Wednesday 22 February 2017

நெஞ்சமதில் உன்னை வைத்தேன் - புதிய தொடர்

அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
என்னுடைய அடுத்த புதிய தொடர்கதை துவக்கியுள்ளேன்.
பெண்மைல அப்டேட் வர்ற அதே நேரத்தில இங்கேயும் அந்த அப்டேட் வெளியிடப்படும்.
இங்கேயும் படிச்சுக்கலாம். முதல் அத்யாயம் இதோ.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி

நெஞ்சமதில் உன்னை வைத்தேன்
அத்யாயம் ஒன்று
பவியின் மழலை சிரிப்பொலியில் அந்த வீடே அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் தன் தந்தையின் மார்பில் உட்கார்ந்துகொண்டு குதியாட்டம் போட்டபடி சிரித்துக்கொண்டிருந்தாள். அவன், வித்யாதரன், அவளை தன் மீது சாய்த்துக்கொண்டு விளையாட்டு காட்டி சிரிப்பு மூட்டிக் கொண்டிருந்தான். அவளது சிரிப்பு அவனையும் தொற்றிக் கொள்ள அவனும் சிரித்துக்கொண்டான்
பவித்ரா அவனது ஒரே செல்ல மகள் தாயில்லாக் குழந்தை. அவனது வறண்ட வாழ்வின் தென்றல்.

அம்முகுட்டி வா மம்மம் சாப்பிட வாடா குட்டி என்று அழைத்தாள் பார்வதி.
போ பாத்தி நா வரமாத்தேன் எனக்கு வேணாம்... நான் அப்பாவோட வெளையாடறேன் டிஸ்டர் பண்ணாத என்றது மழலையில்.
அடிக் கழுதை ஒன்ன டிஸ்டர் பண்ணக்கூடாதா, பாத்தியாடா வித்யா இதுக்கு வாய!” என்று சிரித்தபடி வந்து தூக்கிக் கொண்டாள்.  “பவிகுட்டி சமத்தாம்... என் கன்னுக்குட்டியாம்... பாட்டிய படுத்தாம போய் சாப்பிடுவியாம்... அப்போ அப்பா பவிகுட்டிய சாயங்காலமா பீச்சுக்கு கூட்டிகிட்டு போவேனாம் என்று தாஜா செய்தான் வித்யா. சரி என்று அரை மனதோடு போய் சாப்பிட்டது.

பின்னோடு அவனும் தன் தாயோடு அமர்ந்து சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் தனது அலுவலக கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தான்
. பின்னோடு பார்வதி தூங்கி வழிந்த பவியோடு வர அவளை தூக்கம் கலையாமல் வாங்கித் தன்னோடு கொண்டு சென்று படுக்கையில் கிடத்தி அணைப்பாக தலையணை வைத்து தானும் பக்கத்தில் படுத்தான்.
எங்கோ வெறித்தபடி பழைய நினைவுகளில் சஞ்சரித்தவனை, பவியின் பிஞ்சு கால்கள் இவன் மீது போட திடுக்கிட்டு முழித்தான். பின் புன்னகையோடு அவளைக் கட்டிக்கொண்டு கொஞ்சம் தூங்கினான்.

மாலை எழுந்து குளித்து பவித்ராவையும் ரெடி செய்து பீச்சுக்குக் கிளம்பினான்
.
அப்பா லெட் பால் எடுத்துப்போமா?” என்றது அவளது மிக பெரிய ரெட் கலர் பந்தை காண்பித்து. சிரித்தபடி சரி என்றான்.
அம்மா நீயும் வரியா, உனக்கும் ஒரு சேஞ்சா இருக்குமே என்றழைத்தான்.
பீச்சுல நடக்கமுடியாது வித்யா, என்னை வேணா கோவில்ல எறக்கிட்டு நீங்க பீச்சுக்கு போய் ஆடிட்டு வந்து கூட்டிண்டு போ என்றாள் பார்வதி. “சரிமா வா என்றான்.

அம்மாவின் வயது அறுபது, அதில் ஆர்த்ரைடிஸ் வேறு . முட்டிவலியால் அதிகம் நடமாட முடியாத நிலையிலிருந்து கொஞ்சம் குணமாகி கொஞ்சமாக இப்போது சற்றே இலகுவாக நடமாடி வந்தாள். அதுவும் ஆயுர்வேத எண்ணைகளின் பலனால் . அதுமட்டுமல்லாமல் இந்த முட்டிவலி இருப்பவர்கள் கடினமே ஆயினும் நடந்துகொண்டே வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும், அதுவே அதற்கு நிவாரணம் என்று மருத்துவர் சொல்லியதைக்கேட்டு பாவம் எத்தனை வலி இருந்தபோதும் அம்மா நடமாடிக்கொண்டே இருந்தாள்.
இந்தளவு அவள் இருப்பதால் வித்யாவிற்கு தாக்கு பிடிக்க முடிகிறது இல்லையேல் பவித்ராவையும் பார்த்துக்கொண்டு ஆபீஸ் வேலையும் வீடும் என அல்லாடித்தான் போயிருப்பான். ஒருவருடம் முன் அப்படித்தான் அல்லாடிப்போனான்.
 
பீச்சிற்கு சென்று பவிக்கு சரியாக ஓடி பிடித்து விளையாடி பந்து போட்டு பிடித்து, மணல் வீடு கட்டி என்று இருவரும் களைத்தனர். மணலில் வந்து அமர்ந்த பின்னர் பவி அவன் மடியில் உட்கார்ந்து அவன் சட்டை பட்டனை திருகியபடி அப்பா...” என்றது.
என்னடா?” என்றான் அவள் கலைந்த தலைமுடியை கோதிவிட்டபடி.
ஐஸ்கீம் என்றது.
அச்சோடா பாட்டிக்கு தெரிஞ்சா திட்டுவாளே... போனவாரம்தானே கோல்ட் குணமாயிருக்கு...” என்றான்
ஆனால் பவியோ அதான் சரியாபோச்சே போயே போச்சுப்பா. ஒண்ணே ஒண்ணு மட்டும் போறும்பா என்றது கண்ணைக் கண்ணைக் கொட்டிக்கொண்டு. அவனுக்கு சிரிப்புதான் வந்தது. ‘இல்லை எனச் சொல்ல மனமில்லாமல் வாங்கித் தந்தான்.

அவன் கற்று தந்திருந்தபடி
, காரில் அமர்ந்து அங்கிருந்த டிஷ்யு காகிதத்தில் வைத்தபடி சிந்தாமல் அழகாக  சாப்பிட்டு வாய்துடைத்து அதை குப்பை தொட்டியில் கொண்டு போய் போட்டு வந்தாள்.
குட் கர்ள் பவி என்று முத்தம் வைத்தான். வெள்ளையாய் சிரித்தது.
சரி போலாமா அங்க கோவில்ல பாட்டி காத்திருப்பா என்று கிளம்பினான்
கோவிலில் பிரார்த்தனை முடிந்து பிரகாரத்தின் திண்ணையில் யாரோ இன்னொரு  மாதுவிடம் பேசியபடி காத்திருந்தாள் பார்வதி. இவர்களை கண்டதும் வந்து ஏறிக்கொண்டாள்.
பாத்தி நான் ஐஸ்கீம் சாப்பிட்டேனே என்றது. ‘போச்சு, அம்மா கத்தபோறா என்று வித்யா பயந்தான்.
அதேபோல, “ஏன்டா வித்யா போனவாரம் தானே இவுளுக்கு கோல்ட் சரி ஆயிருக்கு... நீயே கெடுக்கறேடா இவளஎன்று அவனை திட்டினாள்.
பாத்தி அப்பாவை ஒண்ணும் தித்தாதே. ஒண்ணே ஒண்ணுதான் வாங்கித்தந்தா... உனக்கு வேணுமா சொல்லு வாங்கித்தரச்சொல்றேன்என்றது. இருவரும் பக்கென சிரித்துவிட்டனர்.
வாலு என்றாள் பார்வதி.
அப்பா...” என்றது மிக சீரியசாக முகத்தை வைத்தபடி
என்னடா?” என்றான் வண்டி ஓட்டியபடி.
பாத்தி எப்போ பாரு வாலுங்கறாளே... நான் பாத்தேனே எனக்கு வாலே இல்லியே பா என்றது. பார்வதியும் வித்யாவுமாக ஓ என சிரித்தனர்.
ஏன் சிரிச்சே போ நா உங்களோட டூ என்று முறைத்துக்கொண்டது.
வீடு வந்து சேர்ந்து மணலை உதறி கைகால் கழுவி சாப்பிட்டு படுத்தனர்.
டாடி, மம்மி எப்போ வருவாங்க?” என்றது .

