Friday 14 February 2020

MANGALAM MAMI - 2 - Kadhalar Dhina Special


மங்களம் மாமி – 2
கால் நீட்டி வசதியாக ஊஞ்சலில் அமர்ந்தபடி பவழமல்லி தொடுத்து கொண்டிருந்தாள் மங்களம். அந்த பூவின் அழகு, அதன் ரம்மியமான மணம் மயக்கும் வாசம் அவரையும் மீறி அவரை கொள்ளைகொண்டது. ‘சுவாமிக்கு போடற பூவை முகர்ந்து பார்க்கப்டாது, தலையில் சூட்டி அழகு பார்க்கப்டாதுனு சொல்லுவா, ஆனா இதன் மணம் தானாவே வந்து மூக்கினுள்ளே நுழைந்து என்னுளே வ்யாபிக்கறதே...’ என வியந்தபடி தொடுத்தார். அந்த சின்னஞ்சிறு பூவின் கொள்ளை அழகு அதன் ஆரேஞ் நிற சிறு காம்பு ஆஹா. கோர்த்து மாலையாக்கி சுவாமி படங்களுக்கு போட தயாராக்கிக்கொண்டிருந்தாள்.
கூடவே செம்பருத்தி, அரளி, ஜாதி, நந்தியாவட்டை கனகாம்பரம் என முறம் நிறைய பூக்கள் சிரித்தன. அவற்றின் அழகும் சுகந்தமும் மனதை மயக்க மனம் எங்கோ சல்லாபித்தது.
அவளுக்கு பன்னிரண்டு வயதில் திருமணம். எப்போதுமே பூரண பெண்மைத்தனம் நிரம்பியவளாக வளர்ந்தவள் மங்களம். தலை நிறைய பூ, புன்சிரிப்பு, மருதாணி, நீண்ட தலை பின்னல், நீண்ட கருவிழிகளில் கண்மை, அகன்ற நெற்றியில் சிறிய திலகம் என வளைய வருபவள். தங்கம் என்றில்லாவிடினும் கை நிறைய கண்ணாடி வளையல்கள் கழுத்தில் ஏதோ ஒரு மணிமாலை காதுகளில் ஜிமிக்கி என இருப்பாள். அலங்கார பூஷிதை என்பார்கள் அது போல சித்தாடை கட்டிய பாலாதிருபுரசுந்தரி தான்.
அவளை முதன் முதலில் பெண் பார்க்க வந்ததே வைதீஸ்வரந்தான். பதினெட்டே வயது. சங்கோஜமாக ஒரு மூலை நாற்காலியில் ஒடுங்கி பவ்யமாக அமர்ந்திருந்தான். நெற்றியில் மூன்றாம் பிறையாக சந்தன தீற்றல். பிரகாசமான கண்கள். காபிப்பொடி கலர் பான்ட் சந்தன நிற சட்டை. படிய வாரிய கிராப். அவள் காபியுடன் தடுமாறி முன்னே நடந்தாள். பாவாடை தாவணியில் இருந்தாள். ஆழ் நீல பட்டு பாவாடையில் அரக்கு நிற பார்டர் அரக்கு தாவணி நீலநிற ப்ளவுஸ். ஜிமிக்கி காதில் ஆட குஞ்சலம் பின்னே ஆட, கொலுசு சத்தம் சன்னமாக கிணுகிணுக்க மென் நடையில் வந்து காபி கொடுத்தாள். எங்கே கொட்டி விடுவாளோ என அவள் தாய் இரண்டிரண்டாக கொடுத்து விட்டார்.
கொடுத்துவிட்டு பாயில் அன்னையின் அருகே சென்று அமர்ந்தாள். “ஏதானும் பாடுடீம்மா கொழந்தே” என்றார் அவள் வருங்கால மாமியார். அவள் திகிலாக அன்னையை காண... “என்ன பயம், பாடு... ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடு” என்று ஊக்குவித்தார். “சின்னசிறு பெண்போலே பாடறேனே?” என அவர் காதோரம் கூறினாள். சரி என்றார் அவரும்.
இவளும் மெல்லிய குரலில் அதிராமல் ஆனால் தேனாக பாடினாள். கேட்ட அனைவருக்கும் கண்முன்னே சித்தாடை இடையணிந்த அந்த ஸ்ரீதுர்கை சிரித்திருந்தாள். பரவசமாகினர். ரசித்து லயித்து போனான் வைத்தி.
“என்னடா, உனக்கு ஓக்கேவா?” என கேட்டனர். அவன் மெளனமாக தலை குனிந்து புன்னகைதான்.
“மாப்ள ரொம்ப அடக்கம், கூச்சம்” என்று பேசிக்கொண்டனர்.
“இங்கேதான் இப்படி... காலேஜ்ல கேளுங்கோ இவனப்பத்தி, பெரிய பேச்சாளனாக்கும்” என்று சிலாகித்தனர்.
போய் தகவல் சொல்கிறோம் என்ற அனாவசிய பந்தா இல்லாமல் “நிச்சயத்துக்கு நாள் பார்த்துட்டு சொல்றோம். ரொம்ப திருப்தி. கொழந்தைக்கு நீங்க என்ன பண்ணணுமோ அத போடுங்கோ போறும்” என சென்றுவிட்டனர். ஆத்தில எல்லாருக்குமே ஏக திருப்தி சந்தோஷம். நல்ல வரன் சட்டென அமைந்ததில்.
நிச்சயம் நடந்தது. இந்தக் காலம் போல பெண்ணை அழைத்துப் போவது வழக்கமில்லை. குடும்பத்து பெரியோர்கள் போய் தாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.
கல்யாண வேலைகள் ஜரூராக நடந்தது. ஆத்து வாசல்ல தெருவையே அடைத்து பந்தல் போடப்பட்டது. பக்கவாட்டில மண்டபம் மேடை அலங்காரம். மாவிலையும் பட்டு துணியும்தான் அந்த கால அலங்காரம் வேறென்ன.... இவள் அப்பா, முதன் முதலில் இவளது கல்யாணத்திற்கு என, கலர் சீரியல் பல்ப் போட வைத்தார். ஊரே வேடிக்கை பார்த்தது அந்த வண்ண வண்ண விளக்குகள் அணைந்து எரிவதை.
நாலு நாள் கல்யாணம். பிள்ளை வீட்டினர் வந்து தங்க தனியாக பக்கத்து தெருவில் அவாளுக்கு ஜாகை. அவாளுக்கு குறையில்லாம கவனிக்க தனியா ரெண்டு மனுஷா. மச்சினன் பாலு கூட இருந்து கை கொடுத்தான் நாணாவுக்கு. மைத்துனனாயிற்றே.
விரதம், ஜானவாசம், பொண்ணழைப்பு எல்லாம் தடபுடலாக நடந்தது. மருதோன்றிய விரல்களும் செம்மை ஏறிய கன்னங்களும் சிவந்த உதடுகளும் கண்மை நீட்டிய கருவண்டு கண்களுமாக அரக்கு வண்ண கூரை பொடவையை கட்டிக்கொண்டு பொன் பொதியாக பொம்மை போல தன் தந்தையின் மடியில் வந்தமர்ந்தாள் மங்களம். அந்த ஒன்பது கெஜ மடிசாத்து பொடவையை அந்த சிறு இடையாளுக்கு, குழந்தை பெண்ணிற்கு கட்டுவதற்குள் வியர்த்துதான் போனது வீட்டு பெண்டிருக்கு.
“பபூன் மாதிரி இருந்தே” என பின்னாளில் கிண்டலடித்தார் வைத்தீ.
மங்கள நாண் கட்டி அவளை சாஸ்வதமாக தனதாக்கி கொண்டான் வைத்தி.
மங்களம் உடனேயே புக்காம் போய்விட்டாள்.
“ஒண்ணுமே தெரியாது, கொழந்தே அவோ.... மாமி, ஏதானும் தப்பு பண்ணின... பேசினா மன்னிச்சுடுங்கோ” என சம்பந்தி மாமியின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள் மங்களத்தின் அன்னை காமாக்ஷி.
“என்ன மன்னி நீங்க, இத சொல்லணுமா என்ன.... எனக்கும் ரெண்டு பொண்கள் இருக்கா. அவ பாட்டுக்கு ஜம்முனு இருப்போ அவாளோட பழகீண்டு.
