Friday 20 March 2020

MANGALAM MAMI -7


மங்களம் மாமி 7 – இன்றைய நிலையை ஒட்டிய ஸ்பெஷல் பதிவு

மங்கா பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார். வீட்டில் ஒருவருக்கு சுகமில்லை எனில் அந்த வீடே களேபரம்தான். அன்றாட நிகழ்வுகள் ஸ்தம்பித்து போகும் நிலை.
அம்மு குட்டிக்கு ஒடம்பு சரியில்லை.
“பாரு பங்கஜா, ரசத்துக்கு சம்பாருக்குன்னு தாளிக்க வேண்டாம். வதக்கல் எதுவும் பண்ணாதே... வெறுமனே வேக வெச்சு தேங்காய் போட்டு பெரட்டிடு. பீன்ஸ் தாளிக்கறச்சே அதுக்கு முன்னலேயேவே கொழந்தைக்கு தனியா எடுத்து வெச்சுடு. காரமா தாளிக்க வேண்டாம். அப்படியா பண்ண வேண்டி வந்தா அடுக்களை கதவை தாழ் போட்டுட்டு பண்ணிடு என்னம்மா” என்றார் எடுத்து சொல்லி.
அனைத்து விவரமும் தெரிந்திருந்த போதும் மாமியார் சொல்கிறார் எனும்போது அதிக அக்கறையுடன் சரி என கூறி ஒவ்வொன்றையும் அதன்படி செய்தாள் பங்கஜா.
“டேய் கருணா, வாசல்ல வேப்பிலை கொத்து சொருக சொன்னேனே செஞ்சியோ?” என வாசப்பக்கம் போய் குரல் ஒசத்தாம அதட்டினார்.
“தோ மா” என ஓடினான். “தா பாருப்பா, கை கால்வ அலம்பீண்டு சுத்தமா பரிச்சு சொருகு” என்றார் பின்னிருந்து. “சரிமா” என குரல் கொடுத்தான்.
“டீ கண்ணம்மா, அம்மியில வேறே எதுவும் அரைக்கறதுக்கு மின்னாடி வேப்பிலை அரைக்கணும். ஒரு கண் வெச்சுக்கோ. இவா ஆரானும் மறந்து போய் மொளகா வெச்சு ஏதானும் அரைச்சுட போறா. அலம்பினாலும் போகாது காரம்” என வேண்டினாள். “சரிதாம்மா” என்றாள் அவள்.
“த பாரு துணிய துவைச்சு சுத்தமா காயபோட்டுடு... நாங்க அப்பறமா எடுத்து வெச்சுகறோம் பொழுது சாயரதுக்கு முன்னேயே” என்றார்
“என்ன பாட்டி இது, கார்த்தாலேர்ந்து என்னவாச்சு, ஏன் இப்படி எல்லாரும் என்னமோ டென்ஷன் ல ஒடறேள்... நீ என்னென்னமோ பேசீண்டே இருக்கியே?” என்றான், அம்முவுக்கு பெரியவன் க்ரிஷ்ணன்
“அதில்லடா கண்ணா, அம்முவுக்கு முடியலையோன்னோ அதான்” என்றார்.
“சரி அம்முக்கு ஜுரம். எல்லாருக்கும்தானே ஜுரம் வரும், நேக்கும் வந்துதே ரெண்டு மாசம் முந்தி... இதென்ன இத்தனை ஆர்பாட்டம்?” என்றான். சிறுவன் பத்தை நெருங்கி கொண்டிருக்க மண்டைக்குள் ஆயிரம் கேள்விகள் குடைந்தன சிறிய மூளையில்.
“அப்பா, நோக்கு சொன்னா புரியாதுடா... இது வேற ஜுரம் டா” என்றார்.
“ஒ, அப்போ கொஞ்சம் சீரியஸா.... டாக்டர் மாமாவ கூப்பிடணுமே...?” என்றான் அக்கறையாக
“இல்லை வேண்டாம், தானே செரியா போய்டும்” என்றார்
“அதெப்பிடி பாட்டி, சீரியஸ்னு சொல்றே, தானே செரியாயிடும்னு சொல்றே ஒண்ணுமே புரியலை போ” என அலுத்துக்கொண்டான்
பெரியவன் கணேஷன் அவனை அருகமர்த்தி புரிய வைத்தான்
“கண்ணா இதை மீஸில்ஸ் னு சொல்லுவா. சையண்டிபிகா பார்த்தா ஒடம்பு சூடு ஜாஸ்தியா போய் சருமம் வழியா வெளிப்படும் ஒரு நோய். அது பிம்ப்ளில்னு சொல்வாளே அதுபோல தோல்மேல வெடிக்கும். மூணு நாள் நெறைய இருக்கும். அதை கட்டுபடுத்ததான் வேப்பிலை ரொம்ப குளிர்ச்சி னு அரைச்சு போடுவா... கூடவே மஞ்சள் இருக்கோல்லியோ அதையும் அரைச்சுப்பா. அதைவிட சிறந்த ஆண்டிசெப்டிக் கிருமி நாசினி கிடையாது. உள்ளுக்கும் நெறைய இளநி கஞ்சி ஜூசுனு குளிர்ச்சியா தருவா. உடல் உள்ளும் புறமும் குளிர்ந்து கொஞ்சம் கொஞ்சமா இந்த நோயினுடைய தன்மை குறையும். அஞ்சா நாள் ஏழாம் நாள் னு பார்த்து இறங்கு முகமா இருந்தா தலைக்கு மஞ்சள் வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை விட்டு ஸ்னானம் பண்ணி வைப்பா. அம்மனுக்கு அபிஷேகம் பூஜைன்னு போய் செஞ்சுட்டு வருவா” என்றான்.
ஏதோ புரிந்தது. நிறைய புரியவில்லை.
“ஒ அப்படியா” என கூறிக்கொண்டான்.
“இந்த உவ்வாக்கும் சாமிக்கும் என்ன சம்பந்தம்?” என கேட்டான்
கணேஷ் என்னவென்று சொல்லுவான். அந்த காலத்துலேர்ந்து மனுஷாளுக்கு ஒண்ணைச் சொல்லி அவாள அதை ஒத்துக்க வைக்கறதுங்கறது கஷ்டம், இப்போ ஒன்னையே எடுத்துக்கோ... நாங்க என்னென்னமோ எடுத்து சொல்றோம்... நீ அதை என்னிக்கானும் பெரியவா சொல்றா அதுல என்னமோ விஷயம் இருக்கு னு சொல்லி புரிஞ்சுண்டு ஒழுங்கா செஞ்சிருக்கியோ.... இல்லை இல்லியா, அதேபோல்தான் நெறையா மனுஷா, அந்த காலத்துலேர்ந்து இந்த காலம் வரை”
“அப்போ அவாள எப்படியானும் நல்லத மட்டுமே பண்ண வைக்கணும்னு சாமி குத்தம் சாமிக்கு வேண்டி சாமிக்கு பண்ணணும்னு பகவான் பேரை சொன்னா, ஒடனே ஒ சாமிக்கு வேண்டியா னு ஒடனே கேட்டுப்பா, அதன்படி செய்வா... அதனால அப்படி சொல்லப்பட்டது. போறுமா இன்னும் ஏதானும் பாக்கி இருக்கா?”
“புரிஞ்சுது, இப்போ நான் என்ன பண்ணணும்?” என்றான்
“நோக்கு அம்முவ பிடிக்கும் இல்லியா அவ ஒன் தங்கைதானே சோ அவளுக்காக நீ செலது பண்ணணும்”
“நேக்கொண்ணும் அம்முவ பிடிக்காது ஆனாலும் சொல்லு, பாவம் போனாபோறது செய்யறேன்” என்றான்.
“போக்கிரி” என்றான் கணேஷ்.
வெளியில போய் வெளையாட வேண்டாம். இது சட்டுன்னு அம்முகிட்டேர்ந்து நோக்கு பரவலாம். சோ நீயும் ஜாக்ரதயா இருக்கணும். வாசப்பக்கம் கொல்லைப்பக்கம் அலைஞ்சாலும் ஆத்துக்குள்ள வரும்போதே, தினமுமே கூட, கை கால் அலம்பீண்டு உள்ள வரணும்.
ஷூ சப்பலோட ஆத்துக்குள்ள வரப்டாது. அங்க நீ எது மேல நடந்தையோ மிதிச்சியோ அந்த கிருமி எல்லாம் ஆத்துக்குள்ள வந்துடும் இல்லியா...” என்றான்
“வாலிட் பாயின்ட் பெரியப்பா” என்றான்.
“டேய் பெரிய மனுஷா” என்றான் கணேஷ் சிரித்து.
“பத்தியமா அம்மா பெரியம்மா என்ன சாதம் போடறாளோ அத சமத்தா சாப்பிடணும். வாசல்ல விக்கறத ரோட்ல வர்ற எதையும் யார் கொடுத்ததையும் வாங்கி சாப்டப்டாது. தலைய தொட்டா தூசி ஓட்டடை தொட்டா, கண்ணை கசக்கினா, மூக்கை நோண்டினா, ஒடனே போய் கை அலம்பணும். செய்வியோ.... கண்ணை கசக்கப்டாது. அனாவசியமா பப்ளிக்ல மூக்கை காதை குடையப் படாது” என்றான்.
“ஆச்சா லிஸ்ட்?” என்றான்
“ஓத வாங்குவே படவா” என்று அவனை செல்லமாக அடிக்க கை ஓங்கினான்.
“பண்றேன் பெரியப்பா, நான் குட் பாய்” என்றான். அவனை இறுக்கி அணைத்து உச்சியில் முத்தமிட்டான் கணேஷன்.
“புரிஞ்சுதோன்னோ, அந்த அறை பக்கம் போகாம அவ கிட்ட பேச்சு குடுத்து எப்போதும் போல அவள சிணுகீழ்தாம நீ பாட்டுக்கு சமத்தா உன் பாடத்தை படிச்சுட்டு வெளையாடு” என்றாள் மங்கா. உதட்டை பிதுக்கி அழகு காட்டினான். அவளுக்கு சிரிப்பு வந்தது.
ஆம் அம்முவிற்கு அந்த அம்மன் வந்து இறங்கி இருந்தாள்.
மற்றவருக்கும் பரவக்கூடும் முக்கியமாக குழந்தைகளுக்கு என கண்ணனை அருகே விடாமல் அந்த அறையை சுத்தமாக வைத்துக் கொண்டனர்.
வேப்பிலை மஞ்சள் அரைத்து பத்து போட்டனர்.
காரம் உப்பு அதிகமின்றி அந்த வீட்டின் அனைவருமே பத்தியமாக சாப்பிடனர்.
வாசலில் வேப்பிலை சொருகி அந்நிய மனிதர் உள்ளே வருவதை தவிர்த்தனர்.
நாலே நாளில் அம்முவுக்கு இறங்கு முகமாக அதிக தழும்புகளின்றி மாயமாகிவிட்டாள் அம்மன். தலைக்கு முதல் தண்ணீர் விட்டாயிற்று. 
கொரோனாவிற்கும் இதற்கும் அதிக வித்யாசம் இல்லை என இப்போது தோன்றுகிறது அல்லவா, சுத்தம் சுகாதாரம், தனிமை, கூட, எந்த ரூபமோ பெயரோ சக்தியோ..... அதன் உதவியும் கிட்டட்டும் – social distancing, restrain, resolve - பெரியோர் கற்றோர் சொன்னதை செய்வோம்.
அடுத்து வரும் நாட்களில் நாம் பல காலம் கூடி வாழ... கோடி நன்மை பெற..... சிறிது காலம் தனித்திருப்போம், ஒதுங்கி இருப்போம். ‘துஷ்டனை கண்டால் தூர விலகு’ என்றனர் அல்லவா – இவன் துஷ்டன் அல்ல கொலைபாதகன் கொரோனா. நம்மையும் காத்து மற்றோரையும் காத்தருளுவோம். இப்போது நமக்கு நாமேதான் கடவுள்.
வாங்க, கொஞ்சம் கவலை மறந்து சிரிப்போம்... :)
இதனிடையில் நல்ல வேனிற் காலம், மே மாதம் தகித்து அக்னி நக்ஷத்திரம் துவங்கி இருந்தது.
வீட்டில் பேரன் பேத்திகள் அனைவருக்கும் பரீட்சை முடிந்து விடுமுறை. “இதுகள இந்த லீவு நாள்ல கட்டி மேய்க்கறது இருக்கே, பகவானே...” என பெண்டிர் அலுத்துக்கொண்டனர்.
