மங்களம் மாமி – 4
மங்களம் வைத்தியுடன் வெளியே கிளம்பி கொண்டிருந்தார்.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தார் வைத்தி ,கார்
பின் சீட்டில்.
‘என்னதிது இப்படி பார்த்துண்டு…?’ என கண்ணாலேயே
கண்டித்தார் மங்களம். கார் டிரைவர் வேறு இருக்கிறான் என கண் ஜாடை செய்தார். வைத்தி
சிரித்துக்கொண்டார்.
கார் கண்ணாடியை தாண்டி வேடிக்கை பார்க்க, மனம் எங்கோ லயித்தது.
நினைவலைகள் ஓடிவந்து குளிர் மேகமாக சூழ்ந்து கொண்டது. அவளை ஒரு நொடி திரும்பி
பார்த்து புன்னகைத்தவர் அவள் விரல்களோடு தன் விரல்களை பிணைத்துக்கொண்டு மீண்டும்
கனவுலகில் லயித்து போனார்.
அவரது புன்னகைக்கும் அந்த விரல் பிணைப்புக்கும் அர்த்தம் புரிந்த
மலர்ச்சியுடன் சிறு வெட்க சாயல் பூச மாமியும் வெளியே பார்த்தாள் அவருக்கும் தான்
மலரும் நினைவுகள்.
வைத்தி மணமாகி சில வருடங்களிலேயே பெரிய வக்கீல் ஒருவரிடம் ஜூனியராக
வேலை பழகத் துவங்கிவிட்டான்.
அவனது புத்தி கூர்மை சூட்சுமம் பெரியவரை அசைத்து பார்த்தது. ‘கிருஷ்ணமாச்சாரி,
பார் அட் லா’ - யாரையும் லேசில் அருகில் சேர்க்காதவர், சட்ட விஷயங்களில் புலி.
அந்நாளைய டைகர் வரதாச்சாரி போன்ற பெயர் பெற்ற வக்கீல்களுக்கு சமமானவர்.
ஆனால் வைத்தியிடம் அதீத பிரேமை. ஏதோ சொல்லொணா பந்தம் ஏற்பட்டுப்
போனது. கிரிமினல் வக்கீல் கிருஷ்ணமாச்சாரி என்றால் சட்டமன்றமே நடுங்கும். ஜட்ஜே
கூட கொஞ்சம் தன் லா பாயிண்டுகளை சரிபார்த்து கொண்டுதான் வந்து அமர்வார்.
அப்படிப்பட்டவர் ஏதேனும் சந்தேகம் இருந்தால் வைத்தியிடம் கேட்டு
தெளிந்து கொள்வார். அவருக்கு தெரியாது என கேட்பதல்ல... வைத்தியின் புத்திசாலிதனத்தை
தூண்டிவிட்டு அந்த விளக்கு பிரகாசிப்பதில் ஒரு தனி பெருமை. அதனால் அவனிடம் ஒரு
வாஞ்சை. அவருக்கு இரு மகள்கள்தான் மகனில்லை.
வாயால் சொல்லாமல் போனாலும் வைத்திதான் அவருக்கு மகன் போல என்ற எண்ணம்
அவருள் இருந்தது. அவராத்து மாமிக்கும் அதே வாஞ்சை உண்டு.
“வைத்தி, இரு போய்டாதே என்ன.... இன்னிக்கி பாயசம் பண்ணேன் கொடுத்தனுப்பறேன்”
என ரகசியமாக வந்து சொல்லிவிட்டுப் போவார் காதருகில்.
அதை ஏதோ குத்தம் போல சிம்மம் பார்க்கும்.... கண்ணால் எரிக்கும். அதே
சமயம் மாமி கொடுக்கவில்லை என்றால்,
“ஆமா இந்நிக்கென்ன விசேஷம், பாயசம் பண்ருகே... வைத்திக்கு தரலை போலிருக்கே?”
என டைனிங் டேபிளை அதிர வைத்துவிடுவார்.
‘உக்கும், இதுல ஒண்ணும் கொறச்சல் இல்ல... பாருடி வசந்தி, நான் சாப்டுட்டு
போடா னு வைத்திட்ட சொன்னா அங்க என்னை கொல்றாபோல ஒரு பார்வை... இங்கே வந்து
கொடுக்கலைன்னு குற்றப்பத்திரிகை. இவரோட நான் என்னத்த பண்ண...” என மொவாகட்டையை
தோள்பட்டையில் இடித்துவிட்டு நமுட்டு சிரிப்புடன் உள்ளே சென்றுவிடுவார். பெரியவர்
புன்னகைத்துகொள்வார்.
அப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட பந்தம்.
அவர் வீட்டு கொலுவிற்கு என இவர்களை மாமி அழைத்தார்.
“சாயந்தரம் ரெடியா இரு மங்களம், நான் வந்து அழச்சுண்டு போறேன்.
பளிச்சுன்னு டிரஸ் பண்ணிக்கோ என்ன... அவா பெரிய வக்கீல். என் சீனியர்...
நோக்குதான் தெரியுமே. ஜம்முனு போகணும்” என கூறிவிட்டு சென்றார். அப்போது மங்களத்திற்கு
இருபதே ஆகவில்லை.
இவளுக்கோ என்ன செய்வது ஜம்முனுன என்ன... எப்படி அலங்காரம் பண்ணிக்கணும்
ஒன்றும் தெரியவில்லை. மாமியாரை போய் கேட்டாள்.
“பளிச்சுன்னு பண்ணிக்கோனு சொன்னானா வைத்தி. ஆமா, அவா இருக்கப்பட்ட பெரிய
வக்கீலாத்து குடும்பம். பளிச்சுனு அகல கரை பட்டு பொடவை கட்டிக்கோ” என அவருக்கு
தெரிந்ததை சொன்னார்.
மங்களமும் முகம் அலம்பி பௌடர் டப்பாவில் தடுக்கி விழுந்து பெரிய
குங்கும பொட்டு வைத்து... தலை மழுங்க வாரி நீண்ட ஜடை பின்னி கூடை கதம்பம் வைத்துக்கொண்டாள்.
முடிவில் குஞ்சலம் வேறு.
அகலகரை குங்கும கலர் பட்டு புடவை எடுத்து அவள் சிறிய இடையில் சுற்றமாட்டாமல்
சுற்றிக்கொண்டாள். பத்து கொசுவம் வந்தது. நீண்ட தலைப்பு வேறு இழுத்து முன்னே இடுப்பில்
சொருகி கொண்டாள். கண்ணாடியில் பார்க்க ஏதோ குறைந்தது. பீரோவில் தூங்கிய கல்
அட்டிகையும் காது ஜிமிக்கியும் எடுத்து போட்டுக் கொண்டாள்.
இப்போது திருப்தியானது. ஆக பட்டுபொடவ கடை பொம்மைபோல இருந்தாள்.
வைத்தி நேரமாகிவிட்டது என அவசரமாக வந்தார். இவளை கண்டவர் சிரிப்பதா
அழுவதா எனத் தெரியாமல் முழித்தார்.
“இதென்னதிது அவதாரம். யார் நோக்கு இப்படி எல்லாம் ஐடியா கொடுத்தா...
இல்லை நீயேவா?” என கேட்டார் சிரிப்பை அடக்கி.
“ஏன் நா, நன்னா இல்லையா... நாந்தான் பண்ணிண்டேன்” என்றாள் தீனமாக
அப்போதே அழுகை முட்டியது.. அதை கண்டு தானும் சுதாரித்து “சரி சரி நாழியாச்சு....
இப்போ அழுது கண் மை வேற கரைஞ்சு பவுடர் கலங்கி..... வேண்டாமே. வா வா போலாம்” என
அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
அப்போது கார் இல்லை. அவனது லாப்ரடார் ஸ்கூட்டர். அதில் புடவை தலைப்பை
இழுத்து சொருகி விழுந்துவிடாமல் பாலன்ஸ் செய்தபடி அவனை பிடித்துக்கொண்டு உயிரையும்
கூடவே கையில் பிடித்துக்கொண்டு ஒருவாறாக அங்கே போய் சேர்ந்தார்கள்.
“வா வா வைத்தி, இதாரு இது... அதிசயமான்னா இருக்கு... வாடீம்மா மங்களம்”
என அணைத்து இவளை உள்ளே அழைத்துச் சென்றார் வக்கீலாத்து மாமி. அவருக்குமே இவளை
பார்த்து தஞ்சாவூர் தேர் நினைவு வந்தது. சிரிக்காமல் முகம் மறைத்தார்.
அவரது மகள்கள் இருவும் கூட ஏகதேசம் மங்களத்தின் வயசுதான். அவர்களுக்கோ
இவளை கண்டு ஒரே சிரிப்பு.
“சூ, உள்ளே அழச்சுண்டு போங்கோ. மங்களம் நன்னா பாடுவியாமே ஒரு பாட்டு
பாடு” என வேறு உந்திவிட்டார் அந்த மாமி.
மங்களத்துக்கோ ‘ஏன் சிரித்தார்கள்.... பாட்டா இப்போவா, பொடவை எப்போ
அவிழுமோ... அவர் வேற சிரிச்சார்... இவா வேற எல்லாரும் கிண்டல் பண்றாபோல இருக்கு...
நான் அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்...?’ என உள்ளூர ஒரே வருத்தம் திகில் அழுகை.
பயந்தபடி வைத்தியை பார்க்க பாடு என ஜாடை செய்தான்.
சரி என அவனுக்கு பிடித்த ‘அலைபாயுதே கண்ணா’ பாடினாள். அவன் உருகி உருகி
கேட்டு மகிழ்ந்தான். அவ்வப்போது அவன் ரசிக்கிறானா என ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டாள்.
அனைவருமே அவளது உருக்கத்தில் உருகித்தான் போயினர்.
“திருஷ்டி சுத்தி போடச் சொல்லு மங்கா, உம் மாமியார்ண்ட” என்றபடி
தாம்பூலம் கொடுத்தார்.
டிபன் முடித்து வீட்டுக்கு திரும்பினர்.
“வைத்தி, பாவம் டா சிறிசு... அவ்வளவா வெவரம் தெரியல. பன்னண்டு வயசுல
கல்யாணம் ஆயிடுத்தோல்லியோ... நீதான் இந்த காலத்து நாகரீகம் நடை உடை பாவனை எல்லாம்
கத்து தரணம். உங்கம்மாக்கு வயசாச்சு அவளால இதெல்லாம் முடியுமா தெரியுமா சொல்லு.
வசந்தி ஜெயந்தியோட கொஞ்சம் பழக விடு. அவா கூட சேர்ந்து தானே கொஞ்சம்
கொஞ்சமா கத்துப்போ” என்று வைத்திக்கு அட்வைஸ் செய்தார். அவனும் “சரி மாமி ரொம்ப
தாங்க்ஸ்” என்றான்.
“அந்தாத்து மாமி உங்களண்ட என்னமோ தனியா பேசினாளே.... என்ன சொன்னா,
நான் சரியா பாடலையா.... என்னாச்சு, எல்லாருமே என்னப் பார்த்து நமுட்டா சிரிக்கறாப்லவே
தோணித்து நேக்கு?” என்று இரவின் தனிமையில் அவனிடம் கேட்டாள் மங்களம்.
“அப்படி ஒண்ணும் ரகசியமில்லை. நோக்கு இன்னும் அழகழகா டிரஸ் பண்ணிக்க
சொல்லித்தர சொன்னா மாமி” என்றான்.
“அப்போ இன்னிக்கி நான் செரியா பண்ணிக்கலையா.
ஏன் நா, அவர் உங்க சீனியராச்சே அவா ஆத்துக்கு நான் தண்டமா
வந்துட்டேனா, உங்களுக்கு அது பெரிய அவமானம் ஆயிருக்கும் இல்லியா... நான் என்ன
பண்ணட்டும் நேக்கு இதேல்லாம பெரிசா பழக்கமில்லை...” என உதடு துடிக்க கண்கள்
பொங்கிட அவன் மார்பில் தலை சாய்த்தாள்
“அசடு, என்னதிது... இப்படியா பேசுவா, கண்ண தொடை. நீ எந்த குத்தமும்
பண்ணலை தப்பாவும் பாடலை. நோக்கென்ன.... ஜம்முனு பாடினாய். அவாவா அசந்து போய் கேட்டாளாக்கும்
நானே பார்த்தேன் நேக்கு அதுல ரொம்ப பெருமை” என தேற்றினான்
“மாமி சொன்னது என்னனா இன்னும் நாகரீகமா டிரஸ் பண்ணிக்கணும்னு. அங்கே
அவ பொண்கள பார்த்தியோன்னோ எப்படி இருந்தா ஜம்முனு ஸ்டைலா அலங்காரம் பண்நீண்டு....
அதுபோல அவாகிட்டேயே கூட நீ பேசி பழகி கத்துக்கலாம். ரொம்ப நல்ல மாதிரி ரெண்டு
பேருமே. என் தங்கைகள் போலத்தான் அவாளும்” என்று உற்ச்சாகமூட்டினான்.
“நேக்கும் அவாள பார்த்த ஒடனே தோணித்து. இத்தனை அழகா இருக்காளே
எப்படின்னு...” என்றாள் சங்கோஜ சிரிப்புடன்.
“அதுசெரி” என அணைத்துக்கொண்டான்.
அடுத்து வரும் வாரங்களில் சில முறை தானே அவளை டவுனுக்கு அழைத்துச்
சென்று காலத்திற்கேற்ப துணிமணிகள், அலங்கார பொருட்கள் என வாங்கிக்கொடுத்தான்.
கலர் சாந்து பொட்டுக்கள், நகச் சாயம், கலர் கண்ணாடி வளையல்கள். லேசான
முக பூச்சுக்கு லக்மே ரோஸ் பவுடர். பாண்ட்ஸ் ஸ்னோ, கண்மை... என பலவும்.
சில உள்ளாடைகளும் வாங்கி வந்தான்.
“அய்யய்யே, என்ன நா இது, இதை எதுக்கு போட்டுப்பானேன், அசிங்கம்” என்று
தூர தூக்கி போட்டாள்.
“மக்கு. இதான் இப்போ பாஷன். பேசாம எடுத்து வை, உபயோகபடுத்து” என்றான்
கண்டித்து.
“முதுகெல்லாம் தெரியுமே” என முணுமுணுத்தாள் அவன் முறைப்பதை கண்டு
வாய்மூடிக் கொண்டாள். பின் வசந்தியிடம் பேசி தெளிந்தாள்.
அப்போதே பிரபலமாகி இருந்த ஷிபான், மல் மல் புடவைகள். க்ளாஸ் நைலான் புடவைகள் என சில
வாங்கி குவித்தான்.
“என்னடா இது, ரொம்பதான் ஆம்படையாள தாங்கற...?” என தாயார் கூட
கண்டித்தார்.
“அம்மா நான் வளர்ந்து வர்ற வக்கீல். நாலு இடம் பெரிய மனுஷாளோட போக வர
இருக்கும், அவளும் என் கூட வரணும் இல்லியா, இதெல்லாம் அவசியம் மா” என்று அவரை
அடக்கினான். கூடவே ரெண்டில் ஒன்று உடன் பிறந்த சகோதரிக்குமே வாங்கி வந்தான் தான்.
வசந்தி ஜெயந்தியுடன் சேர்ந்து சில நாள் பேசி பழகினாள் மங்களம்.
அவர்கள் லேசான பவுடர் பூச்சு அதன் மேல் கன்னமேட்டில் கொஞ்சமாக ரோஸ் பவுடர் பூசுவது
கண் மை குச்சியால் நீட்டி கண்களை அழகு கூட்டுவது என குடும்ப பெண்ணிற்கு ஏற்ப ஆனாலும்
மிகை படாமல் அலங்காரம் செய்துகொள்வதை அவளுக்கு கற்றுத் தந்தனர்.
குஞ்சலங்கள் இடம் மாறி கலர் கலர் ரிப்பன்கள அமர்ந்தன. சின்னாளப்பட்டியும்
ஆரணியும் மாறி ஷிபான், க்ளாஸ் நைலான் இடுப்பில் வழுக்கியது. பிச்சோடா கொண்டை
தளர்ந்து உயர தூக்கி பன் வைத்து மூடி மறைத்த கொண்டைகள் உருமாறியது.
கூடை கதம்பம் மாறி ஒற்றை சரம் மல்லிகை அல்லது காதோரம் ஒற்றை, இரண்டு
ரோஜாக்கள் வந்தமர்ந்தன.
கையில் ரிஸ்ட் வாட்ச் கட்ட பழகினாள். அவ்வப்போது அது வேலை செய்கிறதா
என காதோரம் வைத்து கேட்டாள். அதன் இதய துடிப்பு போல டிக் டிக் சத்தம் கேட்டு
புன்னகைத்தாள்.
நக ஓரங்களில் கலர் கலராக பட்டாம்பூச்சி போல சிவப்பும் ரோசுமாக
நகப்பூச்சு மின்னியது.
பின் கழுத்து கொஞ்சமாக இறக்கி ப்ளவுசுகள் தைக்கப்பட்டன.
“என்னடி இது கருமம்.... பாதி முதுகுக்கு இருக்கு ரவிக்கை, இதென்னதிது
என்னமோ உள்ள, இத்தனை சின்னதா, முதுகு தெரியறாப்ல?” என அன்னை அடுத்து காணும்போது
வ்ளாசி தள்ளிவிட்டாள்.
“கையில என்னடி இது.... மருதாணி அழகு இந்த கருமத்துக்கு வருமோ?” என்று
தலையில் அடித்துக்கொண்டாள். காலில் பார்த்த ஜரிகை செருப்பு கொஞ்சமே கொஞ்சம் ஒரு
இன்ச் ஹில் கொண்டதை கண்டு, “உருப்பட வழியில்ல கொழந்த” என இரைந்தார்.
“இல்லேமா அவர்தான் இதெல்லாம் வாங்கீண்டு வந்து போட்டுக்க சொன்னார்”
என்றாள் பயந்தபடி.
“நன்னா இருக்கு, அவர் சொல்வார்தான். ஆம்பளைகள் பலதும் சொல்வா செய்வா.
நாலு இடம் போறவா பார்க்கறா... அதே எண்ணம். நமக்குனா இருக்கணும் அடக்கமும் நாணமும்.
இழுத்து போத்தீண்டு போறது தான் நம்ம பண்பாடு” என குழப்பினார். மங்கா மண்டை
கொழம்பியது. அம்மா சொல்வது சரியா அவர் சொன்னதை கேட்கணுமா என தெரியாமல் துவண்டாள்.
வைத்தியிடம் சொல்லி அழுதாள்.
“அம்மா ஒரேயடியா திட்டி தீர்த்துட்டா நா” என்று
“போறது, அம்மாதானே உன் நன்மைக்குதான் சொல்லுவா. அவா அந்த காலத்து
மனுஷா இல்லையாடா செல்லம்.... கொஞ்சம் அப்படிதான்.... மாற்றங்கள் அவாளுக்கு
அதிர்ச்சியை கொடுக்கும்.
நீ அவாள பார்க்க போறச்சே கொஞ்சம் அவளுக்கேத்தாப்போல அலங்காரம்
பண்ணிக்கோ. என்னோட எனக்கு ஏத்தார்போல வா. இதுல ஒரு குழப்பமும் வேண்டாம் டா. வயசாக
ஆக நோக்கே இதெல்லாம் எடம் பொருள் ஏவல் பார்த்து சரியாய் நடந்துக்க தானாகவே
வந்துடும்” என்று சமாதானாப்படுத்தினான்.
அப்படி படிப்படியாக மெல்ல தடுக்கி தடுமாறி பழகி கற்று தேர்ந்தாள்
மங்களம்.
இதோ இப்போது வைத்தியினுடன் காரில் ஒரு முக்கியமான கல்யாண
வரவேற்பிற்காக சென்று கொண்டு இருக்கின்றனர்.
மென் ரோஸ் நிற பெனாரஸ் மென் பட்டு. கையில் காதில் கழுத்தில் சன்னமான
ஆனால் டாலடிக்கும் வைர நகைகள், நாகரீகமான லேட்டஸ்ட் டிசைனில்
உயர தூக்கி போட்ட டிசைன் பூ கொண்டை. அதைச் சுற்றி ஒரே ஒரு வட்டமாக
செண்டு மல்லிகை சரம். நெற்றியில் அளவான அழகான பெனாரஸ் நிற கலர் குங்கும பொட்டு
வகிட்டில் குங்குமம். லக்ஷ்மி தாண்டவமாடினாள் அவள் முகத்தில். வைர பேசரி மூக்கில்
ஜொலித்தது அழகுக்கு அழகு சேர்த்தது.
இப்போது வைத்தி அட்வகேட் ஜெனரல் ஆயிற்றே. ஜம்மென சூட்டில் இருந்தார்.
அவளை இன்னமும் அதே காதல் கண்களோடு நோக்கியபடி காரை விட்டு கீழிறங்கி உள்ளே
சென்றனர். ஜோடி மீது பட்ட கண்கள் அனைத்தும் பிரமிப்பில் ஆழ்ந்தன.
மீண்டும் சந்திப்போம்.
Excellant.......
ReplyDelete