மங்களம் மாமி 1
சுவர் கோழி ஒரு புறம் கூவ, இப்போதே கூவிடலாமா வேண்டாமா என மெல்ல
சோம்பல் முறித்தபடி மெல்லிய குரல் எழுப்பும் சேவல் ஒரு புறம்... ம்ம்மா என அதிகாலை
அழைப்பாக பாலுக்கு அழும் கன்றின் குரல் ஒரு பக்கம், இதோ பொழுது இனிதே விடியப்
போகிறது.
இன்று தானே முஹூர்த்தம் என அந்த ஆக்ரஹாரத்து பெண்கள் எல்லாம் மளமளவென எழுந்து
அவரவர் ஆத்து தினப்படி காரியங்களை காலை கடன்களை முடிக்க ஓடுகின்றனர்.
“வேளையோட கெளம்பி விடீகார்தால வந்துருங்கோடி” என மாமி ஆணை, செல்ல ஆணை. மீர
முடியுமோ.
பலருக்கு பெரியம்மா, சிலருக்கு மன்னி, அக்கா, மாமி. சிறிய வயதினருக்கு
குழந்தைகளுக்கு பாட்டி.
அந்த ஆக்ரஹாரமே கொண்டாடும் மங்களம் வைதீஸ்வரன் தம்பதியினரின் அறுபதாம் கல்யாண
முகூர்த்தமாக்கும் இன்னிக்கி.
ஆத்து பொண்டுகளில் வயது முதிர்ந்தோர் சிலர் மங்களத்திற்கு நலங்கு வைத்தனர்.
மருதாணியில் சிவந்த பாதங்களும் கைகளும் மேலும் மங்களமாக திகழ்ந்தது. மாமி குளித்து
வர, அவரே பாங்காக மடிசாரு கட்டிக்கொண்டார். மரகத பச்சையில் மாம்பழ கலர் பார்டர்
மிளிர்ந்தது. தலை துவாலையை அவிழ்த்து கூட இருந்தோர் அழுந்த துடைத்தனர். ஒருத்தி
அதற்குள் புகைய புகைய அந்த அதிகாலையில் சாம்பிராணி கொண்டு வந்தாள்.
“என்னத்துக்குடீமா இப்படி அவஸ்த படுத்திக்கறேள்... தினமும் நான்
தலைக்கு விட்டுக்கறதுதானே....” என்றார் மாமி செல்ல கோபமாக.
“ஒரு அவஸ்தையுமில்லை அவ செரியாதான் செய்யறா, நீ பொண்ணா லக்ஷணமா
இன்னிக்கி வாயே தெறக்காம இரு மங்கா” என அதட்டல் விழுந்தது. மங்களத்தின் நாத்தனார்
தான்.
“நீ ஒண்ணும் சித்தாடை கட்டீண்ட சின்ன பொண் இல்லை, இன்னிக்கி, இப்போ
ஒரு தரம், பின்னோட அபிஷேகத்துக்கு ஒருதரம்னு தலைக்கு விட்டுக்கணும், ஈரம் அடிதலையில
நின்னு போய் வலி தலை தெறிக்கும் ஹோமத்தில உட்கார முடியாது”
அழகாக சாம்பிராணியில் உலர்தினர். பட்டு போன்ற நீண்ட முடி காய்ந்தே
போனது. வெள்ளிகளுடன் மின்னிய கருங்கூந்தலை ஆசையாக பின்னினர். மல்லி கனகாம்பரம், மரூ
மரிகொழுந்து என நெருக்க கட்டிய தஞ்சாவூர் கதம்பம் கொண்டு பின்னலை சுற்றினார். கீழே
சொல்ல சொல்ல கேட்காமல் குஞ்சலம் வேறு. மங்கா வாயை திறப்பதாவது. சிவந்தே போனது
முகம்.
அந்த நாளில் மணமாகியது கனவு போல புகை மூட்டமாகத்தான் நினைவு. மிகவும்
சிறு பெண். பன்னிரெண்டே வயது மங்காவிற்கு. அவருக்கோ பதினெட்டு. பி யு சி முடித்து
பின் லா படிக்கச் சேர்ந்துள்ளதாக பேசிக்கொண்டனர். இவள் என்ன அறிவாள்.
ஐந்தாம் வகுப்பு முடித்ததுமே போதும் என நிறுத்திவிட்டனர். ஆம் ஆறாம்
வகுப்பிற்கு பக்கத்து டவுனுக்கு செல்ல வேண்டும், சைக்கிளில் அல்லது டவுன் பஸ்ஸில்.
அப்பாவிற்கு அனுப்பலாம் என யோசனை இருந்தாலும் “என்னதிது வழக்கமில்லாம வழக்கமா
இன்னிக்கோ நாளைக்கோ பெரியவளாகிடுவோ, அவள போய் டவுனுக்கு அனுப்பறதாவது?” என உள்ளே
இருந்து பாட்டி போட்ட சத்தத்தில் மொத்த வீடும் அடங்கி போனது.
மற்ற நகைகள் சூட்டி மங்களத்திற்கு பிடித்த கண்ணாடி வளையல்கள் இரண்டு
கையிலும் அடுக்கினர் பச்சையும் மஞ்சளுமாக. கூடவே தங்க வைர வளையல்களும் ஜொலித்தன.
ரெண்டு மூக்கிலும் வைர பேசரி. காதுகளில் வைர தோடு அதன் கீழே முத்து சரம்
மல்லிமொட்டாக தொடுத்திருந்தது.
“அம்மா ஜிமிக்கி” என மாட்டுபொண் ஆசைபட்டாள்.
“அவ்வ்வா, என்னடி பங்கஜா, இப்படி அழும்பு பண்றேள். சிரிப்பாடீ எல்லாரும்...”
என கண்ணால் கெஞ்சினாள்.
“என்னம்மா, நீங்கதான் இப்படி ஒரே அடியா வெட்கப்படறேள். எங்காத்தில
பெரியம்மா ராக்கொடி சுட்டி ஜிமிக்கி மாட்டல் எல்லாம் போட்டுண்டா, ஜடை வெச்சு
பின்னினோம்” என்றாள் பங்கஜா.
அடிப்பாவி என மோவையில் கை வைத்து அதிசயித்தார் மங்கா. சிரிப்புதான்
வந்தது.
நாழியாச்சு என மிரட்டவே பிறந்த சிலர் இருப்பார்கள் அல்லவா எல்லோர்
வீட்டிலும் அந்த ஜென்மம் ஆளோடியில் நின்றபடி உள்ளே பெருங்குரல் எடுத்து விரட்டி
கொண்டிருந்தது.
வாசலில் பெரிய மாக்கோலம், செம்மண் கரையிட்டு. மாவிலை தோரணம் சிவப்பு
பச்சை கரை கட்டிய பந்தல், முகூர்த்த பந்தக்கால் வாழைமரம் என வாசல் ஜொலித்தது. அந்த
தெருவே விழாகோலம்தான் போங்கோ.
பின்னாடி இருந்த நிலத்தில் தோண்டி காடி அடுப்பு வெட்டி முகூர்த்த காலை
உணவும் மதிய விருந்தும் தடபுடலாக சாமா ஐயர் தயாரிக்க துவங்கிவிட்டார். நாலு நாள்
முன்பே அவர் முன்னின்று பாட்டிகள் மாமிகளை துணைக்க வைத்துக்கொண்டு திரட்டிப்பால்,
பருப்பு தேங்காய்கூடு, லட்டு, மைசூர்பாகு, அதிரசம், முறுக்கு வகைகள் என
ஜமாய்திருந்தார். கூடம் தாண்டி ஆக்ராஹாரமே மணத்தது. இன்றும் தான்.
வைதீஸ்வரனாத்து காபிக்கெனவே மனுஷாள் வர்ற வீடு அது. இன்னிக்கி
முஹூர்த்தம் வேற கேக்கணுமா என்ன. காபி பல ஈடு ஆறாக பெருகி ஓடியது. கும்பகோணம்
டிக்ரீ காபிக்கு உபயோகபடுத்தும் பதத்தில் கூட நின்று தானே காபி பொடி அரைத்து
வந்தான் கணேசன். அவன்தான் மூத்தவன். சின்னவன் சுப்ரமணியன். ஒரே பெண் பாலாம்பிகை.
பாலானு சொல்லுவா... ஆத்துக்கு கடைக்குட்டி செல்லம். டெல்லியில வாக்கப்பட்டிருக்கா.
எல்லோருமே குழந்தேளோட வந்துட்டா வேளையோட. செலவும்தான் வேலையும் இழுத்து போட்டுண்டு
பொறுப்பாக செய்ததுகள் கொழந்தேள்.