அந்நேரம் வைத்தீக்கும் கோர்ட் விடுமுறை. என்னத்தை செய்வோமடா கொட்டைடா கொடையடா என செய்வதொன்றும் அறியாமல் வீட்டை சுற்றி சுற்றி வந்தார்.
காலை கடன், குளியல் பூஜை சிற்றுண்டி எல்லாம் ஆயிற்று. ஹிந்து பேபரை, The Hindu முதல் Published By... வரை பாடம் பண்ணியாயிற்று.
பொழுது போகவில்லை.
‘பசிக்ராப்ல இருக்கோ...?’ எனத் தோன்றியது.
‘என்ன பண்ணுவா இந்த பொம்மனாட்டிகள் எப்போ பாரு... இவளுக்கு மட்டும் எப்படி ஓயாம ஏதானும் பண்றதுக்கு இருந்துண்டே இருக்கு?” என நடுகட்டினுள் எட்டிப் பார்த்தார்
மங்கா பங்கஜா மாலதி, கூட, அழைத்த அழைப்புக்கு ஓடியாடி அதை இதை கொண்டு வந்து உதவ என கண்ணம்மா... மும்மரமாக எதையோ அரிவதும் உப்பு மிளகாய் போடுவதும் குலுக்குவதுமாக நடந்தது.
“என்ன இங்கே, ஒரே ரகளையா இருக்கு?” என எட்டிப் பார்த்தார்
“உங்களுக்கு இங்கே என்ன வேலை, வாசல்ல போய் இருங்கோ” என மெல்ல அதட்டினாள் மங்கா.
“என்ன பண்றேள்னு கேட்டேநோல்லியோ?” என்றார்.
“அட ராமா! இந்த பிராம்மணனுக்கு யாரு லீவு விட சொன்னா...” என உள்ளே வைதுகொண்டே, “வேற என்ன நா, ஒண்ணுமே தெரியாததா போல கேட்டாறது.... வெய்யகாலம் ஆரம்பிச்சுடுத்து, ஊறுகாய் போடறோம். இப்போ போட்டாதானே நா வருஷம் மொத்தமும் நமக்கு ஆண்டு வரும்” என்றாள் கை பாட்டுக்கு ஆவக்காயை சீவி கொட்டையை நெம்பி எடுத்துக் கொண்டிருந்தது. வாய் பாட்டுக்கு வைத்திக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தது.
“பாட்டி, நேக்கு ஒரே ஒரு துண்டு மாங்காய்” என பிள்ளைகள் ஊடாக ஓடி வந்து பச்சை மாங்காய், வடு என எடுத்துக் கொண்டு ஓடின.
“டேய் புளிக்கும் டா, இன்னும் கொட்டை எடுக்கலை. தொண்டைல சிக்கிக்க போறதுடா. இந்த வாலுகளோட முடியலை” என அலுத்துக்கொண்டே வாயாடியபடியே கை விறுவிறுவென வேலை செய்தது பெண்டிருக்கு.
ஸ்வாரசயமாக இருக்க, வைத்தீ அங்கேயே சற்று பக்கமாக நின்று வேடிக்கை பார்த்தார். அவர்கள் ஒரு கைதேர்ந்த மெஷின் ஷாப்பின் அசெம்ப்ளி செக்ஷன் போல தொடர் அடுக்காக வேலை செய்வதைக் கண்டு அதிசயித்தார்.
‘நமக்கு வாய்தான் (ஆமா வக்கீலோன்னோ) கிழியும். கை ஒண்ணுத்துக்கும் பிரயோஜனமில்லை. இங்கே இவாள பாரு கையும் கை வாயும் ஓயாம... என்னில் ஆரம்பிச்சு எல்லாரோட மண்டையும் உருட்டியாறது...’ என சிரித்துக்கொண்டார்.
அவர் சிரிப்பதை பார்த்து ஒரு முறை முறைத்தாள் மங்கா
“என்ன சிரிப்பு, நாங்க இங்கே அவதி படறது அவ்விடத்தில சிரிப்பு வர்றதோ?” என்றாள் இடக்காக.
“ஐயோ இல்லைடி மங்கா, பார்க்க ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கு கன்வேயர் பெல்ட் மாதிரி அடுக்கடுக்கா சரியா கணிச்சு ஒவ்வொண்ணும் செய்யறேள்” என ஸ்லாகித்தார்.
“சரி சரி போய் பேப்பர் படிங்கோ” என விரட்டினாள்.
“மங்கா, செத்தபோரம் காபி கிடைக்குமா... ஒரே அலுப்பா, பசிக்ராப்போல தூக்க கலக்கமா இருக்கு. சொடியாவே இல்லை” என்றார்
“இங்கே நாங்க என்ன பண்ணிண்டிருக்கோம்... நடுவால காப்பிய கொண்டா ஜூச கொண்டான்னா நான் எப்படி நகர முடியும்.... ஒண்ணு பண்ணுங்கோ. எல்லாம் ரெடியா மேடை மேல இருக்கு, நீங்களே வேணா அர வா காபி கலந்துக்கோங்கோ” என்றாளே பார்க்கணும்.
“ஐயோ, அடுக்களை இவா டெர்ரிடரி.... அதுல நான் போய் புகுந்து எதையானும் மாற்றியமைச்சுட்டா போச்சு.... காச்மூச்சு” என பயந்தார்.
“நிஜம்மாவ சொல்றே?” என்றார் சந்தேகமாக தயக்கத்துடன்
“ஆமா. நான் எண்ணையில கை வெச்சுண்டிருக்கேன் இப்போ கண்டிப்பா பாதியில எழுந்துக்க முடியாது. எல்லாத்தையும் கிளறி பரணியில போட்டு வாயை கட்டினாதான் ஆகும்.
“அப்படியே இவா வாயையும் கட்ட முடிஞ்சா ரொம்பவே நன்னா இருக்கும் இல்லையோடி பெண்களா?” என அடிக்குரலில் கூற மூன்று பேரும் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள். தன் மண்டைதான் உருள்கிறது என புரிந்து கொண்டார் வைத்தீ.
‘போங்கோடீ, காபி கலக்க நேக்கு தெரியாதா என்ன.... நானே பண்ணிக்கறேன்’ என வீம்பாக சமையல் அறைக்குச் சென்றார். தோளில் கிடந்த துண்டு ஏதோ போருக்கு போகும் வீரன் போல தலைக்கு மேலே தலைப்பாகையாக ஏறி அமர்ந்தது.
இடமும் வலமும் புரியவில்லை.
ஒருவாறாக கேசை பற்றவைத்து அதன் மேல் அத்தனை பெரிய அடுக்கு ஒன்றை வைத்தார். அது சூடு ஏறிக்கொண்டு இருந்தது. எல்லா சமைத்த பாத்திரத்தையும் திறந்து பார்த்துவிட்டு கடைசியாக பால் பாத்திரத்தை கண்டெடுத்தார். ஹிமாலைய வெற்றி போலத் தோன்றியது.
அதை அடுப்பில் இருந்த பாத்திரத்தில் சாய்க்க, சொய் என்ற சத்தத்துடன் சூடேறிய பாத்திரத்தில் பால் விழுந்தது. அடுத்த படையெடுப்பு டிகாக்ஷன் தேடல்.... டிகாக்ஷன் filter இல் தானே இருக்கும் என, மேடை, மர பீரோ, வலை பீரோ, அனைத்தையும் தேட, பில்ட்டர் மட்டும் கண்ணிலேயே படவில்லை. அதற்குள் அடுப்பில் பால் சொட சொடவேன்றது. அதை வேகமாக ஓடி சிம் செய்தார்.
வேறே எதையோ எடுத்து திறக்க, அதில் டிகாக்ஷன் தளும்பியது. “Eurekha” என கத்த வேண்டும் போல ஆசை... கையில் இருக்கும் கரண்டி பறந்து வருமோ என பயந்து வாயை மூடிக்கொண்டார்.
க்ளாசை தேடி எடுத்து அதில் டிகாக்ஷனை கொஞ்சம் விட்டுக்கொண்டார். அதற்குள் பால் புஸ்சென பொங்கி... இமைப்பதற்குள் பொங்கி வழிந்தே விட்டது.
‘போச்சு, இன்னிக்கி அர்ச்சனைதான்...’ என நொந்து போனார்.
கிடுக்கி பிடித்து அந்த பெரிய பால் பாத்திரத்தை இறக்கி சாய்த்தார்... கிடுக்கி பலமின்றி ஒரு பக்கமாக சாய்ந்தது. சுட வைத்த பாலில் பாதி கீழே பாதி க்ளாசில்.
‘அட ராமா, ஒரு காபி பண்ண வக்கில்லை நேக்கு... பெரிய அட்வோகேட் ஜெனரல்.... கஷ்டம்’ என தலையில் அடித்து கொள்ளலாம் போல வந்தது. அடுத்தது சர்க்கரை.
‘போனாப் போறது, ஒன்ன பார்க்கவும் பாவமாத்தான் இருக்கு’ என அதிகம் படுத்தாமல் கையில் கிடைத்தது. அதை காபியில் கலந்து க்ளாசை எடுத்துக்கொண்டு நகர்ந்தார்.
‘என்னமோ வாசன வர்றதே... கேஸ் off பண்ணேளோ.. என்னது என்னென்னமோ  சத்தம்..... ஒரு காபிக்கு வெண்கல கடையில யானை புகுந்தாப் போல?” என கேட்டாள் மங்கா.
‘ஆமா, கேஸ் off பண்ணினேனோ...?’ என அப்படியே ரிவர்சில் போய் எட்டி பார்த்தார். பாக்கி இருந்த கொஞ்சூண்டு பாலோடு அந்த பாத்திரம் off பண்ணப்படாத கேஸ் மீது தீய்ந்து நிறம் மாறி கருகிக்கொண்டிருந்தது.
‘ஐயோ’ என அவசரமாக கேசை ஆப் செய்தார்.
கையில் க்ளாஸ் காபியை உறிஞ்சியபடி, ‘ம்ம் பரவாயில்லை, நான் போட்ட காபி நன்னாதான் இருக்கு... பேஷ் பேஷ்’ என தன்னை தானே மெச்சிக்கொண்டே வாயிலை நோக்கி நடந்தார்.
“டீ பங்கஜா, என்னமோ நாறற்துடீ செத்த போய் பாரேன்.... இந்த மனுஷன் எதையானும் அடுப்பில விட்டுட்டாரா?” என சந்தேகப்பட்டாள் மங்கா
அவள் உள்ளே சென்று பார்க்க, சமையல் அறை, பெரிய எருமை மாடு ஒன்று கன்று போட்டது போல காணப்பட்டது. சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
“அம்மா, இங்கே வந்து நீங்களே பார்த்துக்கோங்கோ” என நமுட்டு சிரிப்புடன் கூறினாள்.
“என்ன டீ, சொல்லேன் என்னவாம்?” என கை ஊன்றி எழுந்தாள்.
“ரெண்டு கையும் எண்ணெய், காரப்பொடி பிசுக்கு...” என மெல்ல தடுமாறி அடுக்களையில் நுழைய, அங்கே கண்ட காட்சி... “என்ன நா இது, ஒரு காபிக்கா இந்த களேபரம்...”
“உங்களுக்கெல்லாம் யாரு நா லீவு விடச் சொன்னா.... 365 அந்த கோர்ட வெச்சு தொலைக்கப்டாதோ.
“இவாளுக்கு பண்றதுக்கு ஒண்ணுமில்லாம ஆத்துல இருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்” என பொலம்பி இறைந்து தீர்த்தார்.
காதில் ஏதோ விழுந்ததோ இல்லையோ, என ஒரு மேதாவி முகத்துடன் மீண்டும் Times of India பேப்பரில் முகத்தை மறைத்துக்கொண்டு பாக்கி காபியை ரசித்தார் வைத்தீ.
(Work From Home களேபரமும் இப்படித்தான் இருக்கின்றதோ.... பாவம் அதை அனுபவிக்கும் பெண்டிர். பாவம் அவஸ்தை படும் ஆடவர்) அவர்களுக்கு சமர்பணம். நடுவில் குஷியாக உலா வரும் குழந்தைகளுக்கு – என்சொஈஈஈ (ensoiiii)
மீண்டும் சந்திப்போம்.



Friday 13 March 2020

MANGALAM MAMI - 6



மங்களம் மாமி 6
“நமஸ்தேஸ்து மஹாமாயே ஷ்ரீபீடே ஸுரபூசிதே |
ஷங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” 
மங்களம் தன் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமான தேவியின் அமர்ந்த நிலையிலான ஐம்பொன் சிலை ஒன்று பூஜா மண்டபத்தின் நடுவில் வீற்றிருந்தது
அன்று மாசி பௌர்ணமி... விசேஷமாக பூஜை நடந்துகொண்டிருந்தது.
கை நிறைய ரோஜா மல்லி பூக்களை எடுத்து அம்மன் மீது சார்த்தியபடி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டிருந்தார் மங்களம்.
அவரை பார்க்கவே மகாலட்சுமி போலத்தான் இருந்தது. பளீரென்ற முகம். நெற்றியில் அரக்கு வண்ண குங்குமம் நெற்றி வகிட்டிலும் நீண்டது. வெள்ளி கம்பிகள் கருப்புடன் போட்டி போட்ட கூந்தல். அதி காலை தலை குளித்து ஈர முடி கற்றைகளை கீழே ஒரு சிறு முடிச்சிட்டு அதில் ஒரு ஜாண் மல்லி சரத்தை சொருகி இருந்தார்.
அரக்கு வண்ண மடிசாராக கட்டிய சன்ன ஜரிகை மென் பட்டுப் புடவை அவரது வெளிர் நிறத்திற்கு மிக பொருத்தமாக இருந்தது. சிறு வயது முதல் கட்டி பழகியதால் மாமியின் மடிசாரு பாங்காக அமைந்திருந்தது. அக்கம் பக்கம் சுற்றத்தின் கல்யாணம் எதுவாகினும் மடிசாரு பக்குவமாக கட்டிவிட எல்லோருமே மாமியைத்தான் அழைப்பார்கள். அரக்கு வண்ண புடவையோடு போட்டி போட்டது மாமியின் கைகளில் பற்றியிருந்த மருதாணி.
ஒரு வருடத்தின் பெரும்பான்மையான மாதங்கள் மாமியின் கைகளில் மருதோன்றி தான் இருக்கும். சமீபத்தில் இட்டதால் அரக்காக மிளிர்ந்தது. மருதாணி சிவந்த மணக்கும் கைகளால் அம்மனுக்கு கை நிறைய பூ எடுத்து சாரத்தி பூஜை செய்வதென்பது அம்மனுக்கு மிகவும் உகந்தது. இதை தன் குடும்பத்துக்கு பல முறை எடுத்துச் சொல்லி செய்ய வைத்திருக்கிறார் மங்களம்.
விரல் நகங்களில் பவழ சிவப்பு சந்திரன்கள் எப்போதும் காணப்படும்.
பூஜை முடித்து நமஸ்கரித்து எழுந்தார் ‘அம்பிகே காப்பாத்துடீமா’ என்றபடி. நேரே வைத்தியிடம் வந்து அவரையும் நமஸ்கரித்தாள்.
அதற்குள் கடைக்குட்டி செல்ல பேத்தி ஓடி வந்து காலை கட்டிக்கொண்டது. “எழுந்துட்டியாடி கண்ணம்மா?” என வாரி கொண்டார்
“பாட்டி உன் கை காமி” என அவரது உள்ளங்கையை எடுத்து முகர்ந்து பார்த்தது அம்மு.
“பாட்டி, வாசன பாட்டி... ஜம்முனு வாசன” என சிரித்தது. இவரும் சிரித்தார். “ஏண்டீ மா உன் கை கூடத்தான் மணக்கறது. நீ முகர்ந்து பாரு” என்றார் தன் மருதோன்றிய குட்டி கைகளை முகர்ந்து பார்த்து, “வாசன இருக்கு பாட்டி, ஆனாலும் உன் கை போல இல்லை” என உதட்டை பிதுக்கினாள். “செல்லம்” என கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார்.
அவர் முத்தமிடுவதே அலாதி. சிறு குழந்தைகள் மகள் மருமகள் யாராகினும் கன்னத்தில் உதடு படாமல் ஆனால் அழுந்த மூடிய உதடுகளுடன் பதித்து முஹர்வார். எச்சில் படாது. hygiene ஆனால் முத்தத்தின் அதே ஸ்பரிசம் சந்தோஷம்.
அப்போதே மூக்கு நுனியால் அம்முவின் கன்னத்திலும் சீண்ட அதே கிளுகிளுவென சிரித்தது. “கிச்சு கிச்சு மூட்றது பாட்டி” என்று இன்னமும் சிரித்தாள்.
அவளை இடுப்பில் தூக்கியபடி சமையலறைக்கு சென்றவர் அங்கே மாட்டு பெண்ணுடன் சமையல் வேளைகளில் கலந்து கொண்டார்.
கோடை இன்னமும் துவங்கவே இல்லை... வெக்கையாகத்தான் இருந்தது.
“என்ன டிபன் பங்கஜா?” என கேட்டார்.
“உப்புமாதான் மா, கூட தேங்காய் சட்னி” என்றாள்..
“சரி குடு நான் கிளர்றேன்” என வாங்கிக் கொண்டார்.
நல்லெண்ணெய் காயவிட்டு கடுகு உளுந்து கடலை பருப்புகள் பெருங்காய பொடி கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி துண்டுகள் போட்டு வதக்கி பக்குவமாக வாசனையாக தாளித்தார். தாளிப்பே வீடு மணத்தது.
ஒன்றுக்கு மூன்று அளவு தண்ணீர் கொதிக்க வைத்து தாளித்ததன் மீது விட்டுவிட்டு உப்பையும் போட்டு, அதன் மேலே இடது கையால் சிறுது சிறிதாக ரவையை தூவியபடி வலது கையால் கட்டி படாமல் கிளறினார். அடுப்பை சிம்மில் வைத்தபடி நன்றாக கிளறி மேலே ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு நன்றாக மேலும் கீழும் பதமாக கிளறி மூடி வைத்தார். ஐந்து நிமிடத்தில்  மணக்கும் ஆவி பறக்கும் உப்புமா தயார் ஆனது. அருகே நின்ற பங்கஜத்திற்கு அதை பார்த்ததுமே நாக்கு ஊறியது. புன்னகைத்து கொண்டாள்.
‘அம்மா கை பக்குவம் தனிதான். ஒரு கட்டிதட்டி இல்லாம என்னமாத்தான் கேசரி மாதிரி செய்வாரோ...’ என உள்ளே மெச்சிகொண்டாள்.
“ஆயிரம்தான் சட்னி இருந்தாலும், இந்த உன் ஸ்பெஷல் உப்புமாக்கு எலுமிச்சை ஊறுகாய்தான் பெஸ்ட்” என சுவைத்து உண்டார் வைத்தி. “அதெப்பிடி, உப்புமா நா ஒலகமே வெறுக்கறது.... நீ மட்டும் இத அன்னிலேர்ந்து இன்னி வரைக்கும் பதம் மாறாம சுவையா செய்யறே மங்கா?” என மெச்சிகொண்டார்.
“போறுமே. உப்புமா பண்றது ஒரு பெரிய வித்தையா என்ன... காலங்கார்த்தால உங்களுக்கு என்னை வம்புக்கு இழுக்கணும்...” என செம்மை படர்ந்த கன்னத்துடன் முனகினாள் மங்களம்.
“இல்லை, நிஜம்மா தான் சொல்றேன்.... ஆஹா அமிர்தம் போ” என உப்புமா உண்டு முடித்து அதன் பின் நெஞ்சை கரிக்காமல் இருக்க அவள் தந்த நீர் மோரையும் குடித்துவிட்டு ஸ்லாகித்தார்.
“பாட்டி நேக்கு கையில” என வந்துது அம்முகுட்டி.
“என்னடீது பாட்டிய தொந்தரவு பண்ணாம நீயே சாப்பிடு. நோக்கு வயசாகலையா?” என திட்டினாள் இரண்டாம் மாட்டு பெண் மாலதி.
“விடு மாலதி இதிலென்ன சரமம்”.
“ம்மா, நானே சாப்டுப்பேன்... ஆனா பாட்டி கை வாசன. அந்த கையில எடுத்து வாயில தந்தா ஜோரா இருக்கும்... நோக்கு தெரியாதா... நீயும் சாப்பிடு... நோக்கும் பிடிக்கும்” என்றாளே பார்க்கணும். பக்கென சிரித்துவிட்டனர் இரு பெண்களும்.
“வாயை பார்த்தியோன்னோ இந்த குட்டிக்கு” என திருஷ்டி வழித்தார்.
“ஆனாலும் அம்மா, அவ சொல்றதேன்னமோ நெஜம்தான். அந்த சிவந்த மணக்கும் கையால உங்க கை பக்குவத்தோட செஞ்ச சப்பாட்டை வாங்கி சாப்பிடுவது அமிர்தம்தான்” என்றாள் மாலதி மனம் நெறைய