மெல்ல மெல்ல தானே கத்துப்போ. இல்லேனா நான் எதுக்கு இருக்கேன், கத்து குடுத்துக்கறேன். கவலைய விடுங்கோ. எம்மாட்டுபொண்ணுக்கு என்ன... ஜாம் ஜாம்னு குடித்தனம் பண்ணுவோ.... நீங்களே பார்க்கதானே போறேள்” என மங்களத்தின் முகம் வழித்தார் மாமியார்.
மாட்டு வண்டியில் வைத்தியுடன் நாத்தனார் இருவருடனும் ஏறி அமர்ந்து பக்கத்து ஊர் பிரயாணம்.
அங்கே சென்று மெல்ல மெல்ல தட்டு தடுமாறி குடித்தனம். தாம்பத்தியம் என்றால் என்னவென்றே தெரியாத சிறு பெண்.
வைத்தியும் அறியாதவன்தான். சேர்ந்தே இயற்கையுடன் கைகோர்த்து கற்று தேர்ந்தனர்.
முதல் இரவன்று அவளை பால் சொம்புடன் உள்ளே விட்டு கதவடைக்க. “ஐயோ, கதவ பூட்டாதீங்கோ நேக்கு பயம்” என்று தீனமாக குரல் கொடுத்தாள் குழந்தை.
“எதுக்கு பயம், நான் இருக்கேனோல்லியோ. வா இங்க வந்து உக்காரு” என பக்குவமாக பேசி அழைத்து வந்தான் வைத்தீ.
“மாமி, இல்ல இல்ல, அம்மா இத உன்.. உங்க... கிட்ட குடுக்க சொன்னா” என ஓளறிகொட்டி கிளறி மூடினாள். அவன் புன்னகைத்தான்.
“அம்மானே சொல்லு. மாமி வேண்டாம். இனி எங்கம்மா உனக்கும் அம்மாதானே...” என்றான் தலை சாய்த்து.
“ஆமாம் எங்கம்மா சொன்னா” என்றாள்.
“என்னை, நீங்கனு சொல்லு, நீன்னு சொன்னா எனக்கொண்ணும் இல்லை, பார்க்கறவா உன்னை தப்பா நெனச்சுப்பா இல்லியா... அதான் சொன்னேன்“ என்றான்.
“ம்ம் சரி” என்று மண்டையை ஆட்டினாள். கூடவே ஜிமிக்கி ஆடியது.
“உக்காரு” என்றதும் எம்பி படுக்கை மேலே ஏறினாள்.
“அச்சிச்சோ” என மருதோன்றிய கைகளால் வாய்பொத்தி மீண்டும் கீழே குதித்தாள்.
“என்னாச்சு?” என்றான்
“இல்ல, உங்கள நமஸ்கரிக்கணும், பால் குடுத்துட்டு தான் உக்காரலாம்னு அம்மா சொன்னா” என்றாள். அவனை குனிந்து நமஸ்கரிக்க போனாள். “போறும் போறும். இதெல்லாம் வேண்டாம். நான் என்ன சாமியா என்ன. பெரியவாளுக்கு பண்ணினா போறும்” என தூக்கி நிறுத்தினான்.
முதல் ஸ்பரிசம். அவன் கை பிடித்த இடத்தில ஏதோ செய்தததோ, ஏதோ தோன்றியதோ, ஏதோ சொல்லொணா உணர்வு அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. ‘இன்னொரு ஆண் அவளை தொடுவதாவது...’ என கொஞ்சம் வியர்த்தது. அவன் கைகளை தன் கையிலிருந்து எடுத்துவிட முயன்றாள்.
“என்னாச்சு, நான் ஒன்ன தொடப்டாதா?” என்றான் சிறு சிரிப்புடன்.
“தொடலாமா... மத்த ஆம்பளேல் யாரையும் தொடவிடப்டாதுன்னு அம்மா சொல்லி இருக்காளே...” என்றாள் வெகுளியாக.
அவன் கடகடவென சிரித்தான். அவளுக்கு சிரிக்கணுமா இல்லை ஏதானும் தவறாக சொல்லிவிட்டோமா என உணர முடியவில்லை.
