Sunday, 24 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 3


கற்பகத்தின் அறையை சுத்தமாக வைத்துக்கொண்டாள், அன்றலர்ந்த மலர்களை குடுவையில் நிரப்பி அங்காங்கு வைத்தாள்.... பக்தி பாடல்கள் காற்றில் மிதந்தது வந்தன... துப்புரவான படுக்கை விரிப்புகளும் திரைசீலைகளும் மிளிர்ந்தன.... கற்பகமே இதை எல்லாம் கண்டு உற்சாகமாக தென்பட்டார்..... உண்மையான நேசத்துடன் மனு அவரை கவனித்துக்கொள்வதை உணர்ந்தார்.

சில நாட்கள் அவளை அவளது அன்பான கவனிப்பை அவள் காணாமல் கண்டுகொண்டுதான் இருந்தான் கீர்த்திவாசன்.
அம்மாவிடமும் நல்ல வார்த்தைகளே வந்தன அவளை பற்றி....
“ரொம்ப நல்ல மாதிரி கீர்த்தி.... நன்னா பார்த்துக்கறா என்னை” என்று மொழிந்தார் கற்பகம்.
“ஹ்ம்ம் பார்க்கலாம் எத்தனை நாளைக்கு நிலைக்கறதோ அத்தனை நாள்” என்றான் பெருமூச்சுடன்.
வேலை விஷயமாக இனி தான் நிம்மதியாக சுற்ற முடியும் என கொஞ்சம் நம்பிக்கை வந்ததுதான்.
வெளிநாடு போக வேண்டி வந்தது. போகும் முன் மனுவை அழைத்தான்.

“பாரு மனஸ்வினி, நான் வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம், நீ இருக்கே, அம்மாவை நல்லபடி பார்த்துப்பேன்னு நான் நம்பி கிளம்பறேன், அதுக்கு தகுந்தாற்போல நல்லபடி பார்த்துப்பேன்னு நம்பறேன்.... இங்கேயே தான் இருக்கணும், அம்மாவை விட்டு எங்கும் போக கூடாது, அரட்டை அடிக்கறேன்னு யாரோடும் எதுவும் வைத்துக்கொள்ள கூடாது..... பார்த்து நடந்துக்க” என்றான். குரல் திண்ணமாக வந்தாலும் முன்பு போல கடினம் இல்லை. மிரட்டலாகவும் இல்லை.

“கண்டிப்பா பார்த்துப்பேன்..... நீங்க நிச்சிந்தையாக போய் வரலாம்” என்றாள் அவனை நேரே பார்த்து.
அவன் கிளம்பியபின் கற்பகமும் மனுவுமாக மிகுந்த மகிழ்ச்சியாக அரட்டை அடித்தபடி காலம் கழித்தனர்..... காமெடி படங்கள் காட்சிகள் என ஓடவிட்டு இருவரும் சிரித்தனர்.....அவளுடன் நேரம் போவது தெரியாமல் சந்தோஷமாக நேரம் கழித்தார் கற்பகம்.....

“நீ வந்தப்பறமா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மனு, என்னை இந்த அளவு சொந்த தாயை போல யாரும் பார்த்துகிட்டது இல்லை..... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீ ஏன் இந்த நாலு புடவையையே திரும்ப திரும்ப தோய்ச்சு கட்டிக்கற, இந்தா என் பீரோ சாவி, அதை திற.... நான் என் புடவை எல்லாம் கட்டிக்கறதே இல்லை, அதிலே நாலு எடுத்துக்கோ” என்றார்.

“ஐயோ வேண்டாம் ஆண்ட்டி, இருக்கறதே போதும்” என்று தடுத்தாள்.
“நான் சொன்னா கேக்கணும், இல்லேனா நான் கோச்சுப்பேன் திற”. என்றார்.
“இல்ல ஆண்ட்டி, சார் ஏதானும்...” என தயங்கினாள்.
“அவன் கெடக்கான், அதெல்லாம் ஒண்ணும் சொல்லாம நான் பார்த்துப்பேன்.... அவனும் நல்லவன் தான் மனு மா.... அவன் ரொம்பவே பாவம் மா... அவனுக்கு ஏற்பட்ட நிலைமை அப்படி, அதுக்கு பிறகுதான் அவன் இப்படி ஆயிட்டான்...... நீ அவனை தவறா எண்ணாதே” என்றார் கண்ணில் சோகம் வழிய.

“ஐயோ இல்லை ஆண்ட்டி, ஸ்ட்ரிக்டா இருக்கறது நல்லதுதான்.... எல்லோரும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க இல்லையா.... அப்படி இருந்தாதானே பயத்தோடு சரியா வேலை செய்வாங்க” என்றாள்.
“ம்ம் நல்லா பேசறே, சரி இப்போ பிரோவை திற” என்றார்.
“வேண்டாம் ப்ளீஸ்” என்றாள்.
“திறக்க போறியா இல்லையா” என்றார்.
சரியென சாவியை வாங்கி திறந்தாள்..... அதில் மேலெழ இருந்த சில புடவைகளை காட்டி “இந்த நாலையும் எடுத்துக்கோ” என்றார்.
“வேண்டாம் ஆண்ட்டி” என்றாள்.
“அட ராமா, என்ன இது கிளிப்பிள்ளை மாதிரி வேண்டாம் வேண்டாம்னு.... நான் சொல்றேன் எடுத்துக்கோ” என இரைந்தார்.
கீழே வேலை செய்யும் வேலைக்கார பெண்ணையும் அழைத்து இரண்டு புடவைகளை குடுத்தார். இவளுக்கு என்ன கொடுத்தாரோ என்பதிலேயே இருந்தது அந்தப் பெண்ணின் பார்வை.

வேறு வழி இன்றி புடவைகளை எடுத்துக்கொண்டாள் மனு..... தான் தன் நிலை இப்படியா என ஒரு கணம் மனம் துணுக்குற்றது..... ஆனால் ‘இப்படிதானே இருக்கிறோம் இருக்கற இடத்தில உள்ளபடி நிலையில் அப்படியே வாழ்வதுதான் உசிதம்’ என மனதை திடபடுத்திக்கொண்டாள்.

கீர்த்தி வர மாதம் பிடித்தது, அந்த ஒரு மாத காலத்தில் கற்பகமும் மனுவும் மிக நெருங்கி விட்டனர்.... இவளின் அன்பான உபசரிப்பில் கவனிப்பில் கற்பகம் நல்லபடியாகவே தனியே  ஸ்டிக்குடன் நடமாடும் அளவுக்கு வந்துவிட்டார்.... காலை மாலை இரு பொழுதும் தோட்டத்தில் விரும்பி நடமாடினார்.... டாக்டரும் அதை கண்டு நல்லது என பாராட்டினார்.

அன்று காலை எழுந்து குளித்து உடுத்தி பூஜை அறையில் சில நிமிடம் நின்று தொழுது விட்டு சிற்றுண்டி எடுத்துக்கொண்ட பின் மெல்ல தோட்டத்தில் நடமாடிக்கொண்டு இருந்தார். புத்துணற்சியுடன் மனுவிடம் சிரித்து பேசியபடி அவர் ஈசியாக நடமாட அதை ஆச்சர்யத்துடன் கண்டபடி கீர்த்தி காரில் உள்ளே நுழைந்தான்.
‘அம்மாவா இது, அவ்ளோ சிரிப்பு சந்தோஷம், நல்லபடியா ஈசியா நடமாடறாங்க வேற’ என அதிசயித்தான். காரை விட்டு இறங்கியவன் சுற்றும் மனுவை தேடினான. மனு தடுப்பு சுவரின் பக்கத்தில் நகர்ந்து நின்று தன்னை நோக்கி நடந்து வரும் கற்பகத்தை உற்சாகப்படுத்திக்கொண்டு நின்றிருந்தாள். அவன் நின்ற இடத்தில இருந்து அவனால் அவள் நின்றதை காண முடியவில்லை.

‘ஆமா மனு எங்கே போனா, அம்மா தனியாவா நடக்கறாங்க?’ என துணுக்குற்றான்.
“அம்மா” என்றான் அருகே சென்றபடி.
“வாப்பா கீர்த்தி” என ஆசையுடன் சிரித்தபடி வரவேற்றார் கற்பகம்.
“ஆமா நீ இங்க தனியா என்ன பண்ணறே, தனியா யாரு உன்னை நடமாட சொன்னா, எங்கே போனா அந்த மனு?” என்று இரைந்தான்.
“கஷ்டம், வந்ததுமே ஆரம்பிச்சுட்டியா, தோ இங்கேதானே இருக்கா, அவ இல்லாம நான் ஏது, அப்படி என்னை அவ தனியா விட்டுடுவாளா என்ன, சரியான சந்தேகப்ராணி டா நீ பையா” என செல்லமாக கடிந்து கொண்டாள்.
“தோ நிக்கறா பாரு, எதிர்த்தாப்ல நின்னு என்னை தன்னை நோக்கி நடந்து வர வெச்சுண்டு இருக்கா, அவ்ளோதான்” என்றார்.

அப்போதே அவன் குரல் கேட்டு சரேலென வெளியே வந்தாள் மனு..... சாதா காட்டன் சேலை நீட்டாக உடுத்தி தலை குளித்து நுனியில் முடிச்சிட்டு விரித்து விட்ட முடியும் சிரித்த அழகு முகமாக மிளிர அவள் அப்படி சரேலென முன்னே வந்தபோது கீர்த்தி தடுமாறித்தான் போனான்.
“ஹப்பா ஆள அசத்தறாளே’ என தலை கிறுகிறுத்து போனது.... உடனே மறைத்துக்கொண்டான்.
“ஒ” என்றான் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி. பார்வையை அகற்ற முடியாமல் திணறினான்.
“நல்லபடி நடக்கறியே மா” என்றான் மகிழ்ச்சியாக,
“ஆமா பின்ன, யாரோட ட்ரெயினிங்” என்றார் பெருமையாக. கூச்சத்துடன் சிரித்தாள் மனு. பளீரென்ற அவள் சிரிப்பில் மேலும் மதி மயங்கி போனான் மெல்ல சுதாரித்துக்கொண்டான்.
“வா பா, உள்ள வா, கை கால் கழுவி ஏதானும் சாப்பிடு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ ஜெட் லாக் இருக்குமே பாவம்” என்றார்.

அவனுடனேயே பேசியபடி அவர் மெல்ல நடக்க மனு கொஞ்சம் பின் தங்கினாள்..... தாய்க்கும் மகனுக்குமான அந்த பாச பிணைப்பான நேரத்தில் தான் நடுவில் போக தேவை இல்லை என நின்று மெல்ல பின் தொடர்ந்தாள். உள்ளே வந்து டைனிங் ஹாலை அடைந்து அவன் அமர அவனுடன் கூடவே கற்பகமும் அமர்ந்தார். பின்னே வந்த மனுவை கண்டு

“என்ன மனு, பின் தங்கீட்டே, போய் சுபாகிட்ட சொல்லி சிற்றுண்டி எடுத்து வர  சொல்லு கீர்த்திக்கு” என்றார்.
“சரி ஆண்ட்டி” என உள்ளே ஓடினாள்.
“சுபாகா, சார் வந்துட்டாரு, அம்மா டிபன் எடுத்துட்டு வர சொல்றாங்க” என்றாள்.
“அப்படியா, சார் வரப்போறது தெரியாதே.... போட்ட பூரி எல்லாம் ஆயிடுச்சு... தேய்ச்சா தான், சாகு மட்டும்தான் இருக்கு” என கையை பிசைந்தாள்.
“அவ்ளோதானே, நான் பூரியை தேய்கறேன், நீங்க சாகுவை சுட பண்ணுங்க, அந்த அடுப்பில எண்ணையை சுட வையுங்க.... ரெண்டு நிமிடத்தில் ஆயிடும்” என மள மள வென காரியத்தில் இறங்கினாள்.

அவள் சொன்னபடி சாகுவை சுட பண்ண இவள் பூரிகளை மிருதுவாக தேய்த்தாள்.எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பதமாக அமுக்க, பொங்கி பூரித்து எழுந்தன பூரிகள்..... அவற்றை வடித்து ப்ளேட்டில் அடுக்கினாள். ஆறு பூரிகள் தயாரானதும் சாகுவுடன் சுபாவிடம் குடுத்து அனுப்பினாள்.

“வா வா சுபா, ஒ சூடா பொரிச்சியா நல்லது, ஆமா மனு எங்கே” என்று கேட்டார்.
“மனுதாங்க மா பூரி போட்டுச்சு, நான் சாகு ரெடி செய்யற நேரத்தில, மேலே பூரிகள தேய்சுகிட்டு இருக்குது உள்ளார” என்றாள் சுபா.
“என்னது, அவ ஏன் இந்த வேலை எல்லாம் செய்யறா, சரி பசி அறிஞ்சு கை குடுத்து செஞ்சிருக்கா நல்லதுதான், போ நீ போய் பூரிகளை போடு, அவள இங்க அனுப்பு” என்றார். சரிமா என சுபா உள்ளே ஓடினாள்.

“பரவாயில்லை எல்லா வேலையிலும் சிறந்தவளா இருக்கா, இத்தனை நேரம் எனக்கு வந்த பூரி எல்லாம் உப்பவே இல்லை, உள்ளே சரியா வேகவும் இல்லை, நான் வேணா போய் போட்டுட்டு வரட்டுமான்னு என்னை மனு கேட்டா, நாந்தான் அதிகமா எண்ணெய் பண்டம் வேண்டாம், போதும்மா போறது விடுன்னு சொன்னேன்..... இப்போ உனக்கு புதுசா பக்குவமா செய்து குடுத்து அனுப்பி இருக்கா பாரு” என மெச்சிகொண்டார்.

சுவையான பூரியை மெல்ல மென்றபடி ‘ஒ அவளா செய்தாள்?’ என எண்ணிக்கொண்டான்.
மனு வெளியே வர “உனக்கு எதுக்கு சிரமம், எனிவே தாங்க்ஸ்” என்றான்.
“இட்ஸ் ஒகே” என்றாள் புன்னகையுடன். பசியாற சுவையான உணவை உள்ளே தள்ளியதும் மனதும் நிறைந்தது. இவனும் புன்னகைத்தான்.
‘ஹப்பா இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா.... என்னமா சிரிக்கறான்’ என எண்ணி ஆச்சர்யபட்டாள் மனு.

கற்பகத்தை வந்து பார்த்த டாக்டரும் நல்ல முன்னேற்றம் என ஆச்சர்யபட்டார்.... மருந்துகளை குறைத்து செய்ய வேண்டிய அசைவுகளை அதிகப்படுத்த கூறினார்.... காலை மாலை நடப்பது நல்லது என கூறினார்.... அதை கேட்ட கீர்த்திக்கு மனசு நிறைந்தது.... சந்தோஷமான சிரிப்பை வெளியிட்டான்.... அதை பார்த்து அசந்தே போனாள்.... டாக்டர் சென்றதும் இவளிடத்தில் வந்து “தாங்க்ஸ்” என்றான்.
“எதுக்கு?” என்றாள்.
“அம்மாவை நல்லபடி பார்த்துக்கறே, நல்லபடி நடமாட வெச்சிருக்கே, நல்ல முன்னேற்றம்னு டாக்டர் சொல்லீட்டு போறாரே அதுக்கெல்லாம் நீதானே காரணம்” என்றான்.
“ஒ அது என்னோட ட்யூடிதானே... அதுக்கு எதுக்கு நன்றி எல்லாம்” என்றாள்.
“எனிவே தாங்க்ஸ்” என்றாள் புன்சிரிப்புடன் நகர்ந்துவிட்டாள்.

அடுத்து வந்த நாளில் வேலை அதிகமின்றி வீட்டிலேயே விஸ்ராந்தியாக அமர்ந்து டிவி பார்த்தபடி இருந்தான் கீர்த்தி.... டைனிங் ஹாலில் நிழலாட திரும்பி பார்த்தான்....
‘இது இது நான் அம்மாக்கு வாங்கித்தந்த புடவை அல்லவா’ என நினவு கூர்ந்தான்.
இது மனு அல்லவா, இவளுக்கு ஏது இந்த புடவை?’ என யோசித்தான்.
“அம்மாவை வசியபடுத்தி வாங்கிக்கொண்டு இருப்பாள் ஸோ இவளும் துவங்கிவிட்டாள் இந்த வேலைகளை’ என சுறுசுறுவென கோபம் ஏறியது.
“ஏய் நில்லு” என இரைந்தான். கற்பகத்திற்கு பழச்சாறு எடுத்துக்கொண்டு திரும்பியவள் அவன் கத்தலில் அதிர்ந்து அப்படியே நின்றாள். கையில் க்ளாஸ் தடுமாறி சிந்தியது.

“இது ஏது இந்த புடவை உனக்கு, அம்மாவை ஏமாற்றி வாங்கிகிட்டியா, இல்லை திருடினியா?” என்று இரைந்தான். மனுவுக்கு அதிற்சியாகவும் அவமானமாகவும் போனது. “நானா திருடியா இல்லவே இல்லை” என்றாள்.
“பேசாதே, உங்க மாதிரி பெண்கள் புத்தி எனக்கு தெரியும், நீ நல்லவளாட்டமா வேஷம் போடும்போதே நினைச்சேன், இப்படி தான் ஏதானும் நடக்கும்னு..... இன்னும் என்னென்னா சுருட்டினே நான் இல்லாத இந்த ஒரு மாதத்தில?” என்று மேலும் கத்த, கற்பகம் மெல்ல வெளியே நடந்து வந்தார்

“என்னடா கீர்த்தி, யாருகிட்ட எதுக்கு கத்திகிட்டு இருக்கே?” என்றபடி.
கண்ணில் நீர் தளும்ப மனு நிற்பதை கண்டவர் துணுக்குற்றார்.
“என்னமா நடந்துச்சு?” என்றார். அவள் பேசாமல் உதட்டை கடித்தபடி அழுகையை அடக்க முயன்று தோற்றாள்.
“என்னடா, நீயானும் சொல்லேன்” என்றார் கீர்த்தியிடம்.

“இந்த சேலை உங்கள ஏமாத்தி இவ வாங்கிகிட்டாளா இல்ல திருடி கட்டி இருக்காளா?” என்றான்.
“சீ வாய மூடு.... அவ அந்த மாதிரி பொண்ணு இல்லை.... நாந்தான் அவளுக்கு குடுத்தேன்..... நாலு புடவையையே மாத்தி மாத்தி கட்டிக்கறாளேன்னு..... வேலைகாரிக்கும்தான் குடுத்தேன், இப்போ என்ன” என்றார்.

“நீங்களா குடுத்திருக்க மாட்டீங்க, இவ வேணும்னு உங்கள வசியம் பண்ணி வாங்கி இருப்பா” என்றான்.
“போதும் கொஞ்சம் உன் வாய மூடு கீர்த்தி.... அசிங்கமா பேசாதே..... எனக்கும் இவளுக்கு பெரிய சண்டையே ஆயிடுத்து, இவ வேணாம்னு மறுக்க.... நான் எடுத்துண்டுதான் ஆகணும்னு வர்புறுத்தனு...... அவளை கண்டிச்சு தான் நான் இந்த புடவைகளை தந்தேன்..... அவ ஏன் பயந்தானு இப்போதான் எனக்கு புரியுது, ஒரு நிமிஷத்தில அவளை தரக்குறைவா எடைபோட்டு அசிங்க படுத்தி பேசீட்டியே, இதான் என்னோட வளர்ப்பா பையா, உனக்கே அசிங்கமா இல்லை.... பேசற முந்தி யோசிக்கவே மாட்டியா..... உன் மனசில ஆயிரம் ரணம் இருக்கலாம் கீர்த்தி, அதுக்காக எல்லாரும் அப்படிதான்னு முடிவுகட்டி பேசக்கூடாது.... போதும் உன் அபத்தம்” என இரைந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.
“ஆண்ட்டி நீங்க உக்காருங்க, ஜூச குடியுங்க” என அமர வைத்து அந்த நிலையிலும் அவருக்கு ஜூசை குடிக்க வைத்தாள் மனு.

பாதி குடித்தபின் மீண்டும் “நான் என் புடவைகளை யாருக்கும் குடுப்பேன்.. இல்ல உள்ளேயே வைத்து பூட்டி வீணாக்குவேன், நீ ஏன் இதை எல்லாம் தலையிடற கீர்த்தி.... அவகிட்ட மன்னிப்பு கேளு..... நீ இன்னிக்கி பேசியது அதிகம், தப்பு, மன்னிப்பு கேளு” என்றார்.

“ஆண்ட்டி பேசாம இருங்க” என்றாள் மனு அவளிடம்.
“நீ பேசாம இரு மனு, கீர்த்தி....” என அதட்டினார்.
“அம்மா” என்றான் தயங்கி.
“ம்ம்” என்றார் கடுமையாக.
“மன்னிச்சுடு, நான் யோசிக்காம பழி போட்டு உன்னிடம் அப்படி பேசி இருக்க கூடாதுதான் சாரி” என்றான்.
“ஐயோ பரவாயில்லை மறந்துடுங்க” என்றாள் மனு அவசரமாக அவனை காணாது

அவன் சரேலென விலகி மேலே தன் அறைக்கு சென்றுவிட்டான். அன்னைக்காகவென மன்னிப்பு கேட்டுக்கொண்டது அவனுக்கு இன்னமும் கோபத்தை அதிகரித்தது..... உள்ளே கனன்றது.... ‘போயும் போயும் ஒரு பெண் பிள்ளையிடம் மன்னிப்பு கேட்க சொல்லிட்டாங்களே அம்மா’ என கோபம் இப்போது அவர் மீது திரும்பியது. அன்று முழுவதும் எதேற்சையாக மனுவை சந்திக்க நேர்ந்தாலும் கண்கள் வெறுப்பையே உமிழ்ந்தன.
‘இவனுக்கு என்னதான் ஆயிற்று, ஏன் இப்படி என்னை கண்டாலே எரிமலையாகி வெடிக்கிறான்.... சில நேரம் என்னமோ மிகவும் சகஜமாக பேசுகிறான், என்னதான் இவன் மனதின் சிக்கல்?’ என குழம்பினாள் மனு. அவனது அன்னைக்கே அவன் புதிராக இருக்கும்போது நேற்று வந்த இவுளுக்கா அவனின் மன நிலை புரிய போகிறது.

“என்ன ஆண்ட்டி நீங்க இப்படி எல்லாம் திட்டீட்டீங்க.... என் மேல இன்னும் கோபம் அதிகமாகீடுமோ என்னமோ..... உங்க மகனுக்கு” என்றாள்.
“ஒண்ணுமாகாது.... நான் சொன்னேனே, ரணப்பட்ட மனது, எப்போதும் மேலே எழும்பி அவனையும் வேதனைபடுத்தி மிச்சவங்களையும் ரணபடுத்த வைக்குது.... எம் பிள்ளைக்குனு வந்து வாய்ச்சுதே, அவனுக்கு எப்போ விடியுமோ” என்று கலங்கினர். “என்னாச்சு ஆண்ட்டி?” என்றாள்.
“ஹ்ம்ம் ஆச்சு சட்டியும் பானையும், அப்பறமா சாவகாசமா ஒரு நாள் சொல்றேன் மனு... இன்னிக்கி வேண்டாம், என் மனசே சரியில்லை” என்றார்
“சரி ஆண்ட்டி, நீங்க வாங்க, கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று அழைத்துச் சென்றாள்.

அடுத்து வந்த நாட்களிலும் அவன் முகம் கடுவன் பூனையாக தான் இருந்தது.... அவனது வேதனையையும் கோபத்தையும் அதிகரிக்க விரும்பாமல் அவள் ஒதுங்கியே இருந்தாள்.... அனாவசியமாக அவன் கண் எதிரே வருவதை தவிர்த்துக்கொண்டாள்.

அன்று காலையிலேயே சிற்றுண்டி உண்டுவிட்டு கீர்த்தி ஆபிசிற்கு கிளம்பி சென்றுவிட்டான். கற்பகமும் மனுவின் உதவியுடன் குளித்து முடித்து பூஜை அறையில் கண் மூடி பிரார்தித்து பின் அவருக்கு மிகவும் பிடித்தமான தோட்டத்து மாமரத்து திண்டருகில் வந்து சேரில் அமர்ந்தார். அது பெரியதொரு பறந்து விரிந்த மாமரம், பல வருடங்கள் பழையது, மிகவும் ருசியான மாங்கனிகளை ஒவ்வொரு வருடமும் தவறாமல் குடுத்து வருகிறது.

“இது நான் கல்யாணமாகி வந்தபோது நட்ட மரம் மனு, என்னோட குழந்தை தோழி எல்லாமே இதுத்தான்..... வந்த அன்னைக்கே என் மாமனார் இந்த மாங்கன்றை கொண்டு வந்து என் கையில் குடுத்து இங்கே நட சொன்னார்..... அதை நானே நீர் ஊற்றி வளர்த்தேன், கொஞ்ச கொஞ்சமா பெரிசாச்சு..... அதே போல என் குடும்பமும் தழைத்தது..... கீர்த்தி பொறந்தான், அவனுக்கு அடுத்தவ காஞ்சனா பிறந்தா, அவளை நீ பார்த்ததில்லை, கல்யாணமாகி பம்பாயில இருக்கா, எப்போவானும் வருவா என்னை பார்க்க...” என்பார் ஆசையாக எப்போதுமே அந்த மரத்தின் கீழே தான் அவருக்கு அமர பிடிக்கும், அவரைசேரில் அமர்த்தி, அருகே மாமரத்தை சுற்றி கட்டப்பட்ட சிமென்ட் திண்ணையில் தான் அமர்ந்துகொண்டு இருவரும் புத்தகம் படிப்பதோ அரட்டை அடிப்பதோ செய்வர்.... நல்ல குளுகுளுவென தென்றல் காற்று வீச மாமர வாசனையுடன் பொழுது இனிமையாக கழியும்....
“ஏம்மா மனு, உன்னை பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே, நீ யாரு.... பார்த்தா நல்ல குடும்பத்து பெண்ணாக தெரியுது, அப்படி இருக்க, நீ ஏன் இந்த மாதிரி வேலைக்கு வந்திருக்கே, என்ன படிச்சிருக்கே, உனக்குன்னு இந்த உலகத்தில யாரும் இல்லையா என்ன?” என்றார் கற்பகம்.



Saturday, 23 February 2019

UN KANNIL NEER VAZHINDHAL - 2


“பேர் என்ன, என்ன படிச்சிருக்கீங்க, ஏன் மேலே படிக்கலை?” என்றான். கூறினாள். மனஸ்வினி என்று பெயரை கேட்டதும் ‘இவளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பெயரா?’ என்பது போல ஒரு ஏளன பார்வை பார்த்தான். அவள் உதட்டை கடித்துக்கொண்டு தலை குனிந்தாள்.
“என் அம்மாவை தான் கவனிச்சுக்க போறீங்க, மரியாதையா நடந்துக்கணும், அவங்கள மட்டுமே கவனிக்கணும்” என்றான். அதில் அழுத்தம் குடுத்து.
“மற்றபடி வீட்டின் நடப்புகள் மற்ற வேலைக்காரர்களிடம் வம்பு பேச்சு வார்த்தைன்னு நான் எதுவுமே கேள்விபட கூடாது....அம்மாவையும் தான் அன்பா பாசமா கவனிச்சுக்கறேன்னு அவங்க இஷ்டப்படி நடந்துக்க விட கூடாது..... டாக்டர் என்ன சொல்லி இருக்காரோ அதை ஸ்ட்ரிக்டா பாலோ பண்ணனும்..... ஒழுங்கா மருந்து மாத்திரை எல்லாம் குடுக்கணும், காலுக்கு மசாஜ் செய்யணும்..... இதெல்லாம் தெரியும்தானே, மருந்து பேர் எல்லாம் படிச்சு சரியா செய்வீங்களா?” என்றான்.

இன்னமும் அவளை மதித்து நேருக்கு நேராக முகத்தை பார்க்க கூட இல்லை, கோப்புகளை பார்த்துக்கொண்டே தான் பேசினான்.
“எஸ் சார், பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிருக்கேன், நல்லபடி பார்த்து படிச்சு செய்வேன்” என்றாள்.
“ம்ம் சரி, ஆசிரமத்து பெரியவர் சோமநாதன் உங்கள பத்தி ரொம்ப பெரிசா பேசி சிபாரிசு செஞ்சிருக்காரு, அதனாலதான் வேலைக்கு எடுக்க சம்மதிச்சேன்... அவர் பேர காப்பாத்துங்க.... நீங்க போகலாம்.... வாசலில் காத்திருங்க, நான் கொஞ்ச நேரத்தில் வந்து அம்மா கிட்ட அழைச்சுகிட்டு போறேன்” என்றான். வார்த்தை தடித்தே வந்தது. கடுமையின் மொத்த உருவமாக இருந்தான்..... அப்போது மட்டுமே அவளும் நிமிர அவனும் கோப்பிலிருந்து நிமிர்ந்து அவளை நேருக்கு நேர் கண்டான்.
அவளின் அழகு முகம் கண்டு ஒரு நிமிடம் ‘ஹப்பா என்ன அழகு, அமைதி’ என்று அவன் மனம் ஒரு நிமிடம் அசைந்தது. உடனே அதை முகத்தில் காணவிடாது துடைத்தார் போல முகத்தை மாற்றிக்கொண்டு கடுமையை வரவழைத்துக்கொண்டான்.
‘இந்த அழகுதானே ஆபத்து.... போதுமே இந்த பெண்களோட ச்சே’ என்று உள்ளுக்குள்ளே உமிழ்ந்தான்.

கொஞ்ச நேரம் வாச வரவேற்பறையில் நின்றாள்.... அமர சொல்லவில்லை, அமர்ந்தால் திட்டுவானோ என்று பயம்.... கால் கடுக்க நிற்க அவன் வந்தான்...
“உக்கார்ந்திருக்கலாமே?” என்றான்.
“பரவாயில்லை சார்” என்றாள்.
“வாங்க” என்றான் விடுவிடு நடையில் நாலு நாலு படிகளாக மாடியை அடைந்தான். அவன் வேகத்திற்கு ஈடு செய்ய முடியாமல் வேகமாக தடுமாறி பின்னே சென்றாள்.
அங்கே ஒரு ஹால் அதில் ஒரு டிவி சோபாக்கள் என இருந்தன.... அதன் முடிவில் ஒரு வெராண்டா இருக்க, அதனின்று சில படுக்கை அறைகள் பிரிந்தன.... ஒரு அறைக்குள் அவன் சட்டென நுழைய அவளும் தயங்கி நுழைந்தாள்.

அங்கே கிழிந்த நாராக ஒரு வயதான மாது படுத்திருந்தார்.... அனாதை போல அவர் அங்கே படுத்திருப்பதை கண்டு அவளுக்கு உள்ளம் பொங்கிற்று....
“அம்மா” என்றான் இவன். மெல்ல கண் விழித்தார்.
“என்னப்பா?” என்றார்.
“இதான் மா, உங்கள கவனிச்சுக்க நம்ம டாக்டர் அனுப்பிச்ச புதிய அசிஸ்டென்ட்” என்றான்.
“ப்ச்” என்றார். “எதுக்கு பா?” என்றார்.
“நல்லா இருக்கே, தனியா உங்களால முடியலை, நம்ம வேலைக்காரங்களுக்கு உங்களை அக்கறையா பார்த்துக்க மனசும் இல்லை, நேரமும் இல்லை, நானும் சதா ஓடிகிட்டே இருக்கேன், பின்னே உங்களை யாரு கவனிச்சுபா, நீங்க அடம் பண்ணாதீங்க, இவங்களோட நல்லபடியா ஒத்துழையுங்க.... அவங்க சொல்றபடி மருந்து மாத்திரையை எல்லாம் ஒழுங்கா எடுத்துக்குங்க, என்ன சரியா” என்றான் கடுமை குறையாமல்.
“ம்ம்” என்றார் பிடித்தமே இல்லாமல்.

‘இவருக்கு தான் வந்ததில் இஷ்டமே இல்லையே, எப்படி இவர் மனதில் இடம் பிடிக்க போகிறேன், இவனோ கடுமையே உருவமாக இருக்கிறானே, இங்கேயே வேறே தங்க வேண்டும் என ஐயா கூறினாரே... கடவுளே, எப்படி நான் இங்கே காலம் தள்ள போகிறேன், எனக்கு மனோ சக்தியை குடு’ என வேண்டினாள்.
“குட் மார்னிங் மா” என்றாள் அவர் அருகே சென்று புன்னகையுடன்.
“ம்ம்” என்றார் அந்த மாது வேண்டா வெறுப்பாக.
“என்ன, அம்மா ஆண்ட்டினு சொந்தம் கொண்டாடி கிட்டு, மேடம் னு சொல்லி பழகு” என்றான் அதற்கும். சரி என தலை ஆட்டினாள்.

“இது டாக்டரின் ப்ரிக்ரிப்ஷன், இதன்படி எல்லாம் குடுத்துடு, மசாஜ் செஞ்சுடு, மாலையில இங்கேயே வெராண்டாவில நடக்க வை” என்றான் எல்லாமே ஒருமையில்.
“சாரி” என்றான் சட்டென.
“பரவாயில்லை அப்படியே பேசலாம்” என்றாள் அவனை பாராமல் டாக்டரின் சீட்டை பார்த்து படித்தபடி.... தோளை குலுக்கிவிட்டு “பை மா” என நடந்துவிட்டான்.

‘பத்தோடு பதினொண்ணு, எல்லாம் பணத்துக்காக வேஷம் போட வர்ரதுகள்..... எல்லாருக்கும் இந்த பணத்தின் மேலேயும் என் மகன் மேலேயும் தான் ஆசை.... இது மட்டும் என்ன விதிவிலக்கா என்ன...’ என்று மெல்ல தனக்குள்ளே சொல்வது போல முனகினார் அவர்.... அவளுக்கு அது கேட்டது.... முந்தைய அனுபவங்கள் அவ்வளவாக சரியில்லை அதுதான் அவரின் வெறுப்பிற்கும் இஷ்டமின்மைகும் காரணம் என தேர்ந்து கொண்டாள்.
“ப்ரஷ் பண்ணியாச்சா மேடம், காபி குடிச்சுட்டீங்களா, நான் கொண்டு வரவா?” என்று கேட்டாள்.
“ம்ம் எல்லாம் ஆச்சு பிரஷ் பண்ணியாச்சு.... ஆனா இன்னும் காப்பிய தான் கடன்காரன் கொண்டு வரலை..... பெல்லை அமுக்கி அமுக்கி விரல் வலிச்சு போனதுதான் மிச்சம், எல்லாத்துக்கும் திமிரு ஏறி தான் போயிருக்கு, நான் என்ன இவங்களை கீழே வந்து திட்டி அதட்டவா முடியும்னு ஏளனம் இளப்பம்” என்றார் ஆற்றாமையுடன்.
“ஒ” என்றாள். “நான் கீழே போய் எடுத்துட்டு வரேன்” என பதிலுக்கு காத்திராமல் இறங்கினாள். சமையல் அறையில் போக “என்ன புதிசா இன்னிக்கி ஒண்ணு வந்திருக்காமே?” என அங்கே இவள் பற்றிய பேச்சு அடிபட்டது.
“ஆமா இது எத்தனை நாளைக்கோ, பெரிசு போடற சத்தத்தில இது எத்தனை நாளைக்குனு பாப்போம்” என்றாள் அந்த சமையல்காரி.
“தா சும்மா இரு, அது வருது” என்று அடக்கினான் வேலைக்காரன்.
“அம்மாவுக்கு காபி” என்றாள் அங்கே சென்று.
“நான் மேலே எடுத்து வரேன் கொஞ்ச நேரத்தில” என நொடித்தாள்.
“இல்லை, என் கிட்ட குடுங்க அக்கா... நான் எடுத்துகிட்டு போறேன், உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்” என்றால் தன்மையாகவே.
அவள் இவளை வேண்டா வெறுப்பாக பார்த்துவிட்டு காபியை இவளிடத்தில் தந்தாள். அதை எடுத்துக்கொண்டு மேலே ஏற,

“இதை நீ ஏன் கொண்டு போறே? தங்கம் எங்கே போனா, உன்னை மேலேயே இருக்கணும்னு இப்போதானே சொன்னேன்?” என்றான் அவன். கீர்த்திவாசன்.
“இல்ல ரொம்ப நேரமா அம்மா காத்திருக்காங்க போல, அதான் நானே வந்தேன்” என்றாள் பயந்தபடி ட்ரே நடுங்கியது கெட்டியாக பிடித்தாள்.
“ஓஹோ அம்மாவுக்கு காபி கொண்டு குடுக்க முடியாம அப்படி என்ன இங்கே வேலை வெட்டி முரிக்கறாங்க?” என்று இரைந்தான்.
“இல்லை அவங்க எடுத்துகிட்டு தான் வந்தாங்க... நான் கீழே வந்தேன், அதுனால நானே கையில வாங்கிகிட்டேன்” என சட்டென மாற்றிக்கொண்டு அவளை மாட்டி விடாமலும் சாமர்த்தியமாக பேசினாள் மனு. அவன் அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான். உள்ளே இவன் குரல் கேட்டு நடுங்கிய தங்கமும் இவள் பேச்சை கண் விழிக்க கேட்டாள்.

“ம்ம்” என்றபடி அவன் சென்றுவிட்டான்.
ஹப்பா விட்டால் போதும் என படி ஏறினாள். பெரியவள் கற்பகத்தை பிடித்து தூக்கி அமர்த்தினாள்.... தலையணை வைத்து சாய்ந்தாற்போல அமர்த்தி காபியை சிறிது சிறிதாக ஒரு கப்பில் விட்டு குடுத்தாள்.... அவர் கைகளும் கால்களும் அனைத்து ஜாயிண்டுகளுமே ஆர்த்ரைடிசினால் பாதிக்க பட்டு இருந்தன..... கப்பை பிடிக்க கஷ்டப்பட இவளுமே கூட பிடித்துகொண்டாள்.... குடிக்க வைத்தாள்.... அதை கண்களில் ஆச்சர்யத்துடன் பார்த்தாள் கற்பகம். மற்ற நர்ஸ்கள் கையில் காபி கப்பை திணித்துவிட்டு பத்திரிகை படிப்பர் இல்லாவிடில் இவளுக்கு குளிக்க வென துண்டு துணிமணி எடுத்து வைக்க நகர்ந்து விடுவர்.... காபியை ருசித்து குடித்தார்.... ஒரு பிஸ்கெட்டை துண்டு செய்து குடுத்தாள் மனு.

பேப்பரை எடுத்து அருகில் அமர்ந்தாள் “படிக்கவா நீங்களே படிக்கிறீங்களா ஆண்... மேடம்?” என்றாள்.
“மேடம் எல்லாம் வேண்டாம், ஆண்ட்டினே கூப்பிடு, அவன் கெடக்கான்” என்றார்.
“நீயே படி” என்றார். இவள் ஹெட்லைன்ஸ் படித்தாள். வேறே என்ன செய்தி படிக்க வேண்டும் என கூறினார். டிவியில் பழைய பாட்டுகளை போட்டு விட்டாள். அதை மகிழ்ச்சியுடன் கேட்டபடி சாய்ந்தபடியே அமர்ந்திருந்தார்.

மருந்து மாத்திரைகளை கிரமபடி எடுத்து குடுத்தாள்.
குளிக்க வெதுவெதுப்பான நீரை விளாவி வைத்தாள்.... அவருக்குண்டான நைட்டி துண்டு உள்ளாடைகள் என தேர்வு செய்து எடுத்து வைத்தாள்.
“குளிக்க போலாமா ஆண்ட்டி?” என்றாள்.
“ம்ம் போலாம்” என மெல்ல நகர்ந்து படுக்கை ஓரத்திற்கு வந்தார். அவர்தோளில் கைபோட்டு இடுப்பில் கை கொடுத்து மெல்ல இறக்கினாள்... கால் தரையில் பாவாமல் தடுமாறியது....தாங்கிகொண்டாள்.... மெல்ல அணைத்து அழைத்துச் சென்று பாத்ரூமில் அமர வைத்து பக்குவமாக குளிக்க வைத்து தலை துவட்டி, உடை உடுத்தி கூட்டி வந்து அங்கே இருந்த சேரில் அமர வைத்தாள்.... பாட்டுகள் இன்னமும் ஒடிகொண்டிருக்க அதை ரசித்தபடி மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார் கற்பகம்.

மனம் நிறைவாக இருந்தது, ஆனாலும் அதை சட்டென ஒப்புகொள்ள மனம் வரவில்லை, ‘இதே போல பலரும் வந்து முதல் சில நாட்கள் நல்லபடியாக பார்த்துக்கொண்டனர் தான், பின்னோடு புத்தி மாறி போனது..... நல்லவளாகத்தான் தெரிகிறாள், பார்ப்போம்’ என எண்ணிக்கொண்டார்.

அவள் அங்கே வேலைக்கு வந்து இருபது நாட்கள் ஆகி இருந்தன. இங்கே வந்த பின் அதிக வேலை இல்லை.... செய்வதை பக்குவமாக அன்புடன் செய்தாள்.... கற்பகத்திற்கு மெல்ல மெல்ல இவளிடம் ஈடுபாடு ஏற்படத் துவங்கியது.... சிரமம் இன்றி எங்கே எப்போது எப்படி உதவி தேவையோ அதை செய்வதையே அறியாது செய்தாள் மனு..... அவரை அங்கேயே நடமாட வைத்தாள்.

“ஆமா இங்கேயே என்னத்த தினமும் நடக்க.... சுவத்த வெறிச்சு பார்த்துண்டு..” என அலுத்து கொண்டார் நடக்க சுணங்கினார் கற்பகம். இதை கண்டவளுக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது.
வந்த இந்த இருபது நாட்களில் வாரத்திற்கு ஒரு முறை கூட கீர்த்தி கண்களில் அவளும் படவில்லை அவனையும் காணவில்லை.... அவனிடம் இப்போது தன் யோசனையை எப்படி சென்று பேசுவது என பயந்தாள். அசலே முரடன் என்ன கத்துவானோ, அதிகப்ரசங்கி என்பானோ என தயங்கினாள்.
ஆயினும் ஆண்ட்டிக்கு வேண்டி என தன்னை தைர்யபடுத்திக்கொண்டு கீழே அவன் ஆபிஸ் அறையில் இருக்கிறானா என எட்டி பார்த்தாள்..... அன்று காலை கற்பகத்திற்கு வேண்டியதை செய்துவிட்டு அவனை காண வென கீழே சென்றாள்..... தயக்கத்துடன் அவன் அறை வாசலில் நின்று மெல்ல கதவை தட்டினாள்....
“கம் இன்” என்று அதிகாரமாக குரல் கேட்டது.

இவளை கண்டவன் முகம் மாறியது.
“என்ன வேணும், நீ இந்த நேரத்தில இங்கே என்ன பண்ணறே?” என்றான்.

“இல்ல, ஒரு சின்ன விஷயம்.... பேசலாமான்னு உங்களிடம் பெர்மிஷன் கேட்க வந்தேன், பேசலாம்னா பேசறேன்” என்றாள் பயந்தபடி.
“ம்ம் என்ன சொல்லு” என்றான் எப்போதும் போல பார்வை கோப்புகளில் பதிந்து இருந்தது.

“மேடம்கு மேலேயே இருந்து இருந்து ஒரே போர் அடிக்குது போல.... நடக்கணும்னா கூட இங்கே சுவத்த பார்த்தபடி என்ன நடக்க னு சுணங்கறாங்க”. என்றாள் மெல்ல.

“அதுக்கு?” என்றான் கோபமாக.
“இல்ல, வந்து.... அவங்கள இங்கே கீழே ஏதானும் அறை இருந்தா அங்கே மாத்தீட்டா காலையும் மாலையும் தோட்டத்தில நடக்க வைக்கலாம், இயற்கை காத்தில நடந்தா உடலுக்கும் ஆரோக்கியம்..... பார்க்க பசுமையா அழகா இருக்கற தோட்டத்தில உலாவின அவங்களுக்கும் மனசு உற்சாகமா இருக்குமோன்னு ஒரு எண்ணம்.... நீங்க ஒத்துகிட்டா, ஏற்பாடு பண்ணலாமானு....” என்று நிறுத்தினாள்.
ஒரு நிமிடம் அவளை ஆச்சர்யத்துடனும் யோசனையுடனும் பார்த்தான் ஏறிட்டு.... பின் புருவம் சுருக்கி “இதன் உள் நோக்கம் என்ன?” என்றான்.

அத்யாயம் 2
அவள் சடாரென நிமிர்ந்து அவனை நேரே கண்டாள். ‘நீ திருந்தவே மாட்டியாடா’ எனத் தோன்றியது
“எந்த உள் நோக்கத்தோடும் நான் இங்கே வேலைக்கு வரலை, அதுக்கு எனக்கு அவசியமும் இல்லை, நேரமும் இல்லை.... உங்கம்மாவின் நலனுக்காக மட்டுமே” என உரைத்தாள். அவள் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து அவனை பார்த்து பேசியதில் அவன் அசந்துதான் போனான்.... அவன் கண்ட நர்ஸ்களில் இவள்தான் முதன் முதலில் அவன் தாயின் நலன் வேண்டி இது போன்ற ஆலோசனையை முன் வைப்பவள்.... இதுவும் நல்ல யோசனைதான் முயற்சி செய்யலாம் என தோன்றியது.

“செய்யலாம் தான், ஆனாதோட்டத்தில எல்லாம் நடமாட அம்மாவால முடியாது..... மேடு பள்ளமா மண்ணும் கல்லுமா இருந்தா தடுக்கி விழுந்துடுவாங்க” என்றான்.
“சீரான பாதையில தான் மெல்ல நடக்க வைக்கணும்” என்றான்.

“தெரியும், ஆனா நான் அதை பார்த்துக்கறேன், சிமென்ட் பாதையிலே மட்டுமே நடக்க வைப்பேன்.... கூடவே இருந்து பிடிச்சுப்பேன்” என்றாள் விடாமல்.
“ம்ம் சரி அப்படியே செய், ஆனா அம்மாவுக்கு இஷ்டமான்னு கேட்டுகிட்டு செய்.... பார்த்துக்க, அவங்களுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்றான்.
“சரி அப்படியே தாங்க்ஸ்” என உடனே வெளியே வந்துவிட்டாள்.
‘ஹப்பா மலையை கடந்தது போல இருக்கு.... சரியான சிடுமூஞ்சி.... எப்படித்தான் இப்படி இருக்கானோ’ என எண்ணிக்கொண்டாள்.

பின்னோடு வேலைக்காரர்களின் உதவியோடு கீழே இருந்த கெஸ்ட் ரூமை சுத்த படுத்தினாள்..... கற்பகத்திற்கு ரொம்பவே சந்தோஷம்...
“நல்ல யோசனைதான்.... நானும் பல முறை இதை யோசிச்சது உண்டு” என்றார் மகிழ்வுடன்.
“அப்போ சுவாமி அறைக்கு கூட போய் தொழலாம் இல்ல மனு?” என்றார் ஆசையாக. “தினமும் காலை மாலை தொழலாம் ஆண்ட்டி” என்றாள் புன்சிரிப்புடன்.
கற்பகத்தின் பெரிய கட்டில் மற்றும் அவசிய சாமான்கள் கீழே மாற்றப்பட்டன.... அனைத்தும் அழகாக செட் செய்தபின் மெல்ல அவரை வீல் சேரோடு வேலைக்காரர்களின் உதவியோடு கீழே இறக்கினாள்.... அவரது அறையில் அமர்த்தினாள்..... அப்போதே அவர் முகம் பளிச்சென்றானது.... அந்த அறை வாசலை ஒட்டி இருந்தது....தோட்டத்தை கண்டபடி பெரியதொரு விசாலமான ஜன்னல் இருந்தது.... அதை திறந்து வைத்தாள்..... அழகிய பூ போட்ட கர்டன்களை ஒதுக்கி ரிப்பன் இட்டு முடிந்து வைத்தாள்.

அம்மா கீழே வருவதை கூடவே இருந்து கை கொடுத்து பார்த்தான் கீர்த்தி.... அவரது அறையில் அவர் செட்டில் ஆனதும் மீண்டும் வந்தான்....
“என்ன இது ஜன்னலை திறந்து வெச்சிருக்கே, ஏதானும் இன்பெக்ஷன் ஆயிடும்” என்றான. “ஒண்ணும் ஆகாது, இயற்கை காத்து வெளிச்சம் உடலில் படணும்... முக்கியமா இவங்கள போல அதிக நடமாட்டம் இல்லாதவங்களுக்கு அது ரொம்பவே முக்கியம்” என்றாள்.

“திறந்திருக்கட்டும் கீர்த்தி.... இந்த தோட்டத்தை இங்கேர்ந்து பார்க்க எவளோ நல்லா இருக்கு” என மகிழ்ந்தார் கற்பகம். அவரின் மலர்ச்சி கண்டு அவனும் சந்தோஷித்தான்.
“ம்ம் என்னமோ செய்ங்க” என்றபடி வெளியேறினான்.

கீழே வந்தபின் கற்பகத்தில் பல மாற்றங்கள்.... தினமும் வலியே இருந்தாலும் அதை சகித்துக்கொண்டு உற்சாகத்துடன் ஒத்துழைத்தார்..... காலை மாலை குளியல் முடிந்து மெல்ல அடி எடுத்து வெளியே வந்து பூஜை அறையை தொழுதார்.
“அம்மா மனு, இத கொஞ்சம் சுத்த படுத்தீட சொல்லேன், ஒரே குப்பையும் அழுக்குமா இருக்கு” என்றார் முதல் நாள்.
“ஆகட்டும் ஆண்ட்டி” என வேலைக்காரியின் துணையுடன் கூடவே உதவி செய்து சுத்தம் செய்தாள்.

“சுவாமி விக்ரகங்கள், படங்கள் அழுக்கு போக துடைத்தாள்.... கும்குமபொட்டு வைத்து மலர் மாலை சூட்டினாள்.... அகர்பத்தி ஏற்றி வைத்தாள்..... விளக்கு தேய்க்க சொல்லி எண்ணெய் ஊற்றி திரியை ஏற்றினாள்.... பூஜை அறை பளிச்சென ஆனது.
“ஹப்பா மனசுக்கு எவ்வளோ நிம்மதி.... ரொம்ப தேங்க்ஸ் மனு மா” என்றார் மன நெகிழ்ந்து.

அது முடிந்து சிற்றுண்டி எடுத்துக்கொண்டார்.... அதுவும் மெல்ல மெல்ல டைனிங் டேபிள் மீது என ஆக்கினாள் மனு.
“அங்கேயா?” என்றார் தயக்கத்துடன்.
“ஆமா, இதில உங்களுக்கு என்ன சிரமம், உங்க மகனோட அமர்ந்து டிபன் சாப்டா அவருக்கும் எவளோ சந்தோஷமா இருக்கும்... இல்ல ஆண்ட்டி” என்றாள். சரி என்றார்.

அன்று அதே போல அவரை மெல்ல ஸ்டிக்குடன் நடத்தி பிடித்து சென்று அங்கே அமர்த்தினாள்..... தினம் போல ஆபிசிற்கு ரெடியாகி டிபன் உண்ண வந்த கீர்த்தி இதை கண்டு அதிசயித்தான்.
“அம்மா நீ இங்க?” என மலர்ந்து சிரித்தான்.
“ஆமா, நானும் இன்னிக்கி ஒன்னோட உக்கார்ந்து டிபன் சாப்பிட போறேன் கீர்த்தி” என்றார். “வெரி குட் மா” என்றபடி தானே அவருக்கும் தனக்குமாக விளம்பினான்.... அவரும் மெல்ல எடுத்து உண்ண துவங்கினார்.... அதுவரை அவன் கண்ணில் படாமல் ஒதுங்கி நின்றவள் இப்போது முன்னே வந்தாள்..... இட்லிகளை பிட்டு சின்ன துண்டுகளாக்கி பக்கத்தில் சின்ன கப்பில் சாம்பார் சட்னி என எடுத்து வைத்து கற்பகத்தின் கையில் ஸ்பூனை தந்துவிட்டு மீண்டும் மாயாமானாள்.... அவன் முன்னே எதற்கு என.... இதை எல்லாம் கண்டவன் மனம் அவளை வாழ்த்தியது.
கற்பகம் ஈசியாக தானே சிந்தாமல் எடுத்து உண்பதை கண்டு அவர் கைகள் நல்ல குணம் அடைந்துள்ளன என்பதை அறிந்தான்.... பரவயில்லையே ஒரு மாசத்தில நல்லா பழக்கி இருக்காளே என மெச்சிக்கொண்டான்.

பின்னோடு அவன் ஆபிஸ் செல்ல மனு முன்னே வந்தாள்....
“நீயும் சாப்பிடு, அதன் பின்னால வெளீல போலாம்” என்றார் கற்பகம். அவள் டிபன் உண்டதும் இருவருமாக தோட்டத்திற்கு சென்றனர்..... அங்கே சுற்றி நடக்கவென செப்பனிட்ட பாதை அமைக்கப்பட்டிருந்தது.... அதன் மீது மெல்ல வாக்கிங் ஸ்டிக்குடன் நடத்தினாள்.... தானும் அவர் தோள் மீது ஒரு கையை வைத்துக்கொண்டாள்.... ஏதேனும் எங்கேனும் தடுக்கினால் சட்டென பிடித்துக்கொள்ள ஏதுவாக....
உற்சாகமாக அவளுடன் சின்ன கதைகள் பேசி சிரித்தபடி அங்கே உலாவினார் கற்பகம். அவரின் அந்த குழந்தைத்தனமான ஆனந்தத்தை கண்டவளுக்கு மனம் நிறைந்தது.


Friday, 22 February 2019

UN KANNIL NEER VAZHINDHAAL - 1


உன் கண்ணில் நீர் வழிந்தால்...

தட தடவென ரயில் ஓடிக் கொண்டிருந்தது. அவளது மனமும் அதே போல தடதடத்துக் கொண்டுதான் இருந்தது.... துணிவுடன் கிளம்பி விட்டோமே, அடுத்து என்ன என மனம் அலைபாய்ந்தது.... பயம் என்பது லேசாக எட்டி பார்த்தது.... ஆனால் அதன் பயனாக கண்ணில் நீர் மட்டும் துளிர்க்கவில்லை.... இன்றல்ல நேற்றல்ல அவளது கண்ணீர் அணைகடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

அது கோவை செல்லும் விரைவு ரயில்.... இரண்டாம் வகுப்பு அமர்ந்து செல்லும் கோச்....
அதில் ஒரு ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள் மனஸ்வினி.
அவள் காலின் கீழே அவளது சூட்கேசும் ஒரு அட்டை பெட்டியும் அவளது தற்போதைய உடமைகளாக அமர்ந்திருந்தன.... அவளுக்கென்று உலகத்தில் இருந்த பொருட்கள், உடமைகள் சொந்த பந்தங்கள் எல்லாமும் அதுவேயாக இருந்தது.

ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த காற்று அவளை தழுவி சென்றது.... அவள் கண்கள் தாமாக மூடிக்கொண்டன.... தன்னையும் அறியாமல் கண் அசந்திருந்தாள் மனு... ஒரு ரெண்டு மணி நேரம் போல உறங்கி இருப்பாள் போலும், ஏதோ ஸ்டேஷனில் வண்டி நிற்க அந்த கலகலப்பில் கண் விழித்தாள்....‘ஐயோ தூங்கீட்டோமே,சாமான் என்னாச்சோ?’ என கீழே குனிந்து பார்த்துகொண்டாள். பெட்டியை இணைத்து பூட்டி இருந்தாள் தான்... அட்டைபெட்டியின் கயிற்றிலும் செயினை இணைத்திருந்தாள்.... கொஞ்சம் நிம்மதி ஆயிற்று.

லேசாக பசி தோன்றியது.... தன் கை பையை திறந்து சின்ன டிபன் பாக்சை எடுத்து திறந்தாள்... சப்பாத்திகளும் கூட உருளை மசாலாவுமாக வண்டியே மணத்தது.... அடுத்தவரை திரும்பி பார்க்க வைத்தது.... அவளுக்கே சிறிது கூச்சமாகி போனது.... அதுதான் அவளின் கைமணம்... பாதி மூடியை திறந்து வைத்துக்கொண்டு மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.... உண்டு பாக்சை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தாள்.... குளிர்ந்த நீரை பருகியதும் மனமும் வயிறும் நிறைந்தது.... நடந்து போனவற்றை மனம் அசைபோடவும் மறுத்து மரத்து போயிருந்தது.... அடுத்து என்ன என்பதில்தான் அவளது கவனம் மொத்தமும் இப்போது இருந்தது.

‘போதநூரில் இறங்க சொன்னார்களே, அங்கே இறங்கிய பின் எப்படி அங்கே சென்று அடைவது?’ என்ற எண்ணத்தில் சுழன்றது.... மறுபடி கண்ணை அசத்தியது... சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.... முந்திய இரவுகளின் தூக்கமின்மை இப்போது ஆளை அசத்தியது பாவம்..... சில மணி துளிகள் தூங்கி எழுந்து முகம் கழுவி தலைமுடியை இறுக்கி கிளிப் செய்தாள்..... சூடாக காபியும் வடையுமாக வாங்கி அருந்தினாள்.... புத்துணற்சியாக தோன்றியது.... வெளியே இருட்டிக்கொண்டு இருந்தது.... மணி ஏழு நெருங்கும் நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் இறங்க வேண்டிய நேரம் என்று உணர்ந்து அவளையும் அறியாமல் ஒருவித பரபரப்பும் படபடப்பும் அவளை வந்து தொற்றிக்கொண்டது.
எட்டை நெருங்க அவளது வெஸ்ட் கோஸ்ட் வண்டி போதநூரை எட்டியது.... இரண்டு நிமிடமே நிற்கும் என பேசிக்கொண்டனர்.... அவள் அசலே பெட்டியின் செயினை கழற்றி தயார் நிலையில் வாயிலில் கொண்டு ஒவ்வொன்றாக சேர்த்திருந்தாள்.... வண்டி நின்றதும் கூட்டம் முண்டியடிக்க அவர்களில் இருந்து மீண்டு அவளும் முயன்று ஒரு கையில் கை பையும் மற்றொரு கையில் சூட்கேசுமாக தொப்பென பிளாட்பாரத்தில் குதித்தாள்.... பின்னோடு திரும்பி அட்டை பெட்டியை நகர்த்தி பிடித்து இறக்கினாள்..... அங்கே நின்ற ஒருவன் அவளுக்கு ஒரு கை கொடுத்து உதவ ‘தாங்க்ஸ்’ என ஒரு பக்கமாக இறக்கி வைத்துவிட்டு ஹப்பா என மூச்சு விட்டுக்கொண்டாள்.

ஒரு கூலியை பிடித்து “ரெண்டே சாமான் தான்” என பேரம் பேசி அவன் தூக்கிக்கொண்டு முன்னே நடக்க அவள் விரைவு நடையில் அவனை பின் தொடர்ந்தாள்.... வாசலை அடைந்தவள் ஒரு ஆட்டோவை பேசினாள்.... போதநூரில் உள்ள ஒரு தனியார் ஹாஸ்பிடலை ஒட்டிய அனாதை இல்லத்திற்கு அவள் செல்ல வேண்டும்.... இடத்தை கூறி பேசி முடித்து ஏறி அமர்ந்தாள்..... குறிப்பிட்ட ஆசிரமத்தின் எண்ணை செல்லில் அழுத்தினாள்.
“மனஸ்வினிதானே மா, வந்து சேர்ந்துட்டீங்களா, ஒ ஆட்டோவில ஏறிட்டீங்களா, சரி வாங்க மா.... உங்களுக்க சார் காத்திருக்காங்க” என்றான் செயலாளன்.
மனம் படபடத்தது, நான் செய்வது சரியா, சரிதான் என திண்ணமாக கண்ணை மூடி தன்னையே சுதாரித்துக்கொண்டாள்..... ஆட்டோ அந்த ஆசிரமத்தை நெருங்கியது..... கீழே இறங்கி பெட்டிகளை காவலாள் அருகில் வைத்தாள்....
“நான் உள்ளே போகணும், போயிட்டு வர வரைக்கும் இவை இங்கேயே இருக்கட்டுமா ப்ளீஸ்... வந்து எடுத்துக்கறேன்” என்று வினையமாக கேட்டாள். அவன் அவளை சந்தேகமாக பார்த்தபடியே “ம்ம் சரி சீக்கிரமா வாங்க” என்று உள்ளே அனுமதித்தான்.

தயங்கி ஆபிஸ் என பொறிக்கப்பட்ட ரூமை அடைந்தாள்..... பசுமையான சுற்றுபுறங்களை கொண்ட ஒரு விஸ்தாரமான இடம் அது..... எங்கும் பளிச்சென்று கண்ணை கவரும் பசுமை, மரங்கள்கொடி செடிகள் காய் கனிகள் பூக்கள் நறுமணம் கமழ அவளை வா வென வரவேற்றன.... மனம் புல்லரித்தது.... ஆபிசை நெருங்கி உள்ளே சென்று அறிமுகம் செய்துகொண்டாள்.

“நீதான் மனஸ்வினியா மா, வா உக்காரு” என்றார் அந்த ஆசிரமத்தின் முக்கியஸ்தர் அறுபதேனும் இருக்கும், முதியவர்.... கருணையே வடிவான கண்கள், திடமான உடல்.... கனிவே குரலாக அவளை பற்றி விசாரித்தார்.... அவள் அவரது கேள்விகளுக்கு பணிவாக வினையமாக பதிலளித்தாள்.

“இந்த வேலை மிக கடினம் மா, உன்னால செய்ய முடியும்னு நம்பிக்கை இருக்கா, முன் அனுபவம் கூட இல்லையேமா, முகம் சுளிக்காம செய்வியா?” என்று கேட்டார்.
“கண்டிப்பா செய்வேன் ஐயா, என்னை நம்பலாம்.... இதற்கு எல்லாம் முன் அனுபவம் என்பது தேவை இல்லை னு என் சிறு அபிப்ராயம் ஐயா” என்றாள்.

“ஹ்ம்ம் உண்மைதான்.... எங்க ஆசிரமத்தை சுத்திகாட்டறேன், நீயே பாரு, உனக்கு முடியும்னு தோணினா முடிவா சொல்லு.... உன்னை வேலைக்கு எடுத்துக்க எனக்கு ஒண்ணும் கஷ்டமில்லை, எங்களுக்கு ஆள் அவசியம் தேவை” என்றார். அவர் எழ கூடவே அவளும் தொடர்ந்தாள்.

ஒரு பக்கம் மொத்தமும் ஆண்களுக்கான வாசஸ்தலம், மறு பக்கம் பெண்களுக்கானது. அதன் முடிவில் ஒரு பெரிய டைனிங் ஹால்.... அதனை அடுத்து பிரார்த்தனை கூடம்.... அங்கே அனைத்து மதத்து இறை வடிவங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவள் அதை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டாள்.
பஜனை செய்ய ஏதுவாக ஒரு சிறிய மேடை அமைப்பும் இருந்தது.
அதனை தொட்டடுத்து ஒரு பெரிய ஹாலில் நாற்காலிகள் போடப்பட்டு ஒரு பெரிய ஸ்க்ரீன் தொலைக்காட்சி பெட்டி சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்தது. வார இறுதிகளில் தொலைக்காட்சி சினிமாவோ அல்லது விசிடி படமோ காண்பிக்க படும் என கூறினார் பெரியவர்.

அது ஒரு தனியார் நடத்தும் அனாதை ஆசிரமம்.... அவ்வளவாக வசதியில்லாத, கைவிடப்பட்ட முதியவர்களுக்கென்றே கட்டப்பட்டது.... ஒரு பெரிய மருத்துவமனையை ஒட்டிய சேவை மையம் என்பதால், அங்கே சிகிச்சைக்கு என வந்த சில முதியோர்கள் கவனிப்பாரின்றி அனாதைகளாக அவதிப்படும் பட்சத்தில், இங்கே சேர்த்துக்கொள்ள படுவர்.... இவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை..... ட்ரஸ்டின் மூலம் பண செலவு நடக்கின்றது.... அந்த ட்ரஸ்டுக்கு பல பல வசதி படைத்தோர், அமெரிக்கா ஆஸ்ட்ரேலிய நாடுகளில் வசிக்கும் செல்வந்தர்களின் அன்பளிப்பும் வந்து சேர்கிறது.... அதனால் பண கஷ்டம் என்பது இல்லை..... ஆயினும் வாரி இரைக்க செல்வம் இல்லை..... எல்லாமே அளவாக நடந்தது... அதே போல தான் சமையல் சாப்பாடும் மருத்துவ வசதிகளும் கூட..... தரம் நிறைந்ததாக இருந்தது, ஆனால், செல்வ செழிப்பில் மிதக்கவில்லை.

வயதான பெண்களின் விடுதிக்குள் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்... பலரும் உறங்க முற்பட்டுகொண்டு இருந்தனர்.... உள்ளேயே ஹால் போன்ற அமைப்பும் அதில் தடுப்புகளுடன் பல கட்டில்களும் போடப்பட்டு இருந்தன.... காபின்கள் போல காணப்பட்டன அவை..... அதை தவிர எதிர் சாரியில் அறைகளாகவும் கட்டப்பட்டு இருந்தன.... அதில் தாங்களது செலவிற்கென கொஞ்சமேனும் பணம் குடுக்க முடிந்தவர்கள் தங்கினர் என கூறினார்.... காபின்களில் முற்றும் அனாதைகளாக இருந்தோர் தங்கி இருந்தனர்.

நிறைய பெண்டிர் படுத்த படுக்கை நிலை.... அவர்களின் உடல் நிலை, சுத்தம், சுகாதாரம் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அவர்கள் குளிக்க கழிக்க, மாற்றுடை உடுக்க, மருந்து உணவு உண்ண உதவ வேண்டும் இதுவே மனு வின் வேலையாக பொறுப்பாக இருக்கும் என விளக்கினார்.
“எனக்கு பரிபூரண சம்மதம் ஐயா” என்றாள் மனதார.

“ரொம்ப சந்தோஷம் மா.... இப்போ ரொம்ப நேரமாச்சு, நீ உன் சாமான்களோட உனக்குன்னு ஒதுக்கப்பட்ட அறைக்கு போய் ஓய்வெடுத்துக்கோ, நாளை காலை மிச்சம் பேசிக்கலாம்” என்றார்.
சரியென திரும்பி வந்தனர். அவள் சாமான்களை எடுக்க முனைகையில் பையனிடம் கூறி எடுத்து வர செய்தார்.
“பாரு மனஸ்வினி, உனக்கு இப்போதைக்கு எட்டாயிரம் சம்பளம் போட்டிருக்கேன் மா, எங்களால நிறைய எல்லாம் குடுக்க முடியாது..... இது சாரிடபிள் ட்ரஸ்ட் நடத்தும் தொண்டு.....உனக்கு இருக்க இடம், உணவு மற்றைய வசதிகள் இலவசமா கிடைக்கும்” என்றார்.

“போதும் ஐயா, இதுவே எனக்கு போதுமானது” என்றாள் கைகூப்பி.
“ஹ்ம்ம்” என புன்னகையுடன் “சரி மா ரொம்ப சந்தோஷம்,போய் சாப்டுட்டு படு” என்றார்.
சரி என வெளியே வந்தாள். தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.... எட்டுக்கு பத்து ரூம், அதில் விசாலமான ஒரு ஜன்னல், உள்ளேயே சிறிய குளியல் அறை.... ஒரு கட்டில், ஒரு டேபிள், நாற்காலி, சுவற்றில் ஒரு மாடம் அதன் மேல் ஒரு கண்ணாடி..... அதன் அருகிலேயே திறந்த நிலையில் கதவுகள் இன்றி பிறைகள் இருந்தன.... தன் பெட்டிகளை இப்போதைக்கு டேபிளின் மேல் வைத்தாள்.... தன் போர்வையை எடுத்து உதறி போட்டாள்....

“வாங்க சாப்பிட்டு வந்துடலாம், பத்து மணிக்கு மூடிடுவாங்க” என்று குரல் கொடுத்தான் பாபு, அங்கே எடுபிடி வேலை செய்யும் பையன். சரியென அவனுடன் நடந்தாள்.
உணவகத்துக்கு செல்ல, இவள் யார் புதியதாக என்ற குறுகுறு பார்வையுடன் அவளுக்கு எளிய உணவு படைத்தனர் அங்கே இருந்த ஆட்கள். தானே தனது தட்டை எடுத்துக்கொண்டு செல்ல, முதலில் மூன்று புல்கா ரொட்டிகள், உடன் கொஞ்சம் பருப்பு மற்றும் பொரியல் பரிமாறப்பட்டது.... தயிர் ஒரு சின்ன கிண்ணத்தில் தரப்பட்டது.... அதை அங்கேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து உண்டாள்.

அனைவருமே முதியவர்கள் என்பதால் எந்த உடல் பிணியும் இருக்க கூடும் என்பதாலும் அதிக உப்பு காரம் எண்ணை இன்றி ஆனால் சுவைபட சமைக்கப்பட்டிருந்தது.... உண்ட பின் நன்றி கூறிவிட்டு தன் அறையை அடைந்தாள்.
கொஞ்சம் உலாவினாள்.... கதவை பூட்டிக்கொண்டு தன் பெட்டியை திறந்தாள்.... இப்போதைக்கு அட்டை பெட்டியை திறக்க வேண்டிய அவசியம் இல்லை என உணர்ந்து அதை கட்டிலின் கீழே தள்ளி மறைவாக வைத்தாள்.... சூட்கேசில் இருந்து சில துணிமணிகளை எடுத்து பிறையில் அடுக்கினாள்... அங்கே கட்டி இருந்த கொடியில் துவாலையை தொங்கவிட்டாள்.... பின் படுக்கையில் சாய்ந்து சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

குயிலனங்களின் இனிய கானம் கேட்டு கண் விழித்த வினாடி வெகு நாட்களுக்கு பிறகு நன்றாக தூங்கியது போன்ற உணர்வு பெற்றாள் மனு. நிறைந்த மனதுடன் பளிச்சென எழுந்து காலை கடன்களை முடித்தாள்.... கையுடன் குளித்து முடித்து ஆறு மணிக்குள் தயாராகி விட்டாள்.... நேரே பெண்கள் ஆசிரம எல்லைக்குள் சென்றாள்.... அங்கே இவளை போன்ற செவிலியர் சிலர் பணி துவங்கி இருந்தனர்.... தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்துகொண்டாள்.

“ஒ அப்படியா வா வா” என அழைத்து பணியில் ஈடுபடுத்திக்கொண்டனர்.... வயதான சில பெண்டிரை மெல்ல எழுப்பி அமர்த்தி அவர்கள் பல் துலக்க முகம் கழுவ என உதவினாள்.... அருகிலேயே இருந்து முகம் துடைத்து அன்புடன் பணிவிடையாக எண்ணி செய்தாள்.... மற்ற செவிலியர் இவள் அன்புடன் செய்யும் இந்த பணியை பார்த்து நமுட்டு சிரிப்புடன் சிரித்து பேசிக்கொண்டனர்.... அதை கண்டும் காணாததுபோல இருந்தாள் மனு.

“ரொம்ப தாங்க்ஸ் மா, என் கையில இந்த தண்ணீர் மக் பிடிக்க முடியாம நான் தினமும் பல் தேய்க்க திண்டாடுவேன், இன்னிக்கி நீ வாகா பிடிச்சுகிட்டு எனக்கு உதவினே, மற்றதுகளுக்கு அவ்ளோ பொறுமை எல்லாம் கிடையாது” என்றார் அந்த மாது.
“இருக்கட்டும் ஆண்ட்டி, அதுக்குதானே நாங்க இருக்கோம்” என நகர்ந்தாள்.
“என்னடி வந்த அன்னிக்கே காக்கா புடிச்சுட்டா?” என்றாள் ஒருத்தி.
“புதுசு இல்ல, நாலு நாள் இங்க பீ மூத்திரம் வாரினா இதே அழகோட செய்யறாளான்னு தெரிஞ்சுடாது.... புது துடைப்பம் நல்லாதான் பெருக்கும், உக்கும்” என நொடித்தாள் மற்றவள். ‘ஒ பாலிடிக்ஸ் இங்கேயும் உள்ளதா’ என நினைத்து மனதினுள் சிரித்தபடி நகர்ந்தாள் மனு.

மற்ற சில பெண்டிரை கவனித்து பணிவிடை செய்துவிட்டு அடுத்து என்ன என பார்த்தாள்.
“என்ன பராக்கு பார்த்துகிட்டு நிக்கறே, அடுத்தாப்ல இதுங்களுக்கு குளிக்க உதவணும்.... அதோ அந்த ஏழாம் ரூம் அம்மாவுக்கு கை தூக்க முடியாது..... கொண்டு போய் ஸ்டூல்ல உக்கார வெச்சு தண்ணி மொண்டு ஊத்தி குளிக்க வை” என்றாள் மேட்ரன் போல தெரிந்த ஒருத்தி.
சரி என மனு அவரிடம் சென்றாள்.
துவண்டு பஞ்சாக கிடந்தவரை பார்க்கவே பாவமாக இருந்தது அவளுக்கு..... மெல்ல அவர் தோள் பிடித்து எழுப்பி அமர வைத்து, குளியல் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தாள்..... பதமாக நீரை கலந்து மெல்ல மெல்ல ஊற்றினாள்..... சோப் தேய்த்து அக்கறையுடன் கழுவி நீவி விட்டாள்..... குளித்து முடித்ததும்,
“ரொம்ப நாளைக்கு அப்பறமா இன்னிக்கி தான் நானே கவனிச்சு குளிச்சுகிட்டா மாதிரி ஒரு திருப்தி, நல்லா இரு” என்றார் அந்த பெண்.
“நன்றி மா” என்று அழைத்து வந்து நைட்டி மாட்டி விட்டாள்.... தலைமுடியை ஒதுக்கி வாரி பின்னல் போட்டு விட்டாள்.
இப்படியாக ஒன்றன் மேல் ஒன்றாக அன்று நாள் முழுவதும் வேலை நீண்டு கொண்டே போனது.... உடலளவில் சிரமமாகத்தான் இருந்தது, ஓய்ந்து போனாள்..... ஆனால் மனம் நிறைந்திருந்தது..... உடல் உழைப்புக்கு அவள் என்றுமே தயங்கியது இல்லை, சுணங்கியதும் இல்லை.... தன் அவல வாழ்வின் நினைவுகள் கூட வர விடாமல் இங்கே வேலை மூச்சு முட்டியதில் மனசு லேசாக இருந்தது.... சேவையாக நினைத்தே செய்தாள்.

அவள் அங்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகி இருந்தன.... இப்போது அவள் பர்மநென்ட் ஆகி மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்க துவங்கி இருந்தாள்..... வேலை இல்லாதபோது அங்கே இருந்த பெண்டிருக்கு கதை ராமாயணம் மகாபாரதம் என படித்து காட்டினாள்.... தனக்கு தெரிந்த அளவில் விளக்கம் கூறினாள்..... காலாற அந்த அழகிய பூங்காவனம் போன்ற தோட்டத்தில் உலாவினாள்... அந்த ஆசிரம விஸ்தாரத்தை தாண்டி தொலைவில் தெரிந்த நீலகிரி மலை சாரல் அவள் மனதை கொள்ளை கொண்டது..... உற்சாகமாக வேலை செய்தாள்..... அவளுக்கென தேவைகள் கம்மி, அங்கே அனைத்து வசதிகளும் இருந்தன, அதனால் சம்பாதித்த காசில் பெரும் பங்கு சேமிக்க முடிந்தது..... என்றேனும் பெற்றவர்களை சந்திக்க சென்றால் உதவும் என நினைத்து கொண்டாள். பெருமூச்சுதான் எழுந்தது.

பெரியவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கே இங்கே என சில பெரிய இடத்து பெண்களுக்கு சில நாட்கள் உதவ சென்றாள்.... ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்தோ அல்லது கீழே விழுந்து சுளுக்கு கை கால் முறிவு என சில மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய அவசியம் அந்த மாதுக்களுக்கு ஏற்பட்டிருந்தது...... அந்நேரங்களில் இவள் அங்கே சென்று அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டாள்.... மூன்று வாரம் முதல் மூன்று மாதங்கள் வரை கூட சென்று வந்தாள்.... காலை எட்டு மணிக்கே சென்று இரவு எட்டு வரை உதவிவிட்டு வருவாள்.

அதே போல இதோ இப்பொழுதும் இதே ட்ரஸ்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெரிய இடத்து பெண்ணினை கவனித்து கொள்ள வேண்டி பெரியவர் இவளை வேண்டிகொண்டார்.

“ஆனா ஒண்ணுமா, அங்கேயே தங்கணும், இப்போதைக்கு மூணு மாசம்னு சொல்லி இருக்காங்க, நம்ம சீப் டாக்டரின் சிபாரிசு, நாம தட்ட முடியாது மனு மா..... பெரிய பணக்காரங்க, பெண் துணை இல்லை வீட்டில..... பாவம் ஆனாதை போல கஷ்டபடறாங்களாம் மா, நீ போய் நல்லபடி செஞ்சு குடுமா” என்றார்.
“அங்கேயே தங்கறதுனா எப்படி ஐயா?” என்று தயங்கினாள்.
“ஒண்ணும் பயமில்லை, அவங்களோட அறை பக்கத்திலேயே தங்கிக்கலாம்னு சொல்லி இருக்காங்க, ஒரே ஒரு மகன் மட்டும்தான் அவங்களுக்கு.... அவர் ஊர்லே இருக்க மாட்டாரு.... பிசினஸ் விஷயமா சதா ஊர் ஊரா அலைஞ்சுகிட்டே இருப்பாரு.... அப்படியே இருந்தாலும் வீட்டுக்கு வர்றது எந்த இரவு பத்தோ பன்னிரெண்டோ மணிக்குதான்..... இந்தம்மா பாவம் ரொம்ப தனிமையில கஷ்டப்படறாங்க, அதான் கெஞ்சி கேட்டுகிட்டாங்க” என்றார்.
“ஒ, சரி, நான் முதல்ல சில நாள் போய் தங்கி பார்க்கறேன்“ என்று அரை மனதாக ஒப்புக்கொண்டாள்.

சில துணிமணிகள் மட்டுமே பாக் செய்துகொண்டு அங்கே செல்ல முடிவு செய்தாள்.... அங்கே தான் சென்று தங்கும் நேரத்தில் தன் சாமான்களை இங்கே பத்திரமாக இருக்குமா என ஒரு பயம் பிடித்துகொண்டது..... அருகில் உள்ள பாங்கில் ஒரு கணக்கு துவங்கி இருந்தாள், தான் சேமிக்கும் பணத்தினை வைப்பு நிதியாக போட்டு வைக்க வென.... அங்கேயே கெஞ்சி கேட்டு ஒரு லாக்கரையும் ஏற்பாடு செய்தாள்..... அவளின் சில முக்கிய பொருட்களை அங்கே வைத்து லாக் செய்து சாவியை தன்னிடம் பத்திர படுத்திகொண்டாள். நிம்மதியானது.

அடுத்த நாள் காலை அந்த பங்களாவிற்கு ஒரு ஆட்டோவில் சென்றாள் மனு. பெரியவர் அறிமுக கடிதம் கொடுத்திருந்தார்.... அதை அங்கே செயலாளர் போல தோன்றிய ஒருவரிடம் நீட்டினாள்....
“இருங்க தோ வரேன்” என அவன் உள்ளே சென்றான்.
சில நொடிகளில் “உள்ள வாங்க, சார் கூப்பிடறாங்க” என்று ஹாலின் உள்ளே அழைத்து சென்றான்.
வாசலில் நுழைந்ததுமே அந்த பங்களாவை பார்த்து பிரமித்துதான் போனாள். அழகிய வட்ட வடிவ தோட்டம், பல வண்ண ரோஜாக்களும், பலவித பூக்களுமாக பூத்து குலுங்கியது.... சுவற்று ஓரம் பல தினுசான மரங்களும் செடிகளும் தழைத்தன.... மனதுக்கு ரம்மியமாக இருந்தது..... வாச போர்டிகொவை தண்டி வரவேற்பறை.... அதனை ஒட்டி தான் இப்போது உள்ளே நுழைந்தாள்..... மிக பிரமாண்டமான ஹால்.... அதனின்று மேலே மாடிக்கு படிகள் இடது மூலையில் மேலே ஏறின.... ஹாலைதாண்டி பெரியதொரு டைனிங் தெரிந்தது.... அதன் பின் சமையல் இருந்தது போலும்..... ஹாலின் இரு பக்கமும் சில அறைகள் கண்டன....

அவள் கால் பதியாமல் துவள, தயங்கியபடி உள்ளே நுழைய “என்ன அன்ன நடை இப்படிதான் இருக்குமா உங்க வேலையும், என்ன, இதை போல பங்களாவை இதற்கு முன் பார்த்ததே இல்லையா, இப்போதே எதை எப்படி சுருட்டலாம்னு மனக்கணக்கு போட துவங்கியாச்சா?” என நிஷ்டூரமாக வந்து விழுந்தன வார்த்தைகள். இடது புறம் குரல் வந்த திக்கில் திகிலுடன் திரும்பி பார்த்தாள். பெரியதொரு ஆபிஸ் அறை, அங்கே வட்ட மேஜையின் பின் பல கோப்புகளின் மத்தியில் முகம் மறைத்து ஒருவன் அமர்ந்திருப்பது அரைகுறையாக தெரிந்தது.... அங்கே விரைவாக சென்றாள்.
“சாரி சார்” என்றாள்.
“ம்ம் சிட் டவுன்” என்றான் ஆணையாக. தடுமாறி அமர்ந்தாள்.