“அதெப்பிடிமா வருஷம் முழுவதும் சலிக்காம மருதாணி இட்டுக்கறேள். அவ்ளோ பிடிக்குமா?” என்று கேட்டாள்
“ஆமாண்டீமா சின்னப்போலேர்ந்தே மருதாணி னா ரொம்ப இஷ்டம்.
எங்க அத்தைபாட்டி என்ன பக்கத்திலே உக்கார வெச்சு ஒரு கதை சொல்லுவார் அந்த காலத்திலே”.
“அந்த அம்பிகைக்கு வெறும் கையால பூஜை பண்றதவிட மருதாணி இட்டுண்டு பூஜை பண்ணினா பூ போட்டா அத்தனை பிடிக்குமாம். அவ்ளோ இஷ்டமாம். அது ஒண்ணு அப்போவே மனசில ஒரைச்சுடுத்து.”
“இன்னமும் சொல்லுவா... சீதாப்ராட்டியார் லங்கையில அசோக வனத்தில இருக்கறச்சே அவ ஓயாம ஸ்ரீராமர நெனச்சுண்டே அழுதுண்டே பொலம்புவளாம். எப்போ வந்து தன்ன மீட்டுண்டு போவாரோ.... எப்போ, தான், அவருக்கு மீண்டும் பணிவிடை செய்வோமொன்னு உண்ணாம உறங்காம தவம் இருந்தாளாம். அப்போ அவ பக்கத்துலே இருந்த ஒரு மருதாணி மரம் மட்டும் அவரோட புலம்பலை கேட்டு தலை அசைத்து அவ மேலே பூங்காற்று வீசி அந்த மணமும் ஸ்பரிசமும் அவருக்கு பெரும் ஆறுதல் கொடுத்துதாம். “கவலைப் படாதே சீதே, சீக்கிரம் உன் ராமபிரான் வந்துடுவார் உன்ன மீட்டு அழைச்சுண்டு போக னு தைர்யம் சொல்லித்தாம். அது அவருக்கும் பெரும் நிம்மதியும் ஆறுதலும் கொடுத்துதாம்”.
அதனால சீதை மீண்டும் ஸ்ரீராமரோட அயோத்தி வந்த பின்னே அவரண்ட ஒரு நா தனிமையில இதை விவரிச்சு சொன்னாளாம். மருதாணிதான் நேக்கு அங்கே அத்தனை ஆறுதல்... நீங்க அவசியம் அவளுக்கு ஏதானும் வரம் பிரசாதிக்கணும்னு  வேண்டீண்டாளாம்.
ஸ்ரீராமர் மனசு நெறஞ்சு போய், “மருதாணி எல்லா சுபகார்யங்களிலேயும் முதன்மையா எல்லாரும் கையில வெச்சு கொண்டாடுவா... முக்கியமா கல்யாணப் பொண்ணுக்கு மங்களகரமா முதன் முதலில் மருதாணி வெச்சுதான் கல்யாண விசேஷங்கள் தொடங்குவா. எங்கெங்கு மங்களம் இருக்கோ அங்கெல்லாம் நீ முக்கியமா இருப்பேனு ஆசீர்வதித்தாராம்.
அதனாலதான் தென்னிந்தியாவிழும் சரி  வட இந்தியாவிலும் சரி மெஹெந்தி மருதாணி இடர்துனு கல்யாணப் பொண்ணுக்கு முதல்ல துவங்கறா.”
அது மட்டுமல்ல. அது கிருமி நாசினியும் கூட... தோல் வியாதி அரிப்புனு எதுவும் நெருங்காது. அந்த காத்து பட்டாலே அந்த மணமும் ஸ்பரிசமும் அத்தனை நல்லது. அதனாலதான் துளசிக்கு இணையா எல்லாரும் மருதாணிய கொண்டாடறா” என்றார்.
மருதாணி நா மங்களகரம். அதான் என் மனசுக்கும் மிக  நெருங்கிய  தோழியாயிட்டா அவள்” என்றார். மாலதி கேட்டு பிரமித்து போனாள். “அம்மா நானும் இன்னிக்கி வெச்சுக்கட்டுமா?” என்றாள் ஆசையாக
“நீங்க வெச்சு விடறேளா?” என்றாள்.
“அதுகென்ன பேஷா வெச்சுவிடறேன்” என்று புன்னகைத்தார் மங்களம்.
இதை எல்லாம் கேட்டபடி வந்த பெரிய பிள்ளை, “அம்மா, அப்போ எல்லாம் பண்ணுவியே அதப்போல இன்னிக்கும் உன் மருதாணி கையால நிலா சாப்பாடு உருட்டி கையில போடறியா மா.... இன்னிக்கி பௌர்ணமி ஆச்சே...?” என்றான் ஆசையாக ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி.
“என்னடா, இன்னமும் சின்னக் குழந்தையாடா நீ” என்றபோதிலும் மனம் புளங்காகிதம் அடைந்தது.
“பங்கஜா, என் மூத்த கொழந்தைக்கு ஆசைய பாரத்தியோ. சாதத்த வேளையோட வெச்சு ஆற வெச்சுடு. புளியோதரை பண்ணிடு. மிச்சத்துக்கு இருக்கவே இருக்கு தாளிச்ச தயிர் சாதம். இன்னிக்கி ராத்திரிக்கு எல்லாருக்குமே மேலே மொட்ட மாடியில நெலா சாப்பாடு” என்றார். ஹைய்யா என குதித்தார்கள் பிள்ளைகள்.
“தாங்க்யு மா” என அருகே வந்து கன்னத்தை தொட்டு சென்றான் பெரிய பிள்ளை.
“வயசுதான் ஆறது இன்னமும் கொழந்தத்தனம் போகல” என சிரித்தார்.
“இப்படி ஒரு அம்மா கெடைச்சாக்க, யாருக்குமே பெரிசாகணும்னு தோணாதும்மா” என மாலதியும் பங்கஜாவும் இரு பக்கமும் வந்து அவளை அணைத்துக்கொண்டனர், தோள் மேல் தலைவைத்து.
மங்களம் இரு கைகளாலும் அவர்கள் கன்னத்தை வருடினார்.
மடியில் படுத்துக்கொண்டு மழலை பேசும் பேரன் பேத்திகள்... தோளில் தலை சாய்க்கும் மருமகள்கள்... கன்னம் வருடிச் செல்லும் மகன்கள் கண்ணாலையே இந்த வயதிலும் காதல் பார்வையாக  வருடிச் செல்லும் கணவன். அங்கே மங்களம் நிறைந்திருந்தது.
அன்று இரவு மொட்டை மாடியில் எட்டு மணி அளவில் வானில் தங்கமாக ஜொலித்தது பூரண சந்திரன். பளீரென இருந்தது சுற்றுபுறம்
ஒரு குண்டானில் புளியோதரை... அதற்கு தோதாக கருவடாம் அரிசி அப்பளாம் பொரித்தது. தாளித்த தச்சு மம்மம். அதற்கு மாகாணிகிழங்கு வடுமாங்காய் என இரு சிறிய கிண்ணங்களில். செம்பில் குடிநீர் சகிதம் எல்லோரும் ஆஜர்.
மற்ற நாட்களில் “சாப்பிட வாங்கோ நாழியாறது நாங்க அடுக்களைய ஒழிக்க வேண்டாமா...?” னு அழைத்தாலும் சாப்பிட வராமல் படுத்தும் பிள்ளைகள் இன்று முதலாவதாகா அங்கே ஆஜர். நேக்கு முதல்ல நோக்கு இல்லை நேக்கு மொதல்ல என குடும்பி பிடி சண்டை வேறு.
“பேசாம சமத்தா உக்காரணும். இல்லேனா நான் தரமாட்டேன்” என அன்பு கட்டளை போட்டார் மங்களம். கப்சிப்.
கடைக்குட்டி அம்மு முதல் வைதீஸ்வரன் வரை அனைவரும் வட்டமாக அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர். மங்களம் அவரவர் வயசுகேற்ப சிறிய பெரிய உருண்டைகள் உருட்டி கையில் போட்டுக்கொண்டே வந்தார் அவரவர் சிறு இலை சீந்தில் வடாம் ஊறுகாய் என தொட்டுக்கொண்டு உண்டு மகிழ்ந்தனர்.
“நீயும் நடு நடுல ஒரு வா போட்டுண்டுடு மங்கா, தனியாவா சாப்பிடுவே” என்றார் வைத்தி.
“இருக்கட்டும், நான் எல்லாருக்கும் தந்துட்டு நாலு வா போட்டுக்கறேன்” என்றாள்.
“அதெல்லாம் இல்லை, நீயும்தான் சாப்படணம் எங்களோட” என பிள்ளைகள் அடம் பிடித்து நடு நடுவே உண்ண வைத்துகள்.
அம்முகுட்டி, “பாட்டி, நீ எங்க எல்லாருக்கும் ஊட்டறியே... நான் நோக்கு ஊட்டறேன்” என தன் பிஞ்சு கைகளில் வாங்கிய உருண்டையை அவள் வாயருகே கொண்டு நீட்டியது. மேலும் கீழும் சிந்தினாலும்... அதன் பாசம் நீர் திரையிட்டு கண்ணை மறைத்தது மங்காவிற்கு. வாயில் ஆசையாக வாங்கிக்கொண்டாள், புரங்கையால் கண்ணை துடைத்தவாறு.
“என் பட்டு செல்லமடி நீ” என கொஞ்சிகொண்டார்.
எல்லோருக்கும் வயிறும் மனமும் ஒருங்கே நிறைந்தது.
வணக்கம் மீண்டும் சந்திப்போம்.


Sunday 8 March 2020

MAA THAVAM PURINDHA MAADHAR


மா தவம் புரிந்த மாதர்

“ஹலோ சாரதா ஹியர்”
“மேடம் வணக்கம், நாங்க பெண்மை மாத இதழ்லேர்ந்துஅழைக்கறோம்
“வணக்கம், சொல்லுங்க”
“முதல்ல எங்க பத்திரிக்கை சார்பில உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மேடம்” என்றாள் அனு

“ஒ மிக்க நன்றி....ஆனா எதுக்கு?” என்றார் சாரதா
“உங்களுக்கு அகில இந்திய அளவில பெண் சாதனையாளர், “வுமன் அச்சீவர் ஆப் த இயர்னு” பட்டம் குடுத்திருக்காங்களே, அதுக்காகத்தான் மேடம்.”
“ஒ அப்படியா, எனக்கு இன்னும் இந்த செய்தி வரலைமா.... ரொம்ப நன்றி..... ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஆனா இதுக்கு நான் தகுதியானவதானானு சந்தேகமா இருக்கு” என்றார் சாரதா
“என்ன மேடம் அப்படி சொல்லீட்டீங்க, உங்களுக்கில்லாம வேற யாருக்கு இந்தத் தகுதி இருக்க முடியும்.... உங்க அறிவு, திறமை, சேவை மனப்பான்மை, மட்டுமல்லாம நீங்க சகலகலாவல்லியா திகழறீங்க.... எல்லா துறையிலயும் சாதிக்கிறீங்க.... போதாதா என்ன”
“எனக்கு புகழ்ச்சி பிடிக்காது மா அனு” என்றார்.

“சரி மேடம், இனி பேசலை, ஒரு சின்ன ரிக்வெஸ்ட்” என்றாள் அனு
“என்ன சொல்லுங்களேன்?” என்றார்
“உங்களோட ஒரு சின்ன பேட்டி தேவை... இது உங்கள உலகுக்கு படம் பிடிச்சு காட்ட இல்லை, மற்ற பெண்களுக்கு உங்கள வழிகாட்டியா இருக்க உற்சாகப்படுத்தி ஊகுவிக்கத் தான் மேடம் பிளீஸ், மாட்டேன்னு சொல்லீடாதீங்க” என்றாள் அனு

“ம்ம் எனக்கு இந்த பேட்டிய எல்லாம் தந்து பழக்கம்மே இல்லையேமா” என்றார்.
“அதப்பத்தி நீங்க கவலையே படாதீங்க மேடம், ஒரு நாள் முழுவதும் உங்களோட நானும் எங்க காமிரமானும் இருக்க அனுமதி குடுங்க... அது போதும் மிச்சத்த நாங்க பாத்துக்குவோம்” என்றாள்.
“ஒரு நாள் முழுவதுமா?” என்றார் ஆச்சர்யத்துடன்.
“ஆமா மேடம், நீங்க என்ன செய்யறீங்க... எப்படி உங்களின் ஒரு தினம் கழியுதுனு வாசகர்களுக்கு காட்ட விரும்பறோம் அதான், ப்ளீஸ் மேடம்” என்றாள்.
“சரி வர்ற ஞாயிறு வாங்களேன்” என்றார்.
“ரொம்ப நன்றி மேடம்....எப்போ வரட்டும்?” என்றாள்.
“காலை ஆறு மணிக்குன்னு வெச்சுக்கலாமா?” என்றார்.
“கண்டிப்பா மேடம்” என்றாள். ஒகே என வைத்தார்.
‘என்ன, எனக்கு பட்டமா பரிசா... எப்படி.... இதெல்லாம்’ என மனம் சந்தோஷமும்பட்டது ஏதேதோ எண்ணங்களும் சுழன்றன.

அப்படியே தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டாள் சாரதா.
சாரதா எழுபது வயதை நெருங்கும் மாது....
கண் நிறைந்த கணவன் ஒரே ஆசை மகள் என அன்பான அளவான குடும்பம்...
‘இன்று இந்த பெரும் மறியாதையும் பட்டங்களும் வந்ததெப்படி... நான் இருந்த நிலை என்ன...’ என எண்ணி பார்த்தார்.

சாரதா ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை.... அவளை தொடர்ந்து ஐந்து தம்பிகளும் மூன்று தங்கைகளும் என மழலை பட்டாளமாக விளங்கியது வீடு.
எப்போதும் ஏதோ ஒரு பற்றாக்குறை என ஓடியது..... தந்தை நல்ல வேலையில் இருந்தும் தினசரி சோதனைகள் இருக்கத்தான் செய்தன.
அந்த சூழலில் வளர்ந்தும் சாரதா நன்றாக படித்தாள்.... முதன்மையாக வந்தாள்.... அவர்கள் வாழ்ந்து வந்தது நீலகிரி மலைத் தொடரில் உள்ள பகுதிகளில்..... அங்கே அவள் தந்தை முக்கிய கட்டுமான இஞ்சினியராக இருந்து அணைக்கட்டுகள் கட்டும் பொறுப்பை ஏற்று இருந்தார்.
படித்ததெல்லாம் அங்கே உள்ள சிறு ஊர் பள்ளிகளில் தான்.
பத்தாவது வந்ததும் போர்ட் தேர்வு என்பதால் அவள் தந்தை அவளை தனது அண்ணன் வீட்டில் சென்னையில் கொண்டு சேர்த்தார்.

பெரியமாவுக்கு அவளையும் அவளது குடும்பத்தையும் அறவே பிடிக்காது, கொடுமைகள் பல செய்து இன்னல்கள் பல தந்தாள் அவள்.
ஓயாது ஒழியாது அவளுக்கு வேலை வைத்தாள்.... காலை சமையலை முடித்த பின் ரெண்டு வாய் அள்ளி தின்றுவிட்டு பாவாடை தடுக்க பள்ளிக்கு ஓடுவாள் சாரதா.
சில சமயம் பாவடையில் முழங்கையில் என அப்பி இருக்கும் கரியை கண்டு, கூட படிக்கும் மாணவிகள் சிரிப்பர்.... அவளும் சிரித்து மழுப்பிவிடுவாள்.... கண்கள் குளம் கட்டும்.

பெரியம்மாவை கொண்டு பிறந்த அவரது மகளும் அவ்வண்ணமே, ஆனால் பெரியப்பாவும் அவரது இரு மகன்களும் சாரதாவின் மீது உயிரையே வைத்திருந்தனர் என்பது மட்டுமே ஆறுதல்.
பார்த்து பார்த்து இவளுக்கு என பெரியப்பா எது வாங்கி வந்தாலும் அது தாய் மகள் இருவரது கண்ணையும் கரிக்கும்..... பட்டுப் பாவாடை முதல் சாதா சீட்டி பாவாடை வரை இவளது புதுசுகளை தான் கட்டிய பின் தான் சாரதா கட்ட வேண்டும் என கட்டி வீணாக்குபவள் அவள் அக்கா.... இவளுக்கும் அது தவிர்க்கவோ தடுக்கவோ வழி இல்லாமல் தான் ஒப்புவாள்.

இத்தனைக்கிடையில் பத்தாவது வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் செய்தாள் சாரதா.... மேலே கல்லூரி சென்று படித்து பட்டம் பெற கொள்ளை ஆசை.
கலர் கலர் உடை உடுத்தி அக்கா செல்வது போல தானும் கல்லூரி செல்ல விருப்பம்.... தந்தையிடம் முறையிட்டாள்.

“இல்லைமா உனக்கு பிறகு தம்பி தங்கைங்க இருக்காங்க, ஆம்பிளை பிள்ளைங்க படிச்சா குடும்பத்துக்கு நல்லது, அதுனால உன்னை மேலே படிக்க வைக்க என்னால முடியாது டா” என அன்பாகவே மறுத்துவிட்டார் அவர்.
அவரின் பேச்சை மீறி எதுவுமில்லை ஆகவே, கை வேலைகள், சமையல், தோட்டம், வீட்டை அலங்கரிப்பு செய்வது, தம்பி தங்கைகளை பார்த்து பேணுவது என தன் நேரத்தை நல்லபடி செலவிட்டுக்கொண்டாள் சாரதா.

தேர்வு முடிவுகள் வந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே “இன்னிக்கி மாலை உன்னை பொண்ணு பார்க்க வராங்க சாரு.... ரெடியா இரும்மா” என்றார் தந்தை.
‘என்னது இதுக்குள்ளவா, எனக்கா திருமணமா?’ எனும் வார்த்தைகள் வெளி வராமல் திகைப்பில் தொண்டையிலேயே நின்று போயின.
“என்னம்மா?” என்றாள்.
“ஒவ்வொருத்தரா நாங்க கரை ஏத்தினாதானே உண்டு மா, உனக்கு புரியாதா என்ன.... போ மா ரெடியாகு போ” என்றார் அன்னை நல்ல விதமாக எடுத்துச் சொல்லி.
புடவையே கட்டி அறியாதவள் தடுக்கி விழ சோளக்கொல்லை பொம்மை போல சேலை உடுத்தி நின்றாள்.
தாய் கொடுத்த காபி பலகாரதட்டுடன், வந்தவர் முன்னே சென்று நின்றாள்.
ஏறெடுத்து பார்க்கவும் பயம்.

“இங்க வா, உன் பேர் என்ன.... இப்படி வந்து எம்பக்கத்தில உக்காரு” என்றார் ஒரு மாது. தட்டை அனைவருக்கும் நீட்டிவிட்டு தந்தையை பார்வையால் சம்மதம் கேட்டபடி அவர் அருகிலே போய் அமர்ந்தாள்.
“சாரதா” என்றாள் மெல்ல.
“இதப் பாத்தியா இது என் அப்பா இது என் அம்மா, இது என் தம்பி, நான் அவனுடைய அக்கா, அவன நன்னா பாத்துக்கோ, அவன்தான் உன்னை பண்ணிக்கப் போறான்” என்றார். அவள் குனிந்தபடியே இருந்தாள்.
“தலையை நிமிர்ந்து பாரு” என்றார் சற்றே குரலில் அதட்டல்... குரலே அப்படிதானா என பயந்தபடி மெல்ல தலை நிமிர்ந்து அவனைக் கண்டாள்.
சந்தன நிற ஷர்ட், காபி பொடி கலர் பான்ட், கோல்ட்ரிம் கண்ணாடி...படிய வாரிய கிராப், என கண்ணை நிறைத்தான்..... அவனும் அவளை அந்த நொடியில் காண தலை கவிழ்ந்தாள்.
திரும்பி பார்ப்பதற்குள் நிச்சயமும் கல்யாணமும் நடந்து அவன் முன்னில் முதல் இரவு அறையில் இருந்தாள்

“உக்காரு, முதல்ல சிலது பேசலாம் என்ன” என்றான் அன்பாக.
‘ம்ம்’ என தலை ஆட்டினாள்க விழ்ந்தபடி.
“இப்படி தரைய பார்த்து மண்டைய ஆட்டினா எப்படி?” என சிரித்தான் ஷங்கர்.

அவள் வெட்கத்துடன் அவனை ஏறிட்டாள்.
“இப்போ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுத்து.... எங்காம் கொஞ்சம் முற்போக்கானது....உங்காம் கட்டுப்பெட்டின்னு சொல்ல வரலை..... ஆனாலும் உங்காத்து பேச்சு வழக்கு பழக்கம் எல்லாம் பார்க்கும்போது எனக்கு புரிஞ்சுது இது”

“நீ ஒரு ஆபிசரோட பெண்டாட்டி.... எங்க ஆபிஸ்காரா எல்லாம் சில சமயம் ஆத்துக்கு வருவா, நாம நாலு இடத்துக்கு போவோம், நீ இப்படி குனிஞ்ச தலையும் பழம் புடவையுமா கதவு பின்னாடி ஒளிஞ்சுண்டு நின்னா போறாது, எப்போதுமே பளிச்சுன்னு டிரஸ் பண்ணீண்டு நல்லபடி முன்னே வந்து எம்பக்கத்தில நின்னு எல்லாரோடவும் சகஜமா பேசணும் பழகணும்.... தினமும் ஆத்தில பேப்பர் வரும், படிச்சு உன் அங்கிலத்த இன்னமும் மேம்படுத்திக்கோ. உனக்கு கொஞ்சம் தெரியும்தான் ஆனாலும் இன்னமும் தெரிஞ்சுக்கோ”

“நாலு விதம் நன்னா சமைக்க புக்ஸ் வாங்கி தரேன், தினுசு தினுசா கத்துக்கோ, உனக்கு தெரிஞ்சபிடிச்ச எல்லா திறமைகளையும் நீ வளர்த்துக்கணும்..... என்னோட மனைவின்னு அந்தஸ்தோட மட்டுமில்லாம சாரதாவா நீ தலை நிமிர்ந்து உன் தனித்துவத்தோட நிற்கணும்” என்றான். அவன் சொல்ல சொல்ல அவள் கண்கள் அகல அவனையே பார்த்தாள்.
“என்ன, நான் ஏதானும் தப்பா சொன்னேன்னு உனக்கு தோணறதா?” என கேட்டான்.
இல்லை என தலையை அசைத்தாள்.
“பின்ன?” என்றான்.
“இந்த காலத்தில இப்படியும் ஒருத்தரா....பெண்டாட்டிய அடக்கி வைக்கறவா பத்திதான் நான் கேள்விப் பட்டிருக்கேன், அதான் ஆச்சர்யமா இருந்துது” என்றாள் கொஞ்சம் நாணியபடி.
“அடிசக்கை....இவளோ பேசத் தெரியுமா உனக்கு.,....அப்பறம் என்னவெல்லாம் தெரியும்?” என அங்கே அன்பின் அடிப்படையில் அன்று அப்படித் துவங்கியது அவர்களது அன்னியோன்னியமான தாம்பத்யம்.
நினைவுகளில் இருந்து மீண்டு லேசாக சிவந்து எழுந்தாள் சாரதா.

“என்னம்மா?” என்றார் ஷங்கர். “யாரு போன்ல?” என்றார்.
“ம்ம் ஆமா, எனக்கு என்னமோ பட்டம் குடுத்திருக்காளாம்.. அதுக்கு பேட்டி வேணும்னு” என்றாள்.
“பேஷ், கங்க்ராட்ஸ் மா” என்றார்.
ஒரு வயதுக்கு பின் மனைவியை தாயாக பார்த்து அம்மா வென அழைக்கும் சில ஆண்களில் அவரும் ஒருவர்.....அவளும் தான் “சங்கர்பா” என்றுதான் அவரை அழைப்பாள்.

ஞாயிறு காலை ஒரு எப்எம் ரேடியோவில் அவளது ப்ரோக்ராம் இருந்தது..... அதற்காக சனி இரவு பத்து மணி வரை கூட அமர்ந்து இணைய தளங்களில் இருந்து கருத்துக்கள் தேர்வு செய்துகொண்டு இருந்தாள் சாரதா.
“என்னம்மா பண்றே, இன்னும் தூங்கல, நாளைக்கு காலையிலேயே பேட்டி வேற இருக்கு போலிருக்கே.... உடம்பு கெட்டுடப் போறதுமா” என்றார்
“ஆமா, ஆனா ரேடியோ ப்ரோக்ராம் இருக்குங்க.... அதுக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் திரட்டிண்டு இருக்கேன்.... தோ வந்துடறேன் படுக்க வேண்டியதுதான்” என பதில் கூறினாள்.

காலை கண் விழித்து எழுந்து காலை கடன்களை முடித்து சுவாமிக்கு விளக்கேற்றி வணங்கி நாளை துவங்கினாள் சாரதா..... பாலை காய்ச்சி காபி போட்டு ஷங்கரை எழுப்பி இன்முகத்துடன் கொடுத்தாள்....தானும் குடித்தாள்....பின்னோடுபோய் குளித்து வந்து அழகிய ஜரியிட்ட பருத்தி புடவையை உடுத்தினாள்.... தலையை சுற்றி சிறு கொண்டையாக்கி அதில் ஒரு முழம் மல்லிகையை சூடினாள்..... நெற்றியில் இட்ட பெரிய வட்ட கும்குமபொட்டு..... காதிலும் மூக்கிலும் வைரங்கள் மினுங்க மஞ்சள் பூசிய முகம்.... வாய் ஓரம் அழகிய நிறைந்த சிரிப்பு.... கைகளில் எப்போதுமே சிவக்க இருக்கும் மருதாணி, என மங்களகரமாக தயார் ஆனாள்.

“வணக்கம் மேடம்” என வந்தாள் அனு. இவளைக் கண்டவளுக்கு உடனே விழுந்து வணங்கத் தோன்றியது.
“வாசு ஒரு ஸ்நாப்” என்றாள். அவனும் எடுத்தான்.
“நேரே துவங்கலாமா?” என ஆரம்பித்தனர்.

“இன்னிக்கி எப்எம் ல ஒரு ரேடியோ ப்ரோக்ராம் இருக்கு, அங்க போகணும்” என்றார் சாரதா.
“என் கூடவே என் கார்ல வந்துடுங்க” என தானே தன் இண்டிகாவை ஓட்டினார்.
அங்கே செல்ல, வணக்கங்கள் முடிந்து நிகழ்ச்சியத் துவங்கினார் தொகுப்பாளர்.

“இன்றைய சிறப்பு விருந்தினர் நமக்கு அசலே நன்கு அறிமுகம் ஆன சாரதா ஷங்கர் அவர்கள்..... நம்மோடு அவரின் எண்ணங்களை பகிர்ந்துகொள்வார்...... நாட்டுப்புற பாடல்களை பற்றிய உங்கள் கேள்விகளை இந்த எண்ணை அழைத்து அல்லது எஸ்எம்எஸ் அனுப்பி நீங்கள் கேட்கலாம்.”
சாரதா பேசத்துவங்கினார்.
“நாட்டுப்புற பாடல்கள் நம்ம கலாசாரத்தோட ஒன்றி போயிருக்கற ஒண்ணு, ஒரு குழந்தை பிறப்பில் இருந்து ஒரு சாவு விழுந்தது வரை நாட்டுப் பாடல்கள் இருக்கு.....கல்யாணமா, சீமந்தமா, கருமாதியா, காது குத்தலா.....கருணையை காதலா, காமமா, கனிவா, முரட்டுத்தனமா, கோபமா வீரமா... எதை எடுத்தாலும் அதில கிராமப்புறம் ரசம் சொட்ட பாடல்கள் நிரம்பி இருக்கு” என மேற்கோள் இட்டு காட்டினார்... பாடியும் காண்பித்தார்......

இப்படியாக ஒரு மணி நேரம் செல்ல, அங்கிருந்து நேரே சாய் பஜன் மண்டலிக்கு சென்றார்..... அங்கே அவரது பஜனை தோழிகளுடன் அமர்ந்து ஷிர்தி சாய் பாபா முன் சில கானங்கங்கள் எழுப்பினார்.
அது முடிந்து நேரே அரபிந்தோ அன்னையின் ஆசிரமத்திற்குச் சென்றார்..... அங்கே சென்று த்யானத்தில் அமர்ந்தார்..... அரை மணி கழிய பூ வைத்து வணங்கி எழுந்தார்.

வெளியே வந்தவர் நேரே வீட்டிற்கு வந்தார்..... கை கால் கழுவி சமையல் அறையில் நுழைந்தவர், சிற்றுண்டி சரியாக பதமாக சமைக்கப்பட்டுள்ளதா என ருசி பார்த்தார்.
“சாம்பார்ல உப்பு கூட இருக்கே சாந்தி” என மென்மையாக கூறி உடனே குளிர்சாதன பெட்டியில் இருந்த சப்பாத்தி மாவை ஒரு சிறு உருண்டை எடுத்து உருட்டி கொதிக்கும் சாம்பாரில் போட்டார்..... ஒரு கொதி வந்ததும் இரக்க, டேஸ்ட் சரியாக இருந்தது.

“இதெல்லாம் நீங்க உங்க டிவி ப்ரோக்ராம்ல சொல்லும் கிச்சன் டிப்ஸ் இல்லையா மேடம்?” என சிரித்தாள் அனு.
“ஆம் மா, தினமும் நாம நடத்தும் வாழ்க்கையில் சந்திக்கும் சில இடர்கள் இவை..... அதற்காக நாம கலவரப்பட வேண்டிய அவசியம் இல்லை..... வழி வழியா நம்ம அம்மா பாட்டி அத்தைனு நமக்கு சொல்லி குடுத்துட்டுப் போனதை தான் நாம பாலோ பண்றோம்” என சிரித்தார்.
“கணவருடனும் இவர்களுடனும் அளவாக சிற்றுண்டி உண்ட பின் “போலாமா?” என எழுந்தார்.

“உங்களுக்கு ஒய்வு தேவைனா நாங்க காத்திருப்போம் மேடம்” என்றாள் அனு.
“இல்லைமா போலாம்” என்றார் உற்சாகமாக.
சென்னையை தாண்டிச் சென்றது கார்..... இப்போது டிரைவர் வண்டியை செலுத்தினார்.... அங்கே இருந்த ஒரு ஆசிரமத்திற்குள் சென்று நின்றது வண்டி..... பின் டிக்கியிலிருந்து பழக்கூடைகள், மிட்டாய்கள், நிறைய சத்தான காய்கறிகள் என வெளியே எடுத்துச் சென்றான் டிரைவர்.

“இதெல்லாம் எங்க பார்ம்ஹவுசில விளையறது, அங்கே வீணாகறத இங்கே கொண்டு வார இறுதியில குடுத்துடுவேன்” என்றார்.
உள்ளே சென்று “என்ன அன்னம்மா, உன் பெண்ணுகிட்டேர்ந்து இன்னிக்கி போன் வந்துதா..... உன் பேரன் எப்படி இருக்கானாம்?” என விசாரித்தார்.
“என்னங்கய்யா சாரதி சர், உங்க மூட்டு வலி தேவலையா, நான் அந்தத் தைலம் தந்தேனே, அதை தடவறீங்கதானே?” என கேட்டாள்.

“அம்மா சாரதா மா” என சூழ்ந்து கொண்டனர்.....அனைவரது குசல விசாரிப்புகளையும் புலம்பல்களையும் பொறுமையாக கேட்டார் சமாதானமாக பேசினார் புன்சிரிப்புடன் அன்பாக அரவணைத்தார்.
ஒரு மணி நேரத்திற்கு பின் அங்கிருந்து கிளம்பி நேரே வேறே ஒரு டிவிசானல் ஆபிசிற்கு சென்றது வண்டி.
‘சமையலில் இது புது வகை’ என நிகழ்ச்சி.... அதில் நார்த் இந்திய முறைப்படி செய்யும் ‘கோளா உருண்டை குழம்பை’ செய்முறை விளக்கம் செய்து காட்டினார் சாரதா.

அது முடிந்து கிளம்பி வீட்டிற்கு வந்தனர்....
“உண்டுவிட்டு நீ கொஞ்சம் உக்கார்ந்து டிவி பாரு அனு....நான் அரை மாணீல வரேன்” என உள்ளே சென்றுவிட்டார்.
“என்னமா எப்படி போச்சு?” என்றார் ஷங்கர். அவருடன்தான் உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது....முடிந்தவரையிலும் அனைத்து வேளைகளும் அவருடனேயே காபி பலகாரம் சாப்பாடு உண்பது என்ற கொள்கையை கடைபிடித்தார் சாரதா

“நல்லா இருந்துதுங்க” என்றாள் அதே சிரிப்பு மாறாமல்.
“நம்ம அனிதா போன் ஏதானும் பண்ணாளா.... அஸ்வத்கு ஜுரம் குறஞ்சுதாமா, ஏதானும் சொன்னாளா?” எனக் கேட்டார்.
“ஆமா மா கூப்டா, நீ கவலைப்படுவேன்னு.....நிகழ்ச்சியில இருந்தா பேச முடியாதுனு மொபைல்ல கூப்பிடலைன்னா, ஜுரம் சரியா போச்சாம்....நல்லா விளையடறான்னு சொல்லச் சொன்னா மா” என்றார்.
“ஒ தாங்க்காட்” என படுக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
“இன்னிக்கி முதுகு கொஞ்சம் வலி” என்றார் செல்ல சிணுங்கலாக.
“ஆமா, ஓய்ச்சல் ஒழிவே இல்லாம உழைக்கிற, கொஞ்சம் ஸ்லொ பண்ணிக்கோ உன் காரியங்களனு நான் சொன்னா கேட்டாதானே” என்றார் ஆதுரமாக ஷங்கர்.
“அதெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை, இன்னிக்கி யோகா பண்ணி இருந்தா போயிருக்கும், அதுக்கு நேரமில்லை....அதுனாலதான்” என பாசத்துடன் அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள். அவர் அவள் தலை கோதினார்.

கொஞ்சம் படுத்திருந்துவிட்டு எழுந்து தன்னை சீர் செய்துகொண்டு
“நான் கிளம்பட்டுமா?” என்றாள்.
“என்னமா, திரும்ப எங்கே?” என்றார்.
“எல்லாம் நம்ம ‘மகளிர் மட்டும்’ க்குதான்” என்றாள் சிரித்தபடி.
“ஓ, உன் செல்லப்பெண்கள கொஞ்ச போறியாக்கும்” என சிரித்தார். “ஆமா” என சிரித்தாள்.

நேரே அங்கே செல்ல, அந்த ‘மகளிர் மட்டும்’ சேவா சமூகத்தில் பல இள வயது பெண்கள், பாட்டு நாட்டியம், தையல், கம்ப்யுடர், ஆர்ட் வேலைகள், கைத் தொழில்கள் என கற்று வந்தனர்..... அவற்றை மேற்பார்வையிட்டார் சாரதா.
‘மேடம் இது... மேடம் அது’ என பெண்கள் முறையிட்டனர்....
“அம்மா அனுஷா, நான் சொன்ன இடத்துக்கு போனியா மா... என்ன சொன்னாங்க?” என கேட்டார். “ஆமா மா, போனேன்... வேலை கிடைச்சுடுத்து மா” என இவர் பாதம் பணிந்து வணங்கினாள்.
“ஓ நல்லது, என் கால்ல ஏம்மா?” என அணைத்துக்கொண்டார்.

அங்கே ஒரு மணி நேரம் கழிந்தது.
அங்கிருந்து நேரே வேறே டிவிசானல், அங்கே மகளிர் தினத்துக்காக என ஸ்பெஷல் ப்ரோக்ராம்.... அதில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை முன் வைத்தார்....
“நீயா நானானு கணவன் மனைவிக்குள்ள போட்டி பொறாமை வந்தா, அங்கே அன்னியோன்னியம் ஜன்னல் வழியா ஓடிப் போய்டும்..... விட்டுக் கொடுத்தல் ஒன்றுதான் வெகு நாள் வரை தாம்பத்தியத்தை காத்து நிற்கும்..... இதை ஒவ்வொரு பொண்ணும், படித்திருந்தாலும், சம்பாதிச்சாலும், புரிஞ்சு நடக்கணும்...... அதே போல ஆண்களும் பெண்ணை காலடியில் மிதிக்கும் மிதியடியாக நினைக்காமல் தன்னோடு சரி நிகர் சமானமாக நினைத்து எல்லாவற்றையும் பகிர்ந்துக்கணும்...... அவளை நல்ல அன்னையாக மனைவியாக மகளாக சிநேகிதியாக மந்திரியாக மரியாதை கொடுத்து நடத்தணும், அப்போ புரிதல் தானா ஏற்படும்” என்றார் முத்தாய்ப்பாக...... பலத்த கைதட்டலுக்கு நடுவில் விடை பெற்றார்.
அங்கிருந்து நேரே அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்று அன்னையை கடல் ஓரக்கோவிலில் வணங்கி விட்டு சிறிது நேரம் தயானம் செய்ய அமர்ந்தார்.

அங்கேயே மண்டபத்தில் ஓரமாக அமர,
“என்ன அனு, எப்படி தோணிச்சு உனக்கு.....ஏதானும் கேட்கணும்னா கேக்கலாமே” என்றாள்.
“பிரமிப்பா இருக்கு மேடம்” என்றாள் அனு நிஜமாகவே திகைத்து.

“மேடம் தப்பா நினைக்கலேன்னா சில கேள்விகள்” என்றாள்.
“ஷ்யூர் கேளு” என்றார்
“உங்களுக்கு எழுபதை நெருங்கும் வயசுன்னு...” என தயங்கினாள்.
“ஆமா அறுபத்தி ஒன்பதாகுது எனக்கு” என்றார்.
“இந்த வயசில இந்த எனர்ஜி, இந்தப் புத்துணற்ச்சியுடன் சிரித்த முகம், இப்படி ஓடி ஆடி திரிந்து எல்லாவற்றிலும் கை தேர்ந்து... எப்படி மேடம்?” என்றாள்

“சிம்பிள், வாழ்க்கையை நல்லபடி கற்று தேர்ந்து, அதனை ஒரு கிரமசிக்ஷனை பிரகாரம் வாழறேன்...அதுனாலனு சொல்லலாம்.... ஆனால் முதல் முக்கிய காரணம் என் கணவர்”

“பெரிய குடும்பத்து மூத்த பெண்ணாக பிறந்து, ஆசைப்பட்டும் மேலே படிக்கச் முடியாமல் போய் திருமணமாகி வந்தவள் நான்... என்னை மேலே படிக்க ஊக்குவித்தார்.....பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணி நாலு பேரோட சகஜமா பேசறது பழகறது எப்படின்னு கத்து குடுத்தார்......ப்ரைவேட்டா டிக்ரீ படிச்சு தேர்ந்தேன்...... சிறு தொழில் கை தொழில் முன்னேற்றம் பத்தி தீசிஸ் பண்ணினேன்..... மகளிர் சுய வாய்ப்பு குழு அமைத்தேன்......”

“கைவிடப்பட்டோருக்காக நடத்தப்படும் ஆசிரமங்கள் பலதும் நல்லபடி நடப்பதில்லை, அதை அவ்வப்போது சென்று பார்த்து கை கொடுக்க நேரம் ஒதுக்கினேன்..... நம்ம கண் பார்வையில தவறு நடக்காது பாரு, அதான்...... இதற்கு அத்தனைக்கும் என் அன்பான கணவர் கூடவே நடந்தார்....”

“எப்போ வேணுமோ அப்போ பக்கபலமா இருந்தார், பெரும்பாலான நேரங்கள்ள, நான் விழுந்தால் தாங்கும் வகையில் என் பின்னே நின்றார்...... பல விஷயங்களில் என்னை உற்சாகப்படுத்தி சாதிக்க வைக்க முன் உதாரணமா முன்னே இருந்தார்...... எனக்குள்ளே எப்போதுமே இருந்து என்னை எல்லாவற்றிலும் சிறக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்...அவ்வளவே” என்றார் வெள்ளைச் சிரிப்புடன்.

“களைப்பே இல்லாம ஆரோக்கியமா இந்த வயசில..?” என்றாள் அனு.
“ம்ம், அளவான சாப்பாடு... சத்தான சாப்பாடு.... நிறைய காய் பழங்கள் பால் கீரை வகைகள் தானியங்கள், அளவான உப்பு சர்க்கரை எண்ணை...... போதததற்கு யோகா, தியானம், ஆர்ட் ஆப் லிவிங் போன்றவை...... மனசுக்கு பிடித்தமானத செய்ய முயலும்போது அதற்குண்டான உற்காகம் தானே வந்துடும் அனு..... கூட மனதுக்கு இனிமையானவர் துணையிருக்க புரிந்த மனதுடன் சேர்ந்து நடக்க, வாழ்க்கை பாதை இலகுவாகுது....”

“எல்லாருக்கும் இப்படி அமையுமா என்றால், ஒரு வேளை இல்லாமலும் இருக்கலாம், ஆனால் அந்த புரிதலையும் அன்பையும் நாம்தான் கை நீட்டி வரவேற்று ஏற்றுகொள்ளணும், தானா வராது மா..... உனக்குக் கல்யாணம் ஆனாலும் நீ இதை ஞாபகம் வெச்சு நடக்கணும்” என்றார் அன்பாக.

“உங்க மகள் பற்றி...?” என்றாள்.
“எங்க இனிய தாம்பத்தியத்தின் முத்து, எங்கள் மகள், அனுஷா......நல்லா படிச்சு வேலைக்கு போய்கிட்டு, மணமாகி கணவனுடன் அன்பாக மும்பையில குடித்தனம் பண்ணுகிறா, நல்ல பண்பான அன்பான மருமகன் சந்தர்... எங்களுக்கு ஒரு பேரப் பிள்ளை அச்வத்தும் உண்டு, சுட்டி பயல்..... எங்கள் கண்ணின் மணி போன்றவன்” என்றார்.

“இன்னும் ஏதேனும்?” என்றார்.
“உங்க ஆசிகள் மட்டுமே மேடம்” என வணங்கினாள்.
“காட் ப்லெஸ்யு மை சைல்ட்” என்றார் மனதார.
“கிளம்பலாமா?” என எழுந்தார்.

பிரமிப்பு மாறாமல் அனு விடை பெற்றாள்.
வீட்டை அடைந்த சாரதா ஓய்வாக சோபாவில் அமர்ந்திருந்த சங்கரிடம் வந்து அருகே அமர்ந்தாள். “என்னம்மா ஆச்சா எல்லாம்?” என்றார்.
“ஆமா, இனி என் நேரம் எல்லாம் உங்களுக்க மட்டுமே” என்றாள் அவர் கன்னத்தை கையால் தடவி. அவர் தன் கையால் அவள் தோள்களை அணைத்துக்கொண்டார்.
“இன்னிக்கி என்னாச்சு தெரியுமா” என அவர் அவரின் நாள் எப்படிச் சென்றது என்பதை அவளுடன் பகிரத் துவங்கினார்..... அவளும் ஆர்வத்துடன் அதை கேட்டுக்கொண்டாள்.
அங்கே அவர்களின் இனிய தாம்பத்தியத்திற்குள் இனி நாம் இருப்பது நமக்கு கவுரவம் அல்ல அல்லவா.....கிளம்புவோமா அன்பு நட்புகளே...
வணக்கம்