“மத்தவாளும் நானும் ஒண்ணா, நான் நோக்கு தாலி கட்டி இருக்கேனோல்லியோ, நான் ஒன்னோட ஆம்படையான் இல்லியா மங்களம்?” என்றான்.
“ஆமா” என்று குனிந்து மாங்கல்யத்தை எடுத்து தொட்டு தடவி பார்த்து புன்னகைத்தாள்.
“அத விடு. இந்தா இந்த பால குடி” என அவன் கொஞ்சம் விட்டு குடித்துவிட்டு அவளிடம் தந்தான்.
“அச்சிச்சோ” என்றாள் மீண்டும்
“இப்போ என்ன?”
“இல்லே, நாந்தான் பாலவிட்டு தரணும்னு அம்மா...” என்று கையை பின்னே காண்பித்து அவன் சிரித்த முகத்தை பார்த்து பாதியில் நிறுத்தினாள்.
“நீ கீல் குடுத்த பொம்மை இல்லை மங்கா. ஒரு மனுஷி. அம்மா சொன்னத எல்லாம் கேட்டுக்கணும்தான். ஆனா எதெது எந்த நேரத்தில எப்படி நடந்துக்கணுமோ அப்படி, மத்தவாளுக்கு மரியாதை குறைவில்லாமைக்கு, ஆனா உன் மனசு சொல்றபடி நீ செய்யலாம் நடந்துக்கலாம்... புரியறதா நான் சொல்றது?” என்றான் வாஞ்சையாக.
“ம்ம்” என மண்டையை ஆட்டினாள். பாதியும் புரியவில்லை என்பதை அவள் மருண்ட கண்கள் கூறின.
“இந்த மருதாணி யாரு வெச்சுவிட்டா.... கல்யாண புடவையில நோக்கு எந்த வண்ணம் ரொம்ப பிடிச்சுது..... என்னை பார்த்தியோ. எந்த டிரஸ் நேக்கு நன்னா இருந்துது?” என பல பொது கேள்விகள் கேட்டு அவளை சகஜமாக்கினான்.
அவள் முணுமுணுப்பாக ஆனால் கண்கள் அகல ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்தாள். அவள் கண்னில் தூக்கம் சொக்குவதை கண்டான். அவனுக்குமே அயர்ச்சியாக இருந்ததுதான்.
“சரி படுத்துக்கோ” என்றான்.
‘குழந்தையுடன் போய் என்னத்த...’ எனத் தோன்றியது
வருடம் திரும்புவதற்குள் வைத்தியை அவளும், அவளை அவனும் மிக நன்றாக உணர்ந்திருந்தனர். கணவன் என்ற மகத்துவத்தை அறியாவிடினும், ‘இவன் என் உற்ற தோழன், துணைவன், என் நலன் காப்பவன், எனக்கு நல்லதை சொல்பவன், செய்பவன்’ என்ற கருத்து மிக ஆழமாக அவள் மனதில் ஏறி அமர்ந்தது.
‘இனி எனக்கு எல்லாமே இவன்தான்’ என்ற ஒட்டுதல் மிக கெட்டியாக உறுதிபட்டுப்போனது அந்த பிஞ்சு உள்ளத்தில். அதன் பலனாய் அவன் எள் எனும் முன் எண்ணையாக நின்றாள். அவனது பெற்றோர் கூட பிறந்தோர் என்பதால் அவர்களும் அவளுக்கு பிரியமானவர்களாகிப் போயினர்.
அம்மா அப்பா நினவு வரும்தான் வைத்தியிடம் தனிமையில் கூறுவாள். “ஏன்னா” என அழைக்க கற்றிருந்தாள்.
இப்போது நினைத்தாலும் சிரித்து புரைக்கேறியது மங்களத்திற்கு.
அந்நாளில் ஒரு நாள், ஏதோ பேச்சு வாக்கில், நல்ல காலத்திற்கு தங்கள் அறையில்தான், பேசும்போது “அப்பிடி இல்லடா வைத்தீ” என்றாளே பார்க்கணும்.
ஸ்தம்பித்து நின்று பின் கடகடவென சிரித்து தீர்த்தான் வைத்தீ.