ஏதுடா காலைலேர்ந்து இந்த கேள்வி வரலியே என்று சற்றே நிம்மதி அடைந்திருந்தான் வித்யா
.
இப்போது முகம் இறுக வருவா எப்போன்னு தெரியாது... பேசாம படு பவிகுட்டி... நாளைக்கு உனக்கு ஸ்கூல் அப்பாக்கு ஆபீஸ்என்றான். அவன் முகம் கண்டு மேலும் பேச பயந்து கண்ணை இருக மூடித் தூங்கியது பவி.
அவனுக்கு ஏது தூக்கம். போதாததற்கு அவள் கேட்ட கேள்வி உள்ளே குடைய ஆரம்பித்தது.
பாவி படுபாவி என்று வெதும்பியது நெஞ்சம். ‘பெண்கள் மாயப்பிசாசுகள் என்று திட்டியபடி உறங்க முயற்சித்தான். பீச்சில் நல்ல அலைச்சல் அதனால் தூங்கியும்விட்டான்.

அத்யாயம் இரண்டு
பொழுது விடிந்து வீடு அமளி பட்டது.  லீவு நாட்களில் பவி ஓரளவு சமத்தாக இருந்தாலும் ஸ்கூல் போகவேண்டும் என்றால் ரகளைதான். பால் குடிக்க அடம். குளிக்க அடம். அம்மா அவளோடு மல்லாடிக்கொண்டிருந்தாள்.
பாத்தி எனக்கு பிங்க் ப்ராக் தான் வேணும். அதுக்கு மாச்சிங்  பிங்க் ஷு எங்க போச்சு?” என்று வீறிட்டாள்.
 பார்வதி களைத்துபோய் வேலைக்காரியை அழைத்து அம்மாடி அந்த பிங்க் ஷுவாம் பாரும்மா கொஞ்சம், எங்க விசிரி போட்டிருக்காளோ என்றார்.
கட்டிலடியில் ஒன்றும் கபோர்ட் அடியில் ஒன்றுமாய் கிடைத்தது. பின் சாப்பிட ஒரு போராட்டம். சாப்பிட வைத்து கைய்யில் ஸ்நாக்சும் வைத்துக்கொடுத்து வித்யாவோடு அவளை கிளப்பி அனுப்ப, பார்வதி ஓய்ந்துபோய் தொம்மென சோபாவில் சாய்ந்தாள். வேர்வை ஆறாக பெருகியது.

சமையல் வேலை செய்யும் காமாட்சிக்கு பாவம் எனத்தோன்றியது
. ‘இந்த வயதில் இவர்களால் முடியக்கூடியதா இது... சின்னக்குழந்தைகளை கவனிப்பது மிகவும் கடினம்... அதிலும் மாமிக்கு பாவம் முட்டிவலி கூடவே பிரஷரும் இருக்கு...’ என்று நினைத்தபடி, கொஞ்சம் சூடாக பானம் கரைத்துக்கொண்டு வந்து அவரது மாத்திரைகளோடு தந்தாள்.
நன்னா இரு காமு... முடியலை எனக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி என்று பெருமூச்செரிந்தாள்.

பவித்ராவிற்கு வயது இரண்டரை. இப்போதுதான் ப்ளேஸ்கூல் போகிறாள். இன்னும் சில மாதங்களில் முறைப்படி எல் கெ ஜி போகவேண்டும். இப்போதே இரண்டுமணி நேர பள்ளிக்கே இப்படி என்றால் பின் எப்படியோ என்ற பயம் வந்தது.
வித்யாவும் அப்போது அதையே நினைத்தபடிதான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.
டாடிஎன்றாள் பவி 
நீ ரொம்ப நாட்டி ஆயிட்டே பவிகுட்டி... போ நான் ஒன்னோட டூ... பாவம் இல்ல பாட்டி, இப்படி அடம் பண்ணினா எப்படி உன்னப் பாத்துப்பா. பாட்டிக்கு கால்வலி வேற இருக்கு உனக்கு தெரியும்தானே என்றான் மெல்ல.

அதற்குள்ளாகவே கண்ணீர் முட்டியது பவிக்கு
. “சாரி டாடி இனிமே நான் சமத்தா இருக்கேன்... பாத்திய படுத்தமாட்டேன்... என் ஸ்கூல்ல கவிதா சொல்றா அவ வீட்டில அவளுக்கு இதெல்லாம் அம்மாதான் பண்ணிவிடுவாளாம்... எனக்கும் அம்மா பண்ணிவிட்டா பாத்திக்கும் வலிக்காது இல்லையாப்பா... அம்மாவ சீக்கிரமா வரச்சொல்லுப்பா... நான் அம்மாவ படுத்தவே மாட்டேன்பா... சமத்தா ஸ்கூல் போவேன். ப்ளீஸ் டாடி என்றது.

சரி சரி பார்க்கலாம். இப்போ நீ குட் கர்ளா ஸ்கூலுக்கு போ... மத்தியானம் ராமுதாத்தா வருவார் கூட்டிண்டுப் போக சரியா... அங்கே போய் பாட்டிய படுத்தாம சாப்பிட்டு தூங்கு... ஓகே மை டியர் பிரிண்சஸ்என்றான் சிரித்தபடி. பவியும் சிரித்தபடி டாட்டா காட்டி உள்ளே சென்றது. பெருமூச்சுவிட்டபடி காரை ஆபிசை நோக்கி ஓட்டினான்.

அன்று அங்கு நேர்முகம் இருந்தது. கணக்கு பிரிவில் உதவியாளருக்காக. அங்கே சென்று வேலையில் மூழ்கினான். வந்திருந்தவர் அநேகம் பேர் பெண்கள் எனக் கண்டதும் முகம் இறுகிப் போனது. வறண்ட துச்சமான பார்வையோடு  வேண்டா வெறுப்பாக கேள்விகள் கேட்டான். தலைமை கணக்கரையே பெரும்பாலும் கேட்கவிட்டான். அதில் மூவரை ஷார்ட் லிஸ்ட் செய்து மதியம் அழைத்தனர்.

அவனது காரியதரிசி வசந்தா இப்போது ஆறு மாத கர்பிணி. அடுத்தமாத வாக்கில் அவள் பிள்ளைபேர் விடுப்பில் போனால் பிறகு ஆறு மாதமோ எட்டு மாதமோ கழித்தே திரும்புவாள். அந்த சில மாதங்களுக்கு இப்போது எடுக்கப்படும் உதவியாளர் இவனது காரியதரிசி வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதற்குண்டான தகுதி ஒரு பெண்ணிடம் இருந்தது. ஒரு வருட முன் அனுபவமும் இருந்தது.
கணக்கரும் கூட அதையே கூறினார். சரி என அவளை, மதுரவாணி, உள்ளே அழைத்தனர். ‘நல்லபேருதான்... இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை என்று வெறுப்புதான் மண்டியது வித்யாவிற்கு.

பாருங்க மேடம் இது இப்போதைக்கு அக்கௌண்ட்ஸ் உதவியாளருக்கான பதவிதான். ஆனால் அடுத்த மாதம் இவங்க வசந்தா- என் உதவியாளர், விடுப்பில் போறாங்க. அப்போ எனக்கு உதவியாளராகவும் இருக்கணும்... இரண்டு வேலையும் சமாளித்து திறம்பட செய்யணும்.
சில நாள் முன்னே பின்னே நேரம் ஆகும்... முடியும்னு தோணினா மட்டுமே சம்மதம் சொல்லுங்க என்றான் கறாராக.

மதுரவாணி இங்கு வந்ததிலிருந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். எப்போதும் கடுகடுவென முகம். பேசும்போதே ஒரு வெறுப்பு என்றிருந்தான் வித்யாதரன்.
அவனுக்கு என்ன கோவமோ வெறுப்போ.... தன்னிடம் மட்டுமா என்றால் அதுவும் இல்லை.... பொதுவாகவே பெண்களிடம் அப்படித்தான் பழகினான்.... எதுவோ எப்படியோ இருக்கட்டும்.... எனக்கு இப்போது இந்த வேலை மிக அவசியம்.... பழைய வேலையில் நோட்டிஸ் கொடுத்தாகிவிட்டது.... இது நல்ல கம்பனி, நிறைய சம்பளம் மற்றும் பெர்க்ஸ், தன் வீட்டிற்கு மிக அருகில்’.

நாலையும் நினைத்து உடனே சரி என்று ஒப்புக்கொண்டாள்
.
ஆர்டர் டைப் செய்து தந்தனர். “சீக்கிரமாகவே சேர்ந்துடுங்க மிஸ் மதுரவாணி. வசந்தா மேடம் விடுப்பில போகறதுக்கு முன்பாகவே நீங்க என் வேலைகளுக்குண்டான டிரைனிங் அவங்ககிட்ட எடுத்துடணும். கூடவே அக்கௌண்ட்ஸிலும் என்றான். சரி என்றாள்.

ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷமும் நிறைவையும் மீறி மனதில் ஒரு திகில் வந்து அமர்ந்தது. ‘இந்த கடுவன் பூனையிடம் சமாளிக்க நம்மால் முடியுமா?’ என்று பயம் வந்தது.
பார்க்கலாம் நான் என் வேலையை ஒழுங்காக செய்துவிட்டு போறேன்.... அவன் எப்படியோ போகட்டும் என எண்ணியபடி வீட்டைநோக்கிச் சென்றாள்.


அத்யாயம் மூன்று
மதுரவாணி ஒரு அநாதை. அப்படிக் கூறுவது தவறு தான் ஆனால் உண்மை.
அவள் தன் பெற்றோருக்கு ஒரே மகள். ஓஹோ என்றில்லை எனினும் ஓரளவு செல்வந்தர்தான் அவளது தந்தை. அவளை ஒரு ராஜகுமாரி போலவே வளர்த்தனர்.
அவள் டிகிரி முதலாம் ஆண்டு படிக்கும்போது ஊரில் சொந்தத்தில் ஒரு திருமணம் என்று சென்றனர் பெற்றோர். போகும் வழியில் விபத்தில் சிக்கி இருவரும் ஸ்தலத்திலேயே மாண்டனர்ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்து அமர்ந்திருந்தாள் மதுரா. சுற்றங்கள் வந்தனர். அனைவரூக்கும் இவளது நிலைமையை விடவும் இவளுக்கு எவ்வளவு சொத்து தேறும் என்பதில் அதிக ஆர்வம் இருந்தது.

அப்போதுதான் மதுராவிற்கும் பதினெட்டு முடிந்திருந்தது
.
மாமாவிற்கும் அத்தைக்கும் தன் பிள்ளைக்கு இவளை செய்துகொண்டால் சொத்து மொத்தமாக வருமே என்று எண்ணம். அதிலும் பெரும்படியான சொத்துக்கள் ஏதும் இருக்கவில்லை. இருந்த வீடும் சில பங்குகளும் மட்டுமே.
இவர்கள் புத்தி அறிந்ததனால் தானே அழுது தெளிந்து வக்கீலின் உதவியோடு நிமிர்ந்து நின்று தீர்மானங்கள் எடுத்தாள்.
அப்போது சித்தி மட்டுமே ஆதரவு. இவளை கூட்டிச்சென்று வைத்து சீராட்ட முடியாத பெரிய கூட்டுக்குடும்பம், அவளது புகுந்த வீடு. அதனால் ஆதரவாக பேச மட்டுமே முடிந்தது அவளால்.

முதலில் தான் வாழ்ந்த பெரிய பங்களாவை விற்றாள்
.  தனக்கென சின்னதாக இரண்டு படுக்கை அறை கொண்ட பிளாட் ஒன்று வாங்கினாள். அதில் முக்கியமாக பாதுகாப்பு நன்றாக உள்ளதாகத் தேடிச் சென்று வாங்கினாள்.  பங்குகளை அப்படியே வைத்தாள். கையில் மிச்சம் இருந்த கொஞ்சம் பணத்தை தன் படிப்புக்கென பாங்கில் வைத்தாள்... தனக்குண்டான நகைகள் வெள்ளி சாமான்களை லாக்கரில் வைத்தாள். மனதை திடப்படுத்தி பழைய பங்களாவை காலி செய்து புதிய பிளாட்டில் குடி புகுந்தாள். இவளிடம் ஒன்றும் தேறாது என்று தெரிந்து சுற்றம் பறந்தது.
கூடவே இருந்து அவளோடு தங்கி படித்து அவளை அந்நிலையில் தாங்கியவள் தாயுமாக நின்றவள்  வசுமதி மட்டுமே. வசுவும் மதுராவும் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தனர்.... பள்ளி இறுதி வரை படித்து முடித்து பின் வசு அவள் பெற்றோரோடு மதுரைக்கு வீடு மாறிச்சென்றனர்.... அங்கேயே ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்தாள் வசு.... அதில் இருவருக்குமே மிகுந்த துக்கம். விடுமுறை நாட்களில் ஓடி வந்துவிடுவாள் மதுராவிடம்... லூட்டி அடிப்பர் இருவருமாக... முதல் ஆண்டு முடிக்கும்போதே மதுரா வாழ்வில் சூறாவளி வீசிவிட்டது. அந்நிலையில் பெற்றோரோடு வந்த வசு அங்கேயே தங்கிவிட்டாள்.
என் மதுராவைவிட்டு நான் நகரவே மாட்டேன் எனக்கு படிப்பு போனாலும் பரவாயில்லைஎன்று தன் முடிவில் தீர்மானமாக நின்றாள். அவளை அறிந்த அவள் பெற்றோர் மதுராவின் புதிய பிளாட்டில் இருவரையும் ஒன்றாக தங்கவைத்தனர். அதே கல்லூரியிலும் சேர்த்துவிட்டனர். அவ்வப்போது வந்து இருவரையும் பார்த்துச் சென்றனர். ஒன்றாகவே கல்லூரி முடித்தனர் இருவரும். விடுமுறையில் வசுவுடன் அவள் வீட்டிற்குச் செல்வாள் மதுரா.

மதுரா தன் டிகிரியின் மிச்ச இரண்டு ஆண்டுகளை படித்துக்கொண்டே மேற்கொண்டு அலுவலக நிர்வாகம் படித்தாள்... அப்போது புதியதாக கணினி இந்தியாவில் சூடு பிடித்திருந்த நேரம். ஆகையால் கணினி சம்பந்தப்பட்ட வகுப்புகளுக்குச் சென்று தன்னை மேம்படுத்திக்கொண்டாள்.
இந்த வகுப்புகள் அவளுக்கு வேறு சிந்தனை இல்லாமல் வாழ்க்கையை இலகுவாக்கியது. எல்லா இடங்களுக்கும் வசுவும் மதுராவுமாக ஒன்றாகவே திரிந்தனர். கல்லூரி முடிந்து இருவரும் ஒன்றாகவே எம் பி ஏ சேர்ந்தனர்.
முதல் வகுப்பில் தேறி ஒரு வேலையை தேடிக்கொண்டனர், ஒரே அலுவலகத்தில்.

அது வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இருந்தது
... அவர்களது பஸ் வந்து கூட்டிச்சென்று கொண்டுவிட்டதுதான்... எனினும் மாலை வரும்போது இருட்டிவிடும் மிகவும் சோர்ந்து விடுவார்கள்... அதற்காகவே இந்த வேலை பற்றி கேள்வி பட்டதும் உடனே விண்ணப்பித்தாள். இதோ கிடைத்தும்விட்டது.
வேலை மாற மற்றுமொரு முக்கிய காரணமும் இருந்தது. வசுவிற்கு வரன் பார்த்து நிச்சயமும் செய்துவிட்டனர், அவள் பெற்றோர். அதனால் வசு அவர்களோடு சென்றுவிட வேண்டிய நிர்பந்தம். அவள் இல்லாமல் தனியாக இருப்பதே மதுராவிற்கு பெரும் கடினமாக இருந்தது. இதில் அந்த அலுவலகம் போகவே பிடிக்கவில்லை. தனியே அவ்வளவு தூரம் வேண்டாமே என்று தோன்றியது.

அத்யாயம் நான்கு
அடுத்த இரண்டு நாட்களில் பழைய வேலையின் ஒப்படைத்தல் செய்து முடித்துவிட்டு ரிலீவிங் ஆர்டர் வாங்கிவந்தாள் மதுரா. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து ஒழுங்கு படுத்தி, பொருட்களை சீராக்கி, சுத்தம் செய்து தனது ஆபிஸ் உடைகளை, பெரும்பாலும் சல்வார்கள் மற்றும் சில புடவைகளுமே, அதை சுத்தமாக துவைத்து பெட்டி இட்டு அடுக்கித் தயாராக வைத்தாள்.
ஏதுக்கே வித்யாதரன் கூறி இருந்தான். இரண்டிலும் தேர்ச்சி பெறவேண்டும் தேவைப்பட்டால் அதிகநேரம் ஆபிசில் வேலை செய்யவேண்டி இருக்கும் என. அதற்கேற்றார்போல தன்னைத் தயார் செய்துகொண்டாள் மதுரா.


அடுத்த நாள் திங்கள் காலையில் தனது புதிய அலுவலகத்திற்குச் சென்று தன் வேலையை ஏற்றுக்கொண்டாள்
. அங்கே வசந்தாவிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது. மற்ற பெண் பணியாளர்களும் இருந்தனர். டைபிஸ்ட் உஷா, அக்கௌண்ட்ஸ கிளார்க் லதா, பர்ச்சேஸ் கிரிஜா என. அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பழகத் தொடங்கினாள் மதுரா.
வசந்தாவிடம் கார்பொரேட் ஆபிஸ் வேலைகளை சுளுவாக தெரிந்துகொண்டு தேர்ந்தாள். அக்கௌண்ட்ஸ்  இலகுவாகவே இருந்தது. எல்லாமே கணினியில் ஏற்றி இருந்தார் அக்கௌண்ட்ஸ மேனேஜர், எல்லா விவரங்களுமே விரல் நுனியில் வைத்திருக்க முடிந்தது. முதல் வாரம் இப்படி வெற்றிகரமாகச் சென்றது. பின்னிரண்டு வாரங்களில் வசந்தாவிற்கு முடிந்தும் முடியாமலுமாக இருந்தது. அதனால் அப்போதிலிருந்தே மதுரா முன்வந்து அவளது வேலையை ஏற்றுக்கொண்டாள். வசந்தாவை ரெஸ்ட் எடுக்க வைத்து நடுநடுவே கவனித்துக்கொண்டாள்.

இவை அனைத்தையும் கண்டுகொண்டுதான் இருந்தான் வித்யா. அவன் மனம் மட்டும் இளகவில்லை. ‘சரி வேலை சரியாக நடக்கிறது அது போதும் என்று நினைத்துக்கொண்டான்.
அந்த சில நாட்களில் வசந்தாவோடு நெருங்கி பழகியபோது மதுரா வித்யாதரனைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டாள்.

ஏன் வசந்தா, நம்ம பாஸ் ரொம்பவே கடுகடுன்னு...” என்று பயந்தபடி ஆரம்பிக்க, வசந்தா சிரித்தாள்.
ஆமா மதுரா முதலில் பார்ப்பவர்களுக்கு அவர் அப்படித்தான் தெரிவார்... நீ புதுசு இல்லையா அதான், பயப்படாதே... அவர் ரொம்பவே நல்லவர் மதுரா. நான் இங்கே அஞ்சு வருஷமா வேலை பார்க்கறேன். அவர் இப்படி இருந்தவரே அல்ல. ரொம்ப கண்ணியமாகத்தான் அப்போதும் இப்போதும் பழகுவார். ஆனாலும் இந்த கடுகடு உர் னு எல்லாம் கிடையாது. தன்மையா நடந்துப்பார்.

நான் இங்க வந்து சேர்ந்தப்போ கம்பனி புதுசா சீர்தூக்கப்பட்டது. அந்த ஆண்டின் ஆரம்பத்தில்தான் பாசினுடைய தந்தை திடீரென இறந்து போயிருந்தார். பாஸ் அப்போதுதான் மேற்படிப்பு முடிந்து இந்திய திரும்பி இருந்த நேரம். கம்பனியப் பற்றி ஒண்ணுமே தெரியாத நிலை. வீட்டில் அவரது அம்மாவையும் பார்த்துக்கொண்டு, இங்கு கம்பனியையும் பார்த்துக்கொண்டு கொஞ்சம் திண்டாடினார்னு கேள்விப்பட்டேன்.


பின் மெல்ல மெல்ல பாஸ் கற்றுத் தேர்ந்து கம்பனி நல்லபடி ஓட ஆரம்பித்தது
. அதை விரிவுபடுத்தும்போதுதான் என்னை வேலைக்கு தேர்வு செய்தார். எனக்கு அப்போ கல்யாணமே ஆகி இருக்கலை. இரவு பகல் பார்க்காமல் உழைப்பார் பாஸ்.
பின்னோடு தூரத்து சொந்தம் என்றும் பந்தம் விட்டுப்போய்விட க்கூடாது என்றெல்லாம் பேசி இவரை கரைத்து பெண் கொடுக்க முன்வந்தார் இவரது ஒன்றுவிட்ட மாமாபாசிற்கு இருந்த நிலைமையில அப்போது கல்யாணமே வேண்டாம் என மறுத்தார் ஒரே அடியாய். அவரது அம்மா பார்வதிதான், தந்தை இறந்த அதே வருடத்தில் திருமணம் செய்தால் நல்லதுன்னு, தானும் தனியே இறுக்கிறாள் கூட மறுமகள் இருந்தால் தன் துக்கத்தை ஆற்றிக்கொள்ள வசதியாக இருக்கும் என்றும் கெஞ்சி சம்மதிக்க வைத்தார்களாம்.

பின்னோடு திருமணம் நடந்தது. நான் வந்த புதிது. எல்லா ஸ்டாபும்  போனோம். அந்த பெண் பார்ப்பதற்கு அழகாகவே இருந்தாள். ஆனால் புதுமணப் பெண்ணிற்கு உண்டான எந்த வெட்கமும் சந்தோஷமும் கனவுகளும் அவள் முகத்திலோ கண்ணிலோ நாங்க யாருமே காணவில்லை. சிலபேர் அப்படி இருப்பாங்கனு நினைச்சேன்.
ஒருவருடம் ஓடியது. அவங்க கருவுற்றிருக்காங்கனு செய்தி வந்தது. ரொம்ப விமர்சையா சீமந்தம் எல்லாம் செஞ்சாங்க பார்வதியம்மா.
குழந்தை பிறந்தது. பவித்ரான்னு பேர் வைத்து ரொம்பவே அன்பா  வளர்த்தாங்க.
திடீர்னு என்னாச்சோ என்னவோ யாருக்கும் ஒண்ணும் புரியலை தெரியலை, ஒரு வாரம் சார் ஆபீஸிற்கும் வரலை, போனும் எடுக்கலை. கம்பனி ஸ்தம்பித்து போனது. ஜெனரல் மேனேஜர் ஏதோ நடத்தினர்.

பின்னோடு வந்த செய்தி மிகவும் அதிர்ச்சியானது மதுரா
. அந்த பொண்ணு மூணு மாதப் பச்சிளம் சிசுவையும் தன் புகுந்த வீட்டையும் விட்டு ஓடி போய்டா யாரோடவோ...”
ஐயய்யோ என்று கத்திவிட்டாள் மதுரா.
உஸ் மெல்ல மதுரா, இது ஆபிஸ்... நாங்க எல்லாமும் அப்படித்தான் அதிர்ச்சி ஆனோம். பாசுக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாரு.
ஒருவாரம் பொறுத்து பாஸ் ஆபீஸ்க்கு வந்தார். எப்போதும் போல வேலை நடந்தது. ஆனால் அவர் மட்டும் இறுகி போய்ட்டார்.

முக்கியமா பெண்களைக் கண்டா வெறுப்பு
, கோவம், ஆத்திரம். சொல்லொணா கசப்பு
அந்த பொண்ணு பண்ணிட்டுப்போன கோலத்துக்கு நாம எல்லாம் அனுபவிக்கிறோம். இதெல்லாம் தெரிஞ்சப்பிறமா என்னால அவர தப்பா நினைக்க முடியலை மதுரா... நாமளானாலும் அப்படித்தானே இருந்திருப்போம்னு தான் எண்ணினேன்.
அதைத் தவிர அவர்கிட்ட வேறு ஒரு குத்தமும் சொல்ல முடியாது. ஹி இஸ் அ ஜென்டில்மான்.
அவருடைய ஸ்டாபிற்கு எப்போது எதுவேண்டுமோ பார்த்துப் பார்த்து செய்வார். என் கல்யாணத்திற்கு கூட வந்திருந்தார்.

அவங்க அம்மா பார்வதிக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எல்லா லேடீஸ் ஸ்டாபையும் பிடிக்கும். அவங்க மூலமாத்தான் நான் இந்த கொஞ்ச விவரமும் தெரிஞ்சுகிட்டேன். மிச்சபடி முக்கிய காரணம் என்னனு இங்க யாருக்கும் தெரியாது.
அதுனால நீ பயப்படவே வேண்டாம். நீ பாட்டுக்கு உன் வேலையப் பண்ணு. அத சரியா பண்ணினா போதும் அவர் ஒண்ணுமே அனாவசியமா சொல்ல மாட்டார். தைர்யமா இரு என்று தேற்றினாள் வசந்தா.

அடக்கடவுளே இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு கொடுமையா, எவ்வளோ நல்லா இருக்காரு ஜம்முனு, பாரின்ல போய் படிச்சுட்டு வெற்றிகரமா கம்பனி வெச்சு நடத்தி நல்லபேர் சம்பாதிச்சிருக்கார். காரும் பணமும் பங்களாவுமாக,  அழகான குழந்தை இருக்குனு வேற சொல்றாங்க வசந்தா... அந்த பெண்ணுக்கு என்ன லூசா... பாவம் வித்யாதரன் என்று எண்ணியது அவள் மனம்.
சரி உண்மை தெரிந்ததால் வசந்தா கூறியதுபோல், அவருக்கு மேலும் கஷ்டம் ஏற்படுத்தாமல் நமது வேலையை செவ்வனே செய்துகொடுப்போம் என தீர்மானித்தாள்.

தொடரும்...                                                                                Adutha bagam:25th feb

2 comments:

  1. Nice Story sudha.NO stories long time,waiting for update

    ReplyDelete
    Replies
    1. ஹாய் Krishnajayanthi,
      Very many thanks. Adutha redu updates pottuten. padichukonga. indha vaaram konjam over work adhan sonna date la poda mudiyala. Thanks again for your interest and comment. Really inspires me and encourages me.

      Delete