Sunday 24 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE - 7

விமான தளத்திலும் விமானத்திலும் அதன் பின் டாக்சியில் வீடு வந்து சேரும் வரையிலும் கூட சித்ராங்கி ஒரு வித பதட்டத்தோடும் பயத்தோடுமே காணப்பட்டாள். ரஞ்சனுக்கு அவள் நிலை புரிந்தது. ஆதரவாக அவள் கையை பிடித்து அமுக்கிவிட்டான். அவன் தொடுகையை விரும்பாதவள் போல கையை மெல்ல இழுத்துக் கொண்டாள்... அரை புன்னகை செய்தாள்....
திக்கு தெரியாத காட்டில் மாட்டிகொண்டு முழிக்கும் சிறு குழந்தை போல இருந்தது அவள் மருண்ட முகம். எப்போதுமே குழந்தை குமரியாகத்தான் இருப்பாள். இப்போது மேலும் கலவரம் சூழ்ந்து, ‘என்ன நடக்கிறது இங்கே, நான் ஏன் இங்கே இருக்கிறேன்.... எங்கே செல்கிறேன்.... எதற்கு.... இவர்கள் யார்..... என் உறவுகள் என்பது உண்மைதானா?’ என்று கலக்கம் தோன்ற மெளனமாக அமர்ந்திருந்தாள்.

விமானம் தரை தொட வெளியே வந்து தங்கள் இருவரின் சிறு பையுடன் ஒரு டாக்சி பிடித்து அவளுடன் வீட்டை அடைந்தான்.
“அம்மாடீ வந்துட்டியாடீ கண்ணு, எங்க வயித்தில பாலை வார்த்தியேமா” என்று மனம் நிறைந்து ஆனந்தக் கண்ணீருடன் வாசலிலேயே எதிர்கொண்டனர் அன்னையர் இருவரும். பணி பெண்ணிடம் கூறி ஆரத்தி கரைத்து திருஷ்டி சுற்றி உள்ளே அழைத்துக்கொண்டனர். சித்ராங்கிக்கோ அனைத்துமே புதிதாக இருந்தது. மலங்க மலங்க விழித்தாள். மெல்ல அவள் கையை பற்றியும் படாமலும் பிடித்தபடி உள்ளே அழைத்துச் சென்றான்.

“அம்மாடா, குட்டி” என்று கலாவிற்கு சிவகாமி உணர்த்த அது தயக்கத்துடன் “அம்மா” என்றபடி அருகே வந்து நின்றது. அழகு தெய்வமாக அருகே வந்த குழந்தையை ஒரு தாயின் இயர்கையான உணர்வுடன் வாரி எடுத்துக்கொண்டாள் சித்ரா. ஏன் அள்ளிக்கொண்டோம் என்ற அவளது உள் மனக் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. ஏனோ அந்தக் குழந்தையை பார்த்ததும் தூக்கி கொஞ்ச வேண்டும் என்று தோன்றியது போலும் என எண்ணிக்கொண்டாள்.
“நீ என் மம்மியா?” என்றது அந்த மழலை. அவள் சந்தேகமாக ஆம் என்பது போல மெல்ல தலை அசைத்தாள். அழுந்த கன்னத்தில் முத்தமிட்டது. அன்னையின் ஸ்பரிசத்தை உணர்ந்ததோ என்னவோ. அவளும் புன்னகைத்தபடி அழுந்த முத்தமிட்டாள்.

“வா சித்து, இதுதான் உங்கம்மா, இது எங்கம்மா” என்று அறிமுகம் செய்துவைத்தான்.
“அம்மா” என்று சொல்லி பார்த்துக்கொண்டாள். “அம்மா” என்று போய் தன் அன்னையை கட்டிக்கொண்டாள்.
“என் கண்ணே, வந்திட்டியாடி கண்ணு” என்று கட்டிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள் அந்த தாய்.