“ஐயய்யோ மன்னிச்சுடுங்கோ மன்னிச்சுடுங்கோ நா” என் வாய் பொத்தி கண்ணில் நீர் நிறைய அப்படியே ஸ்தம்பித்து போனாள் மங்களம்.
“இப்போ என்னவாயிடுத்து இத்தனை கலங்கற மங்களம். விடும்மா, இதெல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நிஜத்தில் அழகா இருந்துது நீ சொன்னது. எனக்கு ரொம்ப பிடிச்சுது.... இன்னொரு தரம் கூப்புடுடி” என அருகே வந்து அவள் மோவையை பிடித்து கெஞ்சினான் கண்களில் குறும்பு கூத்தாட.
“ராம ராமா, மானமே போச்சு... போங்கோன்னா” என வெட்கமும் வேதனையுமாக ஓடியே விட்டாள் மங்களம்.
வீட்டு வேலைகள் பொறுப்புகள்.... தான் அதில் செய்ய வேண்டியவை.... குடும்பத்தாருடனான உறவுகள், பணிவிடைகள் என ஒவ்வொன்றாய் வேகமாக கற்று தேர்ந்தாள் மங்களம்.
நாள் கணக்கு மாதங்களாகி வருடத்தை நெருங்க, எப்போதோ இயற்கை தன் பணியை செவ்வனே செய்தது.
தெரிந்து தெரியாமல் தடுக்கி தடுமாறி நிகழ வேண்டியவை இனிதே நடந்தேறியது. பலன் மங்களம் தன் பதினான்காம் வயதில் முதல் குழந்தை உண்டானாள். அவளுக்கு என்ன தெரியும் கணக்கும் கர்ப்பமும் மாமியார் தான் அவளை கண்டுபிடித்து கேட்டார்.
“ஏண்டீ மங்கா, என்னாச்சு, இந்த மாசம் இன்னும் ஆகலை போலிருக்கே...?” என. அப்போதுதான் அவளுமே அதை உணர்ந்தாள்.
“ஆமாம் போலிருக்கு மா” என்றாள்.
“ஆமாம் போலிருக்கு மா வா.... நன்ன்ன்னா இருக்கு.... என்னடி ஏதானும் விசேஷம் வெச்சிருக்கியோ?” என அவள் பளபளத்த முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். ஏதோ சந்தேகம் தோன்றியது.
பின்னோடு அந்த ஊர் மருத்துவரை வீட்டுக்கு அழைத்து அவளை பரிசோதிக்க வைத்தார். அவர் நாடி பிடித்து, “ரெட்ட நாடி பளிச்சுன்னு விளங்குதுங்களே, வம்ஸவ்ருத்திதான்.... சந்தோஷமா?” என சிரித்துவிட்டு தக்ஷணை வாங்கிக்கொண்டு கிளம்பினார். அனைவருக்கும் ரொம்ப சந்தோஷம். மங்களத்தின் தாய் வீட்டிற்கு தகவல் சொல்லி அனுப்பப்பட்டது.
“வாடா வைத்தீ, உன் ஆம்படையா குளிக்காம இருக்காடா... சந்தோஷமா” என கிண்டலடித்தனர். அவன் உள்ளுக்குள்ளே பரவசமானான். புன்னகைத்தான். அவளை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்.
அன்று இரவு வைத்தீ அவள் கைகளை பிடித்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். “நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா... நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா வரப்போறது” என சந்தோஷித்தான். பிள்ளை உண்டானதும் அதன் முக்கியத்துவமும் தெரியாவிடினும், தன் மனதுக்கு ஆப்தனை மகிழ்வித்தோம் என புரிந்து அவளும் புளங்காகிதம் அடைந்தாள். வெட்கம் தானே ஏறி கன்னத்தில் செம்மை சூடிக்கொண்டது. தலை கவிழ்ந்தாள்.
“நோக்கு பொண்ணு வேணுமா புள்ளை வேணுமா மங்களம்?” என்றான்.
“உங்களுக்கு?” என்றாள் வெட்கத்துடன்.
“நேக்கு பெண் குழந்தை வேணும்னு இருக்கு.... பகவான் சங்கல்பம் என்னவோ பார்போம்” என்றான்.
கண்கள் அகல “பெண் தான் வேணும்னு நேக்கும் தோணித்து.... அழகழகா அலங்காரம் பண்ணிப் பார்க்கலாம். பொண்ணுதான் என்னிக்குமே நல்லது ஆத்துக்கு.
‘சமுத்து என்னத்த பெத்தா தலைச்சன் பொண்ண பெத்தான்னு’ எங்கம்மா என்னைப் பார்த்து சொல்லீண்டே இருப்போ” என்றாள் கண்களில் கனவுகளுடன்.
பின்னோடு பக்ஷணங்கள் செய்து எடுத்துக்கொண்டு விசாரிக்க வந்தனர் நாணா காமாக்ஷி தம்பதியினர். நாள் பார்த்து மசக்கைக்கு அழைத்துச் சென்றனர்.
பெரியோர் முதலில் ஆண் வாரிசு வேண்டும் குலம் விளங்கணும் என கணக்கு போட்டனர்.
இறைவன் அவர்களுக்கு செவி சாய்த்தான் போல, ஆண் தான் முதலில் பிறந்தது.
பூச்சூட்டல் முடிந்து இதே போல கால் நீட்டி அமர்ந்து, ஒரு மாலை, பூ தொடுத்த ஞாபகம் இப்போது வந்தது மங்களத்திற்கு.
யோசனையில் பூரித்திருந்தவளை திடுக்கிட வைத்தது அவர் குரல்..,
“என்ன... என்ன யோசனை மங்களம்?” என்றபடி உள்ளே நுழைந்த வைத்தி குரல் கேட்டு, “வந்துட்டேளா?” என சட்டென இறங்கினாள் ஊஞ்சலைவிட்டு. பூக்கள் தெறித்து சிதறின.
“என்ன என்ன அவசரம், நான்தானே வந்தேன்... எதுக்கு இப்படி அவசரமா எழுந்துப்பானேன். இத்தனை வயசுக்கு நீ மாறலை மங்கா.”
“சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ தேவி?” என கைநிறைய அள்ளிய ஜாதி மல்லியை முகர்ந்தார். அவள் முகம் அருகே வந்து கையில் இருந்த பூவை ஊதினார். அவள் முகம் தலை எங்கும் ஜாதி மல்லி பறந்து விழுந்தது.
“போறுமே, என்ன இது யாரானும் பார்க்கப் போறா...” என வெட்கம் முகம் மலர கன்னம் சிவக்க, கூச்சமும் பயமும் போட்டி போட சிலிர்த்தாள் மங்களம்.
அவரை நிமிர்ந்து பார்த்தாள் ஒரு நொடி, பின் தலையை குனிந்து கொண்டாள். தன் சட்ட ஆபீஸ் சென்று வந்ததால் வெள்ளை பான்ட் ஷர்ட், அதன்மேல் கருப்பு கோட் அணிந்து ராஜா போல ஆஜானுபாகுவாக நின்றார். பளீரென்ற முகம் தீஷிண்யமான கண்கள். கூரான நாசி. நெற்றியில் பட்டையான விபூதி. சாக்ஷாத் சுந்தரேஸ்வரர் தான் எனத் தோன்ற வைத்தது.
அதே நேரம் இவளை ஆழ்ந்து கண்ட வைத்தி, “சும்மா சொல்லப்டாதுடீ மங்களம், இந்த வயசிலும் நீ ஆனாலும் அழகுதான். அந்த வெக்க சிவப்ப பாரு...” என அவள் சிவந்த கன்னத்தை தீண்டினார்.
“போங்கோ நா” என வெட்கம் மிகுந்து அவர் மார்பிலேயே தலை கவிழ்ந்தாள் மங்களம்.
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.






3 comments:

  1. Arumai. Antha kala kalyanam superb first 60 ahm kalyanam second inimaiyana ninaivugal Arumai

    ReplyDelete
  2. அருமை.அந்த கால பால்ய விவாகம் மிக அழகாக சித்தரிக்க பட்டுள்ளது🌹🌷🌺

    ReplyDelete