
“ஆனாலும் நீங்க ரொம்ப வம்பு பண்றீங்க கிருஷ்” என்று புகார் கூறினாள்.
“இவ்வளவு அழகா புது பெண்டாட்டிய பக்கத்துல வெச்சுகிட்டு வம்பு பண்ணலைனா தாண்டி தப்பு” என்றான்.
“சி போ உங்களோட பேச என்னால முடியாது.... அது போகட்டும், சுதாவும் சுந்தரும் விரும்பறாங்க போலிருக்கே கிருஷ்” என்றாள் சிறிது தயக்கத்துடன்.
“ஆமாம் அனி, எனக்கும் பார்த்தா அப்படிதான் தோணுது... பார்க்கலாம் அவங்களா சொல்லிக்கிட்டு வந்தாத்தானே மேற்கொண்டு நாம ஸ்டப் எடுக்க முடியும் டா” என்றான்.

மருதமலை கோவிலுக்கு செல்லும்படி கூறினார்கள் பெரியோர். சரி என புதுமண தம்பதிகள் கூடவெ சுந்தரும் சுதாவும் சென்றனர். மலைமேல் முருகன் அழகு சிரிப்புடன் தரிசனம் தந்திருந்தான். மனம் உருகி தெய்வத்தை கண்டுவிட்டு வெளியே வந்தனர் நால்வரும். சிலுசிலுவென  குளிர் காற்று வீச சிரித்து பேசியபடி படி இறங்கினர். அப்போது அனிதாவின் கையைப் பற்றி  நிறுத்தினான் கிருஷ். என்ன என்பது போல அவனை ஏறிட்டாள்.

“கொஞ்சம் விட்டு நடப்போம்.... இவங்க சங்கதி என்னனு புரிஞ்சுடும்” என்றான் சரி என்றாள் சிரித்தபடி. அதன்படி இழைந்தபடி பேசிக்கொண்டே இவர்கள் மெல்ல இறங்க அதை கூட அறியாமல் சுந்தரும் சுதாவும் ஏதோ சிரித்து பேசியபடி முன்னே இறங்கி விட்டிருந்தனர். நடுவில் திரும்பிப் பார்க்க இவர்களை காணாது ஒரு மர நிழலில் திண்டில் அமர்ந்தனர் சுதாவும் சுந்தரும். அப்போதும் அவர்கள் உலகத்தில்  மெய் மறந்திருந்தனர்.

அவர்களை அடைந்த அனிதா கிருஷ்
“என்ன எங்களுக்கு கூட காத்திருக்காம முக்கியமா ஏதோ பேச்சு நடக்குது போல” என்றான் கிருஷ்.
“இல்லே அண்ணா அப்படி ஒண்ணும் இல்லை” என்று பதறி போனாள் சுதா. சுந்தர் என்ன சொல்வது பிடிபட்டோமே என்று தடுமாறினான்.
“ஹே நான் சும்மா கிண்டலுக்காக சொன்னேன், வாங்க போகலாம்” என்று முன்னே சென்றான்.
கீழே சென்று நால்வரும் வண்டியில் ஏறி வீட்டை அடைந்தனர். அன்று ஊர் திரும்ப வேண்டும்.
சுதா முகத்தில் அந்த ஏக்கம் தெரிந்தது. “என்னடா அதான் தினமும் மொபைலில் பேசிக்கொள்வோமே.... தைரியமாக போ.... நான் கூடிய சீக்கிரம் நம்ம திருமணத்திற்கு ஏற்பாடு செய்யறேன்.... பார்க்கணும்னு தோணிச்சுன்னா  மெசேஜ் குடு... ஊட்டியிலிருந்து கேத்தி என்ன பெரிய தூரம்.... ஓடி வந்துடுவேன்” என்று அவளை யாரும் அறியாமல் தேற்றினான் சுந்தர். சரி என்று அரை மனதாய் சென்றாள் சுதா.

தங்கள் வீடு சென்று அடைந்து கலகலப்பு மீண்டது. சுதாவும் அனிதாவும் மிகவும் நெருங்கி விட்டனர். பல நாள் தோழிகள் போல திரிந்தனர். “அண்ணி உங்க அண்ணன்...” என்று எப்போதும் என்ன பேச்சு பேசி இருந்தபோதும் சுந்தரைப் பற்றிய பேச்சிலேயே வந்து நின்றது அவளின் கேள்விகள். அதனை அறிந்த அனிதாவும் சுந்தரைப் பற்றி பலதும்  கூறினாள். அதை கண்களில் ஒரு ஆவலுடன் சற்றே முக சிவப்புடன் கேட்டு மெய் மறந்தாள் சுதா.

இவை அனைத்தையும் கண்டு அனிதா ஒரு நாள் துணிந்து தனிமையில்
“ஏன் சுதா நான் ஒண்ணு கேட்கலாமா?” என்றாள்.
“கேளுங்க அண்ணி, என்ன தயக்கம்” என்றாள் சுதா.
“நீ எங்க அண்ணனை விரும்பறியா சுதா?” என்று நேரே கேட்டாள். அந்தக் கேள்வியில் திக்குமுக்காடி போன சுதா உடனே சுதாரித்துக்கொண்டாள். ஆனால் மௌனமாகவே இருந்தாள்.
“சொன்னால்தானே சுதா” என்று கிண்ட
“ஆம் அண்ணி, ஆனா பெரியோர்கள் என்ன சொல்வார்களோ என்று பயம்..... உங்க அண்ணா சீக்கிரமே ஏதானும் ஏற்பாடு செய்வதாக கூறினார் அண்ணி..... நான் உங்க கிட்டயும் என் அண்ணன்கிட்டயும் எப்போதோ சொல்லணும்னுதான்... ஆனா ஒரு பக்கம் வெட்கம் இன்னொரு பக்கம் பயம் அதான்... தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி” என்று அவள் மடியில் தலை கவிழ்ந்தாள்.

அன்புடன் அவள் தலை வருடி “ம்ம்ம் ஆனாலும் நீ ஆளு உள்ளுக்குள்ள..... உன்னை நான் குழந்தைன்னு நினச்சேன்” என்றாள் சிரித்துக்கொண்டே.
“சரி என்கிட்டே சொல்லிட்டே இல்ல, நான் உங்க அண்ணாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணறேன்” என்றாள்.
உடனே மலர்ந்து “தாங்க்ஸ் அண்ணி” என்றாள் சுதா.

அன்று மாலை கிருஷ் வேலை முடிந்து வந்ததும் அனிதா அவனிடம் இந்த விஷயம் பற்றி கூறினாள்.
“ம்ம்ம் ஒரு வழியா வாய் திறந்தாளாக்கும்” என்று சிரித்துக்கொண்டான்.
“சரி நான் அப்பாகிட்ட பேசறேன்” என்றான்.
பெற்றோரிடம் பேச திலீபோ அதெப்பிடிபா கண்ணா, பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துன்னு அவங்க வீட்டுல ஒத்துக்கணுமே....” என்று தயங்கினார்.
“அப்பா நானாச்சு, எங்க மாமனார் கிட்ட பேசி ஒத்துக்க வைக்கிறேன் பா..... என்கிட்டே விட்டுடுங்க” என்று தைர்யம் கூறினான்.

அதன்படி அந்த வார இறுதியில் அனிதாவின் தாய் வீடு சென்று அவள் தந்தையிடம் உறவாடியபடி அது இது என்று சுற்றி வளைத்து
“சுந்தரின் கல்யாண விஷயமா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க அங்கிள்?” என்று கேட்டான்.
“நான் என்னத்த முடிவு பண்ண மாப்பிள்ள, அதான் இந்த காலத்து இள வட்டங்கள் தாங்களே முடிவு செய்துக்கறீங்களே” என்று இவனைப் பார்த்து சிரித்தார்.
அவனும் சிரித்துவிட்டு “அப்போ சுந்தர் கிட்ட கேட்டீங்களா.... அவனுக்கு யாரையானும் பிடிக்குதான்னு?” என்றான்.
“தெரியல, பையன் என்னமோ என்னைக்கண்டா நேரா நின்னு பேசாம பம்மறான்... ஏதோ விஷயம் இருக்குன்னு தோணுது.... ஆனா வாய் திறக்கல இன்னும்.... நீங்கதான் ஒற்ற  வயதாச்சே, பேசிப்பாருங்களேன்..... சீக்கிரமா இவனுக்கு முடிச்சு போட்டுட்டா நான் நிம்மதியா இருப்பேன். தாயில்லா பிள்ளைங்க பாருங்க.... உங்களைப்போல உசத்தியான மாப்பிள்ளை கிடைத்தாற்போல நல்ல மருமகளாகவும் கிடைச்சிட்டா ரொம்பவே நல்லது” என்றார்.

“சரி நான் பேசறேன், ஆனா இது சம்பந்தமா நான் ஒரு விஷயம் உங்ககிட்ட....” என்று தயங்கினான்.
“என்ன மாப்பிள்ள தயக்கம், பட்டுன்னு சொல்லுங்க” என்றார்.
“இல்ல சுதாவுக்கும் திருமண வயசாயிடுச்சு..... டிகிரி முடிச்சுட்டா..... அவளுக்கும் நாங்க சம்பந்தம் பார்க்க ஆரம்பிக்கணும்....”
ஆமா அதத அந்தந்த வயசுல செய்துடணுமே” என்றார் அவர்.
“அதான்... நம்ம சுந்தருக்கு சுதவையே பண்ணிகிட்டா நல்லா இருக்கும்னு வீட்டுல எல்லாரும் நினைக்கிறாங்க அங்கிள்” என்றான்.

அவர் ஒரு நிமிடம் ஒன்றும் பேசவில்லை. மௌனமாகவே கழிந்தது.
பின், “நல்ல யோசனைதான், ஆனா சுந்தர்கிட்ட ஒரு முறை கேட்டுட்டு செய்யலாம்.... அவனுக்கும் மனசுல அப்படி இருக்கணுமே மாப்பிள்ள, நாம திணிச்சதா இருக்கக் கூடாது..... அனிதா விஷயத்துல நான் அந்தத் தப்ப தான் பண்ண இருந்தேன்.... நல்ல நேரத்துல உங்க பெற்றோர் வந்து உங்க விஷயத்தச் சொல்லி பெண் கேட்டாங்க..... உங்கள பார்த்ததுமே மனசு நிறைஞ்சு போச்சு, அதான் உடனே ஒத்துகிட்டேன். சுதாவ பொறுத்த மட்டுல நல்ல பொண்ணு.... குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு நல்லா வளர்த்திருக்காங்க.... சுந்தர் ஒகே னா எனக்கு ஆட்சேபனை இல்லை மாப்பிள்ள” என்றார்.
‘ஹப்பா’ என்று இருந்தது க்ருஷிற்கு.
“சரி அங்கிள், நான் சுந்தர்கிட்ட பேசீட்டு வரேன்” என்று உள்ளே எழுந்து சென்றான்.