அடுத்து தன் அத்தையிடம் வந்தவள் “உங்களை நான் எப்படி கூப்பிடணும்?” என்று மெல்ல கேட்டாள்.
“என்னையும் நீ எப்போதுமே அத்தையா நினைச்சதும் இல்லை... அப்படி அழைத்ததும் இல்லை..... அம்மான்னு தான் என்னையும் கூப்பிடுவே” என்றார். “அம்மா” என்று அவரையும் கட்டிக்கொண்டாள்.
“நீ வந்ததே போதுமடி கண்ணு, நெஞ்சு நிறைஞ்சு போச்சு” என்று முகம் வழித்தார்.
“உக்காருடாமா என்ன சாப்பிடற, எப்போ என்ன சாப்பிட்டீங்களோ, வாங்க எல்லாம் தயாரா இருக்கு, சாப்பிடலாம்” என்று அழைத்துச் சென்றார்.
பசி தோன்ற மௌனமாகவே பசியாரினர்.

அதன்பின் என்ன எப்படி நடந்தது எப்படி கண்டுபிடித்தான் ரஞ்சன் என இரு அன்னைகளும் கேட்க விரிவாக விவரித்தான் ரஞ்சன்.
“அந்தக் கடவுள்தான் கூட இருந்து காப்பாத்தினார்” என்று கூறிக்கொண்டார். சற்று நேரத்தில் “போ மா, போய் படுத்துக்கோ, கலாவும் தூங்கி விழறா பாரு.... நான் என் ரூமில வெச்சுக்கறேன் அவள” என்று எழுந்தார்.
“இல்ல அவள என் கூடவே...” என்று கை நீட்டி வாங்கிக்கொண்டாள்.

‘தனியே ரஞ்சனுடன் அவன் அறையிலா.... இரவு முழுவதுமா...’ என்ற தயக்கம் சிறிது நேரமாக அவளை அரித்துக்கொண்டு இருந்தது. அதனால் குழந்தையுடன் செல்லலாம் என்று முடிவு கட்டி இருந்தாள்.
“சரி மா இந்தா” என்று கலாவை அவள் கையில் கொடுத்தார் சிவகாமி.
அவளை ஏந்தியபடி அவள் ரஞ்சன் வழி காட்ட அவனது அறைக்கு சென்றாள். உள்ளே சென்று கட்டிலின் மத்தியில் கலாவை படுக்க வைத்து மெல்ல தட்டி கொடுத்தாள்.
ரஞ்சனுக்கு அவள் நிலை புரிந்தது.
“நான் கொஞ்சம் பேசலாமா குட்டிமா?” என்றான. அவனை என்னவென்பது போல கண்டாள்.
“நீ என் மனைவிதான் ஆனாலும், உன் மனம் என்னை மறுபடி உணர்ந்து, என்னை முழு மனசுடன் ஏற்றுக்கொள்ளும் வரை நான் உன்னை எந்த விதமாகவும் தொந்தரவு செய்ய மாட்டேன்..... நீ எந்த வித தயக்கமோ கவலையோ இல்லாம நிம்மதியா உன் வீடுனு நம்பிக்கையோட படுத்து தூங்கு...... உன்னை எந்த விதத்திலும் நான் ஏமாத்தலைன்னு மட்டும் என்னை நம்பு, அது மட்டும் எனக்கு இப்போ போதும்டா குட்டிமா” என்றான்.

அவள் அவனை நேரே பார்த்து, “இல்ல... அப்படி எல்லாம் சந்தேகம் வரலை... நீங்க என் மேல வெச்சிருக்கற அன்பை உங்க கண்ணுல பார்த்தாலே தெரியுது.... ஆனால் எனக்குதான் எல்லாமே புதுசா இருக்கு.... அட்ஜஸ்ட் பண்ணிக்க கொஞ்சம் அவகாசம்.....” என்று நிறுத்தினாள்.

