Saturday 23 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE - 6

“சரி வாங்க, நானே உங்கள அவகிட்ட அறிமுகப்படுத்தறேன்..... எப்படி ரியாக்ட் செய்யறானு பார்க்கலாம்” என்று நடந்தார்.
அவளது அறையை அடைய அவள் படுத்து வெறுமனே கண் மூடி கிடந்தாள். “மாயா” என்றார் மெள்ளமாக டாக்டர். அவள் கண் திறக்கவில்லை.
“சித்ராங்கி” என்றார் சற்று உரக்க. யாரோ யாரையோ கூப்பிடுகின்றனர் என்பது போல கண் விழித்தவள் அசைவின்றி கிடந்தாள்.

“மாயா” என்றார் மீண்டும்
“ஆங் என்ன டாக்டர்?” என்று எழுந்து அமர்ந்தாள்.
“இதை பார்த்தியா” என்றார்.
“ஒ நீங்களா, இன்னும் போகலையா?” என்றாள் இவனைக் கண்டு புன்னகையுடன்.
“இப்போ உங்க கை வலி தேவலையா?” என்றாள்.
“ம்ம்ம்” என்றான் பேச்சே வராமல்.

“இது யாருன்னு உனக்கு தெரியுமா?” என்றார் கோபிநாத்.
“ஒ தெரியுமே, நேத்து பார்த்தேனே.... கையில அடிபட்டு கட்டு போட்டுக்க வந்தாரு..... இன்னிக்கும் என்னை பார்க்க வந்தாரு கொஞ்ச நேரம் முன்னாடி” என்றாள்.
“அதில்லை, இவர் உனக்கு என்ன வேணும் தெரியுமா?” என்றார் அவர்.
“என்ன வேணும்?” என்றாள் அவளும் திரும்ப.
இத்தனை நேரத்திலும் ரஞ்சனின் மனம் உலை களமாக கொதித்துப் போனது. யாரை காண அவன் இத்தனை நாளாக தவித்தானோ, யாருக்காக உயிர் தீ வளர்தானோ, அதில் தன்னையே மாய்த்துக்கொண்டானோ, அவள், அவனது சித்ராங்கி, அவனது குட்டிமா, இதோ ரத்தமும் சதையுமாக அவன் முன்னால் உயிரோடு ஓவியமாக நிற்கிறாள்.

அவளை கண்டு அவளென உணர்ந்து அவன் மனது இன்னமும் அந்த உணர்வில் பதை பதைத்தது.... உணர்ச்சி பிழம்பாய் அவளை தாவி கட்டி அணைக்க அவன் கைகள் தவித்தன..... ஆனால் அவளுக்கு அவன் இப்போது ஒரு அந்நியன்.... அந்த நிலையில் அவளை அப்படி அணுக அவனால் முடியாது.... ‘பொறுமை மனமே, எட்டும் தூரத்தில் என் சொர்க்கம்.... ஆனால் அவசரப்பட்டு அவளை கைநழுவி போய்விட விடக்கூடாது’ என்று பொறுமை காத்தான்.

“இதான் மா உன் புருஷன்” என்றார் கோபிநாத்.
“என்னது?” என்றாள் திகைத்து. அவனை நேரே கண்டு. தன் கழுத்தில் கிடந்த தாலிக்கொடியை அவள் கைகள் இறுக பற்றின.
“இல்லை, நீங்க சும்மா சொல்றீங்க, அப்போவே இவர் வந்தாரே.... நேத்து வந்தாரே... அப்போ அவர் என்கிட்டே இதை சொல்லலியே?” என்றாள்.
“ஆம் சொல்லலை..... அவருக்கு அப்போ நீதான்னு தெரியலை... உனக்கும் தெரியும்தானே மாயா, உனக்கு முகம் சிதைஞ்சு ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடந்து உன் முகம் மாறி போயிருக்குன்னு... நான் உனக்கு விளக்கினேனே மா...?” என்றார்.
“ஆமா சொன்ணீங்க அதுக்கு?” என்றாள்.
“அதனால அவருக்கு உன்னை அடையாளம் தெரியலைமா, ஆனாலும் உன் குரல் உன் கண்ணு, உன் ஸ்பரிசம் உன் பேச்சு அவரை குழப்பினதுனாலதான் இன்னிக்கி உன்னை கண்டு தெளியத்தான் அவர் வந்தாரு..... இத்தனை நேரம் என்கிட்டே இதைப்பற்றி பேசினாரு..... எல்லாம் ருசுவாகி போச்சுதுமா....” என்றார்

“அதை நான் எப்படி டாக்டர் நம்பறது?” என்றாள் பாவமாக.
“உன் சந்தேகம் சரிதான் மா, உன் தயக்கம் நியாயமானது.... ஆனாலும் உன் கைப்பையை  கூட அவர் அடையாளம் காட்டீட்டாரு,  அதில இருந்த உன் நகைகளை கூட கரெக்டா சொல்லீட்டாரு மா..... அதில உன் கல்யாண போட்டோ கூட இருக்கு..... உன் சாயலில்தான் இருக்குமா” என்று எடுத்து காண்பித்தார்.

அதை அவசரமாக வாங்கி கண்ணில் நீர் மிதக்க பார்த்தாள்.... அவள் சாயலில் ஒரு பெண்ணும் அவளருகே ரஞ்சனுமாக மாலையும் கழுத்துமாக இருப்பதை கண்டாள்.... பின் அவனை கண்டாள்.... படத்தில் அவள் முகத்தை கண்டாள்.... ‘இந்த கண் காது எல்லாம் என்னைப்போலதான் இருக்கு.... ஆனாலும்.... ஆனாலும்...’ என்றது அவள் மனது.

அவளது பதைப்பு கண்டு “சித்து” என்றான் ஆழமாக காதலெல்லாம் அதில் தேக்கி.
“இல்ல, நான் மாயா” என்றாள்.
“இல்லைமா, உன் இயற் பெயர் சித்ராங்கி” என்றார் டாக்டர்.
“ஒ” என்றாள்.
“ஆம் சித்து, நான் உன்னை இப்படிதான் கூப்பிடுவேன், கூடவே குட்டிமான்னும் கூப்பிடுவேன் டா” என்றான். ‘ஒவ்வொன்றையும் அவளுக்கு சிறு குழந்தைக்கு புகட்டுவது போல இனி சொல்லி புகட்ட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டான். பொறுமையாக கையாளல் வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

‘அவள் கிடைத்ததே போதும், கடவுளே, என் குட்டிமாவை என்னிடம் சேர்த்துவிட்டாய்...... உனக்கு கோடி வணக்கங்கள்..... என  மனமார நன்றி கூறிக்கொண்டான்.... மிச்சம் எதுவுமே அவனுக்கு பெரிசாக தோன்றவில்லை.... அவளருகே சென்றான், மெல்ல அவள் கையை தொடப் போக அவள் கையை விலக்கிக்கொண்டாள்.

“என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான்.
“ஆமாம் சித்ராங்கி, இது உன் கணவன் தான் மா, என்னையானும் நம்பலாமே மா” என்றார் கோபிநாத்.
அவள் கண்ணீர் வழிய இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

“உனக்கு ஒரு பெண் குழந்தை கூட இருக்குதாம் சித்ராங்கி” என்றார்.
“என்ன” என்று அதிர்ந்தாள்.
“ஆமா குட்டிமா, நம்ம கலாவுக்கு இப்போ ஒண்ணரை வயசு தாண்டி இருக்கு.... அதைத்தவிர வீட்டுல உங்கம்மாவும் எங்கம்மாவும் காத்திருக்காங்கடா...... உன்னை காணாம நாங்க எல்லாம் தவிச்ச தவிப்பு...... இந்த ஆறு மாசமா நான் என் வாழ்வையே தொலைச்சுட்டு தேடிகிட்டு இருந்தேன் டா குட்டிமா” என்று அவள் கைகளில் தன் முகத்தை பதித்து அழுது தீர்த்தான்.
அவன் அப்படி அழுவதை கண்டு அவளுள் ஏதோ மாற்றங்கள். இவன் உண்மை பேசுகிறான் என்று உணர வைத்தது. மெல்ல அவன் கைகளை தானும் பிடித்துகொண்டாள்.

“அழாதீங்க ப்ளீஸ்” என்றாள். அவன் மெல்ல நிமிர்ந்தான்.
“வாடா குட்டிமா வீட்டுக்கு போகலாம்” என்றான். அவள் கலவரத்துடன் கோபிநாத்தை பார்த்தாள்.
“என்னமா பயம், அழைக்கிறது உன் கணவன் தைர்யமா போ...... அங்கே தான் உங்கம்மா, உன் மகள், உன் அத்தை எல்லாம் இருக்காங்க..... அது உன் குடும்பம், இனி நீ உன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழணும் மகளே” என்றார் அவருக்கே துக்கமாக இருந்தது. மகளாகவே அவளை வரித்தது இப்போது தொண்டையை அடைத்தது.
“போகவா டாக்டர்பா?” என்றாள்.
“ஆம் மகளே நல்லபடியாக போய்வா” என்றார்.

“நான் போய் இந்திராவை அனுப்பறேன் மா.... அவ உனக்கு எல்லாம் பாக் செய்ய உதவுவா... நீ போய் முகம் கழுவி பிரெஷாகிக்கோ... ரெடியாகு மா.... நாங்க இதோ வரோம்” என்று வெளியே நடந்தார்.
“வாங்க ரஞ்சன், நான் உங்க கூட கொஞ்சம் முக்கியமா பேசணும்” என்று அழைத்துச் சென்றார்.

“டாக்டர் இவளுடைய மேற்கொண்டு சிகிச்சை மருந்துகள் எல்லாம் எப்படி..... இவளுக்கு நினவு திரும்புமா?” என்று கேட்டான் ரஞ்சன் அவருடன் வெளியே நடந்தபடி.
“திரும்பலாம், திரும்பாமலும் போகலாம்.... ஆனால் அவள் இப்போது ஒரு கண்ணாடி பாத்திரம் ரஞ்சன், மிகவும் ஜாக்ரதையாக கையாள வேண்டும்..... அவசரப்பட்டா அவளுடைய மன நிலைக்கே ஆபத்து வந்து பைத்தியமாகிடலாம்” என்றார் எச்சரிப்புடன்
“சரி, நான் பத்திரமா பாத்துக்கறேன் டாக்டர்” என்று வாக்களித்தான்.

“மருந்து மாத்திரைகள் எழுதி தரேன், அதை கண்டின்யு பண்ணுங்க, பார்போம் மெல்ல மெல்ல நினவு திரும்புதான்னு..... கொஞ்ச கொஞ்சமா தான் அவளுக்கு தன் வீடு தன் உறவுகள்னு புரியவைக்க முடியும்..... ஒரு வேளை தன் மகளின் முகத்தையும் மழலை பேச்சையும் கேட்டு உடனடியாக கூட நினைவு வந்திடலாம், வராமலும் போகலாம்..... வீட்டில இருக்கிற பெரியவங்க கிட்ட பக்குவமா சொல்லி வையுங்க..... அவகிட்ட பார்த்து கேட்டு நடந்துக்க சொல்லி....”
“கண்டிப்பா சொல்றேன் டாக்டர்.... நான் அவளை என் விழிக்குள் வைத்து கண் இமையால் மூடி காப்பேன்.... நீங்க கவலையே பட வேண்டாம்” என்றான்.

“இன்னொரு முக்கியமான விஷயம் ரஞ்சன்” என்றார்.
“சொல்லுங்க டாக்டர்” என்றான் உன்னிப்பாக.
“என்னதான் நான் இவ்வளோ சொல்லி இருந்தாலும், இன்னமும் அவள் பெண் மனம் உங்களை முழுமையாக தன் கணவனா ஏத்துக்கலை, அதுக்கு நாளாகும், ஏற்காமலே தள்ளியே நிற்கலாம், அதுவும் சாத்தியம்தான்..... ஆனா நீங்க அவகிட்ட அவசரப்பட்டு எதுவும்.....” என்று கூச்சத்துடன் நிறுத்தினார்.

