Thursday 28 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 7


“இல்லை முடியாது அர்ச்சனா... சின்ன வயசு முதல் என் ஆசையே எனக்குன்னு ஒரு இண்டஸ்ட்ரி ஆரம்பிச்சு கால் உரைக்கணுங்கறதுதான்..... அது என் கனவு, அதை நான் யாருக்காகவும் விட்டு குடுக்க மாட்டேன்..... போறாததற்கு என் பெற்றோரை இங்கே அவதிப்பட விட்டுட்டு அப்படி ஒதுங்கி என் வேலையை பார்த்துகிட்டு ஓடிபோகவும் என்னால முடியாது.... எல்லாம் கூடி நான் போக முடியாத நிலையில் இருக்கேன் நான் கம்பனில சொல்லீட்டேன் அவங்களும் புரிஞ்சுகிட்டாங்க..... நான் அசலே என் சொந்த கம்பனிகுண்டான வேலைகளில் இறங்கியாச்சு..... லைசென்சே கூட வந்தாச்சு உனக்கும்தான் இது தெரியுமே” என்றான்.

“ஆமா பெரிய கம்பனி, தெரியாதாக்கும், நீங்க இருக்கறத விட்டுட்டு பறக்கறத பிடிக்க பார்க்கறீங்க, நீங்க எப்போ கம்பனி ஆரம்பிச்சு, அதுல எப்போ காலூனி, அது பெரிசாகி விரிவு படுத்தி நீங்க பெரிய மனுஷன் ஆகறது.... அதுவரைக்கும் நான் இதே வீட்டில உங்க அம்மாப்பாவோட உழண்டுகிட்டு இருக்கணுமாக்கும்..... எனக்கொண்ணும் அப்படி தலை எழுத்து இல்லை..... நான் அசலே சொன்னேன், நான் ராஜகுமாரியா வளர்ந்தவ, அதேபோல தான் இங்கெயும் இருப்பேன்.... நீங்களும் அப்படிதான் என்னை பார்த்துக்கணும்னு.... நீங்க காலில் வந்து விழுந்த சான்சை எட்டி உதைச்சிட்டீங்க.... அதுவும் என்னை கேட்காம நீங்களே வேண்டாம்னு வேற சொல்லீட்டீங்க....” என காலை உதைத்துக்கொண்டு கோவமாக கத்தி ரகளை செய்தாள்.
கீர்த்திக்கு அவளை எப்படி கையாள்வதென தெரியாமல் திணறினான்.

“நான் எங்கம்மா வீட்டுக்கு போறேன் கொஞ்ச நாளைக்கு” என்றாள்.
‘சரிபோய் வரட்டும், கொஞ்சம் தெளியும்’ என டிக்கட் போட்டான்...... போனவள் திரும்பவே இல்லை..... மூன்று மாதங்கள் ஆனது.....

இங்கே காஞ்சனா பட்ட படிப்பு முடிந்த கையோடு அவளுக்கு நல்ல வரன் வந்தது.....முகூர்த்தம் குறிக்கும் நேரத்தில் வீட்டின் மருமகள் அங்கே இல்லாவிடில் நன்றாக இருக்காதே என கற்பகம் மீண்டும் மீண்டும் போன் செய்து அழைத்தாள்....
“பார்க்கறேன் அப்பாக்கு முடியல, அம்மாக்கு காலில் சுளுக்கு” என சாக்கு போக்கு கூறினாள்.

ஒரு மாத காலமும் ஓடிட கற்பகம் அவள் தாயிடமே முறையிட்டாள்.
“கல்யாணம் நெருங்குது சம்பந்தியம்மா, கொஞ்சம் அனுப்பி வையுங்க” என மன்றாடினாள். அவரும் நல்ல வார்த்தையாக சொல்லி அனுப்பி வைத்தார்.... ஏதோ இவர்களுக்காக போனா போகிறதென வந்தவள் போல வந்தவள் ரூமை விட்டு வெளியே வரவில்லை, ஒருவேலையிலும் பங்கு கொள்ளவில்லை..... திருமண நேரத்திலும் கூட அப்படியே நடந்து கொண்டாள்..... சரி ஏதோ ஒன்று இங்கே இருக்கிறாளே என அனைவரும் வாயை மூடிக்கொண்டனர்.

வந்த கையோடு பிரிந்திருந்த உத்வேகத்தில், இயலாமையில் ஒரே ஒரு முறை, அதைத்தவிர அதன் பின்னே கீர்த்தியை அவளிடத்தில் நெருங்கவே அவள் விடவில்லை.
“எனக்கு கொஞ்சம் மென்சஸ் ப்ராப்ளம் இருக்கு அதனால் இதெல்லாம் வேணாம்” என அவனை ஒதுக்கிவிட்டாள்.... கொஞ்சம் சோர்வாகவும் தெரிந்தாள் என்பதால் அவனும் அவளிடம் நெருங்கவில்லை.
பக்குவமாகவே நடந்துகொண்டான்.... அன்பாக நடத்தினான்.... காஞ்சனாவின் திருமணத்திற்கென அவளுக்கும் நகை புடவை என வாங்கி இருந்தான்..... அவை எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக கண்ணிற்கு படவில்லை.

கல்யாணமும் நல்லபடி நடந்து முடிந்து காஞ்சனாவும் புக்ககம் சென்றாள்..
“அதான் எல்லா வேலையும் ஆச்சே, நான் கிளம்பறேன் அம்மா வீட்டுக்கு” என துடங்கினாள்.
“என்ன அர்சு இது, எப்போ பாரு அம்மா வீட்டுக்குனு கிளம்பினா எப்படி, இதானே உன் வீடு நீ இங்கே வாழாம பின்னே?” என்றான் சற்றே கோபத்தோடு.
“இங்கே இருந்து என்ன வாழணும் என்ன பாக்கி இருக்கு, எனக்கு பிடிச்சத என் மனசுக்கு வேண்டியதை எதுவும் நீங்க செய்யறது இல்லை பிறகென்ன,  நான் இங்கே எதுக்கு சும்மா அலங்கார பொம்மையாட்டமா, நான் எங்கம்மா வீட்டிலேயே நிம்மதியா இருக்கேன் கொஞ்ச நாளைக்கானும்” என்றாள்.
அவளை என்ன சொல்லி தடுப்பது என அறியாமல் குழம்பினான்.

“சரி போகலாம் இரு, ஒரு வாரம் போகட்டும்.... அப்பறமா போகலாம், நானே கொண்டு விடறேன்” என்றான். ஒரே வாரம்தான் என கண்டிஷன் போட்டாள்.
சொன்னபடி அடம் செய்து தன் வீட்டிற்கு சென்றேவிட்டாள்..... மீண்டும் சில வாரங்கள் இங்கே வரும் எண்ணமே இன்றி அவள் அங்கேயே இருக்க, கீர்த்தி அழைத்து பார்த்து மடுத்தான்..... ஒரு நாள் திடீரென்று அவளிடம் இருந்து ரெஜிஸ்தர் தபாலில் விவாகரத்து பத்திரம் வந்தது.... அதை வாங்கி கண்டவன் திடுக்கிட்டு போனான்..... உடனே அவளை அழைத்து,
“என்ன இது, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, எதுக்கு இப்போ விவாகரத்துக்கு அனுப்பி இருக்கே, நமக்குள்ள அப்படி என்ன நடந்துடுத்து.... நீ முதல்ல இங்க கிளம்பி வா, நாம எதுவானாலும் பேசி தீர்த்துக்கலாம், இல்லேனா சொல்லு, நானே அங்கே வரேன்” என்றான்.

“என்ன பேச பாக்கி இருக்கு, பேசாம கை எழுத்து போட்டு அனுப்ப வேண்டியதுதானே” என்றாள்.
“அப்படி எல்லாம் நீ சொல்றதுக்காக உடனே சட்டுனு கையொப்பம் இட்டு அனுப்ப முடியாது.... இதெல்லாம் சின்ன விஷயம் இல்லை, உனக்கு இன்னும் அதனோட விபரீதமே தெரியலையோன்னு தோணுது..... நீ வரியா நான் வரவா?” என்றான்.
“சரி சரி வரேன்..... நாலு நாளைக்குதான் வரேன், அதுக்குள்ள பேசி முடிவு பண்ணியாகணும்” என்றாள்.
சொன்னபடி வந்து சேர்ந்தாள்.... மற்றவருக்கு இந்த விவரம் தெரியாமல் மறைத்தான்....அவளுடன் என்னவே பேசினாலும் மாடியில் தனித்து தங்களது அறையில் வைத்தே பேசினான்.

“என்னாச்சுனு நீ இபப்டி நடந்துக்கற செல்லம், என்னகோபம் உனக்கு.... எதுவானாலும் சொல்லு பேசி தீத்துக்கலாம், இப்படி அவசரப்படாதே” என்றான்.
அவன் கெஞ்சல் அவள் காதில் எடுபடவில்லை.
“போதும் நிறைய பேசியாச்சு..... நீங்க, உங்களோட பொறுப்புகள், உங்க புதிய கம்பனி இதைப்பத்திதான் உங்களுக்கு அக்கறை..... என்னைப்பற்றி யோசிக்க உங்களுக்கேது நேரம்..... என் விருப்பு வெறுப்பு பத்தி உங்களுக்கு என்ன அக்கறை.... பேசாம பிரிஞ்சுடலாம்” என்றாள் முத்தாய்ப்பாக.

இனி இவளிடம் என்ன பேச, சிறு குழந்தை மிட்டாய் வேண்டும் என அடம் செய்வது போல இவள் விவாகரத்து வேண்டும் என்கிறாளே என மண்டை காய்ந்தது.... யாரிடம் முறையிட என திணறி அவள் தந்தையே அழைத்தான்
“என்ன மாமா சௌக்கியமா இருக்கீங்களா, என்ன நடக்குது... உங்க கிட்டயானும் ஏதானும் சொன்னாளா, என்ன இதெல்லாம்?” என கேட்டான்.

“என்னமோ, விவரமா எதுவும் சொல்லலை, ஆனா என் மக அந்த வீட்டில நிறைய கொடுமைகளை அனுபவிச்சிருக்கான்னு மட்டும் புரிஞ்சுது.... பேசாம ஒதுங்கீடுங்களேன்” என்றார் அவரும் விட்டேர்த்தியாக.... அதிர்ந்தான்.... குடும்பமே இப்படி எண்ணுகிறதா, அப்படி தான் செய்த தவறுதான் என்ன என யோசித்தான் பைத்தியம் பிடித்தது.