“கண்டிப்பா, எத்தனை நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ குட்டிமா.... இப்போ நிம்மதியா தூங்கு செல்லம்” என்றான். சரி என கலாவை அணைத்தபடி படுத்தாள். கால்களை மடக்கி வயிறு வரை குறுக்கிக் கொண்டு கலாவை இறுக்கியபடி அவள் ஒன்றி படுத்திருந்ததை பார்த்து ரஞ்சனுக்கு மனம் வலித்தது. இவள் எப்போது சரியாவாள். எப்போது சகஜமாவாள் என பதறியது. பொறுமை மனமே பொறுமை என தேற்றிக்கொண்டான்.

அடுத்த நாள் பொழுது விடிய எழுந்து கொண்டாள் சித்ராங்கி. அவள் எழும் அரவம் கேட்டு ரஞ்சனும் விழித்தான்.
“குட் மார்னிங் குட்டிமா” என்றான் எப்போதும் கூறுவது போல. அவள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்து பின் “குட் மார்னிங்” என்றாள்.
“இதை எல்லாம் பாரு சித்து” என்று அழைத்து போய், “இது உன் பிரஷ், இது உன் சோப், இந்த அலமாரி மொத்தமும் உன் துணிமணிகள் டா” என்று காண்பித்தான்.
சரி என பல் துலக்கி முகம் கழுவி வந்தாள். வெளியே சென்று சிவகாமி தந்த காபியுடன் மறுபடி உள்ளே நுழைந்து அவனிடம் நீட்டினாள்.
“அம்மா தரச் சொன்னாங்க” என்றாள். அவன் புன்னகையுடன் வாங்கிக்கொண்டான்.
இருவருமாக காபி குடித்து முடிக்க அதற்குள் கலா எழுந்தாள். அம்மா என்று அவள் கழுதை கட்டிக்கொள்ள இயல்பாக அவளை கையில் ஏந்தி பாத்ரூமில் அழைத்துச் சென்று பல் துலக்க உதவினாள். அவளுக்கு பால் புகட்டிவிட்டு அவனிடம் தந்துவிட்டு தானும் பின்னோடு குளிக்க கிளம்பினாள்.

“நான் குளிக்கணும்....” என்றாள்.
“குளியேன், உன் துணிமணி எல்லாம் இப்போ காண்பிச்சேனே” என்றான் ரஞ்சன்.
“அதில்லை...” என்றாள் தயக்கத்துடன்.
“பின்ன?” என்றான் புரியாமல்.
“இல்ல.. வந்து... நீங்க கொஞ்சம் வெளிலே.....” என்று மென்று முழுங்கினாள். “ஒ, ஓகே” என்று எழுந்து கலாவை ஏந்தியபடி ஹாலில் சென்று அமர்ந்துகொண்டான். சிரிப்புதான் வந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்.

தன் துணிகள் என்று ரஞ்சன் கூறிய அலமாரியை திறந்து தனக்கு கண்ணுக்கு பிடித்த ஒரு புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு அந்த புடவையும் அதன் ப்ளவுசும் தனக்கு கன கச்சிதமாக பொருந்தியதை பார்த்தாள்.
‘உண்மைதான், என்னோடதுதான் போல....’ என்று சிறு புன்னகை வந்தது. மெல்ல வெளியே வந்தாள்.

அவளை அந்த ரோஜா வண்ண சேலையில் கண்டவனுக்கு ஆசை பொங்கியது..... அந்தப் புடவை போன கல்யாண நாளுக்கு என அவனே பார்த்து பார்த்து வாங்கியது..... அதை அவள் உடுத்தி எதிரே வந்தாலே அவன் ஒரு கணமும் தள்ளி நிற்க மாட்டான்..... அவளுடனேயே இழைந்து கொண்டு திரிவான்..... அவ்வளவு பொருத்தமாக இருக்கும் அவளுக்கு அந்தப் புடவை.... ஆனால் இப்போது, பெரியதொரு பெருமூச்சுதான் வெளியேறியது.
“சித்து, ஆஸ் யூஷுவல், அசத்தலா இருக்கு உனக்கு இந்தப் புடவை” என்று மட்டும் கூறினான். அதை கேட்டு அவளையும் அறியாமல் அவள் கன்னத்தில் நாணப் பூக்கள் மலர்ந்தன. அவனை கண்ணோடு கண் காணாது கிச்சனுள் சென்று மறைந்தாள்.

அங்கே சமையல் நடந்துகொண்டு இருக்க கூடவே இருந்து தனக்கு தெரிந்த வகையில் உதவினாள்.
“என்ன சிவகாமி இது, சொந்த அம்மாவையே மறந்துட்டாளே இவ இப்படி...?” என்று அங்கே கற்பகம் சிவகாமியிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
“போகுது அண்ணி, ஏதோ அதுமட்டும் பொண்ணு கிடைச்சாளேன்னு சந்தோஷப்படுவோம்..... மெல்ல மெல்ல புரிஞ்சுக்குவா” என்று தேற்றினார்.

“ஆனாலும், மாப்ள கிடந்து தவிச்ச தவிப்புக்கு கடவுள் நல்ல வேளையா அவளை காப்பாற்றி குடுத்துட்டாரு..... இவளுக்காக அவர் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமா.....” என்று மாய்ந்து போனார் கற்பகம்.

“இவளை நினைச்சு உருகி அவருக்கு ஏதானும் ஆகிடுமோன்னு நான் பயந்துட்டேன் அண்ணி” என்றார் சிவகாமி.
“அதை சொல்லு, எனக்கும் அதே கலக்கம் தான்.... ஆனாலும் சிவகாமி நாம எத்தனையோ பேர் இனி சித்ரா வர மாட்டா கார்யம் பண்ணிடலாம்னு சொன்ன போதும் கூட அதை மறுத்து உன்னையே திட்டிட்டு, ‘கண்டிப்பா என் சித்ராங்கி என்னிடம் வந்து சேருவா, அவளுக்கு எதுவும் ஆகி இருக்காதுன்னு கெட்டியா நம்பினாரு பாரு, அதுக்கே அவர பாராட்டணும்...... நம்பிக்கை தான் தெய்வம்னு சும்மாவா சொல்றாங்க..... அவர் நம்பிக்கை இப்போ பலிச்சுடுத்தே” என்று சிரித்துக்கொண்டார்.

இதை எல்லாம் எட்ட இருந்து கேட்ட சித்ராங்கிக்கோ ‘அட என் மேல் இவ்வளவு அன்பா இவருக்கு, இப்படி எல்லாம் சொன்னாராமே, இப்படி எல்லாம் பேசினாராமே’ என்று எண்ணி எண்ணி பரவசம் கொண்டாள்

அவன் மேல் பெருத்த மரியாதையும் மதிப்பும் தோன்றத் துவங்கியது, ஆனாலும் தெரியாத புரியாத புதிய ஆடவன் என்ற தயக்கம் இன்னமும் இருந்தது.
சமையல் ஆனபின் அவனுடன் கலாவுக்கும் சிற்றுண்டி குடுத்து அவன் ஆபிசிற்கு கிளம்ப உதவினாள்.

“நான் கிளம்பட்டுமா.... நீ தனியா மேனேஜ் பண்ணிக்குவேதானே, உனக்கு இங்க ஒரு பயமும் வேண்டாம்..... எது வேணும்னாலும் இதோ இந்த நம்பருக்கு போன் பண்ணு, என்ன சரியா” என்று நூறு முறை கூறிவிட்டு கிளம்பினான். சரி என்று தலையை ஆட்டினாள்

கலா தன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருக்க அவள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே தங்களது இரும்பு பீரோவை குடைந்தாள்.... அதில் சில போட்டோ ஆல்பங்கள் இருப்பதை கண்டு வெளியே எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக பார்க்க துவங்கினாள்.... முதன் முதலாக அவளை ஏதோ கல்யாணத்தில் கண்டான் போலும், அதிலிருந்து அவள் பாவாடை தாவணி அணிந்து திரியும் சில படங்களில் துடங்கி சமீபத்தில் கலாவுடன் அவளது பிறந்த நாள் அன்று எடுத்த படங்கள் வரை அனைத்தையும் அதில் கண்டாள்.
முக்கியமாக அவர்களது திருமண மற்றும் தேன் நிலவு படங்களை காண காண அவன் அவள் மீது வைத்திருக்கும் காதலின் தீவிரமும் அன்பின் பரிமாணமும் அவளை திக்குமுக்காட வைத்தது. கண்ணில் அவளையும் அறியாமல் கண்ணீர் பெருகியது.....

அதில் ஒரு படத்தில் அவன் அவள் கால் விரல்களுக்கு மெட்டி போட்டுகொண்டு இருந்தான்... அவள் வலது பாதத்தின் க்ளோஸ் அப் இருந்தது.... அதில் அழகான மருதாணி பொட்டு பொட்டாக டிசைன் இருக்க, அதன் நடுவே கருப்பாக த்ரிஷ்டிக்கு வைத்தது போல அழகிய ஒரு மச்சம், அது அவள் அழகிய வெண்புறா பாதங்களின் அழகுக்கு அழகு சேர்த்தது.... அந்த மச்சத்தை வருடியபடி ரஞ்சனின் கையும் அதில் தெரிந்தது..... ‘இது, இப்படி இங்கே...’ என ஒரு நொடி அதிர்ந்து சிலிர்த்து தன் பாதத்தை பார்த்தாள். அதில் உள்ள அந்த அதே மச்சத்தை வருடி கொண்டாள். அப்போதுதான் அவன் அவள் பாதங்களில் விரலால் வருடியதுபோல அவளுக்கு குருகுருவென்றது.
வலது பாதத்தை அருகே இழுத்து அந்த மச்சத்தை மீண்டும் பார்த்தாள்.... அவனை போல அதை மெல்ல வருடினாள். முகம் மேலும் சிவந்தது.

‘எவ்வளவு ஆனந்தமாக வாழ்ந்து வந்தோள்ளோம், எனக்கு ஏன் இந்த விபத்து, எனக்கு ஏன் பழசெல்லாம், முக்கியமாக இவரை மறந்து போனது..... என் மேல் உயிரையே வைத்திருக்கும் இவரிடம் நான் பாரா முகமாக எப்படி இருப்பேன்’ என்று புழுங்கினாள்.

“சித்ரா, வா மா சாப்பிடலாம்” என்று அழைத்து அருகே அமர்த்திக்கொண்டு கதை பேசியபடி அவளை பார்த்து பார்த்து உண்ண வைத்தனர் அன்னையர். கலாவுக்கும் ஊட்டியபடி சாப்பிட்டு முடித்தாள். அம்மா என்று அழைத்து கொஞ்சம் சகஜமாக பேசத் துவங்கினாள்.

அன்னையர் இருவரும் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் பழைய கதை பேசி ஒவ்வொன்றையும் அவளுக்கு நினவு கூற உதவுமோ என்று எண்ணத்துடன் பேசியபடி இருந்தனர்.

அங்கே ஆபிசில் ரஞ்சனுக்கு வேலை ஓடவில்லை. ‘சித்து என்ன செய்கிறாளோ எப்படி இருக்கிறாளோ..... டாக்டர் வேறு, எந்த மாற்றங்களையும் உடனே அவருக்கு தெரிவிக்கும்படி கூறி உள்ளாரே’ என்று எண்ணி கலங்கினான். மாலை ஆறு மணி எப்போது ஆகும் என பதறி ஓடி வீட்டை அடைந்தான்.
“சித்து, எப்படிடா இருக்கே குட்டிமா?” என்றான் வந்ததுமே,
“நல்லா இருக்கேன்” என்பது போல தலையை ஆட்டினாள். அவனிடம் நேரே முகம் பார்த்து இன்னமும் ஒரு வார்த்தை பேச அவளுக்கு கூச்சமாகத்தான் இருந்தது.

இதே கதியில் வாழ்க்கை இயந்திரத் தனமாக சில மாதங்கள் ஓடி மறைந்தன. ஒவ்வொரு நாளும் பொழுதும் ரஞ்சன் அவள் மீது காட்டும் அன்பும் காதலும் பரிவும் கண்டு உணர்ந்து மெல்ல மெல்ல அவன்பால் சித்ராங்கிக்கும் அன்பு ஏற்படத் துவங்கி இருந்தது. ஆனால் அது அவன் அவள் கணவன் என்ற நிற்பந்தத்தினால் அல்லாமல் அவளாகவே மனம் கனிந்து ஒவ்வொரு செய்கையிலும் அவனின் அன்பை புரிந்து ஏற்பட்ட காதலாக இருந்தது.

அவள் மெல்ல மனம் கனிகிறாள் என்று உணர்ந்தே இருந்தான் ரஞ்சன்....
‘குட்டிமா சித்துமா’ என்று எப்போதும் போலவே கொஞ்சி மகிழ்ந்தான்.... ஆனால் அவளை அத்துமீறி தொட முயலவில்லை.... அதையும் மீறி இருவரும் ஒரே அறையில் தான் வாழ்ந்து வந்தனர்.... அவனுக்குண்டான அனைத்து பணிவிடைகளையும் அவளே பார்த்து பார்த்து செய்து வந்தாள்தான்.

“குட்டிமா” என்று இரைந்தான் பாத்ரூமிலிருந்து. அவளும் அங்கே ஓடி வந்து பாத்ரூம் வாயிலில் நின்றாள். மெல்ல கதவை தட்டினாள்.
“என் டவலை மறந்துட்டேன்டா” என்றான். அவள் கட்டிலில் கிடக்கும் டவலை எடுத்து அவனிடம் மெல்ல திறந்த கதவின் மூலம் நீட்டினாள். அதற்கே அவள் உள்ளமும் உடலும் சிலிர்த்து போனது. ரஞ்சனுக்கோ மனம் ஏங்கியது. முன்பு இதே போன்ற தருணங்களில் டவலை நீட்டும் சித்துவின் கைகளை பிடித்து அப்படியே உள்ளே இழுத்து அவளுடன் சில்மிஷம் செய்தது நினவு வந்து அவனின் உடலையும் உள்ளத்தையும் தகித்தது.
‘இந்த நிலை எப்போது மாறுமோ.... என் சித்து எப்போது என்னை உணர்வாளோ?’ என்று மாய்ந்து போனான். பெருமூச்சு வெளிப்பட்டது.

இத்தனை நாட்களில் சித்ரகலா மட்டும் தன் தாய் என்று சித்ராவை உணர்ந்து அவளிடம் முழுவதுமாக ஒட்டிக்கொண்டுவிட்டாளே என்று அனைவருக்கும் ஆச்சர்யம்.
“இதான் அண்ணி, அம்மா குழந்தை பாசம் னு நான் நினைக்கிறன்..... கலா எப்படி ஒட்டிகிட்டா பார்த்தீங்களா” என்று சிலாகித்தார் சிவகாமி.
“ஆமா சிவகாமி, சித்ராவும் தான் ஆகட்டும் குழந்தைகிட்ட எவளோ ஒட்டிகிட்டா எத்தனை பாசமா பாத்துக்கறா பார்த்தியா..... போகுது குழந்தைக்கானும் நல்லது.... அசலே கலா குட்டி ரொம்பவே ஏங்கி போயிருந்துது” என்றார்.



8 comments: