Wednesday 20 June 2018

UNNAI KAANAADHA KANNUM KANNALLA - EPISODE 3

“சித்து” என்றான் அவள் கன்னத்தில் தன் மூக்கால் தேய்த்தபடி, அவள் அவன் மடியில் கண் மூடி கிறங்கி கிடக்க “ம்ம்ம்” என்றாள்.
“நாம ரெண்டு வருஷம் சந்தோஷமா இருந்துட்டு அதுக்குப் பிறகு குழந்தை பெத்துக்கலாம்டா” என்றான்.
“ஏன் சித்து?” என்றாள்.
“என்ன ஏன் சித்து, நீ பாட்டுக்கு குழந்தையோட பிசியாகிடுவே.... அப்பறம் என்னை யாரு கவனிப்பா” என்று குழைந்தான்.
“ஏன், குழந்தை பிறந்தா நீங்க மட்டும் அதை கொஞ்சிகிட்டு என்னை மறந்துட மாட்டீங்களா?” என்று அவளும் குழைந்தாள்.
“அதுக்குதாண்டீ ராஜாத்தி சொல்றேன்.... ரெண்டு வருஷம் உனக்காக நான் எனக்காக நீன்னு கொஞ்சிகிட்டு நாம சந்தோஷமா இருந்துட்டு அதன் பிறகு நமக்குன்னு ஒண்ணு பெத்துபோம் என்ன சரியா?” என்றான்.
“ம்ம் ஒகே சித்து” என்றாள்.

அதன்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணுமுமாக இருவரும் மிகுந்த அன்னியோன்னியத்துடன் குடித்தனம் செய்தனர். காதலும் அன்பும் அளவில்லாமல் பரிமாறப்பட்டது.
இதைனிடையில் சிவகாமிதான் பேச்சை எடுத்தார்.
“என்னமா சித்ரா இந்த கோவிலுக்கு ஒரு தரம் போயிட்டு வந்துடுங்களேன், அந்த விரத்தை பண்ணிடேன்” என்று.
“ஏன் மா” என்று கேட்காவிட்டாலும் அவளுக்கு புரிந்தது.... இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று சிவகாமி இதை எல்லாம் செய்ய கூறுகிறார் என்று. அதன்படி அவளும் அவனை கோவிலுக்கு வரச் சொல்லி வற்புறுத்தினாள்.
“எனக்கு தெய்வ நம்பிக்கை நிறைய இருக்கு டார்லிங், ஆனா, இதென்ன திடீர்னு இவளோ கோவில் குளம்னு என்னை சுத்தி அடிக்கற.... போதுண்ட எதுக்கு இவ்ளோ...?” என்று அலுத்துக்கொண்டான்.

“நானா சொல்றேன்.... அம்மாதான் போகச் சொல்றாங்க.....”
“எதுக்குனு கேட்டியா டா?” என்றான்.
“நான் கேக்கல, ஆனா எனக்கே தெரியுமே” என்றாள் முகம் காணாமல். “எதுக்கு?”
“என்ன எதுக்கு, போங்க சித்து” என்றாள் முகம் மறைத்து.
“அட, இது என்னடி புதுசா வெக்கம்.... என்னான்னு சொன்னாத்தானே தெரியும் செல்லம்” என்றான்.
“அம்மாக்கு நமக்கு குழந்தை இல்லைன்னு வருத்தம்.... அதான் இதெல்லாம் செய்ய சொல்றாங்க” என்றாள் அவன் தோளில் முகம் புதைத்து.

“அட ராமா, இதா சங்கதி.... உனக்குத்தான் தெரியுமே.... நாமதானே அப்படி முடிவு பண்ணி இருக்கோம்... இருந்தும் ஏண்டா...?” என்றான் ஆச்சர்யத்துடன்.
“விஷயம் இன்னதுன்னு நமக்கு தானே தெரியும், அம்மாக்கு தெரியாதில்ல” என்றாள்.
“சரி நீ சொல்லிட வேண்டியதுதானே?” என்றான்.
“சி போ, இதை எப்படி, நாங்க இப்படின்னு தீர்மானம் பண்ணி இருக்கோம் காத்திருங்கம்மா னு அம்மாகிட்ட போய் வெக்கத்த விட்டு நான் சொல்ல முடியும்.... போங்க, நான் மாட்டேன்” என்றாள் அவன் மார்பில் சாய்ந்து.