சுந்தர் இவனைக் கண்டு “வாங்க மச்சான் எப்போ வந்தீங்க, அனிதா வரலை?” என்று கேட்டான்.
“இல்ல நான் மட்டும்தான், அதுவும் உங்க விஷயம் பேச வந்தேன்... உங்க அப்பாகிட்ட” என்றான்.
சுந்தருக்கு இதயம் வாய்க்கு வந்துவிட்டது.
“அப்பாகிட்ட பேசீட்டீங்களா மச்சான்... என்ன சொன்னாரு?” என்றான் பயந்தபடி.
“உங்க காதல் விஷயம் சொல்லாம, எங்க பெற்றோர் சுதாவ உங்களுக்கு செய்துகுடுக்க நினைக்கறாங்கன்னு சொன்னேன்.... சுதா நல்ல பொண்ணுதான், சுந்தருக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்தா எனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைன்னு சொல்றாரு” என்று சிரித்தான்.

“ஒ தாங்க்ஸ் மச்சான்.... ரொம்ப தாங்க்ஸ்..... எப்படி அவர்கிட்ட பேசறதுனு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்..... சுளுவாக்கீட்டீங்க.... யு ஆர் சிம்ப்ளி கிரேட் ... இப்போ நான் என்ன பண்ணணும்?” என்று கேட்டான்.
“உங்ககிட்ட பேசீட்டு சொல்றேன்னு சொல்லி உள்ள வந்தேன்... இப்போ ரெண்டு பேருமா போவோம், சுந்தருக்கும் அந்த மாதிரி கொஞ்சம் எண்ணம் இருக்காம், அதனால அவனுக்கும் முழு சம்மதம்னு சொல்றான்னு சொல்றேன்... என்ன சொல்றீங்க?” என்று அவனையே கேட்டான்.

“நான் என்ன சொல்றது மச்சான்.... நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கு நல்லதா தான் இருக்கும்” என்றான் அவனை அணைத்துக்கொண்டு.
“சரி வாங்க” என்று மீண்டும் அவன் தந்தையிடம் வந்து அப்படியே கூற அவருக்கும் “அட அதுவும் அப்படியா ரொம்ப நல்லாதா போச்சு. சரி மாப்பிள்ள, உங்க பெற்றோர்கிட்ட சொல்லீடுங்க, நல்ல நாள் பார்த்து வந்து நாங்களே தாம்பூலம் மாத்திக்கறோம்.... நீங்களே முன்னால நின்னு இந்த நல்ல கார்யத்தையும் நடத்தீடுங்க” என்றார் நிறைவாக.
“நல்லதுங்க அங்கிள்” என்று விடை பெற்றான்.

அவனுக்கு விடை கொடுத்த சுந்தர் உள்ளே ஓடி சென்று சுதாவை அழைத்தான்
“ஹை செல்லம்ஸ், உங்க அண்ணா பலே ஆள்” என்று எல்லாமும் கூறினான்.
சுதாவிற்கு தன் அண்ணனை நினைத்து பெருமையும் சந்தோஷமும் உண்டானது.
“எங்க கிருஷ் அண்ணா மாதிரி வருமா” என்றாள் கண்கள் கலங்க.
“ஹே எனக்கு உன்னை இப்போவே பார்க்கணும் போல இருக்குதுடா” என்றான்.
“எனக்கும்தான்” என்றாள் அதே குரலில் குழைந்து.
“சரி நாளைக்கு அங்க வர முடியுமான்னு பாக்கறேன் என்ன” என்றான்.
பின்னோடு கிருஷ் வீடு திரும்பி எல்லோரிடமும் இந்த நல்ல விஷயத்தை கூற வீடே மகிழ்ச்சியானது.
“அண்ணா” என்று ஓடி வந்து அவன் கால் பணிந்தாள் சுதா.
“அட என்னடா குட்டி இது... ச்சே தப்பும்மா... நான் உனக்கு செய்யாம யாருக்குடா செய்யப் போறேன்.... அதுலயும் சுந்தர் நல்லவன் வேற” என்றான். அனிதாவிற்கும் இதில் மிக்க மகிழ்ச்சி.

அன்று இரவு மதுவும் திலீப்பும் தங்கள் அறையில் கட்டிலில் அமர்ந்திருக்க, மது ஆழ்ந்த யோசனையில் இருக்கக் கண்டார் திலீப்.
“என்னம்மா, தூங்கல?” என்று கேட்டார். அவரை நிமிர்ந்து பார்த்த மதுவின் கண்கள் பனித்திருந்தன. அவள் முகத்தில் ஒரு பரவசம் ஆனந்தம் குடி கொண்டிருந்தது.
“என்னம்மா?” என்று அருகில் வந்து தன் தோளோடு அணைத்துக்கொண்டார்.
“என்ன புண்ணியம் பண்ணினோமோ, நம்ம கண்ணன் போல பிள்ளையை நாம அடைய..... இப்படி ஒரு பிள்ளை என் வயிற்றில் பிறக்கலையேன்னு தோணுதுங்க” என்று கலங்கினாள்.
“ம்ம் உண்மைதான் மதும்மா..... அவன் ஒரு உத்தமன்.... நீ பழைய  பாட்டு ஒன்று கேட்டிருக்கியா,

‘எங்கிருந்தோ வந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்துவிட்டேன்
கண்ணன் எங்கிருந்தோ வந்தான்’ என்று மெல்ல பாடினார் திலீப்.
“மது அதை மெய் மறந்து கேட்டாள்.

“உண்மைதாங்க எங்கேயோ யாருக்கோ பிறந்து என் மடியில் தவழ்ந்து உங்க தோளில் வளர்ந்து இன்று நம்ம குடும்பத்துக்கே ஆல மர விழுதா நிக்கறான் நம்ம பிள்ளை” என்றாள் நிறைந்த மனதுடன்.

பின்னோடு கல்யாண வேலைகள் தடபுடலாக செய்யப்பட தினாவும் க்ருஷுமாக தங்கள் ஒரே தங்கையின் திருமணத்தை மிக வைபோகமாகவே நடத்தி முடித்தனர்.
இப்போது தினாவும் தங்கள் பிசினசை மிகுந்த உற்சாகத்துடன் தெளிவாக சிந்தித்து பொறுப்புடன் செய்து வந்தான்.
கல்யாணம் முடிந்து எல்லோருமாக குடும்பமாக போட்டோ எடுத்துக்கொள்ள நின்றபோது

“பாத்தீங்களா அண்ணி, இதுக்குதான் கேட்டேன் அன்னிக்கே.... உங்களுக்கு ஒரு தங்கையும் இருந்திருந்தா இந்த நேரத்துக்கு எனக்கும் லைன் கிளியராகி அவங்க கழுத்தில நானும் மூணு முடிச்ச போட்டிருப்பேன்...” என்று அங்கலாய்த்தான்.

எல்லோருமாக சிரித்தனர். மந்தகாசமாக சிரிக்கும் கிரிஷை அண்ணாந்து பார்த்தனர் மதுவும் திலீப்பும். அனிதா உரிமையோடு அவன் இடையை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்தாள். சுதாவுக்கும் சுந்தருக்கும் கண்கள் பனித்தன. எல்லோர் மனமும் நிறைந்திருந்தது.
முற்றும்



Wednesday 3 October 2018

ENGIRUNDHO VANDHAAN -13


“தெரியும்” என்றார் திலீப்.
“அப்பா” என்றான் பயந்தபடி.
“எல்லாம் தெரியும், நாசமாக நான் விடலையே...... சம்பந்தப்பட்டவங்களோட பேசிட்டேன்..... அதை நான் நேரடியா கவனிச்சும் குடுத்துட்டேன்..... நல்லபடியாவே நடந்துடுச்சு டீல்” என்றார்.
“ஒ பா! யு ஆர் கிரேட்” என்றான்.
“சரி இப்போ சொல்லு, கண்ணன் சொல்கிற மாதிரி என்னோட வந்து அடங்கி ஒழுங்கா வேலை செய்து கத்துக்கறியா?” என்று கேட்டார். தயக்கத்துடன் சரி என்றான்.
“தட்ஸ் குட்” என்று அவர் எழுந்து படுக்க போனார்.

மது வந்து கண்ணனின் அருகில் அமர்ந்தாள்.
“பாவம் கண்ணா நீ.... வீட்டு சாப்பாடு இல்லாம கவனிப்பு இல்லாம ரொம்ப தவிச்சிருப்பே இல்லையா” என்றாள்.
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லைமா.... ஐ ஆம் ஒகே” என்றான்.
“அதானே அங்கே தான் பார்த்து கேட்டு அன்பா கவனிக்க ஆள் இருக்கே” என்றான் தினா கண் சிமிட்டி வேண்டும் என்றே.
“என்னடா சொல்றே?” என்றாள் மது.
‘அடங்குடா’ என்று அவனை கண் காட்டிவிட்டு “இல்லைமா எல்லாருமே நம்ம ஸ்டாப் தானே என்னை சரியாத்தான் கவனிச்சுகிட்டாங்கன்னு சொல்றான்” என்று சமாளித்தான்.
“ஓ” என்றாள் மது. ஆயினும் என்னமோ சந்தேகமாகத் தோன்றியது.


அவளும் எழுந்து தூங்கப்போக சுதா எழுந்து வந்து இரு அண்ணன்களுக்கும் மத்தியில் அமர்ந்தாள்.
“நல்லா நாடகம் ஆடறீங்க ரெண்டு பெரும், ஒழுங்கா சொல்லீடுங்க.... என்ன விஷயம்?” என்று கேட்டாள்.
“என்னதுடா?” என்றான் கிருஷ்.
“அண்ணா சொல்லு யாரு அது?” என்று தீனாவை பார்த்து கேட்டாள்.
“யாரு எது?” என்றான் அவன் தெரியாததுபோல.
“போதுமே, உனக்கு சமாளிக்கத் தெரியாது தினா அண்ணா, சொல்லு” என்றாள்.
‘மாட்டிவிட்டுட்டான்’ என்று அவனை பார்வையால் எரித்தான் கிருஷ்.
“அண்ணாவையே கேளு” என்றான் தினா.
“இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று கத்தினாள். அவசரமாக அவள் வாயை பொத்தினர் இருவரும்.
“சொல்றேன் தாயே கத்தாதே” என்று தினா கூறினான்.
“உனக்கு அண்ணா ஆபிஸ்ல வேலை செய்யறாங்களே அனிதா அவங்களத் தெரியுமா?” என்றான்.
“ஒ ஆமாம் தெரியுமே.... பாத்திருக்கேன்.... சில முறை பேசி இருக்கேன்.... அன்னிக்கி நாங்க அங்க தங்கப் போனப்போ கூட அவங்கதானே வந்து எல்லா உதவியும் செஞ்சாங்க” என்றாள்.
“அதேதான் அவ்வளோ உதவி ஏன் செஞ்சாங்கன்னா....” என்று கிருஷை கண்டுகொண்டே இழுத்தான் தினா.
“ஏன்?” என்றாள் சுதா.

“ஒண்ணுமில்லைம்மா என் செயலாளர் அதான்” என்றான் கிருஷ்.
“இல்லை சுதா, அவங்கதான் நமக்கு வரப்போகிற அண்ணி” என்று போட்டுடைத்தான் தினா.
“என்ன நிஜமாவா!! உண்மையாவா அண்ணா” என்று குதித்தாள்.
“சு சும்மா இருங்க” என்று அடக்கினான் கிருஷ். லேசாக வெட்கத்துடன் தலை சாய்த்துக்கொண்டு வேறே பார்த்தான். அவனின் இந்த வெட்கம் கூச்சம் இவர்களுக்குப் புதுசு.... அவனை வம்புக்கிழுத்து ஏய்த்து விட்டனர் இருவரும்.

“ஐயோ அவங்க எவ்வளோ அழகு.... ஷி இஸ் சோ க்யூட்..... ரொம்ப நல்ல மாதிரி.... எனக்கு எப்போதுமே அவங்கள பிடிக்கும் அண்ணா” என்றாள் சுதா.
“அம்மாப்பாட்ட சொல்லலையா அண்ணா” என்று அவசரப்படுத்தினாள்.
“இல்லைடா நானே சொல்றேன் நேரம் பார்த்து” என்றான் கூச்சத்துடன்.
“நீங்க ரெண்டு பேரும் ரொம்ப டேஞ்சர்..... கொஞ்சம் அடக்கி வாசீங்கடா கண்ணுகளா” என்று வேண்டினான்.
“சரி அப்போ எனக்கு உன் கல்யாணத்துக்கு என்ன வாங்கித் தருவே?” என்று பேரம் பேசினாள் சுதா.
“அடிப்பாவி, இப்போதே டெண்டர் போட்டுட்டா அண்ணா” என்று சிரித்தான் தினா.
இப்படி கலாட்டாவாகப் பேசி அரட்டை அடித்து பல நாள் ஆகி இருந்தது. மூவருக்கும் மனம் நிறைந்தது. தூங்கச் சென்றனர்.

அடுத்த நாள் முதல் தன் தந்தையுடன் சென்று ஒழுங்காக கவனித்து பணிவாக வேலை செய்யத் துவங்கினான் தினா. அதில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இதனால் தன் வேலைகளை முழு கவனத்துடன் செய்தான் கிருஷ். கூடவே தம்பி தங்கை இருவரும் அவனை படுத்திய பாட்டை அனிதாவிடம் கூறி சிரித்துக்கொண்டனர் இருவரும்.
“ஆனாலும் ரெண்டும் ரெண்டு வாலுங்க அனி” என்றான். அவனின் அந்த கூச்சம் கலந்த சிரிப்பு அவள் மனதை கொள்ளைகொண்டது.

அதே நேரம் அவள் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திருந்தனர். அதைக்கேட்டு துவண்டு போனாள் அனிதா. அவர்களது போலவே ஆன மிலிடரி குடும்பம். மாப்பிள்ளை ஆர்மியில் மேஜராக இருந்தான். அவளுக்கு அசலே கலக்கம் அப்பாவிடம் எப்படி பேசுவது என்று பயந்து தன் அண்ணனை துணைக்கு அழைத்துக்கொண்டாள். அவனுக்கு கிருஷைத் தெரியும். அவனிடம் தங்கள் காதலை கூறி உதவி கோரினாள்.

அவளின் அண்ணன் சுந்தர் தந்தையிடம் பேசிப் பார்க்க அவரோ ஆர்மி குடும்பம் போல வருமா அது போன்ற குடும்பத்தில்தான் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றுவிட்டார். அனிதாவும் சுந்தரும் என்ன செய்வதென தெரியாமல் கலங்கினர்.
தன் கலக்கத்தை க்ருஷிடம் அனிதா கூறி அழுதாள்.

“அட என்ன அனி இது.... இதுக்கு போய் கலங்குவதா..... இரு என்ன செய்வதென்று பாப்போம்” என்று தேற்றினான்.
நேரே சென்று அவளின் தந்தையிடம் அதிரடியாக பேசிப் பார்க்கலாம் என்று கிளம்பினான். அதற்குமுன் தன் வீட்டில் சொல்லி விடுவது நலம் எனக் கருதி தினா மற்றும் சுதாவுடன் புடை சூழ பெற்றோரிடம் பேசத் துணிந்தான்.

“அம்மா அண்ணனுக்கு எப்போம்மா கல்யாணம்?” என்று ஆரம்பித்தாள் சுதா.
“ஆமா டா சீக்கிரமா பண்ணீடணும்... அப்போதான் ரெண்டு வருடம் பொறுத்து சுதாவுக்கு செய்ய சரியா இருக்கும்” என்று கூறினாள் மது. “பொண்ணு பாக்கலாமா மா?” என்றான் தினா.
“என் கண்ணனுக்கு என்னடா குறைச்சல்.... அவனுக்குன்னா நான் நீ னு போட்டிபோட்டுகிட்டு பொண்ணு குடுக்க வருவாங்களே” என்றாள் மது உற்சாகமாக.

“ஏன் கண்ணா உன் மனசுல யாரானும் இருந்தாலும் சொல்லேன்.... அவளையே பேசி முடிச்சிடுவோம்” என்றார் திலீப்.
“அட அதுவும் அப்படியா” என்று மது கண்ணனைப் பார்க்க அவன் கூச்சப்பட்டு பேசாதிருந்தான்.
“அது என்ன னா மா அண்ணனுக்கு ஒரு பெண்ணை பிடிச்சுட்டது.... நாங்க இரண்டு பேரும் கூட எங்களுக்கு வரப் போகிற அண்ணிய பாத்துட்டோம்.... ரொம்பவே பிடிச்சுபோச்சு... இப்போ நீங்கதான் பாக்கி” என்றான் தினா.
“அது யாருடா சொல்லுடா தினா” என்றாள் மது.
“அண்ணா நீயே சொல்லு” என்றான்.
“இல்லைமா... வந்து.. அதான்... என் ஆபிஸ்ல வேலை செய்யறாங்க அனிதான்னு...”  என்று
“அனிதாவா ரொம்ப நல்ல பொண்ணாச்சே.... அழகு அடக்கம் பணிவு சுறுசுறுப்பு இன்னும் நல்ல குடும்பம் வேற.... இன்னும் வேற என்ன வேணும்.... ரொம்ப சந்தோஷம் டா கண்ணா.... அவளையே பேசி முடிச்சுட்டா போச்சு” என்று குதூகலித்தாள் மது.
“நானும் பார்த்திருக்கேன்.... ரொம்ப நல்ல பொண்ணு” என்றார் திலீப்.
“ஹப்பா” என்றிருந்தது கண்ணனுக்கு.

“அவங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்கறாங்க.... ஆர்மி குடும்பத்து மாப்பிள்ளைதான் வேணும்னு அவங்க அப்பா சொல்றாராம்.... அதான்..” என்று இழுத்தான்.
“ஒ அப்படியா..... அது ஒண்ணும் இல்லை, மிலிடரி குடும்பங்கள்ள அதுபோல ஆசை இருக்கறது சகஜம் தான்.... நாங்க போய் பார்த்து பேசறோம்” என்றார் திலீப்.
“அண்ணன் முதலில் போய் பேசட்டுமே பா” என்றான் தினா. அவன் மனது அறிந்து.
“வேண்டாம் தினா, அது சரி வராது..... நாங்க பொண்ணு கேட்டு போறோம்..... பின்னாடியே இவன் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்து கொள்ளட்டும்” என்றார் திலீப். சரி என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர்.


அத்யாயம் இருபத்தி ஒன்று

அடுத்த நாள் நல்ல நாள் என்று கிளம்பினர் திலீப் தம்பதி. பிரிகேடியர் சுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்று அமர்ந்து மெல்ல திருமண பேச்சைத் துடங்கினார். அவருக்கும் இவர்களது குடும்பம் பற்றி நன்றாகவே தெரியும் என்பதால் மரியாதையாகவே பேசினார். அனிதாவும் கிருஷ்ணனும் ஆசைப் படுகின்றனர் என்றதுமே அவர் முகம் சுருங்கியது.
“ஒ அப்படியா, இது எனக்கு சொல்லப்படவில்லை..... எங்க வழக்கப்படி நான் மிலிடரி மாப்பிள்ளைதான் பார்க்கணும்னு இருந்தேன்” என்றார். அவர் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாக தெரிந்தது.
“அப்படி சொன்னா எப்படிப்பா.... இது அனிதாவின் வாழ்க்கை இல்லையா.... அவ இஷ்டப்பட்டவனுக்கே கட்டி குடுத்துடலாம் பா” என்றான் சுந்தர்.
“இவரும் நல்ல குடும்பம்... நல்ல மாப்பிள்ளை.... தனியே சிறப்பா தொழில் செய்கிறாரு இல்லையாப்பா” என்றான்.
“அதில் ஒண்ணுமே சந்தேகம் இல்லை என்றாலும்...” என்று இழுத்தார். அந்த நேரத்தில் கம்பீரமாக சூட் அணிந்து சிவந்த மேனியும் சுருள் கிராப்பும் மிக கச்சிதமான உடலுமாக ஸ்மார்டாக உள்ளே நுழைந்தான் கிருஷ்ணன். அவனை சுப்பிரமணியம் கண்டதில்லை அதனால் அவனைக் கண்டு பிரமித்தார்.

“எஸ்” என்றார் அவனிடம் யாரென்று வினவி.
“இவன்தான் எங்க பிள்ளை கிருஷ்ணன்” என்றார் திலீப்.
“ஒ அப்படியா இவரா?” என்று ஒரு நிமிடம் மலைத்தார். அவர் கிருஷ்ணனை இவ்வளவு ஸ்மார்டாக எதிர்பார்க்கவில்லை போலும். அவனின் நடையே அவனின் ஆளுமையைச் சொன்னது. அவன் முகத்தில் ஒளிர்ந்த அறிவு களை நிதானம் கனிவு அவருக்கு முழு திருப்தி கொடுத்தது.
“சுந்தர், அனிதாவை கூப்பிட்டு மாப்பிள்ளைக்கு காபி கொண்டு வரச் சொல்லு” என்றார் மறைமுகமாக தன் ஒப்புதலை கூறியபடி.

அனைவருக்குமே ஹப்பா என்று இருந்தது. சுந்தர் போய் நடந்தவற்றை சொல்லவும் அனிதாவிற்கு கொள்ளை சந்தோஷம் உடனே காபியுடன் வெளியே நடந்து வந்தாள். அங்கே க்ருஷ்ணனையும் அவன் பெற்றோரையும் கண்டு ஆனந்தித்தாள். கிருஷ்ணனை ஓரக்கண்ணால் கண்டாள். அவனும் அவளையே பார்த்திருந்தான். கள்ளன் என்று உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டாள். ‘தான் வரப்போவதாக சொல்லவே இல்லையே வந்த  உடனே என் தந்தையை கவர்ந்துவிட்டானே, என் உள்ளம் கவர் கள்வன்’ என்று மயங்கிப்போனாள். அவனிடம் காபியை நீட்டினாள்.

“என்ன மாப்பிள்ளை, இதான் என் பொண்ணு.... நல்லா பார்த்துக்குங்க” என்று சிரித்தார் அவள் தந்தை அவனும் புன்னகைத்தான்.
“நித்தமும் பார்த்துகிட்டேதானே இருக்கிறாங்க” என்று சிரித்தனர் அனைவரும் வெட்கம் மேலிட உள்ளே ஓடிவிட்டாள் அனிதா. நிச்சயத்துக்கு தேதி குறித்துவிட்டு வீட்டை அடைந்தனர்.
“நான் அண்ணிய பார்க்கணும்” என்று அடம் பிடித்தாள் சுதா
“நாளைக்கு என்னோட  ஆபிசிற்கு வா டா.... பார்த்து பேசு” என்று அனுமதி கொடுத்தான் கிருஷ்.

அதன்படி அடுத்த நாள் மாலை ஐந்து மணி வாக்கில் அவனின் ஆபிசை அடைந்தாள் சுதா. அங்கே அனிதாவை கண்டு ‘அண்ணீ’ என்று கட்டிக்கொண்டாள்.
“நீங்க ரொம்ப அழகு அண்ணி” என்று அணைத்து முத்தமிட்டாள். சிவந்து போனாள் அனிதா. இதைக்கண்டு மனம் ஏங்க பார்த்திருந்தான் கிருஷ். அவன் பார்வையை உணர்ந்து மேலும் சிவந்து போனாள் அனிதா. சகஜமாக மிக நெருங்கிய தோழியர் போல பேச துடங்கிவிட்டனர் இருவரும்.
“அதுசரி கொஞ்சம் வேலையும் பார்ப்போமா.... என்னை அம்போன்னு விட்டுட்டு என்ன அரட்டை?” என்றான் கிருஷ்.
“போண்ணா, அண்ணிக்கு இன்னிக்கி இத்தோட வேலை முடிஞ்சுது.... என்னோட தான் டைம் ஸ்பென்ட் பண்ணப் போறாங்க”  என்றாள் சுதா.
“அப்போ நானில்லையா வேண்டாமா” என்றான் வேண்டுமென்றே.
“அப்போ நீயும் வா.... எங்களை அழைத்துக்கொண்டு போய் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடு லெட்ஸ் செலிபரேட்” என்றாள் சுதா. அவன் புன்னகைத்துக்கொண்டான்.

அனிதாவிற்கும் ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்பதால் உடனே ஒப்புக்கொண்டான். அவசர வேலைகள் உள்ளனவா என்று ஒருதரம் சரிபார்த்துவிட்டு மூவரும் கிளம்பினர்.
சுதா காரின் பின் சீட்டில் அமர்ந்து வளவளவென அனிதாவிடம் எதையோ பேசியபடியே வந்தாள். அனிதாவிற்கு அவளின் குழந்தைத்தனம் மிகவும் பிடித்துப்போனது. அவர்கள் இருவரையும் புன்சிரிப்புடன் கண்டபடி வண்டி ஓட்டிச் சென்று ஐஸ்க்ரீம் இடத்தில் நிறுத்தினான் கிருஷ்.

அவரவருக்கு வேண்டியதை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டனர். அதை சாப்பிட்டுக் கொண்டே மேலும் அரட்டை அடித்தனர்.
“ம்ம் நடத்துங்க.... எப்போவுமே நான்னா வேறதான்.... நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டீங்க” என்று குரல் கேட்டு மூவரும் திரும்பினர். தினா நின்று கொண்டிருந்தான் கோபமாக.
“ஐயோ அப்படி இல்லைடா.... சுதா தான் என் ஆபிசிற்கு வந்து எங்களை இங்கே அழைத்து வந்தா... வா டா நீ இல்லாமையா.... உனக்கு என்ன வேணுமோ சொல்லு” என்று அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டான்.

“நான் எதுக்குப்பா உங்களுக்கு நடுவில உக்கார்ந்து அண்ணியின் கோபப் பார்வைக்கு ஆளாகணும்...... வேண்டவே வேண்டாம்.... நான் சுதா பக்கத்துல ஒக்காந்துக்கறேன்” என்றான் சிரிக்காமல் பாவமாக முகம் வைத்துக்கொண்டு.
“அனிதா தலை குனிந்து சிரித்துக்கொண்டாள்.

“சாரி தினா அன்னிக்கி நான்.....” என்று தடுமாறினாள்.
“பரவாயில்லை அண்ணி” என்றான் அவனும் சிரித்தபடி “நான் சும்மா ஜோக்குக்குதான் சொன்னேன்” என்று அவனும் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தான். நால்வருமாக பேசியபடி காலி செய்தனர். பின் கொஞ்சம் பொதுவாக பேசியபடி இருந்தனர்.
“ஏன் அண்ணி உங்களுக்கு தங்கை யாருமில்லையா?” என்று கேட்டான் தினா. எல்லோரும் அவன் ஏன் கேட்கிறான் என்று உணர்ந்து பக்கென சிரித்துவிட்டனர்.
“இல்லையே தினா... சாரி” என்றாள் சிரித்தபடி அனிதா.
“ச்சே மை பாட் லக்” என்றான் பாவமாக முகம் வைத்துக்கொண்டு.
“சரி கிளம்பலாம் வீட்டுல தேடுவாங்க” என்று அனைவரையும் கிளப்பினான் கிருஷ்.

சின்னதாக நிச்சயம் வைத்துவிட்டு முகூர்த்த தேதி குறிக்கப்பட்டது. புடவை நகை மற்றவருக்கு ஜவுளி என்று ஷாப்பிங் நடந்தது. இதன் நடுவே மது திலீப்போடு சென்று அனிதாவின் தந்தையிடம் கிருஷ்ணனைப் பற்றிய உண்மையை கூறி வைத்தனர். பின்னால் எந்த இழி சொல்லும் வரக்கூடாது என்று..... அவருக்கு அது ஒரு பொருட்டாகப் படவில்லை என்பதே ஆறுதல்.

இவர்கள் வீட்டின் முதல் திருமணம் என்பதால் உற்றாரும் சுற்றாரும் கூடி வந்து அமர்க்களமாகக் கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. காலையில் பங்களாவிலேயே பந்தலிட்டு முகூர்த்தம் நடத்தப்பட்டது. திலீபன், கிருஷ்ணனின் பிசினஸ் ஆட்கள், சொந்தங்கள் பந்தங்கள் நண்பர்கள் என்று அந்த பங்களாவே களை கட்டியது.


Tuesday 2 October 2018

ENGIRUNDHO VANDHAAN - 12


இங்கே உள்ள இந்த அவசர நிலை திலீப்புக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் அந்தக்  கம்பனி முதலாளியை தானே அழைத்து தனக்கு உடம்பு சுகமில்லை அதனால் சில நாட்களில் இதனை தானே வந்து முன்னிருந்து கவனித்து செய்து கொடுப்பார் என்று வேண்ட அவரும் நல் எண்ணத்துடனே ஒப்புக்கொண்டார். ஆனால் திலீப் கேட்டுக்கொண்டபடி மேனேஜரும் செயலாளரும் ஒரு நாடகம் ஆடினர். அது தினேஷுக்கு சொல்லப்படுவது யாதெனில் அவன் உரிய நேரத்தில் கவனித்து செய்யாமல் போனதால் இந்த டீல் நாசமானது. அதனால் பெரிய லாஸ் என்று உருவகப்படுத்தப்பட்டது.

விஷயம் அறிந்த தினேஷுக்கு உதறல் எடுத்தது. பொறுப்பு என்று எடுத்துக்கொண்டு அந்த நேரத்தில் பெரிய லாஸ் என்றால் தந்தைக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான். சில நாட்கள் இப்படியாகக் கழிய அவனுக்கு கம்பனியின் உள் விஷயங்கள்  புரிய ஆரம்பித்தன. எவ்வளவு கடினமான வேலைகள் பொறுப்புகள் உள்ளன, இதில் எம்மாத்திரம் தன் தந்தையும் அண்ணனும் கவனித்து இந்த சாம்ராஜ்யத்தை காத்து வந்தனர் எல்லாமும் மெல்ல மெல்ல புரிய வந்தது. ஆயினும் அவன் எண்ண ஓட்டத்தில் பெரிய மாற்றம் இன்னமும் ஏற்படவில்லை.

வேலையில் இன்னமும் மும்மரமாக அவன் ஈடுபட, முன் போல குடிப்பதிலும் கேளிக்கைகளிலும் பொழுது போக்குவதற்கு என்று அவனுக்கு நேரமிருக்கவில்லை. அவனிடம் இருந்து சரளமாக பணமும் வரவில்லை. இப்போது பொறுப்பு அவனது ஆகியதனால் அவனுக்கு பணத்தின் அருமை தெரிய ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு நூறு ரூபாயும் எடுக்கும் முன் மனம் பதைத்தது. என்னவென கணக்கு எழுதுவது என்று யோசிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அவனது ஊதாரித்தனம் குறைந்தது. அது திவாகருக்கும் ராகேஷுக்கும் பெரும் ஏமாற்றம் ஆனது. அவர்கள் அவன் சொன்னபடி குடுக்கப்பட்ட வேலைகளையும் செவ்வனே செய்வதில்லை அங்கே போகவே இல்லை என்றெல்லாம் தெரிய வந்ததும் அவனும் கேள்வி கேட்டான். அப்போது அவர்களின் நட்பு முகம் மாறியது. இவனிடம் ஊழியம் செய்து ஒழுங்காக வாழ அவர்களுக்கு மனம் இருக்கவில்லை. அதனால் ஏதேனும் சாக்கு போக்கு சொல்லி வேலையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் நழுவிக் கொண்டனர். இதனை அறிந்தே இருந்தான் தினேஷ். அப்பாவின் வார்த்தைகள் அப்போது கொஞ்சம் புரிய ஆரம்பித்தன.