“புரியுது டாக்டர்..... எனக்கு அவ கிடைச்சதே போதும், அதுக்கு மேல நான் இப்போதைக்கு அவகிட்ட வேறே எதுவுமே எதிர்பார்க்கலை..... அவளாக மாறி என்னை மனமுவந்து எப்போ கணவனா ஏத்துக்கறாளோ, அப்போதான் நானும் அந்த உரிமைகளை அவளிடம் எடுத்துக்கொள்வேன்” என்றான் அவனும் சற்றே கூச்சத்துடன்.

“டாக்டர், ஆறு மாசமா என் குட்டிம்மாவை இங்கேயே வெச்சு அன்புடன் பார்த்துக்கொண்டிருக்கீங்க, அதுக்கு நன்றி சொல்ல கூட எனக்கு தகுதி இல்லை. அத்தனை செலவும் நீங்க ஏற்றுக்கொண்டு செஞ்சிருக்கீங்க, அந்த நன்றி கடனையானும் நான் தீர்க்க ஆசைப்படறேன்... ப்ளீஸ், தயவு பண்ணி எவ்வளவு ஆச்சுனு சொல்லுங்க” என்று கெஞ்சினான்.
“அது இருக்கட்டும் மிஸ்டர் சித்ராஜன், என் மகளின் வாழ்க்கை மீண்டுடுத்து அதுவே எனக்கு போதும்” என நிறைவாக புன்னகைத்தார்.

“இல்லை இல்லை டாக்டர், செலவு நிச்சயம் நிறைய தான் ஆகி இருக்கும், பிளீஸ் டாக்டர் அல்லவ் மீ டு பே” என்றான்.
“சரி உங்க இஷ்டம். நான் பில்லுக்கு ஏற்பாடு செய்யறேன்” என்றார்
“இன்னும் ஒரு விஷயம், நான் அந்த வெங்கட்டை சந்திக்கணுமே, அவர் காண்டாக்ட் உங்க கிட்ட இருக்கா, அவராலதானே என் குட்டிமா எனக்கு மீண்டும் கிடைத்திருக்கா, நான் அவரை கண்டு என் நன்றியை சொல்லணும் மனமார வாழ்த்தணும் டாக்டர்” என்று கேட்டுகொண்டான்.

“கண்டிப்பா, நான் அவர் நம்பர் தரேன், இப்போ வர்ற நேரம்தான்... வந்தாலும் வருவார்.....” எனும்போதே வெங்கட் உள்ளே வந்துகொண்டிருந்தான்.
“உங்க நல்ல நேரம், அதோ பாருங்க நாம பேசிக்கொண்டு இருக்கும்போதே வந்துட்டாரு” என்று கை காண்பித்தார்.
முப்பதை தொடாத வயது, நல்ல உயரம், களையான முகம் என வெங்கட் டாக்டரின் அருகே வந்து,
“ஹலோ டாக்டர், மாயா எப்படி இருக்கா இன்னிக்கி, எனி இம்ப்ரூவ்மென்ட்?” என்று கேட்டான் ஆவலுடன்.
“இல்லைப்பா ஆஸ் யுஷுவலா தான் இருக்கா, ஆனா ஒரு அதிசயம் நடந்தது இன்னிக்கி....” என்று ரஞ்சன் அவளை தேடி வந்து பேசி கண்டுபிடித்த விவரத்தை கூறினார் கோபிநாத்.

“ஒ மை காட், இவ்வளோ நடந்திருக்கா, அப்போ அவளோட கணவர் கிடைச்சுட்டாரா, அவரை நான் பார்க்கலாமா டாக்டர்?” என்றான். ஆச்சர்யம், சந்தோஷம் ஆனால் கண்களில் ஒரு வித கலக்கம் சோகம் என் பல முக பாவங்களும் தோன்றி மறைந்தன.

