Friday 21 February 2020

MANGALAM MAMI - 3



மங்களம் மாமி 3
“அம்மாடி, என்ன வெய்யில் இது, இன்னும் சித்திரையே பிறக்கல...” என அலுத்தபடி மங்களம் ஆத்துக்குள்ளே வந்து ஊஞ்சல்ல உட்கார்ந்தா. “அம்மா, இந்த மோர் தண்ணி கொஞ்சம் குடியுங்கோ, வெய்யிலுக்கு இதமா” என்றபடி கோகி கொண்டு குடுத்தாள்.
“சாப்பிடணுமேடி...” என்றபடி எடுத்து ஒரு மிடறு விழுங்கினார். பானை தண்ணீர் கலந்த ஜில்லென்ற மோர் தொண்டையை தாண்டி அமிர்தமாக இறங்கியது. பக்குவமாக உப்பிட்டு கொஞ்சமாக பெருங்காய பொடியும் கறிவேப்பிலை ரெண்டு ஜீரகம் என பதமாக கலக்கி இருந்தாள் கோகி எனும் கோகிலம்.
கோகி இந்தாத்துக்கு வந்ததே ஒரு அதிசயம், அசம்பாவிதமான சந்தர்பமும்தான்.
ஒரு பத்து பதினோரு வருடங்களுக்கு முன்னே ஒரு நா மங்களம் மாமி கோவிலுக்கு போயிட்டு வைத்தி மாமாவோட கார்ல ஆத்துக்கு வந்திண்டிருந்தா, ரெண்டு தெரு தள்ளி வர்றச்சே ஒரு மூலை குடிசை முன்னால ஒரே கூச்சலும் அமர்க்களமுமா இருந்துது. இவா ஆத்துல வேல பண்றவளும் இருக்க, மங்கா, “என்னடி ஒரே கூத்து?” என வண்டியை நிறுத்த சொல்லி கேட்டார்.
“ஐயோ அம்மா அத ஏன் கேக்கறீங்க” என காதோடு வந்து பக்கமாக ஓதினாள்.
“அடிப்பாவிகளா.... என்னடி உசிரோட விளையாடறேள், இதுல என்னடி வேடிக்கை உங்களுக்கு” என மாமி பதறி போனாள்.
“அட இல்லம்மா, யார் வீட்டுப் பொண்ணுன்னு தெரியல, யாருன்னு ஒரு தாக்கு தகவல் இல்லீங்கம்மா... அதான் ரோசனையா இருக்கோம்” என்றாள் இழுத்தபடி.
“போடி போக்கத்தவளே, நகரு” என இறங்கி அந்த குடிசையின் உள்ளே சென்றார் மங்கா. பார்த்தவர் அலமலர்ந்து போனார். நெஞ்சு துடித்துப்போனது. ‘இவளை முந்தாநா கோவில்ல பார்த்தேனே...’ என நினவு கூர்ந்தார்.
முந்தைய நாள் மாலை கோவில் சென்று சுற்றிவர வெளி பிரகாரம் திண்டருகில் யாரோ சுருண்டு மயங்கியதை போலத் தோன்ற சட்டென நின்றார் மங்கா. ‘யாரு இது’ என அருகே சென்று பார்க்க அந்த பெண் மயக்கமாகித்தான் இருந்தாள். சின்னப் பெண். மிஞ்சி போனால் பதிமூணு பதினாலு வயதிருக்கலாம். ‘அச்சோ பாவமே’ என மங்காக்கு இளகி போயிற்று. 
“அம்மாடீ கொழந்தே” என அழைத்து பார்த்தார். பதிலில்லை. சோர்வு மயக்கம்தான் என முகத்தை பார்த்தால் ஓரளவு கணிக்க முடிந்தது, மளமளவென உள்ளே சென்று சில பிரசாத பொட்டலங்களும் கொஞ்சம் தண்ணீரும் வாங்கிக்கொண்டு வந்தார்.
அழுக்கேறிய உடையுடன் சுருண்டிருந்த அந்தப் பெண்ணை மெல்ல எழுப்பியவர் அதிர்ந்து விதிர் விதிர்த்து போனார். அந்த பச்சிளம்பெண் நிறைமாதம் போல காணப்பட்டாள். இதென்ன கூத்து என பதைத்தது.