“அதுக்குனு இப்படி நீயே உன்னையும் என்னையும் வதைக்கணுமா குட்டிமா?” என்றான்.
“கொஞ்ச நாள் அது போலவே செய்வோமே, அதுக்குள்ள பெத்துக்கலாம் சித்து” என்றாள்.
“ம்ம்ம் என்னமோ செய்” என்றபடி அவளுடன் கோவிலுக்கு சென்று சுற்றி வந்தான்.

ஒரு வருடம் வசந்த காலமாக உருண்டோட தாயின் கவலை சித்ராகியின் கெஞ்சலுக்கு செவி சாய்த்து குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தான்.

பின்னோடு ஆறு மதங்களில் அவள் கருவுற்றாள். அவனுக்குமே கூட மிகுந்த சந்தோஷம்.... அவளை தரையில் விடாமல் தாங்கினான். சிவகாமியும் சித்ரங்கியின் தாயுமாக அவளை கண் போல பார்த்து பேணினர். பெண் குழந்தை பிறந்தது.... அதை சீராட்டி பாராட்டி கொஞ்சி வளர்த்து வந்தனர்..... குழந்தை சித்ரகலாவை கொஞ்சிக்கொண்டே சித்ராங்கியையும் விட்டு வைக்காமல் இன்னமும் களிப்புற காதல் சொன்னான் நம் காதல் மன்னன்.
சித்ரகலா வளர வளர அவளுடன் சேர்ந்து தானும் ஒரு குழந்தையாகவே மாறி அதனுடன் ஈடு குடுத்து மழலையாக விளையாடினாள் சித்துவின் குட்டிமா. ஆனால் குழைந்தையை பேணும்போது அந்த சின்னவளின் மனம் சின்னத்தாயாக மாறியது. தன் செல்ல மகளை அன்புடனும் அக்கறையுடனும் போற்றி வளர்த்தாள்.

இதோ சித்ரகலாவிற்கு ஒரு வயது நிரம்பி உள்ளது..... பெற்றோர் உற்றார் சொந்தங்கள் நட்புகள் என்று அழைத்து முதல் பிறந்த நாளை வைபோகமாக கொண்டாடி தீர்த்தனர்.
அந்த களைப்பு தீர நான்கு நாட்கள் ரெஸ்ட் எடுத்தபின் தன் மிக நெருங்கிய தோழியின் திருமணத்திற்கென சித்ராங்கி கிளம்பினாள்.

“ப்ளீஸ் சித்து, மூணே நாளுதான்..... இங்கிருந்து செவ்வாய் இரவு கிளம்பினா புதன் காலையில விஜயவாடா சேர்ந்துடுவேன்...... வியாழன் வரவேற்ப்பு மற்றும் வெள்ளி கல்யாணம் அன்னிக்கி இரவே கிளம்பி அடுத்த நாள் காலையில இங்கே வந்துடுவேன்... என் ராஜா இல்ல, ஒத்துக்குங்க பா ப்ளீஸ்?” என்று கொஞ்சினாள்.
“போடி, உன்னை காணாம பார்க்காம எப்படி இருக்கறதாம்..... கலாவை வேற பார்த்துக்கணும்..... அவ நீ இல்லாம இருந்ததே இல்லை..... என்ன அழுவாளோ என்னமோ...” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.

“அதெல்லாம் அம்மா பாத்துக்கறேன்னு சொல்லி இருக்காங்க..... அவ இப்போ பாட்டில்ல தானே பால் குடிக்கறா சித்து.... என்னை அவ்வளவா தேட மாட்டா..... நீங்கதான் அவள விட சின்னக் குழந்தை..... பால் குடி மறக்காத குழந்தை இப்போ எனக்கு நீங்கதான்” என்று சிணுங்கினாள்.
“ஆமாடி அப்படிதான், இப்போ அதுக்கு என்னங்கறே” என்றான் வீம்பாக.
“ப்ளீஸ்” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“சரி மூனே மூணு நாள் மட்டும்தான்.... போயிட்டு வா” என்று மனமில்லாமல் பெர்மிஷன் தந்தான்.