நாலு நாள் இருப்பாளே ஏதேனும் செய்ய முயலுவோம் என அடுத்த நாள் ஆபிஸ் சென்றான்.
சில நாழிகையில் அவன் அன்னை அவசரமாக அழைத்தாள்.
“கீர்த்தி, சீக்கிரமா வா பா.... உன் பெண்டாட்டி ரொம்ப வயித்து வலியால துடிக்கிறா..... எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை” என்றார்.
“தோ வரேன் மா, நீங்க பதறாதீங்க” என ஓடி வந்தான்.

அசலே ஏதோ ப்ராப்ளம் என்றாளே என அவளை அள்ளிக்கொண்டு ஹாஸ்பிடலை அடைந்தான்.
அங்கே சேர்த்துவிட்டு டாக்டர்கள் வந்து சொல்ல வெளியே காத்திருந்தான்.
வெளியே வந்த லேடி டாக்டர் “வாங்க என் ரூமுக்கு” என்று அழைத்து போனார்.

“நீங்க எல்லாம் படிச்சவங்க தானே, குழந்தை வேண்டாம்னா அதுக்கேத்த பாதுகாப்போட நீங்க நடந்திருக்கணும், அதை விட்டுட்டு வயிற்றில் முளைத்ததை இப்படி அநியாயமா கொல்ல முயற்சி செய்திருக்கீங்க, அதுவும்நாள் தாண்டி போய் செய்து அரைகுறையா ஆகி இருக்கு...... அதன் மிச்சம் மீதி உள்ளே தங்கி இப்போ இன்பெக்ஷன் ஆகி இருக்கு, உங்களுக்கெல்லாம் எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னே எங்களுக்கு சில சமயம் விளங்கறதில்லை” என பொரிந்து தள்ளினார்.

கீர்த்தி ஒன்றும் புரியாமல் விழித்தான்... ‘குழந்தையா, அர்ச்சனாவிற்கா, தனக்கா, பிறக்க போவதாக... மாசமாக இருப்பதாக ஒரு நாளும் அவள் கூறவில்லையே?’ என திணறினான.

“டாக்டர், ஆனா அவ அப்படி எதுவும் இருந்தா மாதிரி தெரியலையே, நீங்க சரியா செக் பன்ணிணீங்களா, இது அதுதானா இல்லே வேற ஏதனும் இன்பெக்ஷனா இருக்க போகுது?” என அவரையே கெஞ்சினான்.
அவர் இவனை ஏளனமாக பார்த்தார்.
“என்ன சொல்ல வரீங்க, அவங்க மாசமா இருந்ததை உங்க கிட்ட சொல்லக் கூடவா இல்லை, நீங்க கணவன் மனைவிதானே, ரெண்டுபேரும் சேர்ந்துதானே வாழறீங்க?” என்றார்.
“ஆம்” என்றான் தலை குனிந்து.
“அப்போ இதைப்பத்தி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா?” என்றார் அவர் ஆச்சர்யத்துடன். “ஆம்” என்றான்
“ஓ, தென் ஐ ஆம் சாரி.....முதல்ல உங்க மனைவியை அவங்க புத்தியை நீங்க சரி பண்ணிக்கணும்.... என்னால அவங்க உடம்பைத்தான் குணபடுத்த முடியும்.... பெட் ரெஸ்ட்ல இருக்கணும் பதினஞ்சு நாளைக்கு.... நான் இப்போ இன்னொரு டி என் சி பண்ணீட்டேன்” என்றார்
அவன் வாய் மௌனித்து வெளியே வந்தான்..... இதெப்பிடி இப்படியும் இருப்பாளா ஒருத்தி.... என்னிடம் மறைத்துவிட்டாளே.... அதுதான் போதாதென என்னிடம் கூறாமல் கலைத்தும் விட்டாளே பாவி..... நான் குழந்தைக்கு எப்படி ஏங்குகிறேன் என இவளுக்கா தெரியாது....ஒவ்வொருமுறையும் இப்போது இல்லை அப்போது இல்லை என தள்ளி போட்டுக்கொண்டே வந்தாளே....இரண்டு வருடங்கள் ஆன பின்னும் வேண்டி நின்றானே. இப்படியா அக வேண்டும் தன் ஆசை என எண்ணி மருகினான்.

அர்ச்சனாவின் அக்கா அர்பிதாவிற்கு தெரியாமல் இருக்காது என அவள் எண்ணை சுழற்றினான.
அவள் பல ரிங்குகளுக்கு பிறகே எடுத்தாள். தயக்கத்துடனேயே
“ஹலோ கீர்த்தி, சொல்லுங்க” என்றாள்.
“எப்படி இருக்கே அர்பிதா?”என்றான்.
“நான் நல்லா இருக்கேன் கீர்த்தி, நீங்க?” என்றாள். இப்போதும் தட்டு தடுமாறியே வந்தன வார்த்தைகள். அதிலிருந்தே ஏதோ சரி இல்லை என உணர்ந்தான்.

“அர்ச்சனா எப்படி இருக்கா?” என்றாள்.
“ஹ்ம்ம் நல்லா இல்லை” என்றான்.
“ஏன் என்ன?” என பதறினாள்.
“அவளுக்கு என்னாச்சுன்னு நீதான் எனக்கு சொல்லணும் அர்பிதா” என்றான்.
“என்னாச்சு கீர்த்தி?” ப்ளீஸ் சொல்லுங்களேன்” என்றாள்.
“அவ இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கா அர்பிதா....அவளுக்கு நடந்த டி என் சி நல்லபடி நடக்கலையாம்... அதன் மிச்சம் மீதி இப்போ இன்பெக்ஷனா மாறி இருக்கு னு மறுபடி கொண்டு சேர்த்திருக்கேன்.... இப்போ மீண்டும் பண்ணி இருக்காங்க.”

“உனக்கு தெரியாமல் இருக்காது, இப்போவானும் என்ன நடந்துது னு உண்மைய சொல்றியா எனக்கு..... அதை தெரிஞ்சுக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்குனு உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்” என்றான் வருத்தம் கோபம் நிறைந்த வார்த்தைகளில்.

“அது வந்து கீர்த்தி, நான் அர்சுகிட்ட எவ்வளவோ சொன்னேன்.... அவ எம் பேச்சை கேக்கவே இல்லை.... வேறே யார்கிட்டயோ போய் பண்ணிப்பேன்னு நின்னா..... நான் பண்ண மாட்டேன், உன் கிட்ட பேசுவேன்னு சொன்னேன்.... அதுக்கு என்னோட அவ பேசறதை நிறுத்தீட்டா.... உன்கிட்ட சொன்னா அவ மேல ஆணை னு வேற சொல்லீட்டா.... தானே வேறே டாக்டரை வேற போய் பார்த்தா..... அதுனாலதான் வேற வழி இல்லாம நானே எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி டாக்டர்கிட்ட அழைச்சுகிட்டு போனேன்..... அவங்க நல்லவங்கதான், நல்லபடி தான் செய்வாங்க..... இது ஏதோ எங்கியோ தவறு நடந்து போச்சு போல.... என்னை மன்னிச்சுடுங்க கீர்த்தி.....

அவள் இங்கே வந்தபோதுதான் எங்களுக்கே சொன்னா அவளுக்கு நாள் தள்ளி போயிருக்குனு..... அப்பா அம்மா நான் எல்லாருமே ரொம்ப சந்தோஷபட்டோம்... ஆனா அவளுக்கு இதில் இஷ்டமில்லை.... அது மட்டுமில்லை, உங்களை பழிவாங்க இதை அவ ஒரு நல்ல ஆயுதமா யூஸ் பண்ணிகிட்டா..... அதான் ஏன்னு எனக்கு இன்னமும் புரியலை....நானா எவ்வளவோ கேட்டும் நல்ல வார்த்தை சொல்லியும் அவ கேட்கலை..... எனக்கு அதில் பலத்த வருத்தம் தான் கீர்த்தி” என்றாள்.

“ஹ்ம்ம் வருத்தம்னு ஒரே வார்த்தையில நீங்க எல்லாம் இதை முடிச்சிட்டீங்க அர்பிதா, ஆனா, எனக்கு இது என்னோட வாரிசு, எனக்கு குழந்தை மேல இருக்கிற விருப்பம் அவளுக்கு தெரியும்..... தெரிஞ்சும் இப்படி என்னையே கேட்காம என் வாரிசை அழிச்சுட்டா..... இதை நான் பொறுத்து போகவே முடியாது அர்பிதா..... என்னால அவளை மன்னிக்கவே முடியாது... என்னோட அனுமதி கை ஒப்பம் இல்லாம இதை எப்படி கலைச்சீங்க, அந்த டாக்டர் எப்படி ஒப்பினாங்க” என்றான் வெறுப்புடன்.

“கீர்த்தி அவசரப்படாதீங்க, அவளுக்கு இன்னும் சிறுபிள்ளைத்தனம் விடலை” என்றாள்.
“இது சிறுபிள்ளைதனமா அர்பிதா?” என்றான் கோபமாக.
“இல்லவே இல்லை, இது அப்படி இல்லை, தெரிஞ்சே, புரிஞ்சே, ப்ளான் பண்ணி நாசபடுத்தீட்டா....
எங்க கம்பனில லண்டனுக்கு பத்து வருடங்கள் போக சொன்னாங்க, நான் போக மறுத்துட்டேன்.... போயாகணும்னு இவ மல்லுக்கு நின்னா..... நான் முடியதுன்னேன்.... இங்கேயே உழல எனக்கு இஷ்டமில்லைன்னு அடம் பிடிச்சா..... நான் போக முடியாது நான் இங்க யூனிட் ஆரம்பிக்க ப்ளான் பண்ணி வேலைகளை ஆரம்பிச்சாச்சுனு சொன்னேன்..... அதுக்காக என்னை பழி வாங்கீட்டா அர்பிதா..... என் மகனை கொன்னுட்டா..... ஒரு கொலைகாரியோட இனி என்னால வாழ முடியாது அர்பிதா” என்றான்.

“ஐயோ என்ன இப்படி எல்லாம் சொல்றீங்க கீர்த்தி.... பொறுமையா இருங்க, பிளீஸ் நான் பேசறேன் அவளோட, உங்க அருமை அவளுக்கு தெரியலை” என மன்றாடினாள்.
“இல்லை நானும் இத்தனை நாளா பொறுமையோட தான் அவ பண்ணின அத்தனை அட்டகாசங்களையும் தாங்கினேன்.... அவளிடம் நல்லவிதமாவே நடந்துகிட்டேன்... அவளை நல்லபடி பார்த்துகிட்டேன்..... ஆனா இது அதற்கெல்லாம் உச்சகட்டம்.... முடிஞ்சு போச்சு, எல்லாமே முடிஞ்சு போச்சு..... யுடிரஸ் வீக்காகி இருக்கு, இன்னும் சில வருடங்கள் அவள் கருத்தரிக்காமல் இருப்பது நல்லதுன்னு இப்போதான் டாக்டர் சொன்னாங்க...... இன்னும் என்ன வேணும்..... தன்னையும் அழிச்சுகிட்டு என் பிள்ளையையும் அழிச்சு என்னையும் அழிச்சுட்டா உன் தங்கை....

சீ இவளும் ஒரு பெண்ணா... செய்யறதெல்லாம் அவ செய்துட்டு என்ன தைர்யம் இருந்தா எனக்கே விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பா, இதுக்கு நீங்களும் உடந்தை வேற... உங்கப்பாவே அதைதான் என்கிட்டே சொல்றாரு.... செய்த பாவத்தை என்னிடம் இருந்து மறைக்கத்தானே இந்த அவசர கதி விவாகரத்து ஏற்பாடு?” என ஆத்திரப்பட்டான்.

“விவாகரத்தா.... நோட்டீசா, என்ன சொல்றீங்க கீர்த்தி, இதெல்லாம் எனக்கொண்ணும் தெரியாதே, அவ உங்களுக்கு அனுப்பிச்சாளா.... எனக்கு ஒண்ணுமே புரியலையே கீர்த்தி?” என்றாள் அர்பிதா.
“என்கிட்டே ஏன் கேட்கிற, உன் தங்கை கிட்டே போய் கேளு..... சீ, நல்ல குடும்பம்..... அவ என்ன எனக்கு விவாகரத்து குடுக்கறது, நான் குடுக்கறேன் அவளுக்கு உடனடியா....இனியும் அவளோட நான் வாழ்வேன்னு நீங்க யாருமே கனவும் காண வேண்டாம்” என கர்ஜித்தான்.

நேரே வீட்டிற்கு சென்றான். அன்னை “என்னப்பா நடந்துச்சு.... நான் கூட வரேன்னேன் என்னையும் கூட்டி போகலை..... எப்படி இருக்கா அர்ச்சனா, நீ ஏன் அவளை அங்கே தனியா விட்டுட்டு இங்கே வந்தே, டாக்டர் என்ன சொன்னாங்க.... ஏன் அப்படி வயித்து வலின்னு துடிச்சா?” என பல கேள்விகள் கேட்டார்.

“அம்மா எல்லாம் முடிஞ்சு போச்சு.... இனி அவ உன் மருமக இல்லை.... அவ்ளோதான் விட்டுடு மறந்துடு” என்றான.
“ஐயோ என்னடா, என்னென்னமோ சொல்றே.... வாய கழுவு, என்ன பேச்சு இது” என அலறினார்.
“அம்மா சத்தம் போடாதே.... அப்பாக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம்.... இப்போதைக்கு உன்னோட வெச்சுக்கோ” என நாலு வரிகளில் விவரித்தான்.
“ஐயோ” என வாய் பொத்தி அலறினார் கற்பகம்.
“எப்படீடா அவளுக்கு இப்படி செய்ய மனசு வந்தது..... சம்பந்தி கூட ஒரு வார்த்தை விஷயம் இப்படின்னு நமக்கு கூப்பிட்டு சொல்லலையேடா..... இதென்னடா குடும்பமே இப்படி இருக்கு” என்று அங்கலாய்த்தார்.
“அவ எல்லாரையும் ஆணையிட்டு அடக்கி இருக்கா..... அர்பிதா கிட்ட நான் எல்லாத்தையும் கேட்டேன்.... போதும் மா, நான் ஓய்ஞ்சு போய்டேன்.....இவளோட இனி என்னால முடியாதுமா..... இதான் மா உச்சம்... தாங்காது மா.... போதும்” என கை எடுத்து கும்பிட்டான்.

இரண்டாம் நாள் மாலை டிஸ்சார்ஜ் என்றனரே என வேண்டா வெறுப்பாக அங்கே சென்றான்.... அவளிடம் ஒரு வார்த்தையும் பேசாது, அவள் முகம் காணாது ஹாஸ்பிடல் பில் செட்டில் செய்தபின் அவளை கை தாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றினான்.... அவனுக்கு தன் நிலையை டாக்டர் விவரமாக சொல்லி இருப்பார்.... அவன் கத்துவான், திட்டுவான் என எதிர்பார்த்து அர்ச்சனா பயந்து தான் இருந்தாள்..... அவனின் இந்த ஆழ் கடல் அமைதி அவளை திணற வைத்தது.

“அது வந்து, சாரி” என ஏதோ சொல்ல வந்தாள். ஒரு கையை தூக்கி காமித்து அவளை பேசாதே என அடக்கினான்..... நேரே விமான நிலையத்திற்கு சென்றான்.... ஏற்கனவே அவளது டிக்கட் எடுத்திருந்தான்..... அவளை வீல்சேர் கொண்டு வர செய்து அதில் ஏற்றி விமானத்திற்கு அனுப்பி வைத்தான்.... அவனை ஏன் இப்படி செய்கிறான் என கண்டவளை முகமே காணாது மடங்கி நடந்தான்..... அவளுக்கு பயம், கோபம் ஆத்திரம், அழுகை அவமானம் எல்லாம் தோண கண்ணீர் வழிந்தோடியது.

காருக்கு வந்து அர்பிதாவையும் அவனது மாமனாரையும் அழைத்தான்....
“விமானத்தில ஏத்தி விட்டுருக்கேன்.... ஒரு மணியில அங்க வந்து சேரும்..... அவ உடல் நிலை சரி இல்லை.... பார்த்து வீட்டுக்கு அழைச்சுட்டு போய் பார்த்துக்குங்க” என்றான்.
மேற்கொண்டு மாமாவை பேச விடாமல் லைனை கட் செய்தான்... அர்பிதாவிடம் டாக்டர் அவனிடம் சொன்ன அறிவுரைகளை ஒப்பித்தான்.
“அர்பிதா, நீயும் ஒரு டாக்டர்.... அங்கே பக்கத்திலேயே தான் நீயும் இருக்கே, அவளை எப்படி பார்த்துக்கணும்னு நான் உனக்கு சொல்ல தேவை இல்லை, எனக்கு சொல்ல அவசியமும் இல்லை.... இனி நீங்களாச்சு உங்க வீட்டு ராஜகுமாரி ஆச்சு..... எனக்கும் அவளுக்கும் எந்த சொந்தமும் பந்தமும் இல்லை” என்றான்.



Wednesday 27 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 6


“இந்த பூஜைக்கெல்லாம் பெண்கள்தான் எல்லாம் செய்யணும், இதிலெல்லாம் அவனுக்கு பெரிய பழக்கமும் இல்லை... நீயே செய்துடு மனு மா, போ என்ன தயக்கம்” என ஊக்கினார்.
சரி என பிரசாதம் வைத்து ஆரத்தியும் எடுத்தாள். ஆரத்திக்கென ஒரு சிறிய பாட்டும் பாடி ஆரத்தி காட்டி முடித்து அனைவருக்கும் அதை கொடுத்தாள்.

கண்ணில் ஒற்றிகொண்டவன் அவளை ஓரக்கண்ணால் கண்டான்.... ஆழ்ந்த நீலத்தில் லேசான கனகாம்பர வண்ண பார்டருடன் காட்டனில் சரிகை இட்ட சேலை நேர்த்தியாக கட்டி, நீண்ட பின்னலின் மேல் ரெண்டு முழம் மல்லிகையை சூடி, கைகளில் கண்ணாடி வளையல்கள் காலில் கொலுசும் சப்திக்க அவள் பாங்காக இருந்தாள்.... கண்ணை நிறைத்தாள்.... அவனையும் அறியாது அவன் மனம் அவள் பால் செல்லத் துவங்கியது....

அவளது நடை உடை பாவனை, அடக்கம், பணிவு, துணிவு, அன்னையை கவனித்துக்கொள்ளும் பாங்கு, அவளது அறிவு என எல்லாமும் அவன் இந்த சில மாதங்களாக கவனித்துதான் வருகிறான்..... அவன் சந்தித்த மாய பிசாசுகளில் இருந்து இவள் முற்றிலும் மாறுபட்டு நின்றாள் என அவன் மனம் அவனுக்கு எடுத்துரைத்தது..... ஆனால் அதை வெளிகாமிக்காது மனதை அடக்கினான்.
தன்னை அடக்க முடியாமல் அதை எரிச்சலாக அவளிடமே காண்பித்தான்.

பூஜை முடிந்து தன் ஆபிஸ் அறைக்கு சென்றமர்ந்தான்..... கண் மூடி சாய அவன் மனக்கண் முன் மனு நடமாடினாள்..... மனதை கட்டுபடுத்த முடியாமல் திணறினான்..... அவளை அள்ளி அணைக்க அவனது வாலிப வயது அவனை உந்தியது.... அவளை போன்ற ஒருத்தியுடன் கொஞ்சி குலாவி குடும்பம் நடத்திட மனம் ஏங்கியது.... உடல் சூடானது..... தன்னையும் மீறி அவளிடம் அப்படி தன் ஆசையை எப்படியேனும் வெளியிட்டு விடுவோமோ என குழம்பினான்.... அதே நேரம் கற்பகத்தின் உந்துதலின் பேரில் அவள் ஒரு ட்ரேயில் பிரசாதங்களை சிறு கிண்ணங்களில் இட்டு எடுத்துக்கொண்டு கதவை தட்டிவிட்டே தான் உள்ளே நுழைந்தாள். அவனும் தான் மன மயக்கத்தில் ம்ம் வா என கூறி இருந்தான்.

உள்ளே வந்தவள் “பிரசாதம், அம்மா தர சொன்னாங்க” என வைத்தாள் அவன் டேபிள் மீது. அந்த சப்தத்தில் கண் விழித்தவன் அவ்வளவு அருகாமையில் அவளை கண்டு தன்னையும் மீறி கண்ணில் ஆவலுடன் அவளை தீண்டிட மனம் சென்றது.... கைகளை நீட்ட போனவன் தன்னை மீட்டான்.
“என்ன, இங்கே எதுக்கு இப்போ வந்தே, என் அனுமதி இல்லாம உன்னை யாரு உள்ள வர சொன்னா, இப்படி எல்லாம் பட்டும் பூவும் பொட்டுமா உடுத்தி என்னை மயக்க பார்க்கறியா, ச்சே வெளியே போ” என்றான்.
அவனுக்கே தானா அவளை அப்படி பேசினோம், என்ன இது, நான் ஏன் இவ்வளவு கீழ்தரமாகி போனேன் என வெட்கி தலை குனியும் வண்ணம் தன்னையும் அறியாமல் வாய்க்கு வந்ததை பேசி முடித்திருந்தான்.... அவன் சொன்னதை கேட்டு விதிர்விதிர்த்து போய் நிமிர்ந்து அவனை பார்த்தாள். ‘சீ நீ இவ்வளவுதானா?’ என்பது போல பார்த்தவள்.

ஒரு நொடிதான் தன்னை மீட்டுகொண்டாள். தன்னை அவமானமாக அசிங்கமாக பேசினவனை ஏறிட்டாள்.
“ஆமா நாந்தான் தெரியாம கேக்கறேன், நீங்க என்ன மகமகாராஜா பெரிய மன்மத ராஜா உங்க மேல எல்லாரும் மயங்கி கிடப்பதா ஒரு பிரமையா, என்னை பார்த்து இப்படி எல்லாம் பேச உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தா..... நான் இங்கே வேலை செய்பவள்தான், ஆனாலும் எனக்கும் தன்மானம்னு ஒண்ணு இருக்கு, உங்களை மயக்கி எனக்கு ஒண்ணும் ஆக வேணாம் மிஸ்டர் கீர்த்திவாசன்..... உங்கள் மேல் எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இந்நிக்கில்லை என்னிக்குமே ஏற்படாது..... உங்க மேலேனே இல்லை, எந்த ஆணின் மீதும் ஏற்படாது.... நான் பட்டவரை போதும்.

உங்க அம்மாக்காக நீங்க எப்படி நடந்துகிட்டாலும் என்ன பேசினாலும் நானும் பொறுமையா போறேன்.... ஆனா, எப்போதுமே இதே போன்ற பொறுமையுடன் நான் இருப்பேன்னு சொல்லீட முடியாது.... பார்த்து பேசுங்க..... இனி ஒரு முறை இதை போன்ற அவமானங்களை நான் தாங்கிகிட்டு சும்மா இருக்க மாட்டேன்” என்றாள் நேராக அவன் கண்ணை பார்த்து.

“என்ன தைர்யம்?” என்றான்.
“இதுக்கு கூட தைர்யம் இல்லைனா உங்கள மாதிரி தற்பெருமை ஆண்களிடம் பிழைக்க முடியாது” என்றாள் அதற்கும்.
“ஹே, யார் கிட்ட? ஜாக்ரத” என்றான் விரல் நீட்டி
“அதையேதான் நான் உங்களிடமும் சொல்றேன் மிஸ்டர் கீர்த்தி, ஜாக்ரதையா வரட்டும் வார்த்தைகள்” என்றாள். பின்னோடு அவனை தூசி என மதித்து சரசரவென வெளியே வந்துவிட்டாள். முகம் சிவந்து விட்டிருந்தது கோபத்தினால் ஆத்திரத்தினால்.

‘ச்சே இப்படியானும் இங்கே இருக்கணுமா, பேசாம ஆசிரமத்திற்கே போயிடலாம்’ என எண்ணினாள்.
இப்போது இந்த நேரத்தில் உடனே எடுக்கும் எந்த முடிவும் அவசரகோலமாக தான் இருக்கும்.... ஆற அமர யோசித்து ஒரு முடிவுக்கு வருவோம்.... நல்லதொரு பூஜை நாளில் அவன் என்னமோ சொன்னான்னு நான் ஏன் மனம் கலங்கணும்.. நான் இங்கே கற்பகம் ஆண்ட்டிக்காக தான் இருக்கேன், இவனுக்காக அல்ல..... அவன் என்ன பேசினால் என்ன, எப்படி நடந்தால் என்ன, என் மீது ஒட்டிக்கொள்ளவா போகிறது’ என பிரசாதத்தை வாயில் போட்டுகொண்டு வெளியே நடந்தாள்
மாலை தென்றல் குளுகுளுவென வீசுகிறதே, அங்கே சென்றால் மனம் லேசாகுமோ என எண்ணி வெளியே தோட்டத்தில் நடக்கத் துவங்கினாள்.
மல்லிகை ரோஜா கனகாம்பரம் என பூக்கள் நிறைந்த பகுதியில் அவற்றை வருடியவாறே மெல்ல நடை பயின்றாள்.

தன் கோபத்தை அடக்க முடியாமல் ‘என்னை போய் என்னவெல்லாம் பேசிவிட்டாள் இவளை உடனே வேலையை விட்டு தூக்கியே ஆக வேண்டும்’ என முடிவெடுத்தவன் ஒரு நொடி கற்பகத்தை எண்ணி தயங்கினான்.
பாவம் அம்மா தன் தனிமை உணர்விலேர்ந்து இப்போதான் வெளியே வந்திருக்காங்க... சந்தோஷமா காணப்படுறாங்க, அவங்களுக்காகதானே நான் இவ்வளவு பாடு படறேன்..... என்னால என்னிக்குமே அவங்களுக்கு எந்த சந்தோஷமும் இல்லை, இதிலேயானும் அவங்க சந்தோஷத்த கெடுக்காம இருக்கலாம், அவ என்னவானும் பேசினா பேசீட்டு போறா’ என மேலே சென்றான்.

தன் அறைக்குள் சென்று அங்கே இருந்த பால்கனியில் நாற்காலியில் அமர்ந்தான்.... அங்கிருந்து பார்க்க மனு தோட்டத்தில் உலாவுவதை கண்டான்..... அவள் முகமும் தன்னை போலவே தெளியாமல் இருப்பதை பார்த்தான்....‘ஆனாலும் இன்னிக்கி நான் பேசினது கொஞ்சம் அதிகம்தான், அதான் அவளும் பதிலுக்கு பதில் பேசீட்டாள்’ என எண்ணினான் சிரிப்பு வந்தது.
‘ஹப்பா என்னமா கோபம் வருது இவுளுக்கு’ என எண்ணிகொண்டான்.
‘எனக்கு இவளை போன்ற ஒருத்தி ஏன் அமையவில்லை, எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்ற சுய கழிவிரக்கத்தில் மூழ்கி போனான்.

மனம் பின்னோக்கி ஓடியது.
அப்போது அவன் கல்லூரி படிப்பை முடித்து விட்டிருந்தான்…. லக்னோவில் ஐ ஐ எம் இல் எம் பி ஏ முடித்த நேரம், காம்பஸ் நேர்முகத்திலேயே அவனுக்கு பல பன்னாட்டு கம்பனிகளில் இருந்தும் அழைப்பு வந்தது.... அதில் நல்லதொரு கம்பனியை தேர்ந்தெடுத்து வேலைக்கும் சேர்ந்தவனுக்கு வாழ்க்கை நீரோடையாக போய் கொண்டிருந்தது.... அப்பா அம்மா தங்கை என குடும்பம் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் இருந்த நேரம்.

எடுத்துக்கொண்ட வேலையில் மனமொன்றி உழைத்தாலும், கீர்த்தி, ஒரு பக்கம் தனது நெடு நாளைய கனவான ஒரு சிறிய இண்டஸ்ட்ரி போட வேண்டும் என்ற ஆசையை நீரூற்றி வளர்த்து வந்தான்.... அதற்குண்டான பணமும் சேர்த்து வந்தான், அதற்கு வேண்டிய ஆவணங்களையும் சேகரித்து வந்தான். இதற்கெனவே அவன் கெமிகல் இஞ்சினியரிங் எடுத்திருந்தான். உடலுக்கும் அழகுக்கும் உதவும் லோஷன் க்ரீம் வகைகளில் சேர்க்கப்படும் வாசனை திரவியங்கள், எண்ணெய்கள் தயாரிக்க அவனுக்கு பெரும் ஆசை இருந்தது. எஸ்சென்ஷியல் ஆயில்ஸ் எனப்படும் பிரிவு அவனை பெரிதும் ஈர்த்திருந்தது.

புயலென அவன் வாழ்வில் நுழைந்தாள் அர்ச்சனா..... அவன் வேலையில் நல்லபடி செட்டில் ஆகிவிட்டான் என கண்டு அவனுக்காக அவனது பெற்றோர் பார்த்த பெண்தான் அர்ச்சனா..... தங்கையின் திருமணத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன ஆதலால் இவனுக்கே முதலில் முடித்துவிடுவோம் என தீர்மானித்திருந்தனர் பெற்றோர்.

பெண் பார்க்கும் படலம் நடந்தது..... ஒயிலாக இக்காலத்திற்கு ஏற்றபடி நடை உடை பாவனையுடன் வந்து வணங்கினாள் அர்ச்சனா.... அழகோவியமாக இருந்தாள்..... இவனுக்கு அவளுடன் தனியே பேச ஆசை இருந்தது.... அவளைப் பற்றி கொஞ்சமேனும் திருமணத்திற்கு முன் தெரிந்து கொள்ள ஆவல்..... அதை தங்கை மூலம் தூதுவிட்டு பெற்றோரிடம் நடத்திக்கொண்டான்.
பெண் பார்க்கும் படலம் முடிந்த கையோடு அவளது அறையில் அவளை பத்து நிமிடங்கள் சந்தித்து பேசினான்.

“என்ன படிச்சிருக்கீங்க?” என்றான்.
“பி ஏ” என்றாள்.
“நீங்க சிகரெட்டு குடின்னு ஏதானும் பழக்கம் வெச்சிருக்கீங்களா?” என அவள் கேட்டாள். அவன் சிரித்தபடி இல்லை என்றான்.
“ஹப்பா நான் பொழச்சேன், இல்லேனா நான் உங்கள வேணாம்னு சொல்லி இருப்பேன், எனக்கு இந்த பழக்கம் உள்ளவங்கள எல்லாம் கட்டோடு பிடிக்காது” என்றாள்.
“சரி அடக்கமான பெண்” என எண்ணிக்கொண்டான்.
பிடித்தது பிடிக்காதது என பேசி தெரிந்து கொண்டனர்.....தன் மனதில் உள்ள பல நாள் ஆசையை அவளிடத்தில் பகிர்ந்து கொண்டான்.

“எனக்குன்னு சொந்தமா ஒரு இண்டஸ்ட்ரி அமைச்சு அதை நல்லா நடத்தி பெருமை அடையணும்னு.... இது என் நெடு நாளைய ஆசை” என்றான்.
“அப்போ நீங்க அதுக்கு முதலாளியா, காரு பங்களா எல்லாமும் வருமா?” என்றாள் கண்ணில் ஆவலுடன். அவளை ஆச்சர்யத்துடன் பார்த்து, “ம்ம் வரும் வரலாம், அதுக்கு முதல்ல நான் உழைக்கணும், யூனிட் செட் பண்ணணும், அது நல்லா பிடிச்சு வரணும் வளரணும்.....
ஆனா அர்ச்சனா, இப்போதும் நீ சொன்ன கார் பங்களா எல்லாமும் இருக்குதானே?” என்றான்.
“ஆமா, ஆனா, அது உங்கப்பா சம்பாதிச்சது தானே” என்றாள்.
“உண்மை” என்றான்.
பெரும்பான்மையானவற்றில் நிறைய வேறுபாடு இருந்தது.... ரசிப்பில் ருசியில்...... ஆனால் இதெல்லாம் சாதாரண விஷயங்கள் தானே யாராலும் மாற்றி கொள்ள முடியும் என்றேண்ணினான்.

அர்ச்சனாவை பிடித்திருக்கிறது என்றான்.... முகூர்த்த நாள் குறிக்கப்பட்டது.
புடவை துணிமணி எடுக்க என ஒன்றாக சென்றது இரு குடும்பமும்..... அதிலும் கூட இவனுக்கு பிடித்த நிறம் என அவன் கை காட்டியது எதையும் அவள் தொடவில்லை, “ஐய்யே இதெல்லாம் பழங்கால கலர்ஸ்..... இதான் லேட்டஸ்ட்” என அவளுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்தாள்..... சரி அவள்தானே கட்டிக்க போகிறவள், இருக்கட்டும் அவள் இஷ்டபடியே என விட்டுவிட்டான்.

திருமண நாளும் வந்தது.... அவன் தனக்கென காலூன்ற முயன்று கொண்டிருந்த நேரம்..... அதனால் அவளுடன் போனில் கூட அதிகம் பேசியது இல்லை..... எந்நேரமும் வேலை வேலை என ஓடவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.... அதில் அவளுக்கு பெரும் மன குறை என பின்னால் தெரிய வந்தது.

திருமணம் நல்லபடி நடந்தது..... நல்ல வசதி படைத்தவர்கள் தான் என்பதால் ஒரு குறையும் இன்றி நன்றாகவே திருமணத்தை நடத்தினர் அவள் பெற்றோர்.
அவளுக்கு மேலே ஒரு தமக்கை மணமாகி இருந்தாள். அர்பிதா, அவள் ஒரு மகப்பேறு மருத்துவர்...... இவர்கள் இருவர் மட்டுமே அக்ககுடும்பத்தில் மக்கள்.

மாலை வரவேற்பு விடை பெறல், புகுந்த வீடு செல்வது என அனைத்தும் கிரமப்படி நடந்தேறின.
அன்றைய இரவு முதல் இரவு என இவனது வீட்டிலே தான் ஏற்பாடு செய்திருந்தனர்..... அவளை அலங்கரித்து உள்ளே கொண்டுவிட்டனர்..... அபிரிமிதமான வெட்கம் எதுவுமில்லை சாதாரணமாக தான் உள்ளே வந்தாள்..... கதவை தானே தாளிட்டாள்.... அவனருகே வந்து பாலை நீட்டினாள்.
“உக்காரு” என அமர்த்தினான். பாலை குடித்து மிச்சம் குடுத்தான்.
“ஐய்யே, உவ்வே.... எனக்கு முதலாவது பாலே பிடிக்காது, உமட்டும்..... இதில உங்க எச்சில் வேற, எனக்கு வேண்டாமே ப்ளீஸ்” என்றாள். சரி என விட்டுவிட்டான்.

கல்யாண நேரத்து கதைகள் பேசி சிரித்தனர்..... ரதிமன்மதன் தாம் வேலையை ஆரம்பிக்க சங்கமமும் இனிதே நடந்தது.... காலையில் கண் விழித்தெழுந்தனர்..... எல்லா வீடும் போல சீண்டல்கள் தொடல்களும் சிணுங்கல்களும் என பொழுது ஓடியது.... அவளது வீட்டிற்கு மறுவீடு சென்றனர்.... அங்கே சென்றதுமே அவள் உண்மை குணம் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.... அங்கே, தான் தன் வீடு.... தான் ஒரு ராஜகுமாரி என்பது போலவே நடந்து கொண்டாள்.... அவளை அவள் வீட்டிலும் கூட அனைவரும் அப்படியே நடத்தினர்.... ஏகபோக செல்லமாக பேசி கொண்டாடினர். அவள் துரும்பையும் அசைக்கவில்லை, அசைக்கவிடவில்லை.

“நீ என்ன இன்னும் குழந்தையா, உன்னை இன்னும் எல்லாரும் கொஞ்சணும்னு எதிர் பார்க்கிற?” என்றான் சிரித்தபடி.
“இதில என்ன சிரிப்பு, நான் குழந்தைதான், இந்த வீட்டு ராஜகுமாரி நாந்தான்” என்றாள். “உண்மைதான், அதான் பார்த்தாலே தெரியுதே” என்றான்.
“அது மட்டுமில்லை, இனிமே நீங்களும் நம்ம வீட்டிலேயும் கூட என்னை அப்படித்தான் நடத்தணும்” என்றாள்.

“அதெப்பிடி முடியும், அது நீ புகுந்த வீடு. அங்கே உன் மாமியார் மாமனார் நானு என் தங்கை எல்லாரும் இருக்கோம்.... என் தங்கைய கூட அம்மா செல்லமா வளர்த்தாங்கதான், ஆனா இப்படி ஒரே அடியா தலைமேல எல்லாம் தூக்கி வெச்சு கெடுக்கலை” என்றான். “உனக்கு கிடைக்க வேண்டிய அன்பு பாசம் பெருமை கவனிப்பு எல்லாமும் இருக்கும், ஆனா தனி கவனிப்புனு எல்லாம் நீ எதிர் பார்க்க முடியாது, கூடாது இல்லையா..... உனக்கு இப்போ திருமணம் ஆகிட்டதே” என்றான்.

“என்ன சொல்ல வரீங்க, நான் உங்களுக்கு ஸ்பெஷல் இல்லையா?” என்றாள் முரண்பட்டு. “நீ எனக்கு என்றுமே ஸ்பெஷல்தான் டா..... ஆனா அதுக்குன்னு உன்னை எல்லார் முன்னாடியும் நான் கொஞ்சிகிட்டு திரிய முடியாது இல்லையா, நம்மளோட தனிமை நேரங்கள்ல நான் கொஞ்சுவேன் தான் உன்னை கொண்டாடுவேந்தான்” என்றான்.

“போதும், நீங்க ஒண்ணும் சப்பை கட்டு கட்ட வேண்டாம்.... உங்களுக்கு அப்படீனா உங்க தங்கை தான் உசத்தி, நாந்தான் பார்த்தேனே, கல்யாண நேரத்திலேயே எல்லாம் அவ இஷ்ட்படி தானே நடந்தது..... அவ புடவை எனக்கு உங்க வீட்டில எடுத்த புடவையை விட எடுப்பா இருந்துது” என துவங்கினாள்.

“ஹே என்ன பேசறே நீ, அவ குழந்தை... அவளபோய் உனக்கு போட்டியா நினைக்கலாமா?” என்றான்.
“அவ குழந்தையா பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சுட்டா இன்னும் என்ன குழந்தை?” என்றாள்.
“அப்போ நீ மட்டும்?” என்றான்.
“நான் எங்க வீட்டின் ராஜகுமாரி” என்றாள் இறுமாப்புடன்.
“ஆம் அதே போலதானே அவங்கவங்க பெண்கள் அவங்கவங்க வீட்டில ராஜகுமாரிதான்” என்றான் சிரிப்புடன்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது..... நீங்க நான் சொல்றபடிதான் கேக்கணும்.... எல்லாம் செய்யணும்.... எனக்குதான் முதலுரிமை இருக்கணும்” என்றாள்.
“நடக்க நடக்க பார்த்துக்கலாம் அச்சு” என அப்போதைக்கு சமாதானபடுத்தினான்.

வீட்டிற்கு திரும்ப, நாளொரு பொழுதும் ஏதோ சண்டை ரகளை என ஆரம்பித்தாள்.... தினமும் வீடு போர்களமானது.... அம்மாவுடன் எதற்கெடுத்தாலும் சண்டை....

“எங்க வீட்டில வெண்டைகாயை இப்படி பெரிசா நறுக்கி மசாலா பொடி தூவி தான் வறுப்போம், அப்போதான் ருசியா நல்லா வரும் அப்படிதான் செய்யணும்” என இவள்.
“நம்ம வீட்டில கீர்த்திக்கு, அவ அப்பாவுக்கு நம்ம காஞ்சனா எல்லாருக்கும் பொடிபொடியா நறுக்கி வதக்கினா தான் மா பிடிக்கும்” என புரிய வைத்தார்.
“அதெல்லாம் முடியாது, அப்படி பண்ணினா எனக்கு பிடிக்காது, நான் சொல்றபடிதான் செய்யணும்.... இது என் வீடு, என் புருஷன் வீடு” என துவங்கினாள். அதிர்ந்து போனார் கற்பகம்.
சரி ஏதோ சிறுபிள்ளைத்தனம் என பேசாமல் அவள் இஷ்டத்திற்கே விட்டு விட்டார்.... இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவளுடன் காஞ்சனாவுடனும் போட்டி, வாய் வார்த்தை தடித்து பூகம்பம் வெடித்தது.... அவர்களுடன் வாழ அசல் பிடிக்காமல் போனது அர்ச்சனாவிற்கு.

“என்ன குடித்தனமோ என்னமோ, என் இஷ்ட்படி ஒண்ணுமே செய்ய முடியல, எனக்கு பிடிச்சத சமைக்க முடியல, என் இஷ்டப்படி டிரஸ் பண்ண முடியல, எனக்கு பிடிச்ச டிவி கூட பார்க்க முடியல” என தினமும் புலம்பல்.... நிம்மதி கேட்டது கீர்த்திக்கு.... அவளுக்கென தங்கள் படுக்கை அறையில் ஒரு டிவி வாங்கி போட்டான்..... அப்போதும் திருப்தியின்மை தான்.

“கீர்த்தி, நாம தனியா போய்டா என்ன?” என்று குண்டை தூக்கி போட்டாள் ஒரு நாள். “முடியாது” என்றான் ஒரே வார்த்தையாக.
அதற்காக மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு நாலு நாள் அவனுடன் பேசாமல் உணவு பரிமாராமல் இருந்தாள். இரவும் பகலும் அவனை வருத்தெடுத்தாள்.

இதன் நடுவே அவனுடைய பன்னாட்டு நிறுவனம் அவனது திறமைகளை கண்டு மேலே மேலே அவனை வளர்த்துவிட்டது.... அவனது திறமையை கண்டு ஒரே அடியாக பத்து பதினைந்து வருடங்களுக்கு வேலை உயர்வுடன் என லண்டனுக்கு செல்ல பணித்தனர்.... அவன் அதிர்ந்தான்.... தங்கை திருமணத்திற்கு நிற்கிறாள்..... அவனது லட்சியமே தான் தன் சொந்த காலில் நிற்க வேண்டும், தனக்கென ஒரு சின்ன யூனிட் போட வேண்டும் என்பதுதான்...  அதை நல்லபடி நடத்தி பேரெடுக்க வேண்டும் என்ற பெரும் ஆவலுடனேயே அவன் படித்து முடித்தான்.... பல வருடங்கள் பெற்றோரை ஒதுக்கி அவதிப்பட வைத்துவிட்டு அப்படி போக அவனுக்கு துளியும் விருப்பமில்லை..... இந்த விஷயம் அர்ச்சனாவுக்கு தெரிய வர பேயாட்டம் ஆடினாள்.

“எவ்வளோ பெரிய சான்ஸ், இங்க கிடந்து அல்லாடிகிட்டு இருக்கோம், பேசாம லண்டன்ல போய் ஹாயா வாழறத விட்டுட்டு அப்பா அம்மா தங்கை கல்யாணம்னு உழண்டுக்கிட்டு இருக்க சொல்றீங்களா, நான் மாட்டேன், நாம லண்டனுக்குதான் போயாகணும்” என்றாள்.

“முடியாதுமா, அப்பாக்கு வேற இப்போவெல்லாம் உடம்பு முடியறதில்லை.... அவருக்கும் வயசாகுது, தனியா வீட்டை மேனேஜ பண்ண முடியாது.... அம்மா மட்டும் என்ன செய்வாங்க இப்போவே ஆர்த்ரைடிஸ் வேற ஆரம்பிச்சிருக்கு” என எடுத்து சொன்னான். அதை எதையும் அவள் காதில் வாங்கிக்கொள்ள இசையவில்லை..... போயாக வேண்டும் என ஒற்றை காலில் நின்றாள்.


Tuesday 26 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 5


“வீட்டை சுத்தம் செய்து அலங்கரித்து நாலு வகை நல்லதாக சமைத்து இனிப்புடன் மொத்தமும் ரெடி செய்து டைனிங் டேபிள் மீது அடுக்கினேன்.
“எல்லாம் ஆச்சா?” என கேட்டுக்கொண்டே வந்தவன் “ஆச்சில்ல, போய் நீயும் ரெடியாகு, எண்ணை வழியும் முகத்தோட இப்படியே அவங்க முன்னாடி வந்து நிக்காதே.... என் வீட்டு வேலைக்காரின்னு நினைச்சுட போறாங்க, பளிச்சுன்னு உடுத்திகிட்டு ஸ்டையிலா வந்து நில்லு” என்றான்.

நானும் தயாராகி வர நண்பர்கள் வந்தனர்.... என்னை மனைவி என அறிமுகம் செய்தான்... நான் கை குவித்து வணக்கம் கூறினேன்.... அதில் ஒருவன் என்னிடம் கை குலுக்க கை நீட்டினான்.... நான் மெல்ல தவித்தபடி கை நீட்டினேன்.... அதை பற்றியவன் உள்ளங்கையில் அழுத்தினான்... நான் அதிர்ந்து அவனை பார்த்தேன்.... என்னை பார்த்து கண் அடித்தான்.... நான் வாசுவை அதே அதிர்ச்சியுடன் பார்த்தேன், அவனோ அதை கவனித்ததாகவே தெரியவில்லை.
“உன் மனைவி பேரழகி தான் டா வாசு” என்றான் அந்த நண்பன் இளித்தபடி.
“பேரழகியா, இவளா, ஹைய்யோ” என ஏளனமாக சிரித்தான்.
“பேரழகினா நம்ம சுலோ தான், இப்போ வருவா பாரு, ரதி னா அவதான் டா, என்ன அழகு என்ன பிகர் பித்தனாக்குறா டா” என்றான். வெட்கமேயில்லாமல்.
சுலோச்சனா என்பவள் இவனது ஆபிசில் இவனுக்கு காரியதரிசி.... இவனும் அவளுமாக சுற்றுகிறார்கள் என அவன் பேச்சில் பல முறை அடிப்பட்டது பெயர் என தெரியவந்தது.

சாப்பாடு ரெடி எனும்போதே உள்ளே வந்தாள் அந்த சுலோ, ஸ்லீவ்லெஸ் ப்ளவுசும் கீழே இறக்கி தொப்புள் தெரிய கட்டிய சேலையுமாக விரித்த விட்ட தலை முடியும் என மேகப்பின் உதவியுடன் மிதந்து வந்தாள். எல்லா ஆண்களிடமும் வழிந்துதான் பேசினாள் என்றாலும் வாசுவிடம் மேலே விழுந்து ”வாசு டார்லிங்” எனக்குழைந்தாள்... “இவங்க என்ன இவளோ சாதாரணமா இருக்காங்க.... இவங்களை எப்படி நீங்க மேரேஜ் பண்ணிகிட்டீங்க?” என இழைந்தாள்.... எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.... சீ என நான் சமையல அறைக்குள் புகுந்து கொண்டேன்.

சிறிது நேரத்தில் “இங்கே வந்து நின்னுகிட்டு என்ன கனவு காணுறே, அங்கே எல்லாரும் சாப்பிட காத்திருக்காங்க, வந்து பரிமாறு” என உறுமினான்.... செய்தேன்..... அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓஹோ என பாராட்டினர்....
“இவளால ஆன ஒரே நன்மை இதான், நல்லா சமைப்பா, வீட்டை நடத்துவா, நல்ல சமையர்காரியா வேலைக்காரியா வெச்சுக்கலாம் அவ்வளவே” என்றான் அனைவரின் முன்னும் வைத்து.
எனக்கு அசிங்கமாகவும் அவமானமாகவும் போனது.... ‘இதை விட சிறுமைப்பட முடியுமா, பூமித்தாய் என்னை விழுங்கிக்கொள்ள மாட்டாளா’ என புழுங்கினேன். அவன் என்னமோ பெரிய ஜோக் அடித்ததுபோல எல்லோரும் சுலோவும் ஓஹோ என சிரித்தனர்.

நான் அனைத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று சாப்பிட்டேன் என பேர் செய்து டேபிளை சுத்தம் செய்து அடுப்பு மேடையை சுத்தம் செய்து கொண்டு இருந்தேன்.... அப்போது பின்னே நிழலாடியது.... வாசுவே இருக்கும் என திரும்பியவள் அதிர்ந்தேன்.... முதலில் என் கை பிடித்து அமுக்கியவன் அசிங்கமாக வழிந்தபடி அங்கே நின்றிருந்தான்....
“என்ன வேணும் இங்கே ஏன் வந்தீங்க?” என்றேன் கோபமாக.
“ஹீ ஹீ ஒண்ணும் வேண்டாமே, பாவம் நீ தனியா கஷ்டபடறியே ஏதானும் உதவலாமேன்னு வந்தேன்” என மேலும் வழிந்தான்.
“இல்லை, எனக்கு எந்த உதவியும் தேவை இல்லை வெளியே போங்க” என்றேன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு.

“நீ எவ்வளோ அழகா இருக்கே, எவ்வளோ நல்லா சமைக்கற... ஆனா உன் அருமை அந்த வாசு பயலுக்கு தெரியவேயில்லை.” என என் தோளை பற்றினான்.

அவனை ஆத்திரத்துடன் திரும்பி முறைத்து, “வாயை மூடு, எடு கையை பொறுக்கி ராஸ்கல்” என பளார் என அவன் கன்னத்தில் அறைந்தேன்.... அவனை அறைந்த பின்னும் என் உடல் கோபத்தில் நடுங்கியது.... உடல் வெடவெடத்தது...
“என்னய்யா அடிக்கறே, கேட்க நாதியில்லை உனக்கு, அப்போதே இவ்வளவு திமிரா?” என அவன் என்னை கட்டி பிடிக்க வந்தான். அவனை ஒரே தள்ளாக ஆவேசம் வந்தவள் போல பிடித்து கீழே தள்ளினேன்.... அங்கே இருந்த அரைக்கும் கல்லின் குழவியை எடுத்து அவன் மண்டையில் போட தூக்கினேன்,

“ஐயோ வேண்டாம் என்னை விட்டுடு” என அலறினான்.
“போடா வெளீல” என கத்தினேன்.
அவன் பயந்து எழுந்து வாசலை நோக்கி ஓடினான்.... என் அறைக்கு சென்று கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும் முடிந்தால் வாசுவை அழைத்து நடந்தவற்றை கூற வேண்டும் என நினைத்து என் அறையை நோக்கி நடந்தேன்....
நான் இருந்த நடுக்கத்தில் உள்ளே கேட்ட முனகல் என் காதில் விழவில்லை போலும்.... சாத்தி இருந்த கதவை மெல்ல தள்ள அது திறந்து கொண்டது..... உள்ளே நான் கண்ட காட்சி என்னை உறைய வைத்தது..... எந்த ஆணையும் எந்த பெண்ணையும் சேர்த்து பார்க்க கூடாத நிலையில் வாசுவையும் சுலோச்சனாவையும் அங்கே என் அறையில் என் படுக்கையில் நான் கண்டேன்..... என் அண்டசராசரமும் உதறியது..... ஆத்திரமும் கோவமும் இயலாமையும் ஒருங்கே என்னை ஆட்டி பார்த்தது....

எதுவுமே நடக்காதது போல சுலோ சரிந்த தன் முந்தானையை சரி செய்துகொண்டு நிமிர்ந்தாள்.
“ஹே அறிவில்லை, கதவை தட்டிவிட்டு உள்ளே வர்றதில்லை?” என இரைந்தான் வாசு. “நான் என் அறைக்குள்ள நுழைய யாரிடம் அனுமதி கேட்கணும்” என்றேன் முதன் முறையாக நேர்கொண்ட பார்வையுடனும் எதிர்த்த குரலுடனும்.
“உன் அறையா, அப்படி ஒண்ணு இந்த வீட்டில இருக்கா என்ன, என்ன டார்லிங் இது, அவங்க அறையாமே.... அப்போ இது உங்க அறை இல்லையா?” என சீண்டினாள் சுலோ.

“அவகெடக்கா டார்லிங்” என அவளை பார்த்து கூறியவன்.
“உன் அறையா, இது என் வீடு என் அறை..... இங்கே நீ எனக்கு சமைத்து போட்டு கட்டிலில் சுகம்குடுக்கும் ஒரு வேலைக்காரி, அவ்வளவே” என்றான் ஏளனமாக.
நான் உறைந்து போனேன்.... சீ என இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நேரே திரும்ப சமையல் அறைக்கே சென்று கதவை அடைத்து உள் பக்கம் தாழிட்டேன்.

அங்கே ஒரு ஓரமாக இருந்த பாயை விரித்து படுத்தேன்.....தூக்கம் வரவில்லை.... என் வாழ்க்கையில் ஏதேதோ நடக்க கூடும் என நான் நினைத்தது போக இப்படி ஒரு திருப்புமுனையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை..... என் மூளைக்குள் பலவித யோசனைகள்..... நல்லது கெட்டது நடக்கப்போவது நடந்தது என பலதும் ஆலோசனை செய்தேன்..... கொஞ்சம் கொஞ்சமாக நான் அடுத்து இன்னது செய்ய வேண்டும் என தெளிந்தது மனது..... அதை எப்படி நடத்த வேண்டும் என ப்ளான் செய்துகொண்டேன்.

இந்நிலையில் பொழுதே விடிந்து போனது....பொட்டு தூக்கம் இன்றி இரவு முடிந்தது.... எழுந்து எதுவுமே நடவாதது போல நானும் இயற்கையாக சமைத்து துடைத்து கழுவி என தினசரி வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்..... இரவு நான் உள்ளே வந்து தாளிட்டுகொண்ட பின் வெளியே என்ன நடந்தது என அறிய எனக்கு இஷ்டமில்லை, அதனால் அவனிடம் நான் வேறே எதுவுமே கேட்கவில்லை..... அவனுமே நான் எதையேனும் கேட்பேன் அழுவேன் கத்துவேன் என எதிர்பார்த்தான் போலும், என் அமைதி அவனை ஆச்சர்யபடுத்தியது..... அது அவன் கண்களில் நான் கண்டேன்.

அவன் டிபன் தின்றுவிட்டு தன் டிபன் பாக்சுடன் ஆபிசிற்கு கிளம்பினான். அடுத்த விநாடி நான் சுருசுருப்பானேன்.... எனக்கென ஒரு பெட்டியை தயார் செய்துகொண்டேன்.... என் பன்னிரெண்டாம் வகுப்பு மார்க் சீட், நன்மதிப்புசான்றிதழ், எனக்கு வேண்டிய துணிமணிகள், என் தந்தை எனக்கு கஷ்டப்பட்டு போட்ட என் நகைகள், சில வெள்ளி சாமான்கள், தேவைப்படும் என நான் நினைத்த இன்னும் சில உடைமைகள் எல்லாவற்றையும் அந்த பெட்டியில் அடுக்கினேன்..... சமையல் அறைக்குச் சென்று மேலே பரணிலிருந்து ஒரு அட்டை பெட்டியை எடுத்து தூசி தட்டினேன், பொறுமையாக சின்ன ஸ்டவ், ஒரு சிறிய குக்கர், வாணலி, குழம்பு பால் தயிருக்கென சில கிண்ணங்கள், கரண்டிகள், ஒரு தட்டு என அதில் அடுக்கினேன்..... அந்த அட்டை பெட்டியில் கொள்ளுமளவு பாத்திரங்கள் நிறைந்ததும் பிடித்து தூக்கிக்கொள்ள வசதியாக அதை கயிறு கொண்டு கட்டினேன்.

பின்போய் குளித்து வந்து கடவுளை வணங்கி என் காமாக்ஷி விளக்கும் சுவாமி படமும் தொழுது எடுத்து என் பெட்டியில் மேலெழ வைத்துக்கொண்டேன்.... என் இருப்பில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எண்ணி எடுத்து பர்சில் வைத்துக்கொண்டேன்..... அன்றைய நாளிதழையும் எடுத்து கைபையில் சொருகினேன்... எல்லாம் ஆன பின் ஒரு நிம்மதியுடனும் படபடக்கும் இதயத்துடனும் அவனுக்கு ஒரு கால் கடிதம் எழுதினேன்....

“மிருகத்துடன் வாழ்ந்தது போதும் என மனிதர்களின் நடுவே வாழ துணிந்து புறப்பட்டு விட்டேன், தேட வேண்டாம், எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.... நான் எப்போதுமே பொறுமையாக இருப்பேன் என சொல்ல முடியாது” என நாலு வரி எழுதி கை ஒப்பம் இட்டு வாசல் அறை பூ ஜாடியின் கீழே பார்வையாக வைத்தேன்.
பக்கத்து பிளாட்டில் சாவியை குடுத்துவிட்டு இரு பெட்டிகளுடன் கீழே வந்து ஒரு ஆட்டோ பிடித்தேன்.... ரயிலடிக்கு என்றேன்.....ஆட்டோவில் பிரயாணிக்கும் நேரத்தில் கையில் கொண்டு வந்த பேப்பரில் வேலைக்குண்டான பகுதியை ஆராய்ந்தேன்.... கோவையின் அருகே போதநூரில் ஒரு ஆசிரமம் இருப்பதாகவும் அதில் வயதானவர்களை பார்த்துக்கொள்ள ஆயா வேலைக்கு ஆள் வேண்டும் எனவும் கண்டது....சரி கோவைக்கு செல்வது என்ற முடிவோடு ரயிலடியில் இறங்கினேன்...வெஸ்ட் கோஸ்ட் கிளம்ப தயார் நிலையில் இருக்க அதற்கு டிக்கட் எடுத்துக்கொண்டு பெட்டியில் ஏறி அமர்ந்தேன்...

‘இது நாள் வரை கட்டுகோப்பான குடும்பத்தில் பாதுகாப்பாக வளர்க்கப் பட்டேன், பின் கணவன் புகுந்த வீடு என தள்ளப்பட்டேன், எதிலும் என் மனது சுகப்படவில்லை, இனி நான் தனி, என் அடுத்த பொழுதின் வாழ்வு நிலை என்னவாகி இருக்கும் எப்படி இருக்கும் என அறியாத நிலை. ஆனால் இதில் மன நிம்மதி இருக்கும், கண்டிப்பாக இருக்கும்’ என மனதில் ஒரு திடமான எண்ணம் உருவானது.

ஆசிரமத்தை சென்றடைந்தேன்.... அங்கே ஒரு வருட காலம் வேலை செய்தேன்..... மனசுக்கு மிகுந்த உற்சாகத்தை குடுத்தது அந்த வேலை.... பல முதியவர்களுக்கு உதவியாக இருந்தது மன காயங்களை ஆற வைத்தது.... பின்னோடு பெரியய்யா உங்களை பத்தி சொல்லி இங்கே அனுப்பிச்சாங்க, இதோ இப்போ உங்க கிட்ட இப்படி பேசிகிட்டு இருக்கேன்.... சந்தோஷமா இருக்கேன் நிம்மதியா இருக்கேன்..... மனதின் ஓரத்தில் இன்னமும் பழைய ரணம் காயாமல் இருக்கத்தான் இருக்கு, அதை கிளராம ஒதுக்கிவிட்டு நாளை என்பதை நோக்கி ஓடிகிட்டு இருக்கேன்.....

இங்கே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆண்ட்டி.... எங்கம்மா கிட்ட எனக்கு கிடைக்காத அன்பு பாசம் பரிவு எல்லாத்தையும் நான் உங்ககிட்ட உணர்ரறேன்..... ஆனா உங்க மகனுக்கு தான் என்னமோ என்னை எதன் காரணமாகவோ பிடிக்கலை. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லைதான், ஆனா அதன் காரணமா என்னிக்கானும் என்னை போகச் சொல்லீடுவாரோ னு ஒரு பயம் ஓயாம இருக்கு..... அப்படியே போக சொன்னாலும் நான் ஆசிரமத்துக்கு தான் போவேன், மறுபடியும் உங்கள போன்ற பெரியவங்களுக்கு அன்பா கவனிச்சு சேவை செய்வேன்.... ஆனாலும் கூட உங்களை அடிக்கடி வந்து பார்த்துட்டானும் போவேன், உங்களை என்னால மறக்கவே முடியாது ஆண்ட்டி” என்றாள்.

இத்தனையும் கூறி முடித்து நிமிர்ந்த போதும் மனுவின் கண்கள் கலங்கவில்லை, கண்ணீரை பொழியவில்லை..... மனதின் திடம் அவள் முகத்தில் மிளிர்ந்தது..... மென்மையாகவே இருந்தபோதும் பேசும்போது உணர்ச்சியின் வேகத்தில் கொஞ்சம் கடினப்பட்டு மீண்டது.... இதை எல்லாம் கவனித்த கற்பகம் அதிசயித்தார்.....‘இந்த வயதில் இப்படி ஒரு பக்குவம், இது எப்படி சாத்தியம்.... அவள் பட்ட கஷ்டங்களினாலா வேதனைகளாலா’ என ஆச்சர்யபட்டார்.

“உன்னை மெச்சுக்கறதா பாராட்டறதா, உனக்காக பாவப்படறதா னு புரியலை மனு மா.... எனக்கும் உன்னை ரொம்பவே பிடிச்சுதாண்டா இருக்கு.... அவன் உன்னை போக சொல்ல மாட்டான்..... எனக்காக தான் நீ, அவனுக்காக இல்லை.... சொ நீ அந்த பயத்தை விட்டுடுமா” என்றார் ஆதுரத்துடன் அவள் தலை கோதி.

“இத்தனை சோகத்தை மனசில வெச்சுண்டு நீ எப்படிமா சிரிச்ச முகமா மனசார என்னை அன்பா பார்த்துக்கற?” என்றார்.
“என்னோட பழசை மறக்கணும், எனக்குன்னு ஒரு புது வாழ்வை ஏற்படுத்திக்கணும்னு தானே ஆண்ட்டி நான் வீட்ட விட்டு வெளியே வந்தேன், அதையே நினைச்சுகிட்டு நான் என் வாழ்வையும் மிச்சவங்க வாழ்வையும் கூட நாசம் பண்ணிக்கிட்டு இருந்தா அதில என்ன நன்மை இருக்க போகுது..... அதை விடுங்க, ஏதோ நீங்க கட்டாய படுத்தி கேட்டதால நானும் எல்லாத்தையும் சொன்னேன்” என்றாள்.

“அது சரி மனு, அதுக்கு பிறகு நீ உன் பெற்றோரை பார்க்கவே இல்லையா, பேசலையா மா?” என்றார். “அவங்க உன்னை பத்தி கவலைப்படமாட்டாங்களா..... அந்த வாசு நீ இல்லை போய்ட்டேன்னு அவங்களுக்கு தெரியபடுத்தி இருப்பான் இல்லையா..... நீ என்னானியோ ஏதாச்சோன்னு கவலையானும் அவங்களுக்கு இருக்குமே மா?” என்றார் கற்பகம்.

“ஹ்ம்ம் அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணும் ஆண்ட்டி” என்றாள் விரக்தியுடன்.
“ஏன்மா அப்படி சொல்றே?” என்று கேட்டார்.
“நீங்க சொன்னபடி அந்த ஆளு எங்கப்பாம்மாகிட்ட ஏதானும் சொல்லி அவங்கள கலங்க வெச்சிருப்பானோ, அவங்களும் கவலைப்பட்டு போயிருப்பாங்களோன்னு எனக்கும் தோணிச்சு.... அதனால நான் கோவையில ஆசிரமத்தில சேர்ந்த பின்னால நாலு நாள் கழிச்சு என் பெற்றோரை கூப்பிட்டேன்....
எடுக்கும்போதே “என்னடி ஓடுகாலி, இங்கே ஏன் போன் பண்ணினே, எங்கியோ எவனோடையோ ஓடி போனவ போனவளாகவே இருந்திருக்க வேண்டியதுதானே, இப்போ என்னத்துக்காக எங்களை கூப்பிட்டே.... நீ எங்களைபொறுத்தவரைக்கும் இனி இல்லை, நீ செத்துட்டேன்னு நாங்க தலை முழுகியாச்சு. இனி அம்மா அப்பா தங்கைகள்னு உறவு வெச்சுண்டு இப்படி போன் பண்ணலாம், வீட்டுக்கு வரலாம்னு எல்லாம் கனவிலேயும் நினைக்காதே... ஆமாம் சொலீட்டேன் னு’ அப்பா எடுத்த எடுப்பில கத்தி தீர்த்துட்டாரு.

“அம்மா கிட்ட ஒரு நிமிஷம் பேசணும்னு சொன்னேன்.... இனி கூப்பிட மாட்டேன், ஒரே ஒரு முறை னு கெஞ்சினேன்.....அம்மா வந்தா லைன்ல, ‘நீ இன்னும் உயிரோடவா இருக்கே, வெட்க கேடா இல்லையா உனக்கே, நீயெல்லாம் என் வயித்தில எப்படி பிறந்தேனு கேட்டாங்க....
“அம்மா நீயானும் நான் எந்த நிலையில வெளீல வந்தேன்னு நான் சொல்றதை கொஞ்சம் கேளேன் மா” னு கெஞ்சினேன்.... இன்னும் என்ன கேட்கணும், அதான் மாப்பிள்ளை எல்லாம் விவரமா சொல்லீட்டாரே, ‘அவளுக்கு என்னை தவிர வேறே ஆம்பிள்ளை ஸ்நேகிதம் இருந்திருக்கு, அதை நான் கண்டுபிடிச்சுடுவேன்னு அவனோடவே ஓடி போய்டா லெட்டர் எழுதி வெச்சுட்டு.... இதான் உங்க பொண்ணு லக்ஷணம்னு அசிங்கமா பேசி அவமானபடுத்தீட்டார் உங்கப்பாவ..... சீ இப்படியும் ஒரு பொழப்பாடி, இனி நீ எங்க பொண்ணும் இல்லை, நாங்க உனக்கு உறவுமில்லை..... மிச்ச ரெண்டுத்தையானும் நாங்க ஒழுங்கா கரை சேர்க்கணும்... இனி உன்னோட எந்த தொடர்பும் எங்களுக்கு வேண்டாம்’னு சொல்லி போனை வெச்சுட்டாங்க” என்றாள்.
இப்போதும் கூட அவள் கண்கள் கலங்கவில்லை..... வரட்சியான ஒரு சோகம் மட்டுமே காணப்பட்டது.
‘இவள் என்ன பெண்ணா, கல்லா மண்ணா, இப்படியும் ஒருத்தியால் இத்தனை துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கி வாழ்வில் எதிர் நீச்சல் போட முடியுமா?’ என பிரமித்தார் கற்பகம்.
பேச்சே இல்லாது அவளை இழுத்து தன் மடி சாய்த்து அவள் தலை கோதினார்.

“நீ சொன்னத எல்லாம் நான் பொறுமையா கேட்டேன், உன்னை நல்லபடி புரிஞ்சிகிட்டேன் மனு மா, ஆனா நான் சொல்லக் கூடியது ஒண்ணே ஒண்ணு இருக்கு” என்றார்.
“என்ன ஆண்ட்டி?” என்றாள்.
“நீ இப்படியே இருக்க கூடாது டா.... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும், உனக்கு இன்னமும் ரொம்ப சின்ன வயசு, நீண்ட வாழ்வு பாக்கி இருக்கு, அதை இந்த பொல்லாத உலகத்தில நீ தனியா கழிக்க முடியாது..... கண்டிப்பா உனக்கு ஒரு துணை தேவை” என்றார்.

“ஐயோ ஆண்ட்டி, எனக்கு இன்னொரு திருமணமா, செய்யாத பாவத்துக்கே பழி போட்டு என்னை அசிங்கபடுத்தி இருக்காங்க எல்லாருமா, இன்னொரு மணம் செய்துகிட்டு அதிலே வேற நான் அவதி படணுமா.... கண்டிப்பா முடியாது..... இந்த மாதிரி பேச்சை இன்னொரு முறை எடுக்காதீங்க ஆண்ட்டி.... அப்பறம் இதற்காகன்னு நான் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்” என்றாள் திண்ணமாக.
“என்ன மனு மா, நான் ஏதோ ஒரு யோசனையானு சொல்ல வந்தா நீ இப்படி பேசீட்டியே, உனக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடு.... அதுக்காக என்னைவிட்டு போய்டுவேன்னு நீ எப்படி சொல்லலாம்?” என கோபித்து கொண்டார்.
“சாரி ஆண்ட்டி, நான் உங்களை புண்படுத்த சொல்லலை, ஆனா என் நிலை நான் பட்ட அவதி, என்னை அப்பிடி பயப்பட வைக்குது..... மன்னிச்சுடுங்க” என்றாள்.
“சரி சரி இந்த பேச்சை விடு” என்றார்.
அது முதல் அவளை தன் உறவாகவே நினைத்து அவளை அன்புடன் அவர் கவனித்துகொள்ள துவங்கினார்... அவர்கள் மத்தியில் இருந்த பாச பிணைப்பு இன்னும் இறுகியது.... பலப்பட்டது.

மனுவின் கவனிப்பால் கற்பகத்திடம் நல்ல பலன் ஏற்பட்டது.... அதிக சிரமம் இன்றி நடமாட துவங்கினார்.
கீர்த்தி இதை எல்லாம் கவனித்து வந்தான் தான்..... அவள் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது எனினும் அதை ஒப்புக்கொள்ள மனசில்லை....
‘ஆமா என்ன பெரிய, அவ ட்யூட்டிய அவ செய்யுறா, என்னவாயினும் இவளும் பெண் தானே, மாயப்பிசாசுகள்’ என எண்ணிக்கொண்டான்.

அன்று நவராத்திரி நவமி திருநாள்.... கற்பகம் மிகவும் கேட்டுகொண்டதன் பேரில் நல்ல சேலை உடுத்தி பூ பொட்டு என அவருக்காக மட்டுமே தன்னை அலங்கரித்துகொண்டாள். சமையல் சுபாவிடம் கூறி பிரசாதங்கள் ரெடி செய்துகொண்டு பூஜை அறையில் கற்பகத்தை கொண்டு சேரில் அமர்த்தினாள்..... கூட தானும் தரையில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமம் படித்தாள்..... ஊதுபத்தியும் சந்தனமும் கமழ, வெள்ளி விளக்குகள் ஒளிவிட மனதை அமைதிபடுத்தி பரவசபடுத்தும் படி அமைந்தது அந்த சூழல்.

வீட்டினுள் நுழையும்போதே நாம உச்சாடனங்கள் கேட்க எங்கே என்ன என கீர்த்தி உள்ளே தலை நீட்டி பார்த்தான். அங்கே கற்பகம் பரவசமாக கண் மூடி த்யானித்தபடி அமர்ந்திருக்க மனு உச்சரித்துக்கொண்டு இருப்பதை கண்டான்..... அவன் அரவம் கேட்ட கற்பகம் கை கால் கழுவி வா பூஜைக்கு என சைகை செய்தார்.... அவருக்காகவென அவனும் அப்படியே வந்தான்.... அவன் வந்து அமர்ந்த கால் மணியில் மனு முடித்தாள்.... எழுந்து ஆரத்தியை கையில் எடுக்க அவனை கண்டாள்.

“ஆண்ட்டி உங்க மகனையே ஆரத்தி எடுக்க சொல்லுங்க, என்ன இருந்தாலும் உங்க வீட்டு பூஜை அறை” என்றாள் அவர் காதோரம்.