அந்தப் பெண் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“இந்தா இதை சாப்பிடு, மொதல்ல ஒரு வா தண்ணி குடி” என புகட்டினார். குடித்தவள் பிரசாதத்தை பார்த்ததும் ஆவலுடன் வேறு எதையும் யோசிக்காமல் கபகபவென உண்ண துவங்கினாள். மங்காவின் நெஞ்சு துடித்து போனது.
“நீ யாரு, எங்கேர்ந்து வரே... தனியாவா வந்தே?” என கேட்க அந்தப் பெண் பதிலேதும் கூறாமல் சாப்பிட்டுக்கொண்டே மாலை மாலையாக கண்ணீர் வடித்தாள்.
“சரி சரி அழாதே, சாதம் நெஞ்சில மாட்டிக்கும் விக்கும்... நீ மொதல்ல சாப்பிடு.... நெறைய இருக்கு, கெட்டுபோகாது நாளைக்கும் சாப்பிட்டுக்கோ என்ன....” என்றபடி மேற்கொண்டு என்ன செய்வதென அறியாமல் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வெளியே வந்தார்.
‘இவள் யாரு இங்கே எப்படி, இந்த வயதில் கர்ப்பமாவது...’ என பல்வேறு யோசனைகள். இரவு வைத்தியிடம் எல்லாவற்றையும் கூறினாள்.
“அட பாவமே, என்ன சொல்றே மங்களம்” என அவரும் யோசனையானார்.
“சரி, நாளைக்கு ஏதானும் தாய்சேய் நல விடுதி கண்டு பிடிச்சு சேர்க்கலாம். நீ இப்போ நிம்மதியா தூங்கு” என்றார்.
இதோ இப்போது மங்கா கண்டதும் அதே பெண்தான். பிரசவ வலி கண்டிருந்தது. துடித்து கொண்டிருந்தாள். அசலே பலமே இல்லாத பூஞ்சை உடம்பு. பச்சிளம் வயது வேறு. என்னாகுமோ.
இதில் சுற்றியும் நின்ற அனைவருக்கும் ஏதோ தயக்கம் யோசனை. யாரோ என்னவோ.... உதவ போய் நாளைக்கு என்ன ரகளை வருமோ, வினை வருமோ, என்ன ஜாதியோ மதமோ என்பது வேறு. பெண்ணின் முகத்தை பார்த்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளோ பேசும் நிலையில் இல்லை.
மங்கா அவசரமாக வெளியே காருக்கு வந்தாள். சுருக்கமாக வைத்தீயிடம் விஷயத்தை கூறினாள். கண்ணாலேயே அவரிடம்  அனுமதி பெற்றாள். மறுபடியும் சட்டென குடிசையினுள் நுழைந்தாள்.
“த பாருங்கோ, அவ யாரோவா இருந்துட்டு போகட்டும், யோசிக்க இப்போ நேரமில்லை. நான் அவளுக்கு முடிஞ்ச அளவு உதவ போறேன். ரெண்டு உசிரோட நீங்க விளையாடறேள்.
அவளே ஒரு கொழந்தே இதில, அவளுக்குள்ள ஒரு உசிரு, ரெண்டையும் காப்பாத்தணும், இல்லேனா ஏதானும் ஒரு உசிரு போய்டும். அதாபார்த்துண்டு என்னால சும்மா இருக்க முடியாது. உதவணும்னு  நீனைக்கறவா உள்ளே இருங்கோ. மத்தவா எல்லாம் வெளியில போய்டுங்கோ. அவாவா வேலைய பாருங்கோ” என்றார் அதட்டலாக.
“என்ன மாமி நீங்க இப்படி சொல்றீங்க” என நான்கு பேர் முன் வந்தனர். “அப்போ சரி, இந்தாப்பா, நீ போய் உள்ளூர் மருத்துவச்சிய சட்டுன்னு வரச்சொன்னேன்னு சொல்லு. நான் அழைச்சதா சொல்லு” என விரட்டினாள்.
“டீ கண்ணம்மா, நீ போய் அடுப்பில சுடுதண்ணி வை” என அனுப்பினாள். மளமளவென காரியங்கள் நடந்தன.
“அதுசரி, இவ இந்த குடிசைக்குள்ள எப்படி வந்தா, இது நம்ம வண்ணாத்தி வீடாச்சே?” என்றார்.
“ஆமா மாமி, இது தட்டு தடுமாறி நடந்து வந்துச்சு.... இந்த தெருவில வந்து வயத்த பிடிச்சுகிட்டு மயக்கமா விழுந்துடுச்சு. இந்த வூடு காலியா இருந்துதுன்னு வாச படலை தள்ளி உள்ளே கொண்டாந்துட்டோம் நாங்கதான்” என்றாள் இன்னொருத்தி.
“நல்ல காரியம் பண்ணினேள் போ” எனவும், அந்தப் பெண் மேலும் அலறவும் சரியாக இருந்தது.
பனி குடம் உடைந்திருந்தது. அனைவரையும் விரட்டி அந்த பெண்ணின் அருகே சென்று, “ஒண்ணும் இல்லை.... த பாரு... நானிருக்கேன், சுவாமி இருக்கார் பயப்படாதே” என தைர்யம் ஊட்டியபடி அவள் இடுப்பை நீவி வயிற்றை கீழ் பக்கமாக அமுக்கி விட்டாள். அந்த பெண் துடித்தாள்.
மங்காவிற்கு மூன்று பிரசவம் ஆயிற்றே ஓரளவு சமாளித்தார். கூட இரு பெண்களுமாக கால் பற்ற, அந்த பெண்ணுக்கு உந்த கூட சக்தி இருக்கவில்லை.
“டீ, அவ மயங்கறா பாரு, அவள கன்னத்தில தட்டி எழுப்பு. அவ முக்கித்தான் ஆகணும்” என் மாமி சத்தம் போட்டார்.
சுடு தண்ணி காலில் ஒத்தடம் கொடுத்தனர். வயிற்ரை அமுக்கி இடுப்பை நீவி என வைத்தியம் தொடர்ந்தது. அதற்குள் மருத்துவச்சி வந்தார். அவர் பொறுப்பெடுத்து கொண்டாலும் மங்கா அங்கிருந்து அகலவில்லை.
மிக கடினமான பிரசவமாக அமைந்தது. ஆனால் இத்தனை முயன்றும் சிறு வயது, தெம்பில்லை, முக்கமுடியவில்லை, மூச்சு திணறல் ஏற்பட்டு பிறந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது. அந்த பெண்ணோ மயங்கி கிடந்தாள்.
அவளை முழிக்க வைத்து கொஞ்சம் சூடாக கரைத்து கொடுத்து விஷயத்தை கூற அந்த பெண்ணுக்கு அழவும் தெரியவில்லை, சந்தோஷப்பட வேண்டுமா எனவும் தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தாள். அதற்குள் வண்ணான் வண்ணாத்தி தங்கள் வீட்டிற்கு வர அனைத்தும் கூறப்பட்டது.
‘அதுசரி, அடுத்து என்ன.... இவளை எங்க வீட்டில எப்படி எத்தன நாள், யாரோ எப்போ என்ன எப்படி...’ என பலருக்கும் பல கேள்விகள். யாருக்கும் இதில் திருப்தி இல்லை இஷ்டம் இல்லை... வைத்து பாதுகாக்க, என தெரிந்தது முகங்களில்.
வைத்தீ மங்காவை விட்டு ஆபீஸ் சென்றிருக்க, மங்களம் இன்னது செய்வதென அறியாமல் ஒரு நொடி திகைத்து பின் தெளிந்தாள்.
“கண்ணம்மா, இவளை குளிப்பாட்டி சுத்தப்படுத்துவேளா இல்ல அதுவும் முடியாதா?” என காரமாக கேட்டார்.
“ஐயோ என்னங்கம்மா, நான் செய்யறேன்” என அவளும் வண்ணாத்தியும் முன் வந்து செய்தனர். அந்த சிசுவை தானே அடக்கம் செய்துவிடுவதாக வண்ணான் இன்னும் இரண்டு ஆட்களோடு எடுத்து சென்றுவிட்டான்.
அந்த பெண் மெளனமாக அழுதாள். திக்ப்ரமையாக இருந்தாள். எல்லாம் முடிந்தது. தன் கையில் இருந்த பணத்தை வண்ணாத்தியிடம் தந்துவிட்டு மாமி வண்டி பிடித்து வரச்சொல்லி கண்ணம்மாவின் உதவியோடு அந்தப் பெண்ணை ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
மாமியார் ரொம்பவே ஆசாரம், மடி விழுப்பு தீட்டு என பார்ப்பவர் ஆயிற்றே, என்ன எப்படி சொல்லி எப்படி சமாளிக்க போகிறோம் என வழி முழுவதும் யோசனைதான்.
“பின்பக்கமா கொட்டகைக்கு அழச்சுண்டு போ கண்ணம்மா, நான் வரேன்” என்று வாசல் வழியே உள்ளே நுழைந்தார். நல்லவேளையாக வைத்தீ வந்திருந்தார் மதிய உணவுக்கு. அவரை கலவரத்துடன் கண்டார் மங்கா. “என்ன?” என்றார் கண்ணால். சுற்றும் பார்த்து மாமியாரை தேடினார். “சாப்பிட்டு படுத்திண்டிருக்கா அம்மா” என்றார் மெல்ல.
ஹப்பா என நெஞ்சை நீவி கொண்டார்.
“என்னாச்சு?” என வினவ சுருக்கமாக எந்த நிலைமையில் அந்தப் பெண்ணை வீட்டிற்கே அழைத்து வர வேண்டி வந்தது என கூறினார். “ஐயோ, அம்மா?” என அவரும் பயந்தார்.
“அதான் நா, எனக்கும் கலக்கமா இருக்கு நா” என்றாள்.
“சரி இரு பார்க்கலாம்” என்றார். மங்களம் பின்னங்கட்டிற்கு சென்று அங்கே வேலைக்காரர்கள் இளைப்பாற கட்டிய குடிலின் உள்ளே சென்றாள். அங்கே அந்த பெண் கயிற்று கட்டில் மேல் படுத்திருந்தாள். “கண்ணம்மா, வா, அவளுக்கு ஏதானும் ஆகாரம் குடுக்கறேன் கொண்டு குடுத்து சாப்பிட வெச்சுட்டு நீ வேணா போய்கோ” என்றார். அவளும் அதே போல செய்தாள். தானும் உண்டேன் என பெயர் செய்தாள் மங்களம்.
மதியம் அம்மா எழுந்ததும், “அம்மா ஒரு விஷயம்..” என் மெல்ல துவங்கினாள். “என்னடி?” என்றார் காபியை டபராவில் ஆற்றியபடி.
சுருக்கமாக நடந்த விஷயத்தை கூறினாள் மங்களம்.
“அடபாவமே, யாரந்த பொண்ணு, பாவம் கொழந்தே போய்டுத்தா, என்ன கொடுமை இது...” என விசனப்பட்டார்.
“யாராம், என்ன குலமாம்?” என வினவினார். புலி வந்தேவிட்டது. இவள் வைத்தியை பார்க்க அவர் இரு என கண் அமர்த்தி.
“அது தெரியலைமா. அந்த பொண்ணும் இன்னும் வாயைத் திறந்து பேச திராணி இல்லாம விழுந்து கிடக்கா” என்றார்.
“ஓ, நீயும் பாத்தியா வைத்தீ?” என்றார்.
“ஆமா மா, அதனால நாங்க ஒரு முடிவு பண்ணினோம், நீ கோச்சுக்கப்டாது மா. இது தற்காலிகமான ஏற்பாடு மா” என்றார் பவ்யமாக குழைந்தபடி.
“என்ன தீர்மானம் என்னை கேட்காம?” என்றார் அம்மா
“அந்த கொழந்தே பாவம் மா, பதினாலு கூட இருக்காது. அதான் அவள நம்மாத்துக்கே அழைச்சுண்டு வந்துட்டோம். மங்களம் கூட தயங்கினா... ஆனா நாந்தான் அம்மாட்ட பேசறேன்னு சொன்னேன்.”
“என்னடாது அநியாயமா இருக்கு, என்ன குலமோ கோத்ரமோ, பிள்ளபெத்தா தீட்டு வேற.... இங்கே கொண்டுவந்தேங்கற, என்ன கண்றாவி?” என வானுக்கும் பூமிக்கும் குதித்தார்.
வைத்தி சிறு குழந்தைக்கு சொல்வது போல புரியவைத்தார்.
“ஒண்ணும் பண்ண முடியாதுமா, ரொம்ப வீக்கா இருக்கா, எங்க மா தங்க விடறது, எங்கே போவோ அந்தக் குழந்தை... யோசி”
“ஆத்துக்குள்ள வர மாட்டா, போறுமா... நீ கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும். பச்சை கொழந்தே மா.” என்றார்
“அப்போ அவ எப்படி பிள்ளையான்டாளாம், கல்யாணம் ஆச்சா, இல்ல அதுவும் இல்லையா.... என்னடா இது கிரகச்சாரம்?” என தலையில் அடித்துக்கொண்டார்.
“மா இப்போதைக்கு ஒண்ணுமே தெரியாது மா. இனி அவ தெளிஞ்சுதான் எல்லாமும் விசாரிக்கணும்” என்றார்.
“என்னமோ பண்ணுங்கோ. எம்பேச்ச யார் கேட்கறா இந்தாத்துல...” என முறைத்துக்கொண்டு உட்கார்ந்தார்.
அந்தவரை பாக்கியம் என்று நிம்மதி ஆயிற்று.
அந்தப்பெண்ணிடம் மெல்ல பேசி விஷயம் கிரகிக்க போதும் என்றானது மங்களத்திற்கு. அந்த பெண், அவள், கோகிலம்.
அனாதை. யாரோ சொந்தக்காரர் வீட்டில் தங்கியபடி அவர்களுக்கு வீட்டு வேலையில் சமையல் என ஊழியம் செய்து வந்தாள். அடிமை போல நடத்த பட்டாள். அடிப்பது திட்டுவது தினமும் நடந்தது. கோவிலுக்கு மட்டுமே போக அனுமதி.
அங்கே போக வர ஒரு கயவன் கையில் மாட்டினாள். இவள் நிலை பற்றி அங்கே இங்கே அறிந்து அவளை நைச்சியமாக பேசி மயக்கினான். கல்யாணம் செய்துகொள்வதாக வாக்கு குடுத்தானாம். கோவலில் சத்தியம் செய்தானாம். நெற்றியில் குங்குமம் வைத்தானாம்.
இந்த சிறு பேதை அவனை முழுவதுமாக நம்பினாள். கொடிக்கு கிளைகொம்பு கிடைத்ததாக எண்ணி தொற்றினாள். அந்த கயவன் இவளை அனுபவித்துவிட்டு போனவன்தான்.
தனக்கு என்னவாயிற்று என்ன நிலை என்பது கூட புரியாத தெரியாத நிலையில் நான்கைந்து மாதங்களுக்கு பிறகுதான் தனக்குள் என்னமோ மாற்றங்கள் என்பதை உணர்ந்தாள் அந்தப் பேதை.
அந்த வீட்டின் மக்கள் மருத்துவரை அணுக, அழிக்க முடியாமல் வளர்ந்திருந்தது சிசு. உடனே இவளை வீட்டைவிட்டு நிர்தாட்சண்யமாக விரட்டி விட்டனர். ஊர் ஊராக அலைந்து அங்கே இங்கே வேலை செய்து பட்டினியும் வயிற்றில் பிள்ளையும் என இந்த ஊர் எல்லையை அடைந்தாள். இதோ இப்போது இங்கே இந்நிலையில் இப்படி.
மங்களம் துடித்து போனாள். என்னவானாலும் இவளை இங்கேதான் வெச்சுப்பேன் என மனதில் முடியிட்டுகொண்டாள்
“அம்மா” என்று அழைத்தாள் கோகி. மங்காவிற்கு வயிறு புரண்டது அந்த வார்த்தை கேட்டு.
தொழுவத்து குடிலில் தான் வாசம். ஆனால் மங்கா கை வைத்தியம் பத்தியம் நல்ல சாப்பாடு அவளை நன்றாக தேற்றியது. சுறுசுறுப்பாக வெளிப்புற காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்ள துவங்கினாள் கோகி.
உள்ளே மட்டும் மறந்தும் வரவில்லை. சாப்பிட கூட.
பாட்டி என்றால் அவளுக்கு சிம்மசொப்பனம்.
“ஏய் குட்டி, நான் மடியா என் துணி தோய்ச்சு உணர்த்தி இருக்கேன், நீ, உன் நிழல், உம் மூச்சு காத்து கூட அது மேல படப்டாது சொல்லீட்டேன்” ‘கஷ்டம் கஷ்டம், இந்த தள்ளாத வயசில எனக்கு வேணுமா இந்த கண்றாவி எல்லாம்?’ என் கடினமாக இரைந்தார். ஒடுங்கி நடுங்கினாள் கோகி.
ஒரு சில மாதங்கள் ஓடிய நிலையில், ஒரு நாள் பசு மாட்டிற்கு புல் குடுக்க பாட்டி தோட்டப்பக்கம் சென்றார். கீரையை குடுத்து அதை தடவி கொடுக்க, அந்த கணத்தில் பசுவிற்கு என்னவாயிற்றோ கொம்பால் பாட்டியை முட்ட முயன்றது.
சட்டென அவர் நகர்ந்தாலும் பசு முன்னேறி மேலும் முட்ட பாட்டி கீழே சாய்ந்தார். பசு அவரை நோக்கி மேலும் பாய, அதை கண்ட கோகி “பாட்டிமா” என அலறியபடி ஓடி போய் அவரை அப்புறம் தள்ளிவிட்டு இவள் முன்னின்றாள். பசு முட்டிய வேகத்தில் அவள் போய் அதனை கட்டவென நட்டிருக்கும் இரும்பு முகப்பில் விழுந்தாள். அதன் கூரான முனை அவளது வலது கையினை ஆழமாக கீறி உள் சதை கண்ணில் தெரிய காயமாகி ரத்தம் கொட்டியது. பாட்டி அதை கண்டு அலறி மயக்கமானார். இதனிடையில் மங்களம், மற்ற வேலைகாரர்கள் சத்தம் கேட்டு வந்து பசுவினை இழுத்துச்சென்று இறுக்க கட்டினர்.
டாக்டரை வீட்டிற்கு அழைத்து இருவரையும் பார்க்க,
“பாட்டிக்கு அதிர்ச்சிதான், ஊசி போட்டிருக்கு சரியாயிடும். இந்த பெண்ணுக்குத்தான் ரொம்ப ஆழமான காயம். தண்ணியே படாம பார்த்துக்கணும். எப்படியும் பதினஞ்சு நாள் ஆகும் ஆற. கட்டு போட்ருக்கேன்” என தையல் போட்டு கட்டும் போட்டார் டாக்டர். தடுப்பூசியும் போட்டு கையை துளியிலும் கட்டினார்.
வீடே அதிர்ந்து போனது. ஆளாளுக்கு அசந்து போய் அமர்ந்திருக்க, உள்ளே சமையல் அறையில் ஏதோ அரவம் கேட்டு மங்களம்தான் முதலில் தேறினார்.
‘ஐயோ சாப்பாட்டு வேளை ஆச்சே, அம்மாக்கு பசிக்குமே, அந்த கொழந்தை வேற அடிபட்டு கிடக்கே...’ என பரபரவென எழுந்தார். அங்கே பின்னங்கட்டில் அவள் கண்ட காட்சி.... அவரை ஸ்தம்பிக்க வைத்தது. தாரை தாரையாக அவர் அறியாமல் கண்ணீர் பெருகியது.
“சாதம் போடறியா மங்களம்?” என வந்தவர் அவளை கண்டு திகைத்தார் “என்ன?” என கேட்கப் போக ‘பேசாதீங்கோ’ என ஜாடை காட்டி கண்ணை காண்பித்தார். அவள் காட்டிய திக்கில் பார்த்து வைத்தியும் வாயடைத்து போனார்.
“நெறைய மருந்து குடுத்திருக்கா, நெறைய சாப்பிடணும் இல்லேனா கை புண் சீக்கிரம் ஆறாது கொழந்தே” என மெல்லிய குரலில் பேசியபடி பாட்டி குண்டானில் தன் கையால் பிசைந்த சாதத்தை தன் கையால் எடுத்து கோகியின் வாயில் ஊட்டிக்கொண்டிருந்தாள்.
“நானே சாப்படறேன் பாட்டிம்மா, நீங்க போய், என்ன தொட்டு.... ஊட்டி...” என கோகி கூச்சப்பட்டுக்கொண்டேதான் இருந்தாள்.
“சூ, சும்மா இரு. கைய்ய தூக்கவே ப்டாதுன்னு சொல்லிருக்கார் டாக்டர். உயிருக்கு முன்னால மடி என்ன விழுப்பென்ன ஜாதியென்ன குலமென்ன, எனக்கு இந்த விஷயத்த புரிய வைக்கத்தான் இன்னிக்கி லக்ஷ்மி(பசு) என்னை முட்ட வந்தா போலிருக்கு. அதெல்லாம் போகட்டும்.”
“இனிமேல நீ இந்தாத்து கொழந்தே. அன்பும் பண்பும் தாண்டீ மா பெரிசு, புரிஞ்சுடுத்து.... நன்னாவே புரிய வெச்சுட்டார் பகவான். சாப்பிடு கொழந்தே” என வாயார ஊட்டினார்.
அவளும் கண்ணீர் உருண்டோடியதை இடது கையால் துடைத்தபடி திணறிக்கொண்டு சாப்பிட்டாள்.
“நீங்க சாப்டேளா பாட்டி?” என்றாள்
“பார்த்தியா, இந்தாத்துல யாருக்கானும் கேட்கணும்னு தோணித்தோ, பாரு இந்த பிஞ்சு கொழந்தே தான் கேட்கிறா நான் சாப்பிட்டேனான்னு” என கிண்டலாக சிரித்தார்.
“போங்க பாட்டிமா” என அவளும் சிரிக்க முயன்றாள்.
சாப்பாட்டினை எடுத்து வைத்து அவருக்கும் வைத்திக்குமாக பரிமாறிவிட்டு மங்களம் மீண்டும் அங்கே வந்து, “அம்மா, நீங்க போய் சாப்பிடுங்கோ. நான் ஊட்டறேன் கோகிக்கு” என்றாள்.
“போடீ, நோக்கென்ன தெரியும் ஊட்ட. நீ உன் பசங்களுக்கு ஊட்டு போ. நான் இவளுக்கு ஊட்டீட்டு வந்து சாப்டுப்பேன்” என விரட்டினார்.
அப்படியாக அந்த வீட்டில் ஒருத்தியாக இன்றியமையாதவளாக ஆகி போனாள் கோகி.
அந்த வீட்டின் பிள்ளைகள் மூன்றிலிருந்து நால்வர் ஆயினர்.
இப்போது கோகிக்கு இருபத்தி ஐந்து வயதாகி உள்ளது. சிட்டுபோல ஓடி ஓடி யாருக்கு என்ன வேண்டும் என்றாலும் பரந்தடித்துக்கொண்டு செய்வாள். மகள் பாலாம்பிகையும் இவளும் ஏகதேசம் ஒற்ற வயது. ரெண்டு கூட குறைய. உற்ற தோழிகளாகினர். சகோதரிகளாகினர்.
“பாருங்கோடா இது உங்க தங்கை” என பிள்ளைகளுக்கு முதலிலேயே ஆழமாக சொல்லி வளர்க்கப்பட்டனர். கடைக்குட்டி தங்கையானாள் கோகி.
இதோ அவள் மனசு போலவே, ஜில்லென்ற, மோர் தண்ணியுடன் எதிர்கொண்டாள் அந்த கோகி. வெய்யிலுக்கு நிழலாக, வெம்மைக்கு மோராக, வயிற்றிற்கு பாலாக மனதுக்கு தென்றலாக அந்த வீட்டிற்கு மயிலிரகானாள் கோகி.
மீண்டும் சந்திப்போம். வணக்கம்.


2 comments:

  1. Absolutely astounding! Maanudathirukku munaalae, kulamaavadhu kothiramaavadhu! Totally reliving the good old agraharam days with munkattu pinkattu and mattu thOzhuvam etc! You are sooo talented Sudhaji. Appadiye kannu munnalae kondu vandhutteaL!

    ReplyDelete
    Replies
    1. Thank you so much Jay for ur wonderful words.

      Delete