மாப்பிளை ரொம்ப தோரணை எல்லாம் இல்லாத சாதா மனுஷன். நல்லவர். மாமி மாமானு
ரொம்ப பிரியம்.
நாட்டு பெண்ண சொல்லுங்கோ. பங்கஜம், மங்களத்தோடவே புழங்கியதாலோ என்னமோ
அப்படியே அவரோட குணம். தங்கம். அடுத்தவலும் அப்படிதான். அதிகம் பட்டுக்க மாட்டா
ஆனா வஞ்சனை இல்லை மனசுல. தெரியாது, சொன்னா செய்வள். பாவம் சமத்துதான்.
ஆம் நிறைய பேரக்குழந்தேள் ஓடி திரிந்தது. பட்டு பாவாடை கால் கொலுசுமாக
சிரிப்பும் கலகலப்புமாக வீடு திமிலோகப்பட்டது.
“இந்த வாண்ட பாரேன், இன்னும் நாலடி எடுத்து நடக்க தெரியல இவனுக்கு...
பெரிய பசங்களுக்கு சரியா ஒடனும்ங்கறது... டேய் டேய் விழுந்துட போறே டா கண்ணா.
இப்போதான் முன்பல் ரெண்டு வந்திருக்கு அதுவும் போய்ட போறது” என பாலா அவன்
பின்னாலேயே சிரித்தபடி ஓடினாள். கணவனிடம் அவன் பொறுப்பை கொடுத்துவிட்டு உள்ளே
வந்தாள். சமையலறையில் என்ன தேவை என பார்க்க.
“என்ன மன்னி, காபி கடை ஆச்சா, நான் வேணா கலக்கவா?” என்றபடி
“காபி கடை ஓயறதாவது பாலா, நோக்கு தெரியாதோ, இந்த கடைக்கு நோ ஸ்டாப்”
என்றனர் இருவரும் சிரித்தபடி.
“வாஸ்தவம் மன்னி. அண்ணா அறைச்சுண்டு வந்தாலே
காபி தனி சுவைதான். அப்படியே நேக்கும் அறவா தாங்கோளேன்” என சந்தடி சாக்கில் அவள்
சிந்து பாடிவிட்டாள்.
வாச பக்கவாட்டில் தான் கூரை வேய்ந்து மணமேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அங்கேதான் ஹோமம் வளர்க்க எல்லாம் ரெடி.
“பொண்ணும் மாப்பிள்ளையும் வரலாமே, நாழி ஆறது” என சாஸ்த்ரிகளின் ஒரு
குரலுக்கு பல குரல் உள்ளே வரை ரயில் வண்டி விட்டு அசரீரிகள் போல முழங்கின.
“ஆச்சு, தோ இன்னும் ஒரே நிமிஷம்” என மங்காவின் பின் கொசுவத்தை பின்னே
காலின் கீழ் இழுத்து விட்டு தன் கை அணைப்பில் மங்களத்தை அழைத்துக்கொண்டு நடந்தார்
அவளின் நாத்தனார் கற்பகம்.
“படபடனு இருக்கு கா” என்றாள்.
“போறுமே, யாரேனும் கேட்டா சிரிக்க போறா. நடக்கபோறது உன் முத கல்யாணம்
இல்லை டீ மக்கு, அறுபதாம் கல்யாணம். நன்னா சிரிச்சு அன்று அனுபவிக்காததையும்
சேர்த்து அனுபவிப்பியா... இவ ஒரு மக்கு” என சொல்லி காதோடு சிரித்தார். இவளும்
சிவந்து சிரித்தாள்.
வைத்தி அங்கிருந்தே ஓர கண்ணால் பார்த்தார். அப்பா மகாலக்ஷ்மியேதான்,
சும்மா சொல்லப்டாது இவ நெறத்துக்கு பச்சை தூக்கறது” என எண்ணிக்கொண்டார். அவரை
மறந்தும் ஏறெடுத்து பார்கவில்லை மங்கா. போதாதா இந்த சுற்றத்திற்கு கேலி பேசி
மானத்தையே வாங்கிபிடும்ங்கள்
ஹோமத்தில் அமர்ந்து மந்திரங்களை உதிர்த்து பின்னோடு அபிஷேகத்திற்கு என
அழைத்துச் சென்றனர். வாசப்பக்கம் மாமரத்தடியில் வைத்து சின்னவன் சுப்பிரமணி எனும்
மணி ஜிலீர் என குளிர் தாக்காமல் பதமாக வெந்நீர் கலந்து விளாவி வைத்திருந்தான்.
அனைவரும் ஜல்லடையில் தங்கள் கை மோதிரம் வளையல் செயின் என கழட்டி அதிலிட அதன்
மூலமாக குடத்து நீரை முதலில் தம்பதியை விட மூத்தோர் விட்டனர். கைகூப்பி
நமஸ்கரித்து சிரம் தாழ்த்தி ஏற்று கொண்டனர் வைத்தியும் மங்களமும்.
பின் சின்னதும் பெரிதுமாக “நானு நானும்தான் விடுவேன், நீ சின்னவோ
கெடையாது. இல்லேனா அழுவேன் என்ற சலசலப்போடு சரிடி எல்லாரும் உண்டு. ஆனா சட்டுன்னு
ஆகட்டும் தாத்தா பாட்டிக்கு குளிருமோன்னோ” என அனைவருமே குடத்தின் நீரை தலை மேல்
வார்த்தனர். அவரவர் ஆசைக்கு என. முடிந்து சட்டென ஆண்கள் வைத்தியையும் பெண்கள் மங்காவையும்
குளிர் தாக்காது கையணைத்து சரசரவென உள்ளே இட்டுசென்று உடை மாற்ற உதவினர்.
மங்காவின் சகோதரன் பொறந்தாம் சீர் கொண்டு வந்திருந்தான். பொன்வண்டு
கலரில் அரக்கு பார்டர் மடிசாரு, அவருக்கு மயில்கண் பத்தாரும். தலை துவட்டி மீண்டும் புகை போட்டு அதை பதவிசாக
கட்டினர். மற்ற நகைகள் புதிய மாலை என அலங்கரித்து ஐந்தே நிமிடத்தில் மாமி மீண்டும்
ரெடி போர் டேக் .
மாமாவும் என்ன கொறைச்சலா என்ன. தோ புதிய பத்தாறு மயில்கண்ணில்
மைதீட்டிய கண்களுடன் நெற்றியில் பட்டையான விபூதி குங்குமத்துடன் நெஞ்சில் புலிநக
செயின் ஆட அங்கவ்ஸ்த்ரம் தரித்து மாப்பிளையா கொக்கா என வந்தார் ராஜநடையுடன்.
பெரியோர் அனைவரும் ஆசிகள் கூறி எடுத்து தந்த மஞ்சள் கையிற்றை மீண்டும்
மனமுவந்து மங்காவின் கழுத்தில் ஆசை ஆசையாக கட்டி முடித்தார் வைத்தீ. கற்பகம் கண்
நிறைந்து மறைக்க நாத்தனார் முடிச்சிட்டாள். கைகூப்பி வணங்கி குனிந்த தலையுடன்
சிவந்த கன்னங்களுடனும் மற்றுமொரு முறை தாலி வாங்கிகொண்டாள் மங்கா.
இவ்வாராகத்தானே மங்களம் வைதீஸ்வரன் தம்பதியினரின் அறுபது நன்னா
முடிஞ்சுது.
சாப்பிட்ட டிபனே இங்கே ஜீரணிக்கலை, அதுக்குள்ள “எல போட்டாச்சுனு” பின்
பக்கமிருந்து சாமா மாமாவின் குரல்.
“நன்னா இருக்கு போங்கோ. வயிறு திம்முன்னு நா இருக்கு.... வாய திறந்தா
காக்கா கொத்தும் இப்போவே சாப்பாடாவது...?” என இழுத்தார் ஒரு பெரியவர்.
“அதுக்குதாங்காணும், போட்டதே இட்லி மட்டும்தான். அளவா ரெண்டோட
நிறுத்தி இருக்கணும். அதைவிட்டு சாம்பார் கொளம்கட்டி இறங்கி இட்லி மீன் பிடிச்சா
இதான் கதின்னேன்” என இன்னொரு பெரிசு காலை வாரியது.
ஆசீர்வாதங்கள் கொடுப்பதும் பெறுவதுமாக நடந்தேறியது. மாலை மாற்ற
வைத்தனர். சீண்டி விளையாடினர் சிறுவர் பெரியோர் வயது வித்யாசமின்றி.
“என்ன மாமி, இந்த வயசிலேயும் மருதாணி இப்படி சிவந்திருக்கு, மாமாக்கு
அவ்ளோ ஆசையோ மாமி மேல...?” என ஒருத்தி இழுக்க..
“இல்லையோடீ பின்னே வைத்தீ மாமாக்கு மங்களம் மாமி மேல பித்தாச்சே” என
கூற கூட்டமே கொல்லென சிரித்தது. மங்காவிற்கோ நாணத்தில் சிவந்து போனது. இதை கேட்ட
பெருமிததோடு மந்தகாசமாக அமர்ந்திருந்தார் வைத்தீ. அவர் கைவிரல் மங்காவின் உள்ளங்கையில்
கிள்ளியது. ஓரப் பார்வையில் அவரை அடக்கினாள் மிரட்டினாள். அவரும் சாது போல அடங்கி
அமர்ந்தார். அவள் களுக்கென சிரித்துவிடாமல் தன்னையே அடக்கினாள்.
“தா பாருடி, நாம இத்தனாம்பேர் கூட இருக்கோம் ஒச்சபடாம தனியா சினிமா ஓட்றாங்கடி
சித்தியும் சித்தப்பாவும்” என ஏற்றிவிட்டாள் இன்னொருத்தி. அதுக்கு ஹோ வென
சிரித்தனர்.
பந்தி போட்டாச்சு என மீண்டும் குரல். பந்தி விசாரணை, சாப்பிட அனுப்பிவைப்பது
தாம்பூலபை கொடுத்து விடை கொடுப்பது என இடுப்பும் காலும் முறிந்தது கணேசன் மணி பாலா
தம்பதியருக்கு.
குழந்தைகளை சாப்பிட வைத்து பின்னோடு வைத்தீ மங்காவுடன் இவர்களும்
அமர்ந்தனர். நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே. இருவரும் பசித்திருக்க, சாப்பிட
விடாமல் ஊட்டுங்கோ நீங்க நீங்க என அழவைத்தனர்
“டீ பசிக்கறது அடங்குங்கோடீ” என காதோரம் கடித்தாள் மங்கா..
“சரி சரி பொண்டுகளா வாண்டுகளா அவாள சாப்பிட விடுங்கோ. பாவம் கார்த்தாலேர்ந்து
பட்டினியா இருகாளோன்னோ” என கற்பகம் வந்த சிரிப்பை அடக்கி இவர்களையும் அடக்கினார்.
சாப்பிட்டு முடிந்து மீண்டும் வெற்றிலை மடித்து குடுக்க என ரகளையை
துவங்கினர்.
அவருக்கும் கொடுத்து தானும் சுவைத்தாள் மங்களம்.
“நலங்கு உண்டுதானே மாமி?” என கேட்டுக்கொண்டாள் ஒருத்தி
“நலங்கா அறுபதுக்கு எதுக்குடி நலங்கெல்லாம்...?” என அவர் இழுக்க
“இது நன்னா இருக்கே... இவா நலங்குக்கு நாங்க அப்போ இருந்தோமா,
இல்லையோன்னோ, நாங்க பார்க்கலை கலாட்டா பண்ணலை....”
“இப்போ அதுக்கெல்லாம் அருமையான சான்ஸ். நலங்கு உண்டு உண்டு கண்டிப்பாக
உண்டு” என அடம் பிடித்தனர்.
“டீ இதெல்லாம் ரொம்ப ஓவரா போறேள் ஆமா சொல்லிட்டேன்” என வைதார் மங்கா.
“அதெல்லாம் வேண்டாம் கணேசா” என பதவிசாக கூறினார் வைத்தி. “செரிபா.
நான் பார்த்துக்கறேன்” என அவன் புரிந்துகொண்டான்
“பாருங்கோ பொண்களா நோ அடம். அப்பறம் உங்களுக்கு வரவேண்டிய சீரெல்லாம்
கட் ஆயிடும் யோசிச்சுகோங்கோ” என ஒரு போடு போட்டான்.
“அம்மா, ஆச தோச அதெல்லாம் குறையப்டாது” என என ஒரே குரலில் கத்தினர். பின்
அடங்கியது.
நீங்கெல்லாம் சாப்டேளோ, தாம்பூலம் வாங்கிண்டேளா.. நீங்க வந்ததில ரொம்ப
சந்தோஷம். மீண்டும் சந்திப்போம்.
அருமை.
ReplyDeleteThank you
Deleteகளை கட்டியாச்சு
ReplyDeleteThank you
Deletenice narration in pure agraharam style
ReplyDeleteThank you
Delete(Ra)kaLai kattiyachu!
ReplyDeleteThank you so much Jay
DeleteShastiabdha poorthi function attend panna oru feeling...wow
ReplyDelete