அடுத்த நாள் டிக்கட் போட்டு பாக்கிங் முடித்தாள். வேலைக்காரர்களுக்கும் சிவகாமியிடமும் பதே பதே நூறு முறை எல்லாம் சொல்லிவிட்டு மனமின்றியே கிளம்பினாள். அவனிடம் விடைபெற அப்போதே அவளுக்கு கண்கள் நிறைந்து போயின.
“என்னடி குட்டிமா கண் கலங்குது... அப்படியானும் போகணுமா?” என்றான்.
“ரொம்ப க்ளோஸ் தோழிங்க... போயிட்டு வந்துடறேன்..... நல்லபடி இருங்க.... கலா பத்திரம்” என்று அவனை கட்டி தழுவி கன்னத்தில் அழுந்த இதழ் பதித்துவிட்டு விடை பெற்றாள். அவளை ரயிலேற்றி விட்டு வீடு வந்தவனுக்கு வெறிச்சென்று இருந்தது.

கலாவை சமாளிப்பது பெரிய கவலையாக இருக்கவில்லை.... அவள் எப்போதுமே நல்ல குழந்தை, அதிகம் படுத்தாமல் சமத்தாக இருப்பவள்..... அதனால் பெரிய பிரச்சினைகளின்றி ரெண்டு நாளும் கழிந்தன....

மூன்றாம் நாள் அங்கே கல்யாணம்  நல்லபடி முடிந்ததென்றும் அன்றே கிளம்புகிறாள் என்றும் சித்ராங்கி அழைத்து கூறினாள்.
“எப்படி இருக்கீங்க சித்து, ஆயிடுச்சு ரெண்டு நாள் ஓடியே போயிடுச்சு பாத்தீங்களா..... நானும் இங்க நல்லா என்ஜாய் பண்ணினேன் தெரியுமா, எங்க புல் காங் வந்தது, கொட்டம் அடிச்சோம்..... இன்னிக்கி நைட் கிளம்பி ஓடி வந்துடுவேன்..... என்னாலையும் உங்கள பார்க்காம கலாவை கொஞ்சாம இருக்க முடியலை” என்று கொஞ்சிக்கொண்டாள்.

“சரி சரி மிச்சத நேர்ல வந்து கொஞ்சு.... சீக்கிரமா வந்து சேருடீ” என்றான் தாபத்துடன். அவள் களுக்கென்று சிரித்துக்கொண்டாள்.
“சிரிக்கிறியா வா, உனக்கு இருக்கு இங்க கச்சேரி” என்றான். அதற்கும் அழகு காட்டினாள்.
“போடா” என்றாள் செல்லமாக.
“என்னது டா வா,,,, நீ வா உனக்கு வெச்சிருக்கேன்” என்றான்.

அடுத்த நாள் காலை, அவள் வந்துவிடுவாளே என்று வெகு சீக்கிரமே எழுந்து குழந்தைக்கு வேண்டியதை கவனித்து, அவர்களது அறையை சுத்தம் செய்ய வைத்து குளித்து தயாராக அவளுக்காகவென ரயிலடிக்கு செல்ல அங்கே சென்றபின்தான் அவள் வந்த ரயில் விபத்துக்குள்ளாகியது என்றே அவனுக்கு தெரிய வந்தது.

துடித்து தவித்து போனான். கலங்கி அடுத்து என்ன என்று தெரியாமல் திகைத்தான். தன்னை தன் துக்கத்தை சமாளித்துக்கொண்டு அன்னையிடம் போன் செய்து ஒரு மாதிரியாக மெல்ல விஷயத்தை கூறினான்.
“கலாவை பத்திரமா பார்த்துக்கோ மா..... நான் இங்கிருந்து அந்த ஆக்சிடென்ட் நடந்த இடத்துக்கு போறேன் மா.... கவலைப் படாதே, அப்பப்போ உனக்கு தகவல் கொடுக்கிறேன்” என்றான.
அங்கே சிவகாமி கலங்கி தவித்து கற்பகத்திற்கு போன் செய்தார். அவரும் கிளம்பி சில மணிகளில் இங்கேயே வந்துவிட ஒருவருக்கொருவர் துணையாக புலம்பி அழுது கலைந்தனர். கலாவை கவனித்தபடி ஏதேனும் நல்ல ந்யூஸ் வருமா என்று சாப்பிடாமல் கூட காத்திருந்தனர்.

அங்கே ரஞ்சன் கிளம்பி ஆந்திர மாநிலம் காவாலிக்கும் ஒங்கோல் என்ற இடத்திற்கும் நடுவில் விபத்து நடந்திருந்த இடத்திற்கு விரைந்து சென்றான். அங்கே ஒரே களேபரமாக இருந்தது. ஜனத் திரள், பாதிக்கப் பட்டவர்கள், காப்பாற்ற முனைபவர்கள், போலிஸ், தொண்டர்கள், டாக்டர்ஸ் நர்சஸ் என ஒரே அமர்களமாக இருந்தது. இதில் தன்னவளை தன் இதயத்தில் வீற்றிருக்கும் ராணியை எப்படி தேடி கண்டு பிடிப்பது என்று தவித்தான் திணறினான்.

இதில் கொடுமை என்னவென்றால் தெலுங்கு தெரியாததால் பாஷை வேறு ஒரு பெரிய பிரச்சினையாகிப் போனது. முதலில் அங்கே இருந்த ஹெல்ப் பூத்திற்கு சென்று அடிபட்டவர்களில் சித்ராங்கியின் பெயரை கூறி விசாரித்தான். அவர்கள் செய்திருந்த பதிவேட்டில் அந்த பெயர் இருக்கவில்லை.
இறந்தவர்களை ஒரு மருத்துவமையில் வைத்திருந்தனர் என்று கேட்டு அங்கே உள்ளம் பதை பதைக்க ஓடினான்..... மனம் பதறி உடல்களை அடையாளம் காண அதில் அவள் இல்லை என உணர்ந்து நிம்மதி அடைந்தான்.... உருகி கரைந்து அழுது தெய்வத்தை தொழுதான்....
‘என் சித்ராங்கியை என் குட்டிமாவை என் கண்ணில காட்டீடு தெய்வமே, ப்ளீஸ்.... நான் என்ன வேணாலும் உனக்காக செய்ய காத்திருக்கேன்’ என்று வேண்டினான்.

அவளைப் பற்றி எந்த தகவலும் இல்லை. சிலர் ஒங்கோல் ஹாஸ்பிடலிலும் சிலர் காவாலியின் ஒரு சிறு ஹாஸ்பிடலிலுமாக சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கேயும் சென்று அவளை காணாமல் வருந்தினான்..... இன்னமும் மீட்பு பணி தொடர்ந்து கொண்டு இருந்தது..... அதனை பார்வையிட்டு அங்கேயும் தன்னால் ஆன உதவிகளை செய்தான்..... இருவரை மீட்டு வெளியே கொண்டு வந்து சேர்த்தான்.... தன்னவளின் நிலை என்னவோ என்ற தவிப்புடனேயே தொண்டு செய்தான்.
ரத்த தானம் செய்தான்..... என்ன செய்தால் என் சித்ராங்கி என்னை வந்து சேருவாள் என்று பதைத்தான்.

வேறு எவரேனும் நோயாளிகள் ஏதேனும் மருத்துவமனைக்கு அனுப்ப பட்டனரா என்று கேட்டு பார்த்தான். இல்லை என்றே தகவல் வந்தது. பிழைத்தவர்களில் இல்லை, இறந்தவர்களில் இல்லை, காயம் அடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுபவர்களின் மத்தியிலும் இல்லை, ரயில் மொத்தமும் மீட்கபட்டு காலியாகி இருந்தது..... அதனால் அங்கேயும் இனி யாரும் உள்ளே மாட்டி இருக்க வழியில்லை.... இன்னது செய்வது அடுத்து என புரியாமல் அங்கேயே பைத்தியமாக திரிந்தவனை கண்டு சில மருத்துவர்களுக்கும் தொண்டு செய்பவர்களுக்கும் போலீசுக்கும் கூட அவனை கண்டு பரிதாபம் ஆனது.

போலிஸ் அவன் தரப்பில் ரிப்போர்ட் எழுதி வாங்கிக் கொண்டனர். அவர்களால் ஆனது பக்க ஊர்களில் எல்லாம் அவளது போட்டோவுடன் மெசேஜ் அனுப்பி தேட ஆணையிட்டனர். அவன் தனது பர்சில் எப்போதும் வைத்திருக்கும் அவளது போட்டோ இப்போது இதற்கு உதவியது.... கண்ணில் நீர் வழிய பட்டினியாக திரிந்து மயக்கம் வரும் போன்ற நிலை அவனுக்கு..... இரவாகி போயிருந்தது.... அங்கே வீட்டில் அன்னை தனியே பச்சை குழந்தையுடன் அவஸ்த்தை படுவாளே என்று கவலை.

இங்கே விடுத்து வீட்டிற்குச் செல்வதா சித்ராங்கியை மேற்கொண்டு எங்கே போய் எப்படி தேடுவது ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல அவன் அங்கேயே ரயிலடியில் ஒரு பெஞ்சில் தலையை கையில் தாங்கி அமர்ந்தான். அவனை கண்டு பரிதாபப்பட்டு யாரோ டீயும் பிஸ்கட்டுமாக கொண்டு தந்தனர்.
காலையில் வீட்டில் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு கிளம்பியபின் இதுவே அவன் அடுத்து உட்கொள்ளும் உணவு.... அடுத்து என்ன செய்வது என்று அங்கே இருந்த போலிஸ் உயர் அதிகாரியுடன் பேசினான்.

“நீங்க இனி இங்கே இருந்து தவிச்சு பிரயோஜனம் இல்லை சார்..... நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புங்க..... நாங்கதான் எல்லா போலிஸ் லிமிட்சுக்கும் தகவல் அனுப்பி இருக்கோமே, எல்லா ஹாஸ்பிடல்லையும் தேடச் சொல்லி இருக்கோம், கண்டிப்பா கண்டு பிடிச்சுடுவோம்.... உங்க நம்பர்ஸ் எங்க கிட்ட இருக்கு, நாங்க கிடைத்ததும் தகவல் சொல்றோம்” என்றார் அவர் ஆதுரமாக. “சரி” என்று மனமில்லாமல் கிளம்பினான்.

வீட்டை அடைந்தவனை ஆவலாக கண்டனர் இரு அன்னைகளும்.
“என்னடா ஏதானும் தகவல் உண்டா?” என்றார் சிவகாமி பயந்து.
“ஒண்ணுமே தெரியலைமா, என் குட்டிமா எங்க போனான்னே தெரியலைமா” என்று உடைந்து அவள் மடியில் சாய்ந்தான்.
“ஐயோ தெய்வமே” என்று அவரும் கலங்கினார். அவர் கலங்கினால் அவனே அசலே கலங்கி உள்ளானே என்று தன்னை தேற்றிக்கொண்டு அவனை தேற்றினார்.

“கொஞ்சம் சாப்பிடுபா” என்று பலவந்தமாக கற்பகம் கையில் குழைத்த சாதத்துடன் வீங்கி சாப்பிட வைத்தார். சாப்பிட்டவன் பிரமை பிடித்தாற்போல கலாவை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீர் வழிய அப்படியே சோபாவில் சாய்ந்தவண்ணம் அமர்ந்திருந்தான்.... அவன் முகத்தில் இருக்கும் சொல்லொணா வேதனை கண்டு யாரும் அவனிடம் பேசவே அஞ்சினர்..... அடுத்த நாள் ஆகி இருந்தது அவன் வீடு வரும்போதே..... அப்படியே எப்போதோ எப்படியோ உறங்கினான்..... பத்து மணி வாக்கில் எழுந்தான்..... முகம் அலம்பி காபி சாப்பிட்டான்.... போலீசில் ஏதேனும் தகவல் உண்டா என் போன் செய்து கேட்டான்....
“இன்னும் ஒண்ணும் தெரியலை சார் நாங்களே சொல்றோம்” என்றனர்.
துவண்டான். ஆபீஸ்க்கு லீவ் சொல்லிவிட்டு அன்று முழுவதும் தெரிந்த போலிஸ் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என போன் செய்து உதவி கோரினான். இரவும் கவிய ஒரு தகவலும் இன்றி அன்றைய பொழுதும் கழிந்தது.

எத்தனை நாள் வீட்டில் இருப்பது அலுவலகத்தில் எல்லோரும் காத்திருப்பார்களே என்று மனமின்றி அடுத்த நாள் சென்றான். அனைவருக்கும் அதற்குள்ளேயே விஷயம் தெரிந்திருக்க, ஆளுக்காள் வந்து பேசி தேற்றினார்..... அது அவன் வேதனையை மேலும் கிளறியது..... நான்கு நாட்கள் லீவ் சொல்லிவிட்டு வீட்டை அடைந்தான்.... கலாவும் கையுமாக பேச்சின்றி கிடந்தான். சித்ராங்கியின் போட்டோவை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தான். அவனை யாராலும் தேற்ற முடியவில்லை.

‘ஆசை ஆசையாக காதலித்து அவளையே மனம் நிறைய மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து..... அன்பிலும் காதலிலும் திளைத்து கொஞ்சி கெஞ்சி குடித்தனம் நடத்தி.... இப்படியா எங்கே எப்படி, என்று கூட தெரியாமல் தொலைப்பேன் கடவுளே, உனக்கு உள்ளமே இல்லையா, அதில் கருணையே இல்லையா, இருந்தால் என்னை இப்படி வதைப்பாயா?’ என்று நொந்தான்.

நான்கு நாட்களில் மத்தியில் ஒரு நாள் மீண்டும் அதிகாலை கிளம்பி காவாலி ஒங்கோல் மருத்துவமனைகளை சுற்றி தேடி விட்டு வந்தான். இம்முறை சின்ன சிற்றூர்களிலும் கூட மருத்துவமனைகளை தேடிவிட்டு பலனின்றி திரும்பி இருந்தான்.... போலீசுக்கும் ஒரு தகவலும் இல்லை.....

“அப்பா ரஞ்சன் நான் ஒண்ணு சொல்லவா?” என்று மெல்ல ஆரம்பித்தார் சிவகாமி.
“என்னம்மா?” என்றான்.
“இல்லை ஒரு வேளை சித்ரா நம்மள விட்டு போயிருந்தா, நாம செய்ய வேண்டிய காரியம் இருக்குபா, உயிரோட இருந்திருந்தா இதுக்குள்ள தெரிஞ்சிருக்கும், வந்து சேர்ந்திருப்பா இல்லையா.... ஒரு சாந்தியானும் செய்துடனும் பா” என்றார்.
“வாய மூடுமா, இதைப்பத்தி இனி யாரும் என்கிட்டே இப்படி எல்லாம் பேசிகிட்டு வரக்கூடாது சொல்லீட்டேன்..... என் சித்து இறக்கலை.... அவ எங்கியோ உயிரோட தான் இருக்கா, எனக்கு நல்லா தெரியும்.... அடங்குங்க” என்று திட்டினான். அவன் கத்திய கத்தலில் மேற்கொண்டு ஏதும் பேசாமல் வாயடைத்து போனார் சிவகாமி.
கற்பகத்திற்கு இவனை பார்ப்பதா, கலாவை பார்ப்பதா, போன மகளை நினைத்து அழுவதா, வருவாள் என்று காத்திருப்பதா என்று அறியாமல் அழுது துவண்டார்.


9 comments:

  1. How did you write such a detailed description? I could not read with tear-filled eyes!

    ReplyDelete
  2. Feeling sad..... What next. Very anxious to know where is she....

    ReplyDelete
  3. Bayankara speed kathai.....Interesting..

    ReplyDelete
  4. பாலும் பழமும் படத்தின் சாயல்அடிக்கிறா மாதிரி இருக்கு....சூப்பர் வருனைகள்..

    ReplyDelete