வீட்டிற்குச் சென்றால் அது வேறு விதமான கஷ்டமாக இருந்தது. வீடு காலியாக அவனை பார்த்து விழித்தது. பணியாளர்கள் இருந்தனர். வேளைக்கு உணவு உடை கவனிப்பு இருந்ததுதான். ஆயினும் பெற்றோர் சுதா கிருஷ் என அனைவருடனும் அந்த வீட்டில் அவன் கழித்த இனிமையான நேரங்கள் அவன் மனதில் அலைமோதின. ‘பெற்றோர் அண்ணனிடம் போனது போன விதமாகவே இருந்துவிட்டார்களே’ என்று கோபம் வந்தது. ‘சுதா குட்டி கூட ஒடிவிட்டாளே.... நான் யாருக்கும் வேண்டாமா?’ என்று தன்னிரக்கம் தோன்றியது. உண்ணவும் பிடிக்காமல் உறங்கவும் முடியாமல் கலைந்த நிலையில் வாழ்ந்து வந்தான்.

‘ச்சே, நான் செய்தது ஒருவேளை தவறோ’ என்று முதன் முறையாக எண்ணினான் வருந்தத் துடங்கினான்.
இதற்குள் இவன் பொறுப்பெடுத்து ஒரு மாதம் முடிந்திருக்க அந்த மாத சம்பளம் பட்டுவாடா செய்வது கணக்கு ஒப்படைப்பது எல்லாம் நடத்த தடுமாறினான். கணக்கரின் உதவியுடன் ஆடிட்டரின் மேற்பார்வையில் செய்தான். கணக்கு உதைத்தது. கம்பனியின் வரவு செலவு இடித்தது. வரவு கணிசமாக குறைந்திருந்தது. வேலையாட்களிடம் பொதுவான ஒரு வெறுப்புத் தோன்றி இருந்தது. இவை அனைத்தையும் கண்டவன் இது மாயா ஜாலம் அல்ல சுய உழைப்பு மட்டுமே இங்கே வெல்லும் என்று நேராக அறிந்து கொண்டான். படிக்க வேண்டிய வயதில் அதை கோட்டை விட்டதால் பெரிதும் நஷ்டப்பட்டது இவனே என்று அறிந்தான்.

அன்று வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை. இங்கே நடக்கும் அனைத்தையும் அவ்வபோது அறிந்தே இருந்தார் திலீப். காலம் கூடி வருகிறது என்று உணர்ந்தார்.

தனியாக சென்று அமர்ந்து கிருஷ்ணன் நிஜமாகவே இவர்களுக்கு எந்த விதத்தினாலும் கெடுதல் நினைத்தானா நன்மையே அல்லவா செய்து வந்தான் என்று முழு மனதுடன் ஆலோசித்தான் தினேஷ்.
மனம் இந்த ஒரு மாதத்தில் பண்பட்டிருந்தது. இனிமேலும் தயங்கத் தேவை இல்லை என்று உணர்ந்தான். அண்ணனிடம் பெற்றோரிடம் எனக்கென்ன கூச்சம் என்று தைர்யமாக அண்ணனின் கேத்தி ரிசார்ட்டுக்கு வண்டியைத் திருப்பினான்.
அங்கு சென்று அண்ணனின் ரூமிற்குள் செல்ல அனுமதி கேட்டான். அனிதா அவனை புழுவை போல பார்த்துவிட்டு,
“இப்போது உடனே பார்க்க முடியாது.... உக்காருங்க நான் சொல்றேன்” என்றாள்.

‘இன்னமும் என்ன பாக்கி இருக்கு கிரிஷை கஷ்டப்படுத்த’ என்று சொல்லாமல் சொல்லியது அவள் பார்வை. அதில் மண்டிய வெறுப்பை கண்டு தினேஷுக்கு ஆச்சர்யம்.
‘இவளுக்கு ஏன் என்னைக் கண்டு அவ்வளவு வெறுப்பு..... இவள் அவனின் செயலாளர் தானே அதையும் மீறி அண்ணனுக்கு இவளிடம் ஏதேனும் ஈர்ப்பு உள்ளதோ’ என்று யோசித்தான். அனிதா மிகவும் நல்லவள் என்று அவனுக்கும் தெரியும்தான், அவளிடம் பழகும் வாய்ப்பு அவனுக்கும் இருந்தது அவ்வப்போது.

உள்ளே சென்று க்ருஷிடம் கூறினாள் அனிதா.
“என்ன சொல்றே, ஆர் யு ஜோக்கிங்?” என்றான்.
“ஐயோ இல்லை, நிஜமாவே தினேஷ் வந்திருக்கான்” என்றாள்.
“ஒ! சரி, வரச் சொல்லு பார்க்கலாம்..” என்றான் யோசனையோடு.
அவள் தினேஷை உள்ளே அழைத்தாள். தயங்கிச் சென்றான்.
அனிதாவும் அங்கேயே தான் இருந்தாள். தினா தன் க்ருஷை ஏதேனும் அசிங்கப்படுத்திவிடுவானோ என்ற பயத்தில் அங்கேயே நின்று கவனித்தாள்.

க்ருஷின் அருகே சென்று “அண்ணா என்னை மன்னிச்சுடு” என்றான் அவன் கைகளை பற்றிக்கொண்டு.
“என்னடா இதெல்லாம் விடு, என்ன இப்போ திடீர்னு.... எப்படி இருக்கே..... பிசினஸ் எல்லாம் எப்படி இருக்கு?” என்று பொதுவாக பேசினான்.
“ஐயோ அண்ணா அதெல்லாம் எனக்கு ஒண்ணுமே புரியல.... நீயே வந்து பொறுப்பெடுத்துக்கோ..... என்னால முடியல.... பயமா இருக்கு அப்பாவும் நீயும் கஷ்டப்பட்டு அமைச்சிருந்த சாம்ராஜ்யத்தை நான் சீட்டுக்கட்டு மாதிரி ஊதி தள்ளீடுவேனொன்னு பயமா இருக்கு அண்ணா.... நான் என் பிரிண்ட்ஸ் பேச்சைக் கேட்டுகிட்டு உன்னை ரொம்ப அசிங்கமா அதிகமா பேசீட்டேன்..... மன்னிச்சுடு அண்ணா” என்றான் அழுகை முட்ட.

அவள் ஆச்சர்யத்துடன் கிருஷ் முகத்தை பார்த்தாள். அதில் தப்பு செய்த பிள்ளையை பார்க்கும் தந்தையின் பாச முகமே கண்டாள்.
“சரி சரி போறது விடுடா... எதுக்கு இப்போ கலங்கற..... முதல்ல கண்ணை துடை.... கிளம்பு அப்பாம்மா கிட்ட போகலாம்..... உன்னை பார்த்தா சந்தோஷப்படுவாங்க” என்று கிளப்பினான்.
“நான் வரலை அண்ணா..... எந்த முகத்தோட அவங்கள பார்க்க வருவேன்.... உன்னை இவ்வளவு மோசமா பேசி நடத்தீட்டு கம்பனியையும் சரியா பார்த்துக்க முடியாம தோற்றுப் போய் வந்திருக்கேன்..... ஐ ஆம் அ லூசர் அண்ணா” என்றான் தலை கவிழ்ந்து.
“பிசினஸ் னா என்னாமோன்னு நினைச்சேன்.... பிசினசின் மறு பெயர் உழைப்பு னு இப்போ புரிஞ்சுது..... நீயே அம்மாப்பாட்ட சொல்லீடு வீட்டுக்கு வரச் சொல்லு.... நீயும் வா அண்ணா.... என்னை நீ மன்னிச்சுட்டது உண்மைனா நீ கட்டாயம் வரணும்.... இல்லேனா நான் அந்த வீட்டுக்கே போக மாட்டேன்” என்றான்.

“போறும் டா, பைத்தியம் மாதிரி எதையானும் பேசாதே.... கிளம்பு போலாம்” என்று அதட்டி எழுந்தான்.
“அனி ப்ளிஸ் கொஞ்சம் பாத்துக்கோ..... நான் ஒன் அவர்ல வந்துடறேன்” என்றான். அவளும் சந்தோஷமாக தலை ஆட்டினாள்.
“தாங்க்ஸ் அனிதா” என்றான் அவளிடம் தினேஷ்
“யு ஆர் வெல்கம்” என்றாள் இப்போது புன்னகைத்தபடி.

இருவரும் மெல்ல பேசியபடியே ஆபிசிலிருந்து நடந்தே பெற்றோர் இருக்கும் காட்டேஜை அடைந்தனர். வழியிலேயே தினேஷ் கேட்டான்
“ஏன் அண்ணா, அனிதா...” என்று
“அவளுக்கு என்ன?” என்றான் கிருஷ்.
“இல்லை உனக்கும் அவங்களுக்கும் ஏதானும்....” என்று நிறுத்தினான்.
“நான் அதிகப்ரசங்கமா பேசறதா நினைச்சா மன்னிச்சுடு” என்றான் பயந்து போய்.
“அது... ஆமா... எனக்கு.... அனிதாவ பிடிச்சிருக்கு அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு” என்றான் தடுமாறி.
“ஓஹோ அப்போ அதனால்தான் என்னை கண்ணாலையே எரிச்சாங்களா அண்ணி?” என்று சிரித்தான்.
“அப்படியா என்ன” என்றான் கிருஷ்.
“ஆமாண்ணா, நான் உன்னை பார்க்கணும்னு கேட்டப்போ இன்னும் என்ன திட்டப்போறேங்கறா மாதிரி முறைச்சுப் பார்த்தாங்க அண்ணி” என்றான்.

அவன் அண்ணி என்று கூறியது கேட்டு கிருஷ் லேசாக சிவந்தான்.
“போடா” என்றான் அதை மறைத்தபடி. தினேஷுக்கு மகிழ்ச்சியானது.
“உனக்கு ஏத்தவங்கதான் அண்ணா..... அவங்க ரொம்ப நல்லவங்க.... எனக்கு எப்போதுமே அவங்க மேல நல்ல எண்ணம் மதிப்பு.... அப்பம்மாக்கு தெரியுமா அண்ணா?” என்றான்.
“டேய் டேய் சும்மா இருக்கமாட்டியா..... பேசாம வாடா.... கலகம் பண்ணாதே..... பொறுமையா நானே சொல்லிக்கிறேன்” என்றான்.

அப்போதே காட்டேஜை அடைந்தனர். தினேஷை கண்டு முகம் திருப்பிக்கொண்டார் திலீப். மதுவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. ‘இன்னமும் என்ன வைத்திருக்கிறானோ’ என்று.
“அம்மா அப்பா, என்னை மன்னிச்சுடுங்க திருந்தீட்டேன்.... அண்ணனிடமும் மன்னிப்பு கேட்டுட்டேன்” என்று காலில் விழுந்தான்.
க்ருஷை பார்க்க ஆம் என்பது போல தலை அசைத்தான். சில நிமிடங்கள் தான் செய்த தப்பை எல்லாம் தந்தையிடம் கூறி மன்னிப்பு கேட்டுக்கொண்டான். பிசினஸ் நிலவரம் கூறி அவரின் உடனடி உதவியை நாடினான். எப்போதும் போல அவரும் அண்ணணுமே இதை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான்.

சுதா முகமும் இதைக் கேட்டு மாறியது. கொஞ்சமாக புன்னகைத்தாள்.
கொஞ்சம் சகஜ நிலைமை வந்தது. எல்லோருமாக  பேசிக்கொண்டு இருக்க
“சரி நான் ஆபிஸ் போகணும்.... நீங்க எல்லாரும் பேசிகிட்டு இருங்க” என்று கிளம்பினான்.
“கண்ணா அதுதான் எல்லாம் சரி ஆயிடுச்சே.... வீட்டுக்கு வாயேன்பா?” என்று கூப்பிட்டார் மது.
“வரேன் மா.... வார இறுதிகள் அங்கே வந்து இருக்கேன்..... மற்ற நாட்களில் இங்கேயே எனக்கு சௌகர்யமாக இருக்கிறது” என்று கூறி மழுப்பினான்.

“அப்படீன்னா அண்ணா, நீ என்னை மன்னிக்கலை அதானே உண்மை..... உன் மன்னிப்பை பெற நான் என்ன செய்யணும்னு சொல்லு அண்ணா... செய்யறேன்” என்றான் தினேஷ்.
“டேய் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை..... நீ சொன்னதிலேயும் ஒன்றும் தப்பு இல்லையேடா” என்றான்.
“ஓஹோ அப்போ அவன் சொன்னது மட்டும்தான் பெரிசா போச்சா.... நாங்க எடுத்தது வளர்த்தது பாசத்தை கொட்டியது எதுவுமே முக்கியம் இல்லையா கண்ணா?” என்று கேட்டாள் மது.
“ஐயோ ஏன்மா இப்படி எல்லாம் பேசறே.... நான் வரேன்.... நான் அப்படி எல்லாம் நினைக்கலை..... இன்னிக்கே வரேன்.... நீங்க முன்னாடி போறதுன்னா போங்க.... நான் வேலை முடிந்து பின்னோடு வருகிறேன்” என்றான்.
“நிச்சியம வருவே இல்லை அண்ணா?” என்றாள் சுதா
“வருவேண்டா நான் சொன்ன சொல் மாறமாட்டேன்னு தெரியும்தானே டா செல்லம்” என்று அவள் தலையை வருடி கொடுத்தான்.
“சரி இரவு பார்க்கலாம்” என்று கிளம்பி ஆபிஸ் சென்றான்.

அனிதா அங்கே ஆவலாகக் காத்திருக்க,  “என்ன அங்க எப்படி போச்சுன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கா.... எல்லாம் பைன் டா.... தாங்க்ஸ் பார் பீயிங் தேர் பார் மீ ஆல்வேஸ்” என்றான் அவள் கையில் முத்தமிட்டபடி. அவள் தலை கவிழ்ந்தாள்.

“உனக்கொண்ணு தெரியுமா... இந்த தினா ரொம்ப விவகாரமான பையன்” என்றான்.
“ஏன் என்ன” என்று பார்க்க
“நம்மளை பற்றி தெரிஞ்சுகிட்டான்... கண்டு பிடிச்சுட்டான்.... அதான் அண்ணி என்னை அப்படி எரிக்கற மாதிரி பார்தாங்களான்னு சிரிக்கறான் பயல்” என்று சிரித்தான்.
‘அண்ணி’ என்ற சொல்லை கேட்டு அவளுக்கும் வெட்கம் கூடியது. முகம் சிவந்து பேசாமல் தன் சீட்டிற்கு போய் அமர்ந்துவிட்டாள். அவளின் சிவந்த முகத்தை ரசனையோடு கண்டிருந்தான் கிருஷ்.
“இன்று இரவு நான் வீட்டிற்குப் போறேன் அனி” என்றான்.
“ஒ குட். பாவம் உங்க பேரெண்ட்ஸ், தவிச்சுப் போயிட்டாங்க” என்றாள்.
“ஆம் அவர்களுக்காகத்தான் போறேன் நானும்” என்றான் ஒரு பெருமூச்சோடு.
அவள் முகம் கண்டு அவளை சீண்டத் தோன்றியது க்ரிஷிற்கு.

“ஆமா இந்த அண்ணனொடு சேர்ந்து இந்த அண்ணியும் எப்போது அந்த வீட்டிற்கு வருவாங்க?” என்று கேட்டான் கண் சிமிட்டியபடி.
“இந்த அண்ணல் கூறும்போது” என்றாள் அவளும் சிவந்தபடி.
அதைக்கேட்டு உல்லாசமாக நகைத்தான் கிருஷ். பல நாட்களுக்குப்பின் அவனின் அந்த மந்தகாசச் சிரிப்பைக் கண்டு மனம் நிறைந்தது அனிதாவிற்கு. சொக்கிப் போனாள்.
“ம்ம்?” என்றான் என்ன என்று கண்ணால் வினவியபடி.
“ம்ஹூம் ஒன்றுமில்லை” என்றாள் அவளும் தலை கவிழ்ந்தபடி.

சொன்னபடி கட்டாயம் வந்துவிடுவான் கண்ணன் என்று நம்பி மற்றவர் முன்னே கிளம்பினர். வீட்டை அடைந்து வீடு இருக்கும் நிலை கண்டு மனம் வெதும்பி சரி இத்தோடு போனதே என்று அதை சீராக்கும் பணியை பார்த்தனர் சுதாவும் மதுவும். சமையல்காரருக்குச் சொல்லி அனைவருக்கும் பிரியமான உணவை தயார் செய்யச் சொன்னாள் மது. கூடவே சென்று பக்குவம் பார்த்துக்கொண்டாள்.
மாலை மயங்கிய நேரத்தில் கிருஷ்  வந்து சேர்ந்தான்.

“வாடா கண்ணா” என்று ஆசையாக அழைத்தாள் மது.
“வா அண்ணா” என்று முன் சென்று அவன் கைகளை பிடித்து அன்போடு உள்ளே அழைத்து வந்து அமர்த்தினான் தினா.
“பிரெஷ் ஆகீட்டு வரியா கண்ணா, சாப்பிடலாம்” என்று கேட்டாள் மது. அவனும் தனது பழைய அறைக்கே சென்று கை கால் கழுவி வந்து அமர்ந்தான். அனைவரும் முன் போல பேசி சிரித்தபடி மகிழ்ச்சியாக உண்டனர்.

அதன்பின் வந்து அமர்ந்து பேச ஆரம்பித்தான் கிருஷ் .
“அப்பா, இப்போ எனக்கிருக்கிற வேலையே தலைக்குமேல இருக்கு..... இந்த ஒரு மாதத்துல ஆபிஸ் நடப்பு எல்லாம் தினாவுக்கு நல்ல பழக்கம் ஆயிடுச்சு.... நீங்க கூடவே இருந்து கைட் பண்ணினா அவன் சீக்கிரமே கற்றுக்கொள்வான்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா. ...நீங்க என்ன சொல்றீங்க..... இப்போ பார்ப்பது போல அவனே தொடர்ந்து பார்த்துக்கொள்ளட்டுமே?” என்றான்.

“ஐயோ அண்ணா, வேண்டாம் இந்த விஷப் பரீட்சை...  எனக்கு அங்கே தலையும் புரியலை வாலும் புரியலை” என்றான் பயந்து போய். “சரிதான் டா, எனக்கு எல்லாம் தெரியும்..... நீ செஞ்சவரைக்கும் சரியாத்தான் செஞ்சே.... உன் உருப்படாத நண்பர்கள் சேர்கை விட்டு ஒழிஞ்ச பின்னாடி நீ செய்தது எல்லாம் நல்ல முடிவுகள் உருப்படியான வேலைகள்” என்றான்.

“அண்ணா!!”  என்றான் ஆச்சர்யமாக.
“ஆமாம் நானும் அப்பாவும் நீ தினப்படி செய்யும் வேலைகள் பொறுப்புகளை அவ்வப்போது கண்காணிச்சுட்டுதான் இருந்தோம்... உன்னால என்ன முடியும்னு எங்களுக்கு இப்போ நல்லாவே புரிஞ்சுபோச்சு.... அதனால்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.... எத்தனை நாள்தான் நானும் அப்பாவுமே எல்லாவற்றையும் பார்க்கறது..... கற்றுக்க..... என்னிக்கிருந்தாலும் நீ அங்க வரத்தானே வேணும்” என்றான் திண்ணமாக.

தினாவுக்குமே அந்த ஆர்வம் இப்போது வந்திருந்தது, ஆயினும் தனியாக என்றபோது பயந்து ஒதுங்கிவிட்டான் .
“ஆனா என்னால அசலே ஒரு நல்ல டீல் பாழா போயிடுச்சே...” என்று முனகினான். “அதனால நிறைய லாஸ்” என்றான்.


Monday 1 October 2018

ENGIRUNDHO VANDHAAN - 11


மதுவுக்கு பளிச்சென்று விளங்கியது. ‘ஆமாதானே தங்களுக்குப் பிறந்த மகனாயினும் அவன் இப்படித்தானே நடந்திருப்பான். ஆபிஸின் முக்கிய கோப்புகள் அல்லவா.... அந்த நேரத்து க்ஷண நேர கோபம் அல்லவா.... நான் எப்படி அதைத் தப்பாகப் புரிந்துகொண்டேன்’ என்று எண்ணி வெட்கினாள். அவனை சமாதானபடுத்த முயல அவனோ கோபத்துடன் முகம் திருப்பிக்கொண்டு தூங்கிப் போனான். ஒன்றும் செய்ய இயலாமல பிரமை பிடித்து படுத்திருந்து அவளும் அப்படியே தூங்கிப் போனாள்.

காலையில் விழித்ததும் எப்படியும் அவனை சமாளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் சரி படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். வேண்டுமென்றே கண்ணனை அவன் பக்கத்தில் உறங்கவைத்துவிட்டு குளித்து கீழே சென்றாள். காபியுடன் வந்து எட்டிப் பார்க்க திலீப் முழித்துக்கொண்டு தூங்கும் கண்ணனை இழுத்து அணைத்து இறுக்கிக்கொண்டு கண்மூடி அந்த அரவணைப்பை எப்போதும் போல ரசித்தபடி கிடந்தான். அவள் வரும் அரவம் கேட்கவும் ஏதோ சாதாரணம்போல முகத்தை வைத்துக்கொண்டான்.


காபி என்று நீட்டினாள். “குட் மார்னிங்” என்றாள் பதிலில்லாமல் காபியை வாங்கிக்கொண்டான். பேசாமலே குடித்தும் முடித்தான்.
“இன்னமும் கோபம் போகலையா.... என்னை மன்னிக்க மாட்டீங்களா தீபு?” என்றாள்.
“நாந்தான் மட்டித்தனமா நடந்துகிட்டேன்.... நீங்கதான் பெரிய மனசோட மன்னிச்சுடக் கூடாதா?” என்று வேண்டினாள். கண்ணன் தூக்கத்தில் இன்னமும் திலீபன் மடியோடு ஒண்டினான்.
“பாருங்களேன் இவன் உங்களிடம் எப்படி ஒன்டிகிட்டான்” என்று சிரித்தாள்.
“ஆமா அவனுக்கு இந்தச் சின்ன வயசுல புரிஞ்சது கூட சில வளர்ந்த மனுஷங்களுக்கு புரியல, அது என் தலை எழுத்து..” என்றபடி குளிக்கச் சென்றுவிட்டான்.

கண்ணில் நீர் முட்ட அடுத்து என்ன செய்வது அவனை எப்படி சரி செய்வதென புரியாமல் அமர்ந்திருந்தாள். அவனுக்கு உடைகள் எடுத்து வைத்துவிட்டு முழித்துவிட்ட கண்ணனோடு எழுந்தாள்... திலீப் வந்து உடை மாற அவள் கண்ணனுக்கு முகம் கழுவி எடுத்துவந்தாள்.
“இந்தா நீயாச்சு உங்கப்பாவாச்சு... அவரை சமாதானாப்படுத்து.... அம்மா பாவம் கோச்சிக்க வேண்டாம்னு சொல்லி சரி பண்ணி கீழே அழச்சுகிட்டு வாடா கண்ணா” என்று வேண்டும் என்றே அவனிடம் கண்ணனை திணித்துவிட்டு கீழே இறங்கி சென்றுவிட்டாள். கண்ணன் முகம் பார்த்து சிரிக்க திலீப்பும் இளகினான். அவனை பக்கத்தில் அமர்த்தி தான் ஆபிசிற்கு ரெடியாகி அவனை தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

அவனையும் அமர்த்தி காலை உணவு உண்டான் அவனுக்கும் ஊட்டினான். அதில் கண்ணன் சிலது உமிழ தன் டவலால் அதைத் துடைத்துக்கொண்டே ஊட்டி மகிழ்ந்தான். இவற்றை கண்டவளுக்கு மனம் நெகிழ்ந்தது. விசாலம் அருகில் இல்லை என்று கவனித்துக்கொண்டு கண்ணனை தூக்க வருபவள் போல அருகில் வந்து திலீபன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு
“ஐ ஆம் சாரி தீபு, மன்னிச்சிடுங்கப்பா” என்று வேண்டிக்கொண்டு நகர்ந்துவிட்டாள். திலீப் முழுதும் கரைந்தேவிட்டான்.
“மது இங்க வா” என்று போனவள் கையை பிடித்து பின்னுக்கு இழுத்தான்.
“என்னவாம் இப்போ மதுவுக்கு” என்றபடி அவள் பிகுவுடன் முகம் சிவந்து வந்தாள். அவளை இழுத்து குனியவைத்து முகத்தை இடது கையால் அணைத்து அவனும் முத்தமிட்டான். அவள் மேலும் சிவந்தாள்.
“ஏண்டீ உனக்கு குசும்புதானே... இங்க அம்மா வேலைக்காரங்கன்னு சுத்தி இருக்காங்க, அவங்களுக்கு நடுவே எனக்கு முத்தம் குடுத்து உசுப்பேத்தற இதை மாடியில செய்திருந்தா நடப்பதே வேற” என்றான் கண் அடித்து.
“தெரியுமே அதற்குதானே இங்கே அப்படி செய்தேன்” என்று கன்னம் சிவந்து கூறிவிட்டு சமையல் அறைக்குள் ஓடிவிட்டாள். அவனும் உள்ளார்ந்து சிரித்துக்கொண்டான்.

‘ம்ம்ம் இந்த ஊடல்ம்பாங்களே அதுவும் பின்னே வரும் கூடலும் கூட நல்லாத்தான் இருக்கு’ என்று சிரித்துக்கொண்டான். கண்ணனும் என்னவோ புரிந்தது போல இவனோடு சேர்ந்து சிரித்தான்.
“டேய் கண்ணா நீ அந்த மதுராபுரி கண்ணனேதான்..... உன்கிட்ட ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும்டா..... நிறைய லீலைகள் நடத்தீட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி சிரிச்சுகிட்டு ஒக்காந்திருகே டா” என்று கொஞ்சிக்கொண்டான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மது அவனை வாங்கிக்கொண்டு எப்போதும் போல சிரித்த முகமாக திலீப்புக்கு விடை கொடுத்தாள்.

மணமாகி ஓராண்டு முடியும் தருவாயில், தங்களுக்கென ஒரு குழந்தை வேண்டும் என்று முடிவு எடுக்கும் நேரமும் வந்தது. மது குழம்பினாள். ஒரு புறம் அப்படி தனக்கென ஒன்று பிறந்தால் தான் கண்ணனிடம் காட்டும் அன்பிலும் அக்கரையிலும் குறை வந்துவிடுமோ என்ற பயம். மறுபுறம் தன்னையும் கண்ணனையும் தனதாக்கிக் கொண்ட திலீப்புக்கு அவனுக்கென ஒரு பிள்ளையை பரிசாக தர வேண்டாமா. வேறு எந்த விதத்தில் தன அன்பினை அவனுக்கு தக்க விதமாக புரிய வைக்க முடியும் என்ற தடுமாற்றம் என்று குழம்பினாள் மது.

குழம்பிவள் தன்னை அறிந்தாள், ‘தான் கண்ணனின் மீது கொண்ட பற்று என்றும் மாறாது, திலீப் சொல்வது போல கண்ணன்தான் தங்களுக்கு தலைப்பிள்ளை’ என்று தெளிந்ததும் மனதார தாய்மைக்கு தயாரானாள்.

பின்னோடு மது கற்பம் தரித்தாள் . திலீபனுக்கு கால் தரையில் பாவவில்லை. அந்த நேரம் அவள் முடிந்தும் முடியாமலும் திணறும்போது கண்ணனுக்கு தாயின் ஏக்கம் வராமல் அவனை அரவணைத்து தானே பார்த்துக்கொண்டான். கண்ணனுக்கு அப்போது இரண்டு முடிந்திருந்தது, அதனால் சமாளிக்க முடிந்தது.

பிள்ளை பிறக்க, “உனக்குதான் தம்பி பாப்பா” என்று கூறி வளர்த்தனர். அவனும் சின்னவன் தினேஷ் மேல் அளவு கடந்து பாசம் வைத்திருந்தான். பின்னோடு இரண்டு வருடங்களில் சுதாவும் பிறந்துவிட விசாலத்திற்கு நெஞ்சம் நிம்மதியில் விம்மியது. பேறக் குழந்தைகளுடன் ஆனந்தமாக வாழ்ந்துவிட்டே இயற்கையாக உயிர் நீத்தார் அவர்.

பத்து வயதில் கண்ணனுக்கு அவனின் பிறப்பு உண்மைகளை கூறினாலும் சுதாவுக்கும் தினேஷுக்கும் அதை தெரியவைக்கவில்லை. அது அவசியம் என்று அப்போது தோன்றி இருக்கவில்லை. அது தப்போ என்று இப்போது உறுத்தியது திலீப்பிற்கு.

இன்று:
தன் இருபத்தி ஆறாம் வயதில் இளம் வியாபார வல்லுனர்களின் மத்தியில் தன் பெயரும் வைக்கப்படும் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்டிருந்தான் கிருஷ்.
ஆனால் தன் இருபத்தி நான்கு வயதிலும் இன்னமும் எம் பி யே படிக்கிறேன் வெளிநாட்டில் படிக்கப் போகிறேன் என்று பணத்தை வாரி இரைத்துக்கொண்டு படிப்பும் முடியாமல் ஊரை சுற்றிக்கொண்டு குஷாலாக இருந்து வந்தான் தினேஷ். அதனால் அவனுக்கு வேண்டாத சகவாசங்கள் பல இருந்தன.

ஒட்டுண்ணி ரகங்களும் பல ஒட்டிக்கொண்டு அவனை உருஞ்சிகொண்டிருந்தன. அதில் முக்கியமானோர் திவாகர் மற்றும் ராகேஷ். இருவரும் சாதா குடும்ப நிலையிலிருந்து வருபவர். படிப்பு ஏறவில்லை. வேலையும் பார்க்கவில்லை. ஈசியாக நண்பனின் செலவில் ஊரைச் சுற்றிக்கொண்டு அவனுக்கு ஆமாம் சாமி போட்டுக்கொண்டு சுளுவாக வாழ்ந்துகொண்டிருந்தனர் இருவரும்.

அதில்தான் திவாகர் தந்தையின் மூலம் கிருஷ் பற்றிய பிறப்பு ரகசியங்கள் எதேர்ச்சையாக வெளிப்பட அதை காரணமாக பெரிதுபடுத்தி தினேஷை ஏற்றி விட்டனர் இருவரும் . அவனும் நண்பர்களின் பேச்சைக் கேட்டு இங்கே வந்து ஆடிக்கொண்டிருந்தான்.

“ஏண்டா மச்சான் நாம நினைச்சா இந்த ஹோட்டலையும் எஸ்டேட்டையும் பார்த்துக்க முடியாதா.... உங்கப்பாவுக்கு வயசாயிடுச்சு வீட்டில முடங்கிக்கட்டும்..... கிருஷ் ஒண்ணும் உங்க அண்ணன் இல்லையே கேத்தி ரிசார்ட் மட்டும்தானே அவன் உழைப்பில் உருவானது அதுகூட உங்கப்பா பணம்தானாமே..... அதனால அவனை ஒதுங்கிக்க சொல்லி மிரட்டு.... அவன் தடை கல்லாக இருக்கறதால தான் டா உன் மதிப்பே வெளி வரலை..... இல்லேனா நீ என்னா ஆளு, உன் திறமை என்ன, ஆளுமை என்ன...” என்று ஏற்றிவிட தினேஷுக்கு ஆமாம் அதுதான் உண்மை என்று உரு ஏறிப்போனது.

‘எப்போதும் கிருஷ் வெற்றிகரமாக இருப்பதை சுட்டிக்காட்டி பெற்றோர் வேறு இம்சை செய்கின்றனர்.... அவனை அப்புறப்படுத்திவிட்டால், தானே எல்லா சொத்துக்கும் வாரிசாவோம்.... பிசினசை தானே நடத்துவதாக ஏற்றுக்கொண்டால் செலவைப் பற்றி கவலை இல்லாமல் வாரி விடலாம்.... கேட்பார் இருக்கப் போவதில்லை’ என்று மனக்கோட்டை கட்டினான்.

கொஞ்சம் மனதில் தயக்கம் இருந்தது.... ‘அண்ணா அல்லவா.... இதுநாள் வரை க்ரிஷ் அவனுக்கு நல்லதே சொல்லி நல்லதே செய்துள்ளானே’ என்று.... ஆனால் தன் சுய சந்தோஷம் முன் வந்ததும் அண்ணனின் மேல் இருந்த பாசமும் அன்பும் ஓடி ஒளிந்துகொண்டது.
தைரியப்படுத்திக்கொண்டு வாய்க்கு வந்ததை பேசிவிட்டான். அதன்படி க்ருஷும் வீட்டை விட்டு போயிருக்க தினேஷிற்கு உள்ளுக்குள் சந்தோஷம்.
முதல் படி வெற்றி என்று கூறிக்கொண்டு தன் நண்பர்களோடு கொண்டாடச் சென்றுவிட்டான். பெற்றோர் சில நாள் கோபமாக இருப்பார்கள் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் நினைத்ததை சாதித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினான்.

இதனிடையில் தந்தையை அழைத்து தான் ரிசார்டில் இருப்பதாக கூறினான். தாயிடமும் சுதவிடமும் இரண்டு நிம்டம் பேசினான். அது கொஞ்சமாக நிம்மதி தந்தது என்றாலும் மனசை கவலை அரிக்கதான் செய்தது.
க்ருஷ் இல்லாத வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் இன்றி தவித்தனர் பெற்றோர் மற்றும் சுதா.

தினேஷை கண்ட நேரத்தில் இழுத்து பிடித்து வைத்து நிஜத்தை அவனுக்கு புரியவைக்கும் எண்ணத்துடன் எல்லாம் கூறினார்கள் மதுவும் திலீப்பும்.

“இருக்கட்டுமே நான் சொன்னதுதானே உண்மை.... அவன் உங்களுக்குப் பிறக்கவில்லை.... ஸ்வீகாரம் எடுத்ததுக்கு வளர்த்தாச்சு படிக்கச் வைத்தாச்சு அவனுக்குன்னு தொழில் ஏற்படுத்திக் கொடுத்தாச்சு இன்னும் என்ன, போதும்..... எங்களை கவனியுங்கள் இனிமேல்... அதுதான் உங்கள் வேலை.... இப்போ சொல்றேன் கேட்டுக்குங்க, நானே பிசினசை நடத்தப் போகிறேன்..... வேணும்னா நீங்க வந்து உதவலாம்.... இல்லேனா நானே பார்த்துப்பேன்.... ஏன் என்னால முடியாதா... தெரியாதா.... சான்ஸ் கொடுத்தாதானே நிரூபிக்க முடியும்..... நான் சமாளிச்சுப்பேன்..... அவன் இந்த வீட்டுக்கு வரக் கூடாது தங்கக் கூடாது..... சொத்துகளை மாற்றி எழுதுங்க” என்று சட்டமாக பேசப் பேச மதுவுக்கு ஏறியது.

“போதும் வாய மூடு..... உனக்கென்ன யோக்யதை இருக்கு அவனப்பத்திப் பேச..... பிசினச நீ ஒண்டியா சமாளிக்கப்போறியா.... உன்னைப் போலவேதானே அவனையும் படிக்க வெச்சோம்.... அவன் தன் வயசுல எப்பிடி இருக்கான்.... நீ எப்பிடி இருக்கே.... ஒப்பிட்டு பேசறோம்னு மட்டும் பொத்துகிட்டு வருதே, நீ இதுவரை தோற்காம ஒரு வருடமானும் படிச்சு பாஸ் பண்ணி இருக்கியாடா..... பேச வந்துட்டான்..... “ என்று  கத்தி தீர்த்தாள்.

திலீபோ, “எங்களுக்கு அவன் வேணும், அவன்தான் எங்க மூத்த பிள்ளை..... அவன் இங்க வர முடியாது தங்க முடியாதுன்னா, நாங்க அவன்கிட்ட போயிடுவோம்..... சுதாவும் எங்களோட வருவா...... நீ தான் பெருமையா பேசினியே பிசினச சமாளிச்சுக்கறேன்... நான் நடத்தறேன் நிரூபிப்பேன்னு... சரி அப்படியே ஆகட்டும்.... நீ என்னமோ செய்..... இந்த வீட்டுல தனியாதான் இருப்பே..... உனக்கு சொத்துக்கள் இருக்கும்..... ஆனா நாங்க யாரும் இருக்க மாட்டோம்... சம்மதமா?” என்று கேட்டார் திலீப்.
கொஞ்சம் தயங்கி பின் துணிந்து “போங்களேன் எனக்கென்ன.... என்னைவிட அவன்தான் உசத்தின்னா போங்க.... திரும்பி என்கிட்டதான் வரணும்..... நான் செய்துப்பேன் தொழில...” என்றான் கெத்தாக.

அவனை அவன் வழியில் விட்டுதான் பிடிக்க வேண்டும் என்று பேசாமல் ஒத்துக்கொண்டனர் இருவரும்.
திலீப் ஆபிசிற்குச் சென்று அவரது பல நாள் செயலாளரிடமும் மேனேஜரிடமும் சுருக்கமாக விவரத்தைக் கூறி தினேஷ் பிசினசை பார்ப்பான் என்றாலும் பெரிய திருத்திட முடியாத தவறுகள் நடந்துவிடாமல் அவனை கண்காணிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவ்வப்போது அவருக்கு நிலைமை எப்படி என்று தகவல் தரும்படி வேண்டினார். பார்த்துக்கொள்ள சொல்லி வெளியேறினார்.

சுதாவுடன் இருவரும் கிளம்பி கேத்தி வந்தனர். பெற்றோரைக் கண்டதும் க்ரிஷுக்கு ஆனந்தம்.... ஆசையாக அளவளாவினான்..... சுதாவை கொஞ்சிக்கொண்டான்.... ஆனால் கோபம் கொண்டான்.

“என்னப்பா நீங்க, அவன்தான் என்னமோ சின்னப்பிள்ளை அவன் அடம் பிடிச்சான்னு அவனைத் தனியா விட்டுட்டு பிசினசையும் அவனிடமே கொடுத்துட்டு என்னப்பா.... இது பெரிய ரிஸ்க் இல்லையாப்பா..” என்றான்.
“எல்லாம் தெரிஞ்சுதான் வந்தேன் கண்ணா.... இரு பாப்போம்..... கொஞ்ச நாள் ஆடி பார்கட்டும்டா கண்ணா, அப்போ தெரியும்” என்றார்.

“நாங்க இங்க தங்கிக்க உனக்கொன்னும் ஆட்சேபனை இல்லையே?” என்று கேட்டார் புன்சிரிப்போடு
“அய்யோ அப்பா, என்னப்பா, இப்படி எல்லாம் பேசிகிட்டு” என்று தனது அடுத்து இருந்த காட்டேஜில் அவர்களுக்கு வசதி செய்து கொடுத்தான். அனிதா வந்து தானே முன் நின்று சகல உதவியும் செய்து கொடுத்துச் சென்றாள்.
திலீப் மட்டுமின்றி க்ருஷும் கூட அவ்வப்போது தகவல் தெரிந்து கொண்டனர். எங்கே எப்போது போய் சமாளிக்க வேண்டுமோ அப்போது கிருஷ் தினா அறியாமல் சென்று தொழில் முடங்காது காத்து வந்தான்.

அமைதியாக வாழ்ந்தபோதும் அங்கே தினேஷ் என்ன கூத்து நடத்துகிறானோ என்ற பெரும் பயம் திலீப்பின் மனதை படுத்தியது. கூடிய விரைவில் அந்த பயம் நியாயமே என்று தெரிய வந்தது.

ஒரு வாரம் வரை ஆபிசிற்கு சரியாக சென்று தினப்படி வேலைகளை பார்த்தான் தினேஷ். கூடவே திவாகரையும் ராகேஷையும் நம்பி சில பொறுப்புகளும் கொடுத்து வேலை பார்க்கச் செய்தான். அவர்களும் சில நாட்கள் கெத்தாக பெரிய கம்பனியின் முதலாளிகளில் போன்ற திமிருடன் வளைய வந்தனர். அதிகாரம் தூள் பறந்தது. ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. கூடவே ஏதோ வேலையும் நடந்தது. பின்னோடு வாரம் முடியும் முன்பே இவர்களின் சுய குணம் வெளிப்பட
“என்னடா மச்சான் ஒரே போர்.... காலையிலேர்ந்து மாலைவரை இங்கேயே ஆபிசில் உழலறோம்.... கமான் டா மாமு, போய் தண்ணி அடிச்சுட்டு கொஞ்சம் ஊரச்சுத்தீட்டு வருவோம்” என்று இருவரும் தினேஷையும் கெடுத்து கூட்டிச் சென்றனர்.

“இங்கே வேலை இருக்கே....” என்று அவன் இழுக்க
“ஏண்டா, இதை எல்லாம் முதலாளி நீதான் பார்க்கணும்னா, இவனுங்க எல்லாம் தண்டத்துக்கா துட்டு குடுத்து வெச்சிருக்கோம் வேலைக்கு... அவனுங்கள செய்ய சொல்லீட்டு வாடா, லெட்ஸ் என்ஜாய்” என்றனர்.
அவனும் அவ்வண்ணமே பொறுப்பை ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டான். அதனால் பெரிய கம்பனி டீல் ஒன்று தொங்கலில் ஆனது. அதன் முக்கியத்துவம் தினேஷ் அறிந்திருக்கவில்லை.