Wednesday 26 February 2020

இறைவனுடன் பேசிய தருணங்கள்



இறைவனுடன்_பேசிய_தருணங்கள்
அவனில்லாமல் அணுவும் அசையாது அல்லவா!
அதை ஒவ்வொரு அணுவணுவிலும் முற்றிலுமாக உணர்ந்து இளகி நெக்குருகி திளைத்திருப்போரில் நானும் ஒருத்தி.
பேசாத நேரம்தான் எது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் அவனிடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். சிலருக்கு என்னை காண்கையில் இது லூசு னு கூட தோன்றுமோ என்னவோ.
ஆனால் அதுதான் நிஜம். சின்ன வயதில், இவை ஒன்றும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இரண்டு வயது குழந்தையாக என் அன்னை என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு என் மனதுக்கு உகந்த பிள்ளையாரின் ஆலையத்துக்கு அழைத்துச் சென்ற பலனோ... அவனே எனக்கு சர்வமும். பேசாத போற்றாத (திட்டாத, சண்டை போடாத) நாளில்லை. கற்றதும் பெற்றதும் அவனாலே. ஒவ்வொரு மூச்சு உள் எடுத்து வெளியேற்றுவது அவனாலே என நம்புபவள் நான்.
வாழ்வில் பலப்பல தருணங்கள் ஏதோ ஒரு உருவில், ஏதோ ஒரு விதத்தில் அவன் என் முன்னே நின்று என்னை வழி நடத்துகிறான்.
ஒரே ஒரு விஷயம் என... சில தருணம் என... எடுத்துக்காட்டுடன் சொல்ல தெரியாத அளவிற்கு நான் அவனது Divine Intevention ஆல் ஆட்கொள்ளப்பட்டவள்.
சொல்ல வேண்டுமெனில்... சின்ன வயது முதலே கலை என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். தமிழ் மீதும் பற்று கொண்டிருந்தேன். ஆனால் என்றேனும் ஒரு நாள், இதோ இதுபோல், நான் உங்கள் முன்னில் அவனைப்பற்றிய என் கட்டுரையை நானே எழுதி சமர்பிப்பேன் என நான் கனவிலும் நினைத்ததில்லை.
ஒரு நொடி நேர உந்துதலில் 2012 எழுதத் துவங்கினேன். எழுத வைத்தவன் அவன். அவன் தயவில் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன். வரும் வெள்ளி என் தொடரின் அத்யாயம் என்ன என இன்று என்னை யாரும் கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால் அதுவாக வரும்... தோன்றும், எழுத வைப்பான் அவன்... என் பரம்பொருள் என் வினைகளை தீர்க்கும் விநாயகன்.
இதெல்லாம் கற்பனை செய்யும் வேலை என வாதிடலாம், ஆம் கற்பனைதான்... அது எங்கிருந்து எப்படி நம் அறிவில் மனதில் உதயமாகிறது... இதுவரை படிக்காத விஷயங்களை, அறிந்திராத விஷயங்களை எப்படி கோர்வையாக எழுத முடிகிறது.. அதுதான் அது. சம்பவங்கள், நாயக நாயகி கதாபாத்திர பெயர்கள்..... அவ்வளவு ஏன், கதையின் one liner கூட யோசிக்காமல் எழுதத் துவங்கி இருக்கிறேன் சில நேரம். அவன் பிள்ளையார் சுழியிட்டு துவங்கி முடித்து கொடுத்திருக்கிறான்.
அதேபோல சொல்ல வேண்டுமானால் வானொலியின் கூட கூட பாட்டை முணுமுணுக்காதவர் யார்... அப்படி பாடத் துவங்கியது இத்தனை வருடங்களுக்கு பின் இந்த வயதில் ஓரளவு பலர் முன்னே பாடும் ஒரு திறமையாக வளர்த்தவன் பாட வைத்தவன் யார்...
“என்னை பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்”. ஆம் அவனே என் பாட்டுக்கும் தலைவன்.
முறைப்படி சங்கீதம் கற்கவில்லை, கற்றுக்கொள்ள முயற்சிக்கவுமில்லை. கட்டைகள் எத்தனை தெரியாது... கம்பிகள் எவை எனப் புரியாது. நான் பாடிக்கொண்டே இருக்கிறேன். ஜானகி அம்மாவாக சுசீலா அம்மாவாக அல்ல சுதாவாக மட்டுமே, எளிய முறையில் வகையில்.
இறைவனுடன் பேசிய தருணங்கள் –ஒரு சிறிய எடுத்துக்காட்டாக:
ஏதோ கொஞ்சம் பாடும் திறமையினால் பலப்பல முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருப்போரை எங்கள் குழு எங்களது இசையால் மகிழ்விக்க முயற்சி செய்கிறோம்.
அந்த சில நிகழ்சிகளில் நாங்கள் கண்ட நெகிழ்வு எங்களுக்கு, முக்கியமாக எனக்கு, இறைவனை பிரத்தியக்ஷமாக காட்டியது.
தள்ளாத வயது, முதுகு வளைந்து கேள்விக்குறியாக... குறுகிய தளர்ந்த உடல். தடி பிடித்தோ, மற்றோரின் உதவியோடோ அல்லது சக்கர நார்காலியிலோ வந்து அமர்கிறார்கள். நாங்கள் பாடுகிறோம்...
அவர்கள் கண்களில் பிரகாசம்... முகம் முழுவதும் மலர்ந்து பூத்த புன்னகை. சிலர் கண்களின் ஓரம் கசிவு. ecstacy... புளங்காகிதம் அடைகின்றனர்.
அருகே அழைத்து “மன்னாதி மன்னன் பாட்டு தெரியுமா, உத்தம புத்திரன் பாட்டு பாடுவேளா.... MGR பாட்டு SIVAJI பாட்டு...?” என எடுத்து கொடுக்கிறார்கள். முடிந்தவரை அனைவரது ஆசையையும் நிறைவேற்றுகிறோம்.
மதியம் அந்த இல்லத்திலேயே அமுது படைக்கின்றனர். தினசரி வீட்டு  சமையல்... ஆனாலும், அமுதமாக நெஞ்சை நிறைக்கிறது. வயிறு குளிர்கின்றது. ஏன்...
கல்யாண வீட்டில் கூட இந்நாளில் அத்தனை உபசரிப்பு கண்டிப்பாக இல்லை, காணாமல் போய்விட்டது. ஆனால் அந்த மனிதம் அன்பு உபசரிப்பு ஆத்மியம் அங்கே நிறைந்து நிற்கிறது. பார்த்துப் பார்த்து தள்ளாத வயதில் பரிமாறுகிறார்கள்.
“இன்னும் கொஞ்சம் போட்டுக்கொங்கோ, வயிறார சாப்பிடுங்கோ...”
மீண்டும் பாட்டு.
“அச்சிச்சோ அதுக்குள்ள முடிச்சுட்டேளே.... ராத்திரி வரைக்கும் கூட பாடி இருக்கலாமே...?” என ஆதங்கம் – அசலே நான்கு மணி நேரம் பாடியாகிவிட்டது.
“ராத்திரி இருந்து சாப்டுட்டு போயிருக்கலாம், எங்களுக்கும் இன்னமும் சந்தோஷமா இருக்குமே?” என ஆற்றாமை.
மீண்டும் வருகிறோம் என வாக்கு கொடுத்து விடைபெறும்போது அந்த தருணம் நான் சந்தித்த “இறைவனுடன் பேசிய அந்த தருணம்”.
பஞ்சாக நொந்திருக்கும் கைகொண்டு நம் கையோடு கை இணைத்து அமுக்கி பிடித்து “ரொம்ப நன்னா பாடினேள் மா எல்லாரும். நன்னா இருங்கோ” என் கன்னம் வருடி கண் வியர்த்து தலை மீது பட்டு கரம் வைத்து ஆசிகள் வழங்கும் அந்தத் தருணம்... அந்த ஸ்பரிசம் - உலகில் வேறெதுவுமே தேவையில்லை.
அன்று வீடு திரும்பி, பசி தூக்கம் சோர்வு களைப்பு அறியாது.... உடை கூட மாற்றத் தோன்றாது சுருண்டு கிடப்பேன். இறைவனை என்னை ஸ்பரிசித்ததால், அவன் என்னை வருடியதால்.... என்னை உச்சி முகர்ந்தான். கன்னம் வருடினான்.
“கட்டாயம் சீக்கிரமா வந்துடணும் என்ன, எங்களோட முழு நாள் இருக்கணும் என்ன, இங்கேயே சாப்பிட்டுடலாம்” – நம்மில் எத்தனை பேர் இந்த வார்த்தைகளை நம் உறவுகளிடமிருந்து சமீபத்தில் கேட்டுள்ளோம்... மனதை தொட்டு கேட்டுப் பாருங்கள்... நாம் இந்த சொற்களை சமீபத்தில் யாரிடமாவது மனமார கூறினோமா – என் சொந்த பதில் – இல்லை.
அவர்கள் வாழ்க்கையில் நொந்து போனவர்கள். எந்த ஆசையையும் இனி பூர்த்தி செய்து கொள்ள முடியாத தள்ளாமை. முடியாமை, சிலருக்கு நோய் நொடி வலி வேதனை. தனிமை. அவரவர் முகத்தையே தினமும் கண்டு சலிப்படைந்த நிலை. நாம் அங்கே சென்று அவர்களை ஏதோ கொஞ்சம் மகிழ்விக்கையில் ஏதோ அவரவரது சொந்தங்களே வந்து சந்தித்தைப்போன்ற ஒரு ஆனந்தநிலை.
“இன்னிக்கி நேரம் நன்னா போச்சு. நாளைலேர்ந்து திரும்ப சூனியம்” என அவர்கள் கூறும்போது நம் கண்கள் வியர்கின்றன.
ஒரு ரொம்ப அற்புதமான வரைபடம் உண்டு, நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம் – உலகின் இரு மூலையிலிருந்து இரண்டு கைகள் நீண்டு விரல்கள் ஒன்றை ஒன்று தொட முயலும் முனைகள் தீண்டும். அதே நிலை இங்கே - இறைவன் கையெட்டும் தூரத்தில், நம்மை ஸ்பரிசிக்க காத்திருக்கிறான்.
நாம் அவர்களுக்கு நம்மால் ஆன சந்தோஷத்தை கொடுக்க கை நீட்டுகிறோம். அவன் அவர்கள் மூலம் நம்மை மனமுவந்து ஆசிகளுடன் கருணையுடன் மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் தீண்டுகின்றான்.
‘இது போதும் எனக்கு, இது போதுமே... வேறென்ன வேண்டும் இது போதுமே
நன்றி வணக்கம்.
(இதை இங்கே ஒவ்வொரு வார்த்தையையும் எழுத வைத்தவனும் அவனத்தான்)

2 comments:

  1. //இன்னிக்கு நேரம் நன்னா போச்சு. நாளைலேர்ந்து திரும்ப சூனியம்// - மனதைத் தொட்டது.

    அவன் அருள் என்றைக்கும் எல்லோருக்கும் தொடர்ந்திடட்டும்...

    வெங்கட் நாகராஜ், புது தில்லி.

    ReplyDelete