“இதோ, இவர்தான் அவள் கணவர் சித்தரஞ்சன்” என இவனை அறிமுகம் செய்து வைத்தார்.
“ஒ நீங்கதானா, க்ளாட் டு மீட் யு” என்று கை கொடுத்தான்.
அந்த கைகளை தன் இரு கைகளிலும் பொதிந்து கொண்டு,
“ஐ ஆம் ஸோ தாங்க்புல் மிஸ்டர் வெங்கட், எனக்கு என்னுடைய வாழ்க்கையே மீட்டு குடுத்திருக்கீங்க, என் குட்டிமா இல்லாம நான் இந்த ஆறு மாசமா தவித்த தவிப்பு ,அந்த கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்..... ஐ டோன்ட் நோ ஹவ் டு தாங்க் யு..... எவ்வளோ நன்றி சொன்னாலும் போதாது” என்றான் கண்ணில் நீர் பொங்க.

“ஒ நத்திங், இது மனித இயற்கை, உதவ முடிஞ்சதுல எனக்குதான் சந்தோஷம், அதைவிட, உங்களை எப்படி எங்க தேடி கண்டுபிடிப்பதுனு டாக்டர் அனுதினமும் குழம்பி இருந்தார்.... கடவுள் சித்தம் போல, நீங்களே இங்கே அடிபட்டுகிட்டு வந்து மாயவை கண்டு பிடிச்சு சேர்ந்துட்டீங்க.... ஐ ஆம் சொ ஹாப்பி” என்றான் உளமார. கண்ணில் சின்ன வலி தோன்றி மறைந்தது.

“வெங்கட், மாயாவின் இயற் பெயர் சித்ராங்கி” என்றார் கோபிநாத்.
“ஒ ஐ சி” என்றான் வெங்கட்.

“நான் அவங்கள ஒரு முறை பார்க்கலாமா?” என்றான் ரஞ்சனிடம்,
“ஒ ஸ்யூர், என்ன தயக்கம், வாங்க” என்று அவனுடன் நடக்க, சித்ராங்கி எதிரே வந்தாள்.
“ஹாய் மாயா” என்றான்,
“ஹலோ வெங்கி, எப்படி இருக்கீங்க, இன்னிக்கி என்னென்னமோ நடந்துடுச்சு தெரியுமா” என்றாள் ஆவலாக அவனிடத்தில்.
அவன் புன்னகையுடன் “தெரியும், ஐ ஆம் ஸோ ஹாப்பி பார் யு” என்றான் .
“ஒ டாக்டர்பா சொல்லீட்டாரா, இவர்தான்...” என தயக்கத்துடன் ரஞ்சனை காட்டினாள். மேலே எப்படி அறிமுகம் செய்வது என கூச்சத்துடன் பேசாமல் தலை தாழ்த்திக்கொண்டாள் சித்ராங்கி.
“தெரியும், இப்போதான் சந்திச்சு பேசினோம்” என்றான் வெங்கட்.

“அப்போ நாம கிளம்பலாமா சித்து?” என்றன் ரஞ்சன். சரி என்பதுபோல மெல்ல தலை அசைத்தாள். ஏறெடுத்து வெங்கட்டை பார்த்தாள்.
“நான் வரேன் வெங்கி, தாங்க்ஸ் பார் ஆல் யுவர் ஹெல்ப்.... எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை...” என்று கை கூப்பினாள்.
“ஒ நோ மாயா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், நீங்க, உங்க கணவரோட சேர்ந்து உங்க வீட்டுக்கு போறீங்க... எனக்கு அதுவே போதும்” என்றான் கண்ணில் நீரோ என சந்தேகம் தோன்றியது. பிறர் காணாமல் துடைத்து கொண்டான்.
“வரோம் வெங்கட், இது என் கார்ட்... நீங்க சென்னை வந்தா கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்” என்று கை கொடுத்தான் ரஞ்சன்,
“யா ஸ்யூர்” என்று வாங்கிக்கொண்டான்.

“தாங்க்ஸ் ரஞ்சன், நீங்க ரொம்ப நல்ல மனிதர்.... அதனாலதான் கடவுள் உங்கள கைவிடலை, உங்க சித்ராங்கிய உங்க கண்ணுல காமிச்சுட்டார். இல்லைனா, அவ கை பைய நானும்தான் குடைஞ்சேன்... ஆனா எந்த துப்பும், பேர் விலாசம் எதுவுமே கிடைக்கலை...... இந்த சின்ன பர்ஸ்.... அதில உங்க போட்டோ.... எதுவுமே என் கண்ணில படலை.... பட்டிருந்தாலும் அதை வெச்சு ஒண்ணும் பண்ணி இருக்க முடியாது....“

“நீங்க இங்க வந்ததும், அடிபட்டுகிட்டதும், இங்கேயே சிகிச்சைக்கு வந்ததும், கூட தெய்வாதீனம் தான் போல ரஞ்சன்..... இப்பவும் அவ என் மகள் தான்.... அவளை நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்... பார்த்துக்குங்க.... எந்த நேரத்தில உங்களுக்கு என்ன டவுட் வந்தாலும் அவ கிட்ட என்ன மாறுதல் கண்டாலும் உடனே எனக்கு போன் பண்ணுங்க” என்றார் டாக்டர்.

சித்ராங்கி தன் சிறு பையுடன் அவனை நெருங்கி நடந்து வந்தாள். தன் அறைக்குச் சென்று அவளின் சிகப்பு கைபையை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார். கல்யாண புகைப்படம் இன்னமும் அவள் கையிலேதான் இருந்தது... அதை அவ்வப்போது உறுத்து பார்த்துக்கொண்டாள்.

இப்போது அவன் அந்த கைபையை அவளிடத்தில் தர, அதை வாங்கி அந்த படத்தை அதனுள் வைத்துக்கொண்டாள்.
“வரேன் இந்திரா, எல்லாத்துக்கும் தாங்க்ஸ்” என்றாள் நர்சிடம் அவள் கையை பிடித்து கண்களில் ஒற்றியபடி.
“நான் சொ ஹாப்பி.... உங்க புருஷன் வந்துட்டாரு, உங்கள கூட்டிப்போக” என்று மகிழ்ந்தாள். ஒரு சிறு புன்னகையுடன் முகம் நிறைய குழப்பத்துடன் கோபிநாத்தின் கால் பணிந்து வணங்கி எழுந்தாள்.

“ஐயோ மகளே, என்ன இது... நல்லா இருமா, உன் புருஷனோட நல்லபடி குடித்தனம் பண்ணு, இந்த அப்பாவை மறந்துடாதே கண்மணி” என்றார்.
மறக்க  மாட்டேன் என்று தலை ஆட்டினாள். அவர்களை வழிகூட்டி அனுப்பி வைத்தார்.

அத்யாயம் 4
அன்று மாலை விமானத்தில் இரு டிக்கட்டுகள் போட்டு அவளையும் அழைத்துக்கொண்டு நேரே ஏற்போர்ட்டிற்கே சென்றான். அங்கிருந்து வீட்டை அழைத்து தன் தாயிடம் சுருக்கமாக அவளை கண்டு பிடித்த விஷயத்தை அவளுக்கு நினைவுகள் மயங்கி போயிருப்பதையும் அவளை கண்டதும் கொஞ்சம் ஜாக்ராதையாகவே பழக வேண்டும் என்பதையும் கூறினான். சிவகாமி மகிழ்ந்து போனார்.

“அப்படியா கிடைச்சுட்டாளா, நம்ம சித்ரா அம்புட்டுட்டாளா... ரொம்ப சந்தோஷம்... நிஜம்மாவா சொல்றே.... எப்போ வரே?” என்றார்.
“தோ இப்போ விமான நிலையத்திலேர்ந்துதான் பேசறேன்..... இன்னும் மூணு மணி நேரத்தில வீட்டில இருப்போம்... ரெண்டு பேரும் பார்த்து நடந்துக்குங்க” என்று கூறி வைத்தான்.
சிவகாமி அதை கற்பகத்திடம் கூற அவருக்கு மகிழ்ச்சியில் மயக்கமே வந்தது. கடவுளுக்கு உடன் ஓடி நன்றி கூறினார்